“வீட்டுக்குள்ளதான். பனியனோட கூட இருக்கலாம். தப்பில்லை. இப்படி அதுகூட இல்லாம இருக்க கூடாது. சில விஷயங்கள் நாம கத்துக்குடுக்காம குழந்தைங்களா கத்துக்கறதுல இதுவும் ஒன்னு….” என்றவன் மகளுடன் ஐக்கியமாகிவிட்டான்.
“அம்மா எங்க?…” என்று மகளிடம் கேட்க,
“ம்மா…” என்று இசையிடம் தாவி காண்பித்தது குழந்தை.
“பார்த்துக்கோ, இனி ஒன்னொன்னா பேச ஆரம்பிச்சிடுவா இசை…” என சிரித்தான்.
“ஹ்ம்ம், இசை இசைன்னு இப்ப இசக்கின்னு என்னை கூப்பிட்டா கூட எனக்கு யாரையோன்னு தோணுது…” என இசை சொல்ல,
“அதென்னவோ உன்னை அப்படித்தான் சொல்ல வந்தது. உன் வாய்ஸ் அதுக்கு ரீசனா இருக்கலாம். இசக்கி அதை சொல்ல வரலை…”
“இப்படித்தான் எல்லாருக்கும் ஷார்ட் நேம் வச்சு கூப்பிடுவீங்களா?…” என அவனுக்கு கொக்கி போட,
“அதுதான் தெரியலை. கூப்பிட்டதில்லை. உன்கிட்டயும் கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்ப ஒருசில தடவை தான் சொல்லியிருப்பேன்…” என்றதும் அவளும் தலையசைத்தாள்.
“சரி தூங்க வை. அப்பறம் பகல்ல நல்லா தூங்கிட்டு நைட் தூங்க லேட் பண்ணுவா…” என்று கண் சிமிட்டியவன் கீழே படுத்துக்கொண்டான்.
“நானும்…” என இசை தனுக்குட்டியுடன் கீழே வர பார்க்க,
“ஹேய் அதெல்லாம் வேண்டாம். கட்டில்ல படுக்கட்டும். இது இனி நமக்கு…” என்று தடுக்க,
“காரியக்கார டாக்டர், எவ்வளவு யோசனை யோசிக்கறீங்க?…” என்று சொல்லி தனுக்குட்டியை படுக்க வைத்து அவளருகே தட்டிக்கொடுத்தவள் புடவை தலைப்பு கீழே மெத்தையில் சரிந்திருக்க அதனை முகத்தில் போர்த்தியபடி கீர்த்தனன் உறங்க ஆரம்பித்தான்.
—————————————–
“நான் சொன்னது தான் கடைசில நடந்துச்சு பார்த்தியாம்மா?…” என அரசி ராக்குவிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
முகத்தில் ஏகத்திற்கும் கேலி புன்னகை. கீர்த்தனனுக்கு புரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை. பேசிக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.
“முதல்ல உள்ள போகட்டும்…” ராக்கு அதட்ட இசையும், கீர்த்தனனும் பட்டு புடவை, பட்டு வேஷ்டியில் தம்பதி சமையதராக உள்ளே நுழைந்தனர்.
இசையின் கையில் பிறந்து மூன்று மாதமேயான குழந்தை சபரீஷ்வரன். கீர்த்தனன் கையில் தனுக்குட்டி தம்பியை பார்த்து சிரித்தபடி.
“தம்பியை தாப்பா…” என அழகாய் கேட்டாள்.
“உள்ள வந்து மடில வச்சுப்பியாம்…” என்று இசை சொல்ல நால்வரும் உள்ளே நுழைய வீடு முழுவதும் குளிர்ச்சி.
அரசி சொல்லியபடி தான் நடந்தது. சித்திரையில் குழந்தையை பெற்றெடுத்தாள் இசை.
பிரசவத்திற்கு நூறு சாக்குகள் சொல்லி சுந்தரியிடம் ராக்கு பேசினால், ஆயிரம் சாக்குகள் சொல்லி சுந்தரியின் வாயடைத்தான் கீர்த்தனன்.
அதனை இப்போதுவரை அரசி சொல்லிக்காண்பித்துக்கொண்டே தான் இருந்தாள் கிண்டலுடன்.
“இப்ப என்னடி? அதான் புள்ளையே பிறந்துருச்சே. அவர் செஞ்சா எல்லாம் சரியாத்தான் இருக்கும்…” என்றார் ராக்குவும் பெருமையாக.
மருமகன் மேல் அத்தனை மரியாதை. அதுவும் ஊரே வியக்க, மூக்கில் விரல் வைக்கும்படியல்லவா ஒரு வாழ்க்கையை மகளுடன் வாழ்கிறான்.
பிரம்மிக்காமலும் இருக்கமுடியவில்லை. தங்களிடம் இன்னும் அதே அளவான பேச்சுக்களாக இருந்தாலும் மகளை தாங்குவதில் அவனை மிஞ்ச முடியாது.
‘சுந்தரி மகனை மாதிரி வளர்க்கனும் என்பதை தாண்டி சுந்தரி மகனை மாதிரி பொண்டாட்டியை பார்த்துக்கனும். புள்ளையை பார்த்துக்கறதா சுந்தரி மகனை மாதிரி. மாப்பிள்ளையா, சுந்தரி மகனை மாதிரி தான் பார்க்கனும்’ என அத்தனை உதாரணத்திற்கும் கீர்த்தனனையே காண்பிக்க ஆரம்பித்தனர்.
“குடுத்துவச்சவன் பெருமாளு…” என எடுப்பு என்னும் பெயர் கூட கொஞ்ச கொஞ்சமாய் குறைவதை போல இருந்தது.
ஆனாலும் வீம்பிற்கு அந்த பெயரை சொல்லி பேசுபவர்களிடம் பெரிதாய் கண்டுகொள்வதில்லை. பெருமாளிடமுமே மாற்றம் வந்திருந்தது.
ஏதேனும் உதவி என்று தன்மையுடன் மரியாதை தந்து கேட்பவர்களுக்கு தயங்காமல் செய்பவர் அதிகாரம் செய்பவர்களிடம் முதுமையை காண்பித்து ஒதுங்க துவங்கி இருந்தார்.
மகளின் ஆசையும், மருமகனின் பேச்சும் தான் அவரிடம் இந்த மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறதென ராக்கு மூத்த மகளிடம் சொல்லி மாய்ந்துபோவார்.
“ஆனாலும் உன் இளைய மருமகன் பலே ஆளும்மா. வாய திறக்க முடியாதபடில ஒன்னோன்னையும் பன்றாரு. பிரசவம் அங்க ரெகுலரா பார்க்கற டாக்டர்ட்டன்னு சொல்லி வளைகாப்பு முடியவும் கூட்டிட்டு போய்ட்டு பிள்ளை பிறந்துருச்சு…”
“இங்க வெயில் அதிகம், ஏசி மாட்டிட்டு இசையை இங்க கூட்டிட்டு வருவோம்ன்னு சொல்லி சொல்லி மூணு மாசம் கடத்தி இப்ப கூட்டிட்டு வந்திருக்காரு. இதே வெயில் தான அங்கயும். ஆனாலும் நீ ரொம்பத்தான் உன் மருமகனுக்கு கொடி பிடிக்கிற…”
அரசி சிரித்துக்கொண்டே சொன்னாலும் மனதில் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அத்தனை சந்தோசம் தங்கையின் நிறைவான வாழ்க்கையில்.
“பார்த்துக்கிட்டே இரு. இன்னும் ஒருவாரத்துல வேலை இருக்கு, பிள்ளையை விட்டு பிரிய முடியலைன்னு சொல்லி உன் மகளை கூட்டிட்டு போகத்தான் போறாரு…” என்று வேறு சொல்ல,
“மதினி…” என்று சுந்தரியிடம் தான் வந்தார் ராக்கு.
“என் வாயடைக்கிறான் ராக்கு. அவன்கிட்ட என் பேச்சு எங்க எடுபடுது? உன் மகளே இப்ப பேச முடியலை. அவ பேச்சையே கேட்கிறதில்லை…” என்று நழுவிக்கொண்டார்.