“ஏன் ஆனந்தி, உனக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா? அப்ப நம்பிக்கை வர வைக்கணுமே,” யோசனையுடன் தாடையை தடவியபடி முத்தமிடுபவன் போல அவன் உதடுகளை மெல்லக் குவித்தான்.
“அடி வாங்கப் போறீங்க, இன்னைக்கு உங்களுக்கு என்னமோ ஆகிடுச்சு. இன்னும் என்னால நம்ப முடியலை. என் ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் உங்களை என் சொந்தம்னு தான் தெரியும். இனி என்னவெல்லாம் கேட்பாங்களோ?”
“இப்பவும் உனக்கு சொந்தம்ன்னு சொல்லு. நான் உனக்கு தானே சொந்தம்?” சொல்லி மெல்ல நகைத்தான்.
“ஹ்ம்ம்… சொல்லலாம் சொல்லலாம். சரி சொல்லுங்க என்னவோ பேசணும் முக்கியமான்னு சொல்லி கூட்டிட்டு வந்தீங்க.. இன்னும் அதைச் சொல்லலையே?”
“சொல்றேன் டி, என்ன அவசரம். அதுக்கு முன்னாடி உனக்கு ஒன்னு குடுக்கணும்.”
சிறு தயக்கம் அவள் மொழியில். அவன் அவளின் காதலன் தான். அவனை நன்கு அறிந்தவள் தான். ஆனாலும் பெண்மைக்கே உண்டான பயமும் சிறு சிறு எச்சரிக்கை உணர்வுகளும் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.
இன்றுவரை எட்டி நின்று காதல் மொழி பேசியவன். இன்று தனியே வெளியில் அழைத்து வந்திருக்கிறான். இன்று அவன் வருகையும் இந்த தனிமையிலான சந்திப்பும் அவள் முற்றும் எதிர் பாராத ஒன்று.
இத்தகைய ஆயிரம் ஆசைகள் ஆனந்திக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் அவை நிஜத்தில் நடக்கையில் இப்படி பயமும் தயக்கமும் வந்து அவளின் காதலைக் கொண்டாட விடாமல் செய்யும் என அவள் நினைத்திருக்கவில்லை.
“ஆனந்தி, என்ன யோசனை. நான் பைத்தியக்காரன் மாதிரி பேசிட்டு இருக்கேன். நீ என்னன்னு கேட்டபடியே கனவுக்குப் போயிட்டியா?”
அவளின் பதில் கேட்க ஜீவாவுக்கும் அவளின் நிலை புரிந்தது. ஆசை காதல் எல்லாம் இருந்தாலும், தனியே ஒரு ஆணுடன் இருப்பதில் இருக்கும் அடிப்படை பயம் அவளையும் சூழ்ந்துள்ளது என அவனுக்குப் புரிந்தது.
என்னுடன் இருக்க இவளுக்கு என்ன பயம், அவள் தானே இதெற்கெல்லாம் விருப்பப்பட்டாள் எனக் காதலனாக அவன் மனம் கொஞ்சம் சுணக்கம் கொண்டதென்னவோ உண்மை.
ஆனால் அதையும் தாண்டி அவனுள் இருந்த சகோதரனால் அவளைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பெண்களுக்கெல்லாம் ஆசையும் இருக்கும் அதே சமயம் அதை விட அதிகம் பயமும் இருக்கும் போலும் என எண்ணமிட்டான். மேலும் அவனே,
“நீ சொல்றது எனக்குப் புரியுது. ஆனா போன தடவை பார்க்க முடியலன்னு நீயும் வருத்தப் பட்ட. அதனால இந்த தடவை வரும் போது ஒரு நாள் முழுசும் உன் கூட இருப்பேன்னு சொன்னேந்தானே. ஆனா இனி எல்லாம் இப்படி அடிக்கடி செய்யக் கூடாது சரியா?”
“நானே வந்து கேட்டாலும் நீங்க செய்ய மாட்டீங்க. சரியான ரூல்ஸ் ராமானுஜம்.”
“அடிப்பாவி, இன்றைக்குக் காலைல இருந்து உன் கூடவே ஊரு சுத்திகிட்டு இருக்கேன். ஆனாலும் உனக்கு ஆசை அதிகம் தான்.”
“இனி இப்படி எல்லாம் ஆசைப் பட மாட்டேன். ரொம்ப பயமா இருக்கு. இந்த அனிதா எல்லாம் எப்படித்தான் அவங்க அம்மாக்குத் தெரியாம லவ் பண்ணுறாளோ? எனக்கு பயமாவே இருக்கு.”
“இந்த பயமும் நல்லது தான். முதல்ல நான் கொடுக்க வந்ததை வாங்கிக்கப் போறியா இல்லையா.”
மீண்டும் முதலிலிருந்தா? என்ற பார்வை தான் ஆனந்தியிடம். ஆனாலும் “அப்படி என்னத்தக் கொடுக்கப் போறீங்க ஆனந்த்? சும்மா கொடுக்குறேன் கொடுக்குறேன்னு சொல்லுறீங்க ஒன்னும் கொடுக்க மாட்டேங்குறீங்க?”
ஜீவா அவன் பையிலிருந்து ஒரு அழகிய பரிசுப் பையை எடுத்து அவளிடம் கொடுத்தான். பொன்னிற ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த துணியில் அங்கங்கு சிவப்பு நிற இதயங்கள் சிறியதும் பெரியதுமாகத் தெளிக்கப் பட்டிருந்தது.
“இது உனக்காக நான் வாங்கின ஃபர்ஸ்ட் கிப்ட். பிடிச்சுருக்கான்னு பார்த்து சொல்லு ஆனந்தி.”
“கிப்ட்ன்னாலே அழகுதான். அதிலும் நீங்க எனக்காக முதல் முதல்ல வாங்குறது. எப்படி பிடிக்காமப் போகும்?” என்று சொல்லியபடியே அவள் பிரிக்க உள்ளே இருந்ததைப் பார்த்தவள், “உங்களை நிஜமாலுமே அடிக்கலாம் போலத் தோணுது. ஆனா இத்தனையும் எனக்காகத் தேடி வாங்கிட்டு வந்திருக்கீங்கன்னு சும்மா விடறேன்.” என்றவள் மீண்டும் பொறுமையாக அவற்றைப் பார்க்கத் தொடங்கினாள்.
பை மொத்தமும் விதவிதமான சிகை அலங்கார பொருட்கள். அத்தனையும் அத்தனை அழகாக இருந்தது.
“ஆனந்த் கிலிப், பாண்ட் எல்லாமே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. எப்படி இப்படி?”
“உனக்கு என்ன கிப்ட் வாங்களான்னு யோசிச்சேனா எனக்கு இது தான் பாம்புக்குட்டி தோணுச்சு. வேதா வாங்கும் போது பார்த்திருக்கேன், அதுனால கொஞ்சம் ஈஸியா இருந்தது. இல்லைன்னா கொஞ்சம் கஷ்டம் தான்.” என்றான் சிரிப்புடன்.
“தேங்க் யூன்னு சொல்லத் தேவை இல்ல. ஆனாலும் ஐம் சோ ஹேப்பி.”
“இந்த ஹேப்பி மனசோட இன்னொன்னும் கேட்டுக்க ஆனந்தி.”
“சொல்லுங்க, என்ன விஷயம்? சீக்கிரம் சென்னை வரப் போறீங்களா?”
“அது இல்ல. நான் உங்க அண்ணா கிட்ட நம்மளப் பத்தி எல்லாம் சொல்லிட்டேன்.”
அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு ஒரு நொடி மூச்சே நின்றுவிடும் நிலை. என்ன உளறுகிறான் இவன் என்று கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.
“நிஜமாத்தான் சொல்லிட்டேன்.” என்றான் மீண்டும் அவளுக்கு உணர்த்தும் பொருட்டு.
“என்ன பண்ணி வச்சிருக்கீங்க, அவனே ஒரு சின்சியர் சிகாமணி. அம்மா ஆனந்தி இப்படிப் பண்றான்னு அம்மாகிட்ட இப்பவே சொல்லிடுவான். இப்ப என்ன அவசரம்ன்னு அவன்கிட்ட உளறுனீங்க ஆனந்த்? என்கிட்டே கேட்டிருக்கலாம்ல்ல? ஹையோ போச்சு எல்லாம்.” என்று சொன்னவள் கண்கள் அழுகையைத் தத்தெடுக்கும் முன் ஜீவா பதில் சொல்லத் தொடங்கினான்.
“அமைதியா யோசிக்க மாட்டியா டி நீ. உங்க அண்ணன்னு நான் சொன்னது அந்த வளந்து கெட்டவன் கணேஷை இல்ல. நான் சொன்னது அர்ஜுன் அத்தானை.” நிறுத்திப் பின் மேலும் தொடர்ந்தான்.
“நீ முதல்ல பதட்டமில்லாம கொஞ்சம் பொறுமையாக கேளு ஆனந்தி. போன வாரத்துல அர்ஜுன் அத்தான் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். வேலை அப்புறம் ஃபியூச்சர் இப்படிப் பேசும் போது, எனக்கு ஆனந்தியைப் பிடிக்கும் அத்தான்னு சொல்லிட்டேன்.
அவருக்கு முதல்ல என்ன தோணுச்சோ, ஆனா என் கிட்டப் பொறுமையா எல்லாம் கேட்டாங்க. எவ்வளவு நாளா உனக்கு இந்த ஆசை? அவளுக்குத் தெரியுமா? உங்க அக்காவுக்குத் தெரியுமா? எல்லாம் கேட்டாங்க.”
“எனக்கும் பிடிக்கும்ன்னு அண்ணாகிட்ட சொல்லீட்டிங்களா? போச்சு, அர்ஜுன் அண்ணா என்னக் கேட்டா நான் என்ன பதில் சொல்ல?”
“கண்டிப்பா கேட்பாங்க. ஆனா தைரியமா பதில் சொல்லு ஆனந்தி. இப்போதைக்கு வீட்ல சொல்ல மாட்டாங்க. ஆனா உன்கிட்ட கேட்பாங்க.
‘இது வரை நாங்க வெளில ஊர் சுத்தினதில்ல, போன் கூட அதிகம் பேசினதில்ல. இதனால அவ படிப்பு கெட்டுப் போயிடாது’ன்னு சொன்னேன். ஆனா கடைசி வரை அத்தான் என்கிட்டே எதுவும் பதில் சொல்லல. இதைச் செய்யக் கூடாதுன்னும் சொல்லல. அக்காக்கு இதைப் பத்தி சொல்லாதீங்க அத்தான். நானே இன்னும் கொஞ்ச நாள்ல சொல்லிட்றேன்னு சொல்லிருக்கேன். பார்க்கலாம்.”
“இப்ப என்ன அவசரம்ன்னு இதை அண்ணாகிட்ட சொன்னீங்கன்னு எனக்குப் புரியல. வேற எதுவும் பிரச்சனையா?”
“இல்ல ஆனந்தி. நிஜமாவே அன்னைக்கு நான் கொஞ்சம் உளறிட்டேன். சொல்லணும்னு நினைச்சதில்ல. ஆனா அந்த நிமிஷம் அவங்ககிட்ட சொல்லி வைக்கிறது நல்லதுன்னு தோணுச்சு. நீ இதைப் பத்தி எதுவும் யோசிக்காத. என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.”
“போச்சு, எனக்கு இருக்க பயத்துல நான் யார்கிட்டயும் போய் உளறாம இருக்கணும். நீங்களும் இதைப் பத்தி ரொம்ப யோசிக்காதிங்க.”
“இதுல பயப்படற அளவுக்குத் தப்பு எதுவும் இல்ல ஆனந்தி. நமக்கு விருப்பம் இருக்குன்னு சொல்லிருக்கேன். அவ்வளவு தான். இதை இப்படியே விட்டுடு. உனக்கு போன்ல சொன்னா இன்னும் பயப்பிடுவன்னு தான், நேர்ல பார்த்துச் சொன்னேன்.”
“ஹுக்கும், அதானே நான் கூட என்னைப் பார்க்கத்தான் ஆசையா வந்தீங்கன்னு நினைச்சேன். போங்க போங்க, அங்க சொன்னதுக்கு எனக்கு கிப்ட் எல்லாம் கொடுத்து ஏமாத்துறீங்க. நான் அண்ணா கேட்டா எனக்குப் பிடிச்சுருக்கு. ஆனா நீங்க எல்லாம் வேண்டாம்னு சொன்னா எனக்கும் வேண்டாம்னு சொல்லிடுவேன்.
“பாவி கிராதகி. ஏன் சொல்லமாட்ட? சொல்லு சொல்லு எனக்கென்ன?”
“சொல்லமாட்டேன்னு தைரியம் உங்களுக்கு.”
“கண்டிப்பா. இது உனக்கு ஒரு நியூஸ் மட்டும் தான். இதுல நீ யோசிக்க எதுவும் இல்ல. நீ எப்பவும் போல படிப்பைப் பாரு. இப்ப டைம் ஆயிடிச்சு வா கிளம்பலாம். இனி வந்தா நான் உன்னை காலேஜில் வந்து பார்க்கிறேன். ஓகேவா?”
கேள்வி கேட்டபடியே அவளைக் கிளப்பி வீட்டுக்கு அனுப்பி இருந்தான். அர்ஜுனுக்கு விஷயம் தெரியும் என்பது ஜீவாவிற்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது.
எல்லாம் சரியாக இருந்தாலும், காதல் என்னும் கள்ளம் புகுந்து விட்டால் ஆண்களுக்கும் பயம் வருவது இயற்கை தானே.