மகன் என்ன சொல்கிறான் என்பதை கூட முழுதாய் புரிந்துகொள்ள முடியாமல் மந்திரித்துவிட்டதை போல தான் பார்த்திருந்தார்கள் பெற்றோர்கள்.
“ம்மா…” மீண்டும் அழுத்தி அழைக்கவும் தான்,
“கூப்பிட்டியா கீர்த்தி…” என்றார் சுந்தரி.
“ப்ச், என்ன கனவா கண்டுட்டு இருக்கீங்க? இவளுக்கு ஏசி, இந்த ட்ராவல் ஒத்துக்கலை. காய்ச்சல் அடிக்குது லேசா…”
“ஓஹ், ஆமாவா? என்னப்பா செய்யனும்?…” என்றார்.
“அம்மா…” பல்லை கடிக்க அதற்குள் சிக்னல் போடப்பட மீண்டும் வீட்டிற்கு செல்வதில் கவனமானான்.
“தனுக்குட்டி என்கிட்டே வா…” இசை மீண்டும் பின்னால் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கேட்க,
“ப்ச், இப்பதான சொன்னேன். காய்ச்சல்ன்னு. பேசாம இரு. இப்ப வீடு வந்திரும். அவ அங்கயே இருக்கட்டும்…” என்றதும் அவனை முறைத்துவிட்டு முன்னால் திரும்பிக்கொண்டாள்.
“இந்த ஏரியாவை கவனிச்சுக்கோ…” என்று அவள் கேட்காமலே அந்த இடத்தை, அந்த பகுதியை, வீதியை என்று ஒவ்வொன்றாய் சொல்லியபடி வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்த,
“இறங்கிடாத கீர்த்தி. ஆரத்தி எடுக்கனும்…” என்றதும் பதில் சொல்லும் முன் அவர்கள் வீட்டின் அருகே இருந்த செண்பகம் அக்கா வந்துவிட்டார் தட்டுடன்.
“என்ன வேலையை எல்லாம் பார்த்து வச்சிருக்காங்க?…” என்று சொல்லியபடி இறங்கியவன் முகத்தில் சிரிப்பை ஒட்ட வைத்துக்கொண்டான்.
“இறங்கு. என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க?…” என குனிந்து இசையிடம் சொல்லவும் தான் இறங்கி வந்து நின்றாள்.
குழந்தையை தான் வாங்கிக்கொண்டவன் இசையுடன் இணைந்து நிற்க அந்த பகுதியில் ஆட்கள் அங்குமிங்குமாய் எட்டி பார்த்துவிட்டு சென்றனர்.
“உள்ள போங்க. நான் அப்பறமா வரேன்…” என செண்பகம் சொல்லிவிட்டு செல்ல,
“இசக்கி இவங்க தான் இங்க என் ப்ரென்ட். அப்பறமா வருவாங்க. பேசுவோம்…” என அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு உள்ளே அழைத்து வந்தார்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே இசையின் கண்கள் அந்த வீட்டை அளவிட்டது. சுந்தரியின் போனில் அந்த வீட்டை கவனித்திருந்தாள்.
“வீடு பிடிச்சிருக்கா இசக்கி?…” என சுந்தரி கேட்கவும்,
“முதல்ல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. அப்பறமா பேசலாம். உக்கார்ந்துட்டே வந்தது காலெல்லாம் வலிக்குது…” என்றார் மாணிக்கம்.
சுந்தரி மருமகளை அழைத்துக்கொண்டு வீடெல்லாம் சுற்றி காண்பித்துவிட்டு கீர்த்தனனின் அறையை காண்பித்துவிட்டு சென்றார்.
“எங்கத்தை போறீங்க? இருங்களேன்…” இசை அவரின் கையை பிடிக்க,
“உன் மாமாவுக்கு இன்னும் கொஞ்சம் நேரத்தில கால் புஸ்ஸுன்னு வீங்க ஆரம்பிச்சுரும். அதுக்கு முன்னாடி தைலத்தை சூடுபறக்க தேச்சு விட்டா மனுஷன் நிம்மதியா ஒரு தூக்கம் போடுவார்….”
“ஓஹ்…”
“ஆமா, இல்லைன்னா நைட்டெல்லாம் அனத்தல் தான். அவரும் தூங்காம என்னையும் தூங்கவிடாம…”
“சுந்தரி…” மாணிக்கம் அழைக்கும் குரலில்,
“இந்தா கூப்பிட்டுட்டார். ரூம்ல வெந்நீர் வரும். குளிச்சிட்டு கொஞ்ச நேரம் படு. பால் வரவும் காபி போடலாம்…”
“ஹ்ம்ம், சரிங்கத்தை…”
“முதல்ல வீட்டுக்கு பேசிரு இசக்கி. அப்பறமா குளி…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
வீட்டின் முன் வாசலில் இருந்து கேட் வரை எல்லாம் பூட்டப்பட்டிருந்தது. அடைத்து வைத்ததை போல இருக்க ஒரு பெருமூச்சுடன் வந்தவள் அப்போதுதான் தன்னிடம் போன் இல்லை என்பதே ஞாபகம் வந்தது.
ஊரில் இருந்து கிளம்பி வரும் வழியில் சுந்தரியின் போனில் தான் வீட்டிற்கு பேசியிருந்தாள் இசை.
இப்போது பேசவேண்டும் என்றால் கீர்த்தனனிடம் தான் கேட்கவேண்டும் என அறைக்குள் வந்தாள்.
அறையில் அவனில்லாமல் வெறுமனே இருந்தது. அவர்களின் பெட்டிகள் அறையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்க பார்வையை ஓட்டியபடி நின்றாள்.
தனுக்குட்டியும் இன்றி வெறித்திருந்த அறைக்குள் அதற்கு மேல் நிற்க முடியாமல் வெளியேற பார்க்க,
“இசை நில்லு…” என்றழைத்தான் கீர்த்தனன்.
குளித்துவிட்டு உடை மாற்றி இருந்தான் அவன். ட்ராக் பேன்ட் டிஷர்ட் என்று வந்து நின்றவன்,
“இங்க வா…” என்று அங்கிருந்த கபோர்ட்டை திறந்தவன்,
“உன் பெட்டி எல்லாம் இங்க இருக்கு. இந்த ரேக் ஃபுல்லா நீ யூஸ் பண்ணிக்கோ. உன் திங்க்ஸ், ட்ரெஸ் எல்லாம் இங்க வச்சுக்கோ…” என காண்பித்தான்.
“ஹ்ம்ம்…” என்று அதனை பார்வையிட,
“என்னவோ தேடிட்டிருந்த?…” என்றான் அவன்.
“பாப்பாவை காணும். அதான் பார்த்தேன்…”
“நீயும் அம்மாவும் வீட்டை சுத்தி பார்த்திட்டு இருந்தீங்க. நான் குளிக்கனுமே? அதான் அப்பாக்கிட்ட அனுப்பினேன். அங்க இருப்பா…”
“சரி நானும் குளிச்சுட்டு வரேன்…” என பெட்டியை திறக்க போக,
“ஹேய் நில்லு…” என்றவன் சைட் டேபிள் ட்ராயரில் இருந்து தெர்மாமீட்டரை எடுத்து அவளின் காய்ச்சலின் அளவை பரிசோதித்தான்.
கண்கள் இன்னும் சிவந்திருக்க முகமெல்லாம் லேசாய் வீங்க ஆரம்பித்திருந்தது இசைக்கு.
“டெம்பரேச்சர் இருக்கே…” என்றவன்,
“குளிக்க வேண்டாம். முகம், கை கால் கழுவிட்டு வா. ஹாஸ்பிட்டல் போகலாம்…” என அழைக்க,
“இப்பவா? இப்ப தான வந்தோம்…”
“இப்ப வந்தா? போக கூடாதுன்னு இருக்கா? எதுக்கும் பார்த்திடுவோம். அதிகமானா என்ன பன்றது?…” என்றான் அதட்டலாக.
“அப்பா உங்கட்ட பேசனுமாம்…” என்று நீட்ட என்றதும் வாங்கியவன் அவர்களிடம் பேசிவிட்டு போனை வைத்தான்.
“நீ போய் கிளம்பு. நான் அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன்…”
“அத்தை…”
“அவங்க எதுக்கு? நான் வரேன்ல…”
“ப்ச்…” என்று சலிப்புடன் அவள் நகர,
“நானே உனக்கு இன்ஜெக்ஷன் போட்டுடலாம். ஆனா…”
“நீங்க நாய் டாக்டர் தானே?…” என்றாள் அவனை முழுதாய் முடிக்கவிடாமல்.
“இசை…” என அவன் பல்லை கடிக்கவும் அடித்துபிடித்து பாத்ரூமிற்குள் ஓடிவிட்டாள்.
“எவ்வளவு கொழுப்பு உனக்கு. வெளில வா வச்சுக்கறேன்…” என கதவின் இந்தபக்கம் இருந்து பேச,
“உண்மையை தானே சொன்னேன்…” என்றாள் அவளும் அந்தபக்கம் இருந்து.
வெளியே வந்ததும் பெட்டியை திறந்து புடவையை எடுத்து வைக்க மகளிடம் கட்டிலில் அமர்ந்து கார்ட்டூன் புத்தகத்தை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான் கீர்த்தனன்.
இசை வரவுமே அவள் புடவையை எடுத்து வைப்பதை கவனித்து கொண்டிருந்தவன்,
“புடவை தான் கட்டனும்னு இல்லை இசை. சுடிதார் கொண்டு வந்திருந்தா போட்டுக்கோ…” என்று சொல்ல தலையசைத்தவள் பெட்டிகள் மூன்றையும் எடுத்து பார்க்க அப்படி ஒன்று எடுத்தே வைக்கவில்லை.
“எல்லாம் புடவையா தான் வச்சிருக்காங்க அம்மா. சுடிதார் ஒன்னை கூட இதுல வைக்கலை…” என்றாள் சற்றே கோபம் போல.
“சரி விடு. சேரி மாத்திக்கோ. நாளைக்கு அம்மாவோட போய் ட்ரெஸ் எடுத்துக்கலாம்…” என்றவன் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியேறினான்.
இசை உடை மாற்றி வெளியே வரும் பொழுது சுந்தரிக்கும், மகனுக்கும் வாக்குவாதம் சூடுபிடித்திருந்தது.