அதிலிருந்து இரண்டு புகைப்படங்கள் கீழே விழ ஸ்பூர்த்தி தான் எடுத்தாள் அதனை.
“யார் போட்டோ?…” என சாதாரணமாக கேட்கவும்,
“அலையன்ஸ் வந்திருக்கு. அப்பா கொண்டுவந்து வச்சிட்டு போயிருக்காங்க. அதான் பார்த்திட்டிருக்கேன்…” என்ற அஷ்வின்,
“இதையும் சேர்த்து பாரு. எனக்கொண்ணும் தோணலை…” என்று நீட்ட தன்னைப்போல வாங்கியவள் விழிகள் லேசாய் கலங்கிவிட்டன.
“கல்யாணமா மாமா?…” வார்த்தைகள் தொண்டையிலிருந்து சிக்கிக்கொண்டு வெளிவர மறுத்தது.
“ஹ்ம்ம். அப்படித்தான் சொல்றாங்க. எனக்கு வயசாகுதாம்…” இப்போதும் அதே சிரிப்பு தான்.
அஷ்வின் எழுந்து சென்று தன்னுடைய பயண பெட்டியை திறந்து பிரிக்க ஆரம்பித்தான் ஸ்பூர்த்தியிடம் பேசிக்கொண்டே.
அவனின் பார்வையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதுவே ஸ்பூர்த்திக்கு மனதளவில் பாதிப்பை தர,
“உங்களுக்கு இஷ்டமா?…” என்றாள்.
“கல்யாணம்னு சொன்னா பண்ணிக்க வேண்டியது தான். நெக்ஸ்ட் அதுதானே? லைஃப்ல செட்டிலாகனும்….” என்றவன்,
“உனக்கு அதுல யாராச்சும் பிடிச்சிருக்கான்னு பாரேன். எனக்கு ஸ்பார்க் எதுவும் தோணலை. அம்மா நீயே பாருன்னு சொல்லிட்டாங்க. எனக்கு பிடிச்சிருக்கனுமாம். அதான் உன்கிட்ட சொன்னேன். போட்டோஸ்ல பின்னாடியே டீடெய்ல்ஸ் இருக்காம்….”
“நான் சொன்னா உங்களுக்கு ஓகேவா மாமா?…” என்று ஸ்பூர்த்தி எழுந்து நிற்க அவளை திரும்பி பார்த்தவன்,
“உன்னோட செலெக்ஷன் கரெக்ட்டா இருக்கும்டா. பாரு. நீ தானே ரொம்ப ஆர்வமா இருந்த என் வொய்ப் எப்படி இருப்பாங்க, அவங்கட்ட நான் எப்படி இருப்பேன்னு. நீயே செலெக்ட் பண்ணு…” என்றான் அவளிடம்.
“அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க மாமா…” யோசிக்கவே இல்லை சொல்லிவிட்டாள்.
தான் கேட்டது சரிதானா என கொஞ்சமும் நம்பிக்கையில்லாத பார்வையோடு ஸ்பூர்த்தியை திகைப்புடன் பார்த்தவன்,
“வாட்? கம் அகைன்…” என்றான் அஷ்வின்.
“ஏன் என்னை பார்த்தா கல்யாணம் செஞ்சுக்கனும்னு தோணலையா மாமா? இல்லை உங்களுக்கு பிடிச்ச மாதிரி இல்லையா? என்னை ரொம்ப புடிக்கும் தானே உங்களுக்கு. அதான் என்னை பண்ணிக்கோங்க…”
“என்ன நான்சென்ஸ் இது ஸ்பூர்த்தி?…” என்று அஷ்வின் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
“நான் கரெக்ட்டான சென்ஸ்ல தான் பேசறேன் மாமா. என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க…” மீண்டும் சொல்ல கொஞ்சமும் யோசிக்காமல் இடியாய் அவன் கரங்களை அவள் கன்னத்தில் பதித்திருந்தான் அஷ்வின்.
தன்னையே நம்பமுடியவில்லை அவனுக்கு. அவனா ஸ்பூர்த்தியை அடித்துவிட்டான் என தன் கைகளையும், கன்னம் தாங்கி கண்ணீருடன் நின்றவளையுமே மாறி மாறி பார்த்தான்.
எந்தவிதத்தில் இப்படி ஒரு எண்ணத்தை இவளுக்கு நான் கொடுத்திருப்பேன் என தன்னை குறித்தான பார்வையின் ஆதங்கம் ஸ்பூர்த்தி பார்வைக்கு வேறு விதமாய் தெரிந்தது.
“உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை ஸ்பூர்த்தி…” வலியுடன் கூறியவனுக்கு லேசாய் நடுக்கம்.
ஒரே குடும்பமாய் வளர்ந்த பிள்ளைகள். எந்தவித பாகுபாடும், வேறுபாடுமின்றி வளர்ந்து வர தன்னை நம்பி தானே இவளை ஒப்படைத்திருந்தனர்.
இப்படி வந்து நிற்பவளின் பேச்சை கேட்டால் என்ன நினைப்பார்கள்? எல்லாவற்றிற்கும் மேல் தன்னால் அந்த எண்ணத்தோடு அவளை அப்படி பார்க்கவோ, அணுகவோ முடியுமா?
தலை சுற்றியது அஷ்வினுக்கு. இன்னும் ஸ்பூர்த்தி தான் பேசியதன் முடிவிலிருந்து பின்வாங்காமல் ஸ்திரமாய் நிற்க,
“கிளம்பு நீ…” என்றான் கோபத்துடன்.
“நான் சொல்லிட்டேன். நீங்க பதில் சொல்லலை. சொல்லாம எப்படி போக?…”
“உனக்கு எவ்வளோ தைரியம்? என்கிட்டையே நீ இப்படி பேசுவ?…” மீண்டும் அவன் கையை ஓங்கிவிட்டான்.
“இது இருந்தா தானே?…” என்று கையிலிருந்த புகைப்படங்களை சுக்கு நூறாய் கிழித்தெறிந்தவள்,
“எனக்கு உங்களை தான் கல்யாணம் செஞ்சுக்கனும் மாமா….” என்றாள் மீண்டும்.
“உனக்கென்ன பைத்தியமா? என்ன பேசறோம்ன்னு யோசிக்கமாட்டியா? உனக்கு எப்படி புரிய வைக்க?…” என்றவன் யோசித்து,
“உன் கண்ணை தாண்டி என்னால உன்னை பார்க்கவே முடியாது ஸ்பூர்த்தி, புரிஞ்சுக்கோ…” என்றவன் பேச்சில் மொத்தமாய் அடிபட்டு போனாள்.
“முதல்ல உன் மனசை மாத்திட்டு வேலையை பாரு. போ முதல்ல. கண்ணு முன்னாடி நிக்காத. இல்லைன்னா திரும்ப அடிச்சிட போறேன்…” என விரட்ட அசையாமல் நின்றவள்,
“கண்டிப்பா போறேன். ஆனா மனசை எல்லாம் மாத்திக்க முடியாது. என்னை பத்தி உங்களுக்கு தெரியும். உங்களுக்கு வேண்டாம்ன்னா அப்படியே இருக்கட்டும். ஆனா நான், எனக்கு நீங்க தான் எப்பவும்…” என்று சொல்லியவள் வெளியேற மோனிகா பேயறைந்ததை போல அங்கே நின்றிருந்தாள்.
“உங்க மகனுக்கு சொன்னது தான் உங்கக்கிட்டையும் சொல்றேன்த்தை. நான் கிளம்பறேன்…” என்று கீழே சென்றுவிட அஷ்வின் தளர்ந்துபோய் அமர்ந்துவிட்டான்.
கீழே வந்த ஸ்பூர்த்தி பல்லவன் எதிரே வரவும் அஷ்வின் மேலிருந்த கோபம் எல்லாம் அவனின் மேல் தான் பாய்ந்தது.
“குட்டிம்மா எப்படா வந்த? கிளம்பிட்டியா?…” என கேட்டவன் அவள் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடங்களை பார்த்தவன்,
“என்னடா? என்ன இதெல்லாம்?…” என்று கேட்க,
“உங்களால தான். நீங்க ஏன் மாமா வெளில பொண்ணு பார்த்தீங்க? ஏன் என்னை பார்த்தா உங்க பையனுக்கு ஏத்த பொண்ணா தெரியலையா? இதை சொன்னதுக்கு அஷ்வின் மாமா அடிச்சிட்டாங்க. ஏன் எனக்கு எந்த நினைப்பும் இருக்க கூடாதா?…”
“ஸ்பூர்த்தி…” பல்லவன் வாயடைத்து போனான்.
“உங்களுக்கு கூட முதல்ல என்னை பார்க்கனும்னு தோணலைல. எங்கம்மா சொல்லுவாங்க தாய்மாமா தான் முன்ன நின்னு கல்யாணம் செஞ்சு வைப்பாங்கன்னு. ஆனா நீங்க என்ன பண்ணிருக்கீங்க?…” என்றவள் கிளம்பிவிட்டாள்.
எது நடக்க கூடாதென்று பல்லவன் பயந்தானோ அதை நடத்தியிருந்தாள் ஸ்பூர்த்தி.
அங்கிருந்து கிளம்பிய ஸ்பூர்த்தி மீண்டும் வீடு சென்று சேரும் வரை யாரின் அழைப்பையும் எடுக்கவில்லை.
வீட்டிற்கு செல்ல அத்தனைபேரும் அதிர்ச்சி மாறாமல் அமர்ந்திருந்தனர். இதனை எதிர்பார்த்ததை போல ஏற்கனவே மனதை திடப்படுத்தி வந்திருக்க வீட்டினரின் கேள்விக்கு பதில் சொல்ல ஆயத்தமாவளை போல வந்தமர்ந்தாள்.
ஆனால் ஒருவரும் எதுவும் கேட்கவில்லை. கன்னம் ஒருபக்கம் வீங்கி சிவந்திருக்க மேகா அதை லேசாய் வருடியதும் அவளின் மடியில் சாய்ந்துகொண்டாள்.
“எனக்கு மாமாவை பிடிச்சிருக்கும்மா. வேற என்ன சொல்லன்னு தெரியலை. முதல்ல என்னை தான் பேசுவாங்கன்னு நினைச்சேன். அந்த நேரம் என்னையே இதுல ஒரு பொண்ணை பார்த்து சொல்லுன்னு சொல்லவும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை…”
கசியும் விழிகளுடன் தாயிடம் சொல்ல அதிரன் என்ன முடிவெடுக்க என்று திணறி போய் அமர்ந்திருந்தான்.
“ஓகே, நீ உன் ரூம்க்கு போ. அப்பறமா பேசிக்கலாம்…” மேகா சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றவள் மாடிக்கு செல்ல அதிரன் அஷ்வினுக்கு அழைத்தான்.
இன்னும் ஸ்பூர்த்தி செய்து வைத்ததில் இருந்து வெளிவராத அஷ்வின் மாமனின் அழைப்பில் தடுமாறி போக நடுங்கும் கையுடன் போனை எடுத்தான்.
“மாமா, நான்…”
“இப்ப இதை பேசவேண்டாம். நீ என்ன பன்றன்னு கேட்க தான் கால் பண்ணேன். கொஞ்சம் சில்லாகிக்கோ சேம்ப். பொறுமையா பேசலாம்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
அன்றே ஸ்பூர்த்தி வனத்திற்கு கிளம்பிவிட ஒருவராலும் தடுக்க முடியவில்லை. தன்னால் அங்கே இருக்கமுடியவில்லை என்று கிளம்பியிருந்தாள்.
போனவள் போனவளாகவே இருக்க அடுத்து அங்கே எந்த விசேஷத்திற்கும் வரவில்லை.
இரண்டு வருடங்கள் அஷ்வின் மனதில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருக்குமா என்ற யோசனைகளை கூட அவனின் பார்வையும், அவன் கொடுத்த அடியும் விரட்டியடித்தது.
ஆனால் அவள் விதைத்துவிட்டு வந்த ஒன்று அவனிடத்தில் வேரூன்றி விருட்சமாய் வளர்ந்துவிட்டிருந்ததை அவள் அறியாமலேயே போனாள்.