அதற்கு மேல் நிற்க முடியாமல் அவளின் கையை உதறியவன் அவளை தாண்டிக்கொண்டு செல்ல இன்னும் கோவமோ கோவம் இசைக்கு.
“என்ன? நான் தொட கூடாதா? நான் தொடாம? எங்க இப்ப தள்ளுங்க பார்ப்போம்…” என்று வேகமாய் வந்து அவனை கட்டிக்கொள்ள கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கீர்த்தனன்.
“இசை…” என்றவனுக்கு காற்று மட்டுமே வந்தது.
ஸ்தம்பித்து போய் நின்றிருந்தான் அவளின் அணைப்பில். உள்ளூர ஒரு குறுகுறுப்பு வேற. விழிகள் விரிந்துகொள்ள,
“இசை…” என்றான் மீண்டும்.
“என்ன இசை? நான் உங்க பொண்டாட்டி தானே? தொடாதன்னு ஒதுங்கி போறீங்க? சொன்னா சொன்ன பேச்சு கேட்கலை. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?…” என்றவள் கண்கள் கலங்கியது.
“அவங்களே பாவம் என்ன பாடுபட்டு என்னை கல்யாணம் பண்ணி குடுத்துட்டு இப்ப நான் எப்படி இருக்கேன்னு பார்க்க வந்திருக்காங்க? நீங்க என்னன்னா நான் சொல்றதை கேட்கமாட்டேன்னு நிக்கறீங்க? தொடக்கூடாதுன்னும். ப்ச்…”
“அப்பாம்மா மட்டுமில்லை, அக்கா அக்கா புருஷன், அவரோட வீடாளுங்க, ஊர்ல இருந்துன்னு எத்தனை பேர் வந்திருக்காங்க? உங்களுக்கு நான் சொல்றது புரியுதா?…” என்று கேட்க,
“இசை நான் குளிச்சிட்டு…” என்றே நின்றான் கீர்த்தனன்.
“ரொம்ப முக்கியம். குளிச்சே ஆகனுமா? ஏன் ஹாஸ்பிட்டல் விட்டு வரப்போ அங்க கை கால் எல்லாம் கழுவிட்டு தான வருவீங்க?…” என்றவள்,
“ப்ச், அதை விடுங்க. ஏன் நீ சொல்ற சொல்றன்னு கேட்கறீங்க? நான் சொல்லாம? எனக்கு இப்ப தெரியனும். நான் சொல்ல கூடாதா? புருஷன்கிட்டே பொண்டாட்டி தான சொல்லுவாங்க. எங்க ஊர்ல எல்லாம் அதான்…” என்றாள்.
மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவள் பேச பேச திகைப்பு மறைந்து சுவாரசியம் பிறக்க அவளின் அணைப்பும் கீர்த்தனனை இப்பொது இலகுவாக்க,
“நானும் அதே ஊர் தான்…” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
“ஆனா அப்படி எங்க இருக்கீங்க? என்னவோ இல்லாத உலகத்துல இருந்து இங்க குதிச்சிட்ட மாதிரி…” என்றாள் கோபத்துடனே.
“ஓகே இதை அப்பறம் பேசுவோம். இப்ப வா குளிக்கலாம்…” என கீர்த்தனன் சொல்லவும்,
“என்ன?…” என்றாள்.
“இன்னைக்கு பால் பண்ணைல ரெண்டு மாடுகளுக்கு டெலிவரி. க்ரிட்டிக்கல் ஆகிருச்சு. என்னோட சீனியர் டாக்டர் தான் அங்க எப்பவும் பார்த்துக்கறது. அவருக்கு முடியலைன்னு என்னை போக சொன்னார். இப்ப அங்க இருந்துதான் வரேன். என் மேல எல்லாம். ஹ்ம்ம்…”
“ஓஹ்…” என்றவள் அவனை அணைத்திருப்பதை கண்டு விலகினாள்.
“நானும் கோவத்துல…” என்று மெல்ல சொல்லிவிட்டு,
“சரி குளிச்சுட்டு வாங்க. நான் போறேன்…” என்று நகர அவளின் கையை பிடித்துக்கொண்டான்.
“இதுக்குத்தான் தொடாதன்னு சொன்னேன். இப்ப நீயும் அழுக்காகிட்ட. இரு குளிச்சிட்டு போ…”
“என்ன?…”
“என்ன என்ன? இங்கயே இருன்னு சொன்னேன்….”
“என்ன விளையாடறீங்களா? நான் வந்து எவ்வளவு நேரமாச்சு…”
“நீ தான் இசை பேசின?…”
“நான் தான். அதுக்கு இப்ப குளிச்சிட்டு நான் போனா?…” அவளுக்கு தலைசுற்றியது.
“கையை விடுங்க டாக்டர்…” என்றாள் சற்று நெளிந்தபடி.
அவள் கூற வருவதன் அர்த்தம் கீர்த்தனனுக்கும் விளங்க மென்னகையுடன் கையை விட்டவன் நகர்ந்து செல்ல,
“நீங்க அம்மாவை பேச கூடாது. பேச கூடாது, கூடாது. நான் சொன்னா கேட்கனும். அவ்வளோ தான். இல்லன்னா…”
“இல்லன்னா?…” அங்கிருந்தே அவன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு அவளிடம் தலையசைக்க,
“அப்பறம் நான் என்ன செய்வேன்னா?…”
“எங்க, என்ன செய்வ? சொல்லிட்டு போ…” விடாமல் பதிலுக்கு பேச அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்.
“போ…” என்று அவள் கையை பிசைந்துகொண்டு நிற்பதை கண்டு சொல்ல,
“பேச கூடாது…”
“போன்னு சொல்றேன்ல. சொல்லும்போதே போ இசை…”
“பேச மாட்டேன்னு சொல்லுங்க…”
“அடிங், சொன்னா கேட்கமாட்ட? போடி…”
“என்ன?…”
“பின்ன திரும்ப அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க? நீ போகலைன்னா நான் சொன்னதை செய்வேன்…”
“உங்கட்ட போய் பேசினேன் பாருங்க, இருங்க வச்சிக்கறேன். நீங்க மட்டும் எதாச்சும் பேசினீங்க, எனக்கொரு நேரம் வராமலா போகும். வச்சிக்கறேன்…”
இசை மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு அறையைவிட்டு அவள் செல்ல பார்த்தபடி தான் நின்றிருந்தான் அவன்.
அறை கதவை திறந்துகொண்டு வெளியே சென்றதும் அதே புன்னகையுடன் குளித்துவிட்டு உடைமாற்றி வர இரவு உணவு தயாராகிக்கொண்டு இருந்தது.
பெண்கள் எல்லாம் டைனிங் அறையில் கீழே அமர்ந்திருக்க ஆண்கள் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.
அத்தனைபேருக்கும் அமர இடம் பத்தாமல் கீழே ஜமுக்காளம் விரிக்கப்பட்டு இருந்தது.
கீர்த்தனன் வரவும் அனைவருமே சூழ்ந்துகொண்டனர். மாற்றி மாற்றி அவனிடம் பேச அத்தனைக்கும் அவனால் ஈடுகொடுக்கமுடியவில்லை.
இப்போது பெண்களுமே வந்துவிட்டனர் கூடத்திற்கு. இசைக்கு தான் இருப்புக்கொள்ளவில்லை.
அவ்வப்போது அங்கே வந்து பார்வையாலேயே கீர்த்தனனை மிரட்டிக்கொண்டு இருந்தாள்.