கீர்த்தனன் எங்கே சென்று நின்றாலும் இசையின் பிரசன்னம் நடந்தது. அவனின் முன்னால் வந்து சென்று தலையாட்டி விழியை உருட்டி என்று அவள் செய்த சாகசத்தில் கீர்த்தனன் கோபமும், பேச வேண்டுமென்பது கூட மறந்துவிட்டது.
‘இதோ வர போகிறாள், பார்க்க போகிறாள், மூக்கு விடைக்க ஒரு அதட்டல் பாவனை காண்பிக்க போகிறாள்.’ இப்படி இசை அவனின் மனதிற்குள் சென்றுகொண்டே தான் இருந்தாள்.
கீர்த்தனனை பேசவிடாமல் செய்ய அவன் முன்னால் வளைய வர அவள் வருகையை பார்த்து சிரித்தபடி இருந்தவன் அடுத்து எப்போது வந்து மிரட்டி பார்ப்பாள் என்றளவுக்கு விழிகள் தேட ஆரம்பித்தது இசையை.
இரவு உணவு அனைவருக்கும் பரிமாற சாப்பிடுவதற்கு கை கழுவ வந்தவனினருகே வந்து நின்றவள்,
“சாப்ட்டு பாப்பாவோட போய் படுத்துருங்க…” என்றாள் உத்தரவு போல.
“தனுவோட தாத்தாவும் பாட்டியும் நாளைக்கு வராங்க…” என்று சொல்ல எழுந்தமர்ந்துவிட்டாள்.
திருமணம் முடிந்து வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. விஷயத்தை கேள்விப்பட்டு போனில் பேசியதோடு சரி.
அதுவும் சுந்தரியிடம் மட்டும். அதன் பின் எந்தவித தகவலும் இல்லை. இதே சென்னையில் தான் குடியிருப்பு.
ஆனால் வந்து பார்க்கவில்லை. சுந்தரியிடம் பேசியபொழுதும் அவரின் முகமும் சொல்லிக்கொள்வதை போலில்லை.
கேட்டதற்கு ஒன்றுமில்லை என்றுவிட்டார் சுந்தரி. இப்போது என்ன என்று யோசிக்க,
“விடு, வரட்டும் பார்ப்போம்…” என்றான்.
“அவங்களுக்கு நீங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டது பிடிக்கலையோ?…” இசை கேட்க,
“தெரியலை. என்கிட்டே பேசலை…”
“நீங்க கூப்பிட்டு சொல்லலையா?…”
“ஏன் சொல்லனும்? என்ன சொல்லனும்? பைரவி இறந்து இப்ப வரைக்கும் என் பொண்ணை நாலுதடவை வந்து பார்த்திருந்திருப்பாங்க. அதுவும் வந்தா வந்த வேகத்துல கிளம்பிடுவாங்க. நான் என்ன பேசனும்?…” என்றான்.
இப்படியும் மனிதர்களா? நினைக்க மலைப்பாக இருந்தது. ஆனால் இருக்கிறார்களே?
“அவங்க பையன் பைரவி இறந்த வீட்டுல வந்து போனது. அதுக்கப்பறம் என் பொண்ணை பார்க்க கூட வரலை. அவங்களுக்கு என்ன பேசனும்? எதுக்காக பேசனும்?…”
கீர்த்தனனின் கோபத்தை கண்டவள் சமாதானமாக சொன்னாலும் தவறாகிவிடும், இல்லை ஆதரவாக பேசினாலும் தவறாகிவிடும் என்று மௌனம் காத்து அமர்ந்திருக்க,
“ஓகே, பார்த்துக்கலாம். விடு…” என்று படுத்துவிட்டான்.
ஆனால் நினைத்ததை போல மறுநாள் யாரும் வரவில்லை. முதல்நாள் போன் செய்து குழந்தையை பார்க்க வருவதாக சொன்னவர்கள் வரவில்லை என்னும் தகவலை கூட சொல்லவில்லை.
“நான் வேணும்ன்னா போன் பண்ணி கேட்கட்டுமா கீர்த்தி?…” என்று மகனிடம் மாணிக்கம் கேட்க,
“ப்பா வரேன்னு சொன்னவங்க வரலைன்னாலும் சொல்லனும் தானே? எதுவும் பேசவேண்டாம்…” என்றுவிட்டான்.
சுந்தரி மகனுக்கு தெரியாமல் அவர்களுக்கு அழைக்க யாரும் போனை எடுக்கவில்லை.
“அவனுக்கு தெரிஞ்சா திட்ட போறான் சுந்தரி…” என்ற மாணிக்கத்திடம்,
“ப்ச், ஒருவேளை அவங்க யார்க்கும் உடம்பு எதுவும் முடியலையோ என்னமோ? சும்மா இருங்க. திட்டினா வாங்கிப்போம். புதுசா என்ன?…” என்றுவிட்டார்.
மதியம் ஒருமுறை, மாலை ஒருமுறை, இரவு ஒருமுறை என்று பைரவியின் பெற்றோர் இருவரின் எண்ணிற்கும் மாற்றி மாற்றி அழைத்து பார்த்துவிட எடுத்தபாடில்லை.
“சொன்னா கேட்கறதே இல்லை. அவங்க நம்ம தேவையில்லைன்னு நினைக்கும் போது நீங்க ஏன் திரும்பி இழுத்து பிடிக்கறீங்க?…” என்று தனியே அழைத்து கீர்த்தனன் கத்திவிட,
“சும்மா அத்தையை திட்டாதீங்க. எப்ப பார்த்தாலும் யாரையாச்சும் திட்டனும் உங்களுக்கு…” என்று சுந்தரிக்கு ஆதரவாய் இசை வந்து நின்றாள்.
“இவ ஒருத்தி. எப்ப பாரு வரிஞ்சு கட்டிட்டு…” என்று அவளின் தலையில் கொட்டியவன்,
“ம்மா, புரியுதா? பேச கூடாது. இனி போன் பண்ணினாலும் எடுக்க வேண்டாம். தேவைன்னா வரட்டும்…”
“இல்லை கீர்த்தி தனுக்குட்டியை…”
“என்ன பண்ணுவாங்க? எங்க என் பொண்ணை தர சொல்லி கேட்க சொல்லுங்க பார்ப்போம்…” என்றவன்,
“உங்களுக்கு தெரியும் அவங்க அதை செய்யமாட்டாங்கன்னு. அவ்வளவுக்கு அவங்களை யோசிக்க வேண்டாம் ம்மா…” என்றான்.
அவன் சொல்லியது சுந்தரிக்கு புரிந்ததோ இல்லையோ இசைக்கு மனதிற்குள் கலக்கத்தை விதைத்தது.
தன் வீட்டினர் மறுநாள் இரவு அங்கிருந்து ஊருக்கு கிளம்பிவிட இசைக்கு மனதிற்குள் இதுவே ஓடிக்கொண்டு இருந்தது.
பைரவியின் குடும்பத்தை பற்றி பெரிதாய், முழுமையாய் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதால் யோசனைகள் எங்கெங்கோ செல்ல கீர்த்தனனிடமே கேட்டும்விட்டாள்.
“நிஜமாவா? கோவப்பட்டு பாப்பாவை கூட்டிட்டு போகமாட்டாங்க தானே?…” என்று கேட்க,
“நீ இன்னுமா இதையே நினைச்சிட்டிருக்க?…” என்றான் அவன் புத்தகத்தை கையில் வைத்தபடி.
“கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. அந்த புக்ல என்னதான் இருக்குமோ?..” என்றாள் தனுவை மடியில் அமர்த்தியபடி.
“ப்பா…” என்றது குழந்தை அவளை பார்த்து.
“இவ வேற, எப்ப பார்த்தாலும் எல்லாரையும் அப்பா அப்பான்னுட்டு. அப்பாவை தவிர வேற எதுவுமே தெரியாது இவளுக்கு. ஆவுனா அப்பா. உலகத்துலையே இல்லாத அப்பா…” என்று தனுவிடம் மல்லுக்கு நிற்க குழந்தை கிளுக்கி சிரித்தது.
“சிரிச்சே மயக்கிரு…” என்று குழந்தையை கொஞ்சியவள்,
“எப்படி உன்னை உன் தாத்தா பாட்டி விட்டுட்டு இருக்காங்களோ?…” என்றாள் ஆற்றமாட்டாமல்.
“மூணு மாச குழந்தையா இருக்கும் போதே தட்டிக்கழிச்சிட்டு போனவங்க. அவங்க தேடனுமா என்ன?…” என்றான் கண்டனத்துடன்.
“இல்லை நான் பொதுவா தான்…” இசை சமாளிக்க பார்க்க,
“ப்பா…” என்றாள் மீண்டும் தனுக்குட்டி.
“அவளுக்கு சொல்லிக்கொடு இசை. நான் அப்பாவை தவிர எதையும் சொல்லித்தரலை. நான் மட்டும் போதும்ன்னு அப்பா மட்டும் தான் பழக்கிட்டேன். நீ சொல்லித்தரலாம் தானே?…” என்றான் அவளை பார்த்து.
“ஹாங், என்ன?…”
“நீ யாருன்னு குழந்தைக்கு சொல்லுன்னு சொன்னேன்….” என்றான் கீர்த்தனன் தீர்க்கமாக.
“அம்மான்னு சொல்ல சொல்லு இசை…” என்று வெளிப்படையாக சொல்ல இசையின் விழிகள் அகன்றது.
‘என் பொண்ணு அப்பான்னு மட்டும் சொன்னா போதும். இவ ஏன் தேவையில்லாததை சொல்லி தரா? ம்மா எல்லாம் நீங்க தர இடம்’ என்று அன்று ஒருநாள் அவன் எகிறியதென்ன?
விளையாட்டாகவும், அப்பாவை தவிர பேச எதுவும் தெரியவில்லையே என்றும் இசை குழந்தையிடம் பேசி விளையாட அதனை கண்ட அன்று கீர்த்தனன் வீட்டில் ஆடிய ஆட்டம் இன்றும் மறக்கமுடியாதே?
இசையின் எண்ணவோட்டத்தை படித்ததை போல கீர்த்தனன் தலையசைத்துக்கொண்டான்.
“உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் சொல்லித்தா…” என்று சொல்லியவன் புத்தகத்துடன் எழுந்து அறையைவிட்டு வெளியேறிவிட்டான்.
அவனை பார்த்தபடி இருந்தவளுக்கு தன் முன்னே சிரிப்புடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கண்டு தாய்மை உணர்வு பொங்கியது.
எப்போதும் தனுவை அத்தனை பிடிக்கும். இப்போது தனக்கென்று அவள் உறவாகியிருக்க அதன் பொறுப்பு தெரிந்தாலும் இன்னும் அதே விளையாட்டுடன் தான் பிள்ளையை பார்த்திருந்தாள்.
இசை தன்னுணர்வுகளுக்குள் நீந்தி மீள முயன்றுகொண்டு இருக்க அவளின் அசையாதா தன்மையில் தனுக்குட்டி எழுந்து அவளின் மீது சாய்ந்து கழுத்தை கட்டி கன்னத்தை அரிசி பற்களால் கடித்து இழுத்தது.
“தனும்மா…” அள்ளி அணைத்துக்கொள்ள,
“ப்பா…” என்று சிரித்தது.
“அப்பாவா? அப்பா அம்மா சொல்லுன்னு சொல்றார்டா குட்டிம்மா. அம்மா சொல்லுவியா? நான் உனக்கு அம்மாவா? நான் என்னடா பண்ணனும்?…”
இசை உணர்ச்சிபெருக்கில் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தாள் பதில் தெரியாத குழந்தையிடம்.
ஏற்றும் ஏற்காத உறவிற்குள் நுழைந்தும் இன்னும் செல்லும் பாதையின் திக்கு தெரியவில்லை.
குழந்தையை அணைத்தபடி இசை அமர்ந்திருக்க அரைமணி நேரம் கழித்து உள்ளே வந்தவன் எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டான்.
அதன் பின்னான நாட்களும் இருவரிடையே இன்னும் இடைவெளியை குறைத்தலும் முழுதாய் நெருங்கியிருக்கவில்லை.
காற்றடைத்த பந்து போல அங்குமிங்கும் மோதிக்கொண்டு தான் இருந்தது இருவரின் மனதும்.
அப்படி ஒரு பந்திற்குள் அடைக்கப்பட்ட காற்று இருவரின் மூச்சாய் மாறும் தருணத்தின் ஆரம்பம் மனதின் அழைப்பில் இருந்து.