“சரி நான் பெட்டிகளை எடுத்து வைக்கறேன். ஷெட்ல இருந்து காரை எடுக்கறேன் முதல்ல…” என எழுந்துகொண்டான்.
இன்னும் இசை வெளியே வராமல் இருக்க கண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றிருப்பாளோ என யோசித்தான்.
யோசனையுடன் சுந்தரியிடம் எதுவும் கேட்காமல் தாயின் அறைக்கு செல்ல அங்கிருந்த இரண்டு கட்டிலில் ஒன்றில் மகள் உறங்க அவளருகே காலை மடக்கியபடி அமர்ந்து டீயை பெரிய தம்ளரில் ஊற்றி குடித்துக்கொண்டு இருந்தாள் இசை.
“இங்க தான் இருக்காளா? ஆனா சத்தத்தையே காணும்…” என வாய்க்குள் முணுமுணுப்பாய் சொல்லியபடி பெட்டிகளை இரண்டு கையிலும் தூக்கிக்கொண்டான்.
பார்த்தவளுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. தூங்கி எழுந்து வந்த கலக்கத்திலும், இரவெல்லாம் ஜன்னலின் அருகே அமர்ந்திருந்ததிலும் தலையில் பனி இறங்கி இருந்தது.
மூக்கு நமநம என்று ஜலதோஷம் பிடிப்பதை போன்ற அவஸ்தையை தந்திருக்க தொண்டை கரகரப்பிற்கு சூடாய் கொதிக்க கொதிக்க டீயை குடித்துக்கொண்டு இருந்தாள்.
இவள் சுதாரித்து கேட்பதற்குள் முதல் இரண்டு பெட்டிகளை கொண்டு செல்லவும் அடுத்ததை எடுக்க வருவான் என்று பார்க்க ஆளை காணவில்லை.
இன்னும் தனுக்குட்டி எழுந்துகொள்ளாமல் இருக்க அங்கிருந்து செல்லாமல் அவளுடனே அமர்ந்திருந்தாள்.
“நல்லதுடா. இல்லன்னா இந்நேரம் அவ உருண்டுடுவா. போதும் எழுப்பிடலாம்…” என தனுவை எழுப்ப,
“ஏன் த்தை? தூங்கட்டுமே?…”
“ம்ஹூம், டே டைம் ட்ராவல் வேற. இப்ப நல்லா தூங்கிட்டா கார்ல தூங்க மாட்டா. நம்மளை ஒருவழி ஆக்கிடுவா…” என சிரித்தபடி தனுவை எழுப்பியவர்,
“தனுக்குட்டி அப்பாவுக்கு பை சொல்லு…” என்றதும் உறக்கம் கலைந்ததில் மெல்ல கண் விழித்து உதட்டை பிதுக்க இருந்த குழந்தை சுந்தரி சொல்லியதில் நன்றாக விழித்தது.
“பார்த்தியா இவளை. அப்பனுக்கு மேல கேடி. சும்மா எழுப்பிருந்தா இந்நேரம் ஊரையே கூட்டிருப்பால…” என்று சொல்லி சுந்தரி பேத்தியின் கன்னத்தை வலிக்காமல் கிள்ளி முத்தமிட,
“ப்பா…” என்றது குழந்தை சுந்தரியை தாண்டி வாசலை பார்த்து.
கட்டிலை விட்டு இறங்க முயற்சிக்க அதை கண்டு சிரித்தபடி இசை தூக்கிக்கொண்டாள் குழந்தையை.
“சரியான அப்பா கோண்டு நீ…” என்று கன்னத்தில் முத்தமிட்டபடி சொல்லி கொஞ்ச,
“அதை நீ சொல்ற பாரேன்…” என சிரித்தார் சுந்தரி.
இருவரும் பேசியபடி குழந்தைக்கு போக்கு காட்டி ‘இதோ அப்பாட்ட, அப்பாட்ட’ என்று சொல்லியே குளிக்க வைத்து உடை மாற்றி கிளப்பி இருக்க அதுவரை உள்ளே கீர்த்தனனை காணவில்லை.
“உங்க மகன் ஊருக்கே கிளம்பிட்டாரோ த்தை? இன்னும் சத்தத்தையே காணும்?…” என்றாள் இசை தனுவுக்கு தலை வாரி பவ்வை மாட்டியபடி.
தலையில் இருந்ததை பிடித்து இழுத்த குழந்தை கையில் வைத்துக்கொண்டு ‘ப்பா’ என்றது.
“பார்த்தியா சேட்டையை?…” சுந்தரி சொல்ல,
“அவளும் எவ்வளவு நேரம் தான் உக்கார்ந்திருப்பா? ஏமாத்தியே காரியம் சாதிக்க பார்த்தா?…”
“ஆனா ஜாடை எல்லாம் தனுக்குட்டி அம்மா மாதிரியே தானே த்தை?…” என்றாள் இசை.
சாதாரணமாக சொன்னாலும் சுந்தரியின் மனதிற்குள் ஒரு திடுக்கிடல். இதனை என்னவிதமாய் கூறுகிறாள் என்று தடுமாறி போனார்.
“பேச்சு மட்டும் டாக்டர் மாதிரி இருந்தா போதும். அவங்க வாயே திறக்கமாட்டாங்க. பேச காசு கேட்கற மாதிரி தான்…”
சுந்தரியை கவனியாமல் இசை பேசியபடி மீண்டும் குழந்தைக்கு தாஜா காட்டி பவ்வை வாங்கி தலையில் மாட்டி தூக்கிக்கொண்டாள்.
“அட, நாம ரெண்டுபேரும் ஒரே கலர் ட்ரெஸ் தனுப்பாப்பா…”
இசை தன் இடுப்பில் குழந்தையை வைத்தபடி கையை தட்ட குழந்தைக்கு புரியவில்லை என்றாலும் அவளின் சிரிப்பிலும், கை தட்டுதலிளும் அதனை பின்பற்றி செய்தது.
“நீங்க கூட சொல்லலை பாருங்க த்தை…” என்றவள் சுந்தரியின் போனில் தங்களை ஒரு போட்டோ எடுக்கும் படி சொல்லி பின்னால் தள்ளி நின்றாள்.
முகம்கொள்ளா புன்னகையுடன் அந்த காலை நேரத்தில் இருவரும் மலர்ந்த ரோஜாக்களாய் குளுமையை பரப்பினர் சுந்தரியின் மனதில்.
கண்கள் பனித்து போக விதவிதமாய் போட்டோக்களை எடுத்தவர் உடனே இருவரையும் அழைத்து சென்று சுற்றி போட்டுவிட்டு வந்தார்.
“என்னவாம்? கண்ணு படுதாக்கும்? போங்கத்தை…” என சிரித்தபடி சொல்லிக்கொண்டு வாசலுக்கு வர வாசல் முன்னால் கார் தயாராக நின்றது.
கீர்த்தனனின் காலணி இசையின் வீட்டு வாசலில் இருக்க உள்ளே பேச்சு சத்தம் வேறு கேட்க இசை உள்ளே நுழைந்தாள் குழந்தையுடன்.
அனைவரும் அவளின் கொலுசு சத்தத்தில் திரும்ப கீர்த்தனன் மகளின் அழைப்பில் திரும்பினான்.
‘ப்பா…” என அவனை கண்டதும் குதூகலித்து டாட்டா என்பதை போல கையசைத்து சிரிக்க இமைக்க மறந்த பார்வை தான் அவனுக்கு.
ஒரே நிற உடையில் இசையின் கையில் தனுக்குட்டி. அத்தனை பாந்தமான ஒரு அமைப்பு இருவருக்கும்.
இருவருக்குள்ளேயும் எப்போதும் ஒரு அன்னியோன்யம் இருக்கும் தான். ஆனால் இன்று கீர்த்தனனுடனான உறவு கொடுத்த உரிமையும் சேர்ந்து இசையை பார்க்க அது அவனை தடுமாற செய்தது.
“உங்களை அங்க காணும்னு அத்தை தேடிட்டிருந்தாங்க. சொல்லிட்டு வந்திருக்கலாமே? பாப்பாவும் நீங்க பை போறீங்கன்னு கிளம்பிட்டீங்களோன்னு தேடிட்டிருந்தா…” என பேசியபடி இசை கீர்த்தனனின் கையில் குழந்தையை தந்தாள்.
வீட்டினருக்கு மட்டுமல்ல கீர்த்தனனுமே இசையின் இந்த இயல்பில் திகைத்து போனான்.
அத்தனை சரளம், அத்தனை நளினம். என்னவோ காலம் காலமாய் வாழ்ந்ததை போலொரு பாவனை.
கிஞ்சித்தும் பெற்றோர்களுக்கான ஒரு பாசாங்கு போல என்று கூட ஒரு சதவீதமும் தெரியவில்லை.
தன்னுடைய திகைப்பை மறைக்க என்று பார்வையை தழைத்துக்கொண்டவன் மகளை அணைத்தபடி,
“அம்மா எங்க இசை?…” என்றான் அவளிடத்தில்.
“கதவை திறந்து போட்டு வர முடியாதுல. சாத்திட்டு பின்னாடி வருவாங்க. பின்கட்டும் திறந்திருந்துச்சு…” என பதில் கொடுத்தவள்,
“எங்கக்கா அம்மா?…” என புடவை முந்தானையை இடையில் சொருகியபடி உள்ளே செல்ல கீர்த்தனனுக்கு மூச்சடைத்தது அந்த நொடியை கடக்க.
“ப்பா…” குழந்தை அவனை திசை திருப்ப பேச்சும் திசை மாறியது.
காரில் லக்கேஜை வைத்துக்கொண்டிருந்தவன் பெருமாள் அவனுக்கு உதவ என்று வேகமாய் வர அப்படியே இசையின் உடமைகள் இருக்கும் பெட்டியையும் கேட்டு வாங்கிக்கொண்டான்.