அவனின் மாற்றங்கள் அவள் அறிந்துகொண்டே தான் இருந்தாள். ஆனால் அவனே சொல்லட்டும் என்று இருக்க இப்போது இந்த கேள்வியில் தடுமாற்றமாய் அவனை எதிர்கொள்ள,
“வாயாடி கேட்கறேனில்ல? பதில் சொல்லு…” என்றான் சற்று அதட்டலுடன்.
“என்ன ஓகே வா? அதான் சொல்றாங்களே? ஆடி மாசம்ன்னு…” என்றதும் பின்னால் சாய்ந்தவன் தலையை கோதியபடி அவளை பார்த்தான்.
வெளியே கதவும் திறந்திருக்க எந்த நேரமும் சுந்தரி வரலாம் என்றிருக்க அவனால் நெருங்கியும் அமர முடியவில்லை.
“என்னடி கேட்கறேன், கல்லு மாதிரி உட்கார்ந்திருக்க?…”
“பதில் சொன்னேனே?…” என்றாள் ஆயாசமாய்.
சண்டை என்றால் கூட சரிக்கு சரி பேசிவிடுபவள் உணர்வுகளை தாங்கி நிற்கும் அவனின் இன்றைய இந்த பார்வை வெகுவாய் இம்சிக்க அவனுக்கு பதில் தரமுடியாமல் இருந்தாள்.
“எது பதில்? நீ சொன்னதா? ப்ச். ஒருமாசமும் இருக்கனுமா?…” என்றவன் அதற்கு மேல் அவளிடம் எப்படி வெளிப்படையாய் பேச என்று தெரியாமல் விழிக்க வெளியில் இருந்து அத்தனை கூச்சல்களுடன் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
பெருமாள், ராக்கு, அரசி, அவர்கள் திருமணம் நடத்த என்றிருந்த முத்தையா தாத்தா என இன்னும் சிலர் அனைவரும் வந்துவிட்டனர்.
அதன் பின்னர் கிளம்பும்வரை தனியே பேசிக்கொள்ள முடியவில்லை இருவராலும்.
“சரிங்க தம்பி, ஊருக்கு பொறப்படறதுக்குள்ள பார்த்துட்டு போக வந்தேன். நீங்க கிளம்புங்க…” என்று அவர் கிளம்ப அவருடன் வந்த மற்றவர்களும் கிளம்பினார்கள்.
“நான் வேணும்னா கூட வரவாப்பா?…” மாணிக்கம் மகனின் முகம் பார்த்து கேட்க,
“நீங்க வந்து? சும்மா இருங்கப்பா, நான் பார்த்துக்கறேன்….” என்று சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டவன் தன்னுடைய சிறிய பேக்கை தூக்கிக்கொண்டான்.
“தனுக்குட்டி அப்பாவுக்கு பை சொல்லுங்க…” என சுந்தரி சொல்லவும் மகளை தூக்கி கொஞ்சியவன்,
“பார்த்துக்கோங்க ம்மா…” என்றுவிட்டு வெளியே சென்றான்.
இசையுடன் மற்றவர்களும் வெளியே வர காரில் அமர்ந்தவன் திரும்பி பார்க்க புன்னகையுடன் அவள்.
“பார்க்கறதை பாரு. அப்படியே தலையில வலிக்க நாலு கொட்டு வச்சா என்ன?…” என்று முணுமுணுத்தான்.
“என்ன சொல்றீங்க?…” என்று அவன் என்னவோ சொல்கிறானோ, தன்னை அழைக்கிறானோ?’ என ஆர்வமாக இசை காரை நெருங்கி அவன் பக்கம் குனிந்து பார்த்து கேட்க இதழ்களில் சிறு புன்னகை கீர்த்தனனிடத்தில்.
அதில் அவளை கண்டுகொண்ட விதமான பாவனையை ஒளித்து சிரிக்க அதுவரை இயல்பு போலிருந்த இசையின் முகவாட்டம் இன்னும் அதிகமானது.
“ஆடி இல்ல?…” என்றான் கீர்த்தனன் கண்கள் சிரிக்க,
“இதை தான் சொன்னீங்களா?…” என்றவள் குரலில் அப்பட்டமான ஏமாற்றம்.
“வேறென்ன சொல்லனுமாம்?…” என்றவன்,
“கொஞ்சம் நகர்ந்து நில்லு…” என்றதும் கதவிலிருந்து கையை எடுத்து பின்னே நகர கீழே இறங்கினான்.
“என்ன கீர்த்தி? எதையும் மறந்துட்டியா?…” சுந்தரி கேட்க,
“ஆமாம்மா, உள்ள வாங்க…” என்று சொல்லியவன் வீட்டிற்கு சென்றான்.
“சார்ஜர், பர்ஸ், கார்ட் இப்படி எதையாச்சும் மறந்திருப்பான்…” சுந்தரியும் சொல்லியபடி மகனின் பின்னால் செல்ல,
“ஆடி அழைப்பு முடிஞ்சதுல…” என்றபடி உள்ளே வந்தவன் தாயின் கையில் இருந்த மகளை வாங்கிக்கொண்டான்.
“ஆமா இன்னைக்கு முடிஞ்சதே கீர்த்தி…”
“அப்ப ஆடியே முடிஞ்ச மாதிரி தான் இல்லையா?…” என கேட்டான்.
அங்கே மேஜையில் இருந்த இசையின் போனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
“என்னடா பன்ற?…” சுந்தரி கேட்கும் பொழுதே அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தபடி இருந்த இசையின் கையை பிடித்தவன்,
“ஆடி முடிஞ்சதுன்னு அம்மாவே சொல்லிட்டாங்க. வா போகலாம்…” என்று இழுத்துக்கொண்டு அவன் சென்ற வேகத்தில் சுந்தரியும், மாணிக்கமும் திகைத்து பார்க்க இசைக்கு அத்தனை சிரிப்பு.
“நீங்க இருந்து ஆடியை முடிச்சுட்டு மெதுவா வாங்கம்மா. இங்க வந்தா உங்களுக்கும் சென்னை வர மனசிருக்காது. அந்த கஷ்டத்தை எதுக்கு உங்களுக்கு நான் குடுத்துட்டு…” என.
தாயிடம் சொல்லியவன் பெருமாள், ராக்குவையும் பார்த்து தலையசைத்து காரை கிளப்பிவிட்டான்.
யாரும் பேச கூட யோசிக்கவிடவில்லை கீர்த்தனன். என்னவென்று கேட்கும் முன் செயல்படுத்தி கிளம்பியும் சென்றிருக்க மாணிக்கம் அடக்கமாட்டமல் சிரித்துவிட்டார்.
“என்ன சிரிப்பு?…” சுந்தரி கடுகடுப்புடன் கேட்க,
“உன் மகன் தெளிவு. எவ்வளவு நேக்கா நம்மளை விட்டுட்டு போய்ட்டான் பாரேன்…” என்று மாணிக்கம் சொல்லி சிரிக்க,
“ரொம்ப பெருமை தான்…” என்றவருக்கும் புன்னகை தான்.
“அவன்கிட்ட பேச முடியுமாக்கும்? இதுக்குத்தான் காலையில இருந்து முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்திருக்கான் போல?…” என சிரித்துக்கொண்டே சொல்ல,
“நல்லது தானே? விடு. அவங்க சந்தோஷமா இருக்கட்டும்…” என்றார்.
இருவருமாக பேசிக்கொண்டிருக்க அங்கே பெருமாளும், ராக்குவும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அரசி சிரிப்புடன் நிற்க,
“அட என்ன இது? இப்படி நிக்கற ராக்கு?…” சுந்தரி தோளில் தட்டினார்.
“என்ன மதினி? ஆடி அதுவுமா? அதுவும் ஆடி மாசம்…” என்று அவர் திணற,
“அதெல்லாம் அவன் பார்த்துப்பான். பிள்ளைங்க சந்தோஷமா இருக்காங்களா அதான் முக்கியம்….” என்று சொல்ல பெருமாள் மாணிக்கத்துடன் நகர்ந்தார்.
“ம்மா, எதுக்கு நீ கவலைப்படற? சித்திரையில பிள்ளை பிறந்தா வீடு முழுக்க ஏசியை வாங்கி மாட்டட்டும் டாக்டர். அதான் வம்படியா கூட்டிட்டு போறார்ல. செய்யட்டும்ன்னு விடுங்க…” அரசியும் சமாதானமாய் கிண்டலுடன் சொல்ல சுந்தரியின் எண்ணிற்கு அழைத்துவிட்டாள் இசை.
“உன் மக தான், உள்ள போவோம் வா….” என்றபடி சுந்தரி உள்ளே வர ராக்குவும், அரசியும் உடன் வந்தனர்.
“அத்தை…” இசை அழைக்கவும்,
“என்னடி உன் புருஷனும், நீயும் முதல்லையே பேசி வச்சுட்டீங்களா? சொன்ன மாதிரி கார்ல தூக்கி போட்டுட்டு கிளம்பிட்டான் பாரேன்…” சுந்தரி கிண்டலாய் பேச,
“நீங்க தான் மெச்சிக்கனும். இங்க தாளிச்சிட்டு வரார். எனக்கு கொஞ்சம் கூட அவர் நினைப்பில்லைன்னு…” என்று மெதுவாய் சொல்ல,
“எனக்கு கேட்குது இசை…” என்ற கீர்த்தனன் புன்னகை குரலில் சுந்தரிக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
“என் மகன் குரலே அவ்வளவு சந்தோஷமா இருக்கு பாரேன்…” என்றவர்,
“இந்தா போற போக்குல என்ன போன் உனக்கு? ஊருக்கு போனது வீட்டுக்கு போய் சேர்ந்துட்டோம்ன்னு சொன்னா போதும். வளவளனு என்கிட்டே பேசாத. கவனம் பாதையில இருக்கட்டும்…” என்றார்.
“நான் என்னமோ வண்டி ஓட்டற மாதிரி தான். போனை வைன்னா வைக்கறேன்…” என்று இசை கேலி பேச,
“இரு இரு. உன் அம்மாட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வை…” என்று ராக்குவிடம் கொடுத்தார்.
“இசக்கி…”
“ம்மா, நீ ஒன்னும் தப்பா எடுத்துக்கலை தானே?…” மகளின் கேள்வியில்,
“அதெல்லாம் இல்லைம்மா. நீ சந்தோஷமா இருந்தா போதும். பத்திரமா ஊருக்கு போய்ட்டு போன் போடுங்க…” என்று சொல்ல அரசி வாங்கி ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்துவிட்டனர்.
“ஹப்பா, இப்ப சந்தோஷமா? இப்ப இருக்காட்டி என்ன? பேர்காலத்துக்கு இங்க தானே இருக்க போறா? கவலையேபடாத ராக்கு…” என அவரை தேற்றினார் சுந்தரி.
காரில் தருமபுரி தாண்டி சென்றுகொண்டிருக்க ஏசியை அணைத்துவிட்டு ஜன்னலை கொஞ்சமாய் இறக்கிவிட்டான் கீர்த்தனன்.
இசையையும் அவள் மடியில் இருந்த மகளையும் மாற்றி மாற்றி பார்த்தவனின் பார்வையை கண்டவள்,
“இப்படியா பெட்டி படுக்கையை தூக்கி உள்ள போடற மாதிரி எங்களை கூட்டிட்டு வருவீங்க?…” என்றாள்.
“ஏன் உனக்கு ரொம்ப வருத்தமோ?…” இடக்காய் அவன் கேட்க ஒன்றும் சொல்லவில்லை.
“என்ன இசை?…”
“பாப்பாவுக்கு பால் பாட்டில்ல இருந்து எதுவுமே இல்லை. அதான் யோசிக்கறேன், முதல்லையே சொல்லவேண்டியது தானே?…”
“சொல்லியிருக்கலாம். ஆனா உன் முகத்தை, மனசை நீ காட்டிக்கவே இல்லையே? ரொம்ப அழுத்தம் நீ…” என்றவன்,
“பாப்பாவுக்கு வேணும், அவ்வளவு தானே? கார்ல எப்பவும் ஒரு ஸ்பேர் இருக்கும். வெய்ட்…” என்றவன் காரை சற்று தள்ளி ஓரங்கட்டி நிறுத்தினான்.
பின்னால் டிக்கியில் இருந்து குழந்தைக்கு இசை கேட்டதை எடுத்து தர வாங்கி கொண்டவள்,
“நான் பின் சீட்ல இருக்கறேன். அப்பத்தான் தூங்க வைக்க வசதியா இருக்கும்…”
“அதெல்லாம் வேண்டாம். வெய்ட்…” என்று இன்னொரு லெதர் போன்ற ஒரு பேக்கை தூக்கி வந்து விரித்தான்.
“என்ன இது?…” இசை பார்க்க,
“ட்ராவல் பெட். மோஸ்ட்லி அம்மாவும், அப்பாவும் இருக்கறதால யாராச்சும் பின்னாடி இருப்பாங்க. உட்கார முடியலைன்னா இந்த பெட்டை ஏர் பில் பண்ணி அவங்களை குழந்தையோட தூங்க விட்டுடுவேன்…”
அவன் சொல்லிக்கொண்டிருக்க காற்று நிரம்பி படுக்கை தயாரானது. பின் பகுதி முழுவதும் அந்த பெட் நிறைந்திருக்க பெட்ஷீட் ஒன்றை அதில் விரித்து சில விளையாட்டு பொருட்களையும் அதில் போட்டான்.
“இந்த பில்லோஸ் இதுக்கானது. பாப்பா தூங்கிருவா விளையாடிட்டு…” என்று சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.
“தனுக்குட்டி ஏற்கனவே சொக்கிட்டு இருக்கா. பின்னால படுக்க வை. தூங்கிருவா. இன்னும் அஞ்சு மணி நேரத்துல ஊருக்கு போய்டலாம்…” என்றான் கீர்த்தனன்.
குழந்தை பின்பக்கம் வசதியாய் கையை கலை நீட்டி படுத்திருக்க இடையே ஒரு கடையில் நிறுத்தி பால் வாங்கிக்கொண்டனர் தனுக்குட்டிக்கு.
சென்னை நோக்கிய அந்த பயணம் அவர்கள் வாழ்க்கையின் புது அத்தியாயத்தின் தொடக்கத்திற்கு.