தம்பியின் திருமணம் முடிந்து தாலி பெருக்கும் விழாவும் முடிந்திருக்க இன்று தன் வீட்டிற்குத் திரும்ப வந்திருந்தாள் வேதா. அர்ஜுனும் உறங்க வர, யோசனையில் இருந்த வேதாவின் முகம் பார்த்துப் பேச்சைத் தொடங்கினான்.
“என்ன டா சக்கரைக் கட்டி, என்னவோ யோசனையா இருக்க?”
“அதெல்லாம் எதுவும் இல்ல அஜூ. சும்மாதான் ஏதோ ஒரு யோசனை. இன்னைக்கு தாலி பெருக்குனதோட ஒரு வழியா கல்யாணத்தை நல்ல படியா முடிச்சாச்சு. இனி அம்மாவுக்கும் ஆனந்தி அவங்க கூடவே இருப்பா.”
“ஹ்ம்ம். ஆமா டா. இன்னைக்கு அம்மா அங்க என்ன பேசினாங்க? ஏதோ அத்தை கிட்ட கோவமா பேசினாங்க?”
“அது நான் எந்த முறையும் செய்யாம, எல்லாம் எங்க பெரியத்தை செஞ்சாங்கன்னு அத்தைக்குக் கோவம்.”
“ஓஹ்.”, என்று சொல்லியவனுக்கு அம்மாவுடன் இன்று பேசியே ஆக வேண்டும் என்ற வேகம்.
“சரி நீ படுத்துத் தூங்குடா. குடிக்கத் தண்ணி கொண்டு வர மறந்துட்ட. நான் கீழ போய் எடுத்துக்கிட்டு வர்றேன்.” என்றவன் கீழே வர சாகரியும் சமையலறையில் நின்றிருந்தார்.
“என்னம்மா இன்னும் தூங்கலையா? என்ன செய்யிறிங்க?”
“இல்லப்பா, கொஞ்சம் சுடு தண்ணி குடிக்கலாம்ன்னு வந்தேன். நீ இன்னும் தூங்கலையா?”
“நானும் தண்ணி எடுக்கத்தான் ம்மா வந்தேன். உங்களுக்குத் தூக்கம் வரலைன்னா கொஞ்சம் பேசலாமாம்மா?”
“என்னடா இப்படி கேட்கிற? என்ன பேசணுமோ பேசுப்பா.”
“இன்னைக்கு வேதா வீட்டுல அத்தையோட என்னம்மா பிரச்சனை? என்னமோ கோவமா பேசிகிட்டு இருந்தீங்க பார்த்தேன்.” என்று அர்ஜுன் கேட்டு முடிக்க சாகரிக்கு கோவம் அவர் முகத்தில் தெரியத் தொடங்கியது.
“ஏன்டா இதைக் கேளுன்னு உன் பொண்டாட்டி சொல்லி அனுப்புனாலா? அதான் பேசணும்னு வந்தியா அர்ஜுன்?”
“ம்மா, என்னம்மா நான் உங்களைக் கேட்டா நீங்க ஏன் இதுல வேதாவை இழுக்கிறீங்க? அவளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நான் பார்த்ததை நான் கேட்குறேன். அவ்வளவு தான்.”
“ஏன்டா, உன் பொண்டாட்டி வீட்டுல தாலி பெருக்க, நாத்தனார் இவ எல்லாம் செய்யாம அதென்ன அவங்க அத்தை செய்யிறாங்க எல்லாம்? தாலிய கயிறுல இருந்து சங்கிலிக்கு மாத்தி கோர்க்கன்னு எல்லாம் இவ தானே பண்ணனும். அதென்ன இவங்க அத்தை செய்யிறாங்க. பிள்ளை இல்லைன்னு தானே இவளை ஒதுக்குறாங்க? அதான் கேட்டா அவங்க அம்மா என்னமோ கதை சொல்லுறாங்க.”
“ம்மா, முதல்ல இப்படி பேசுறத நீங்க நிறுத்துங்க. இனியும் நீங்க இப்படி பேசுறத என்னால பொறுத்துக்க முடியாதும்மா. அவங்க அத்தை பெரியவங்க சுமங்கலின்னு தானே அவங்களை எல்லாம் செய்யச் சொன்னாங்க.
நமக்குத் தெரியும் தானே இப்படி செய்வாங்கன்னு. அப்படியே இருந்தாலும் அது அத்தை வீட்டுக்கும் சித்தப்பா வீட்டுக்கும் உள்ள பிரச்சனை. நீங்க ஏன் அதுல தலையிட்டிங்கம்மா?”
“நீ ரொம்ப மாறிட்டடா அர்ஜுன். உன் பொண்டாட்டி வீட்டுல நான் போயி பேசுனா நீ என்கிட்டயே சண்டைக்கு வர்ற?”
“அம்மா நான் இப்பவும் சண்டை போடல. உங்க தப்பத் தான் எடுத்து சொல்லுறேன். ஏற்கனவே சித்திகிட்ட நீங்க பேசினதுல வந்த குழப்பம் தான் இந்தக் கல்யாணம் இவ்வளவு தூரம் கஷ்டமாப் போனதுக்குக் காரணம்.
அன்னைக்கு நீங்க சித்திக்கிட்ட ஜீவாவுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லலைன்னா, அவங்களும் இப்படி இந்தக் கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்லிருக்க மாட்டாங்க. ஜீவாவும் அவளும் போயி ரெஜிஸ்டர் பண்ண நினைச்சிருக்க மாட்டாங்க. “
“அப்ப எல்லா தப்பும் எம்மேலேன்னு நீ சொல்லுற அப்படி தானே? நான் வாயே தொறக்கக் கூடாதா இந்த வீட்டுல?
ஹும்ம், உன் பொண்டாட்டியே இந்த வீட்டுல இனி நாட்டாமை பண்ணட்டும். நான் ஒதுங்கிக்கிறேன்.”
“ம்மா சும்மா பேசாதிங்கம்மா. எனக்கும் கோவம் வரும். நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன பேசுறீங்க? ஜீவாவுக்கு ஏன் குழந்தை பிறக்காதுன்னு சொன்னீங்கன்னு கேட்டா நீங்க வேதாவைப் பத்தி ஏன் ம்மா பேசுறீங்க?”
“உன் பொண்டாட்டிக்கு குழந்தை வளர்ச்சி இல்லைன்னு சொன்னீங்க. அவ அத்தை மகளுக்கும் வளர்ச்சி இல்லாம ஒரு குழந்தை இருக்கு. அப்ப இவனுக்கும் அப்படி ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னேன். இதெல்லாம் பரம்பரை வியாதி மாதிரி தானே?”
“ஏன்ம்மா அவங்க வேதாவுக்குச் சொந்த அத்தை பொண்ணு இல்லைன்னு உங்களுக்குத் தெரியாது? முப்பது வருஷத்துக்கு மேலயா மாமாவோட பிரண்ட் அவங்க அப்பா. அவங்களும் நம்ம ஆளுங்க. அதுனால ரெண்டு குடும்பமும் ரொம்ப க்ளோஸ். இதெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே?”
அர்ஜுனிடமிருந்து இந்தக் கேள்வி வரும் என சாகரி எண்ணியதில்லை. அவருக்கு வேதாவைப் பிடிக்காமல் போக ஜீவாவுக்கு ஆனந்தியைத் திருமணம் செய்து வைக்கும் பேச்சு வரவும் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
அதிலும் சாரதா முடிவு எடுக்க முடியாமல் இருக்கக் குறைபாடான குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது என சொல்லவும் சாரதா முற்றிலுமாக இந்தத் திருமணத்தை மறுத்திருந்தார்.
“என்ன டா. என்னையவே குற்றவாளிய விசாரிக்கிறாப்புள்ள விசாரிக்கிற? கல்யாணம் முடிஞ்சு அஞ்சு வருஷம் ஆகப் போகுது, இன்னும் குழந்தை இல்லைன்னு நான் பேசக் கூடாதா? ஊருக்குள்ள இருக்கவங்க எல்லாம் பேரன் பேத்தின்னு கொஞ்சிக்கிட்டு இருக்கும் போது நம்ம மட்டும் இன்னும் இப்படி ஒன்னும் இல்லாம இருந்தா எனக்குக் கவலை வராதா?”
“கவலை எல்லாருக்கும் இருக்கும்மா. அதுக்கு வேதாவைத் திட்டி என்ன ஆகப் போகுது? அவளை விடவா உங்களுக்கு உங்க வேதனை அதிகம். நீங்களே சொல்லுங்களேன்.”
“குறையோட உள்ளவளைக் கல்யாணம் பண்ணிக் குடுத்து அவங்க வீட்டுல நம்மளை ஏமாத்தீட்டாங்க. நீ இன்னமும் அவளுக்காக பேசுற. அவ உன்னை அப்படி மயக்கி வச்சிருக்கா டா. இனி அம்மா பேசுனா உனக்கு காதுல ஏறுமா?”
“ஆமாம்மா அவ சாத்தியமா என்னை மயக்கித்தான் வச்சுருக்கா. இல்லைன்னா நான் எப்பவோ தனிக் குடித்தனம் போயிருப்பேன். அவ சொன்னதைக் கேட்டு இன்னும் இங்கயே அவளைக் கஷ்டப் பட விட்டிருக்க மாட்டேன்.
நாங்க கேம்பிரிட்ஜ் விட்டும் உங்களுக்காகத்தான் திரும்ப வரணும்ன்னு நினைச்சா. நீங்க அவளை இங்க இருக்க டாக்டர் கிட்டயே வைத்தியம் பார்க்கணும்ன்னு சொன்னதுக்காகத் தான் எனக்கு விருப்பம் இல்லைன்னாலும் என்னை சமாளிச்சு இங்கயே வந்தா. ஆனா நீங்க அவளைத்தான் தப்பா பேசுறீங்க.”
“நா என்ன தப்பா பேசீட்டேன். எனக்கும் உன்னை குடும்பமா குழந்தை குட்டியோட பார்க்க ஆசை இருக்காதா? நீ அவளை விட்டுட்டு போன. சரி உன்னோட வேலை அவளை கூப்பிட்டுக்க முடியலன்னு விட்டாச்சு. இப்பவும் மூனு வருஷமா இப்படியே இருந்தா, நான் கேட்கக் கூடாதா?
மாசா மாசம் டாக்டர் கிட்ட போறீங்க. ஒன்னும் இல்லம்மா, நல்லா இருக்கான்னு சொல்லுறீங்க. வேற ஒன்னும் நடக்கல. இல்லை எங்கிட்டே எதையும் மறைக்கிறீங்களா?”
“அம்மா அவளோட உடம்பு நல்லா இருக்கு. ஆனா மனசு? அது நல்லா இருக்கா? அவளுக்கு டென்ஷன் இல்லாம இருந்தாலே பாதி சக்ஸஸ்ன்னு அந்த டாக்டர் இப்பவும் பலமுறை சொல்லுறாங்க.
ஆனா நம்ம அதைக் குடுக்குறமான்னு நீங்களே சொல்லுங்க?
நீங்கன்னு நான் உங்களை மட்டும் சொல்லலம்மா. என்னையும் சேர்த்து தான் சொல்லுறேன். அவளுக்கான நல்ல மனநிலையை நானும் அமைச்சுத் தரலை.
இது நம்ம குடும்பத்துல மட்டும் இல்ல. இங்க இருக்க பல குடும்பத்துல இந்த பிரச்சனை இருக்கும்மா.
இப்ப நம்ம ஊருல இருக்க வியாதில பெரிய வியாதியா குழந்தை இல்லாத ஒன்னும் வளர்ந்து நிற்குது. அதாவது கருத்தரிப்புப் பிரச்சனை. எல்லா இடத்துலயும் டீக் கடை மளிகக் கடை மாதிரி கருத்தரிப்பு மையமும் இருக்கு. டீவீ ரேடியோல குழந்தைங்க உபயோகிக்கிற பொருட்களை விளம்பரப் படுத்தின மாதிரி இப்ப இந்த கருத்தரிப்பு மைய விளம்பரமும் வர ஆரம்பிச்சுருச்சு.
இதுக்கெல்லாம் அந்த பொண்ணை மட்டுமே நீங்க எப்படிம்மா குத்தம் சொல்ல முடியும். மாறிக்கிட்டு இருக்க இன்னைய வாழ்க்கைமுறையும் ஒரு காரணம்ன்னு நீங்க யோசிக்கலாமே.
இருபது முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்த சூழ்நிலை இப்ப இல்ல. அப்ப இருந்த அளவு சுத்தமான காத்தும் சத்தான சாப்பாடும் ஆரோக்கியமான உடம்பும் இப்ப இல்ல.” மேலும் அர்ஜுன் பேசிக் கொண்டு போக, சாகரி இடையில் பேசத் தொடங்கினார்.
“இப்ப எதுக்குடா இதெல்லாம் எனக்கு சொல்லுற. என்னமோ நான் தான் அவளைக் கொடுமைப் படுத்துற மாதிரி இருக்கு நீ சொல்லுறது. புள்ளை இல்லாதவளை புள்ளை இல்லைன்னு சொன்ன என்னையே கொடுமைக்காரின்னு சொல்லுறீங்க. உன்னைப் பெத்து வளர்த்த அம்மாவையே இப்படி பேசுறியே டா” என்று மீண்டும் கோவம் கொள்ளத் தொடங்கினார்.
“ம்மா நானும் உங்களை சொல்லல. ஆனா இன்னைக்கு நிலைமை இப்படித்தானே இருக்கு.
எத்தனையோ பொண்ணுங்க காலைல ஆறு மணிக்கு வேலைக்குப் போயிட்டு ராத்திரி எட்டு மணிக்கு திரும்பி வர நிலைமை இங்க இருக்கு. இதுல நாலு மணி நேரம் அவங்க ட்ராவலுக்கே போகுது. இன்னும் சிலருக்கு நைட் ஷிஃப்ட் வேலை வேற.
யோசிங்கம்மா, உங்க காலத்துல நீங்க இப்படி இருந்தீர்களா? உங்களுக்குக் கிடைச்ச கவனிப்பும் அறிவுரையும் இப்ப உள்ள பொண்ணுங்க எத்தனை பேருக்கும்மா கிடைக்கிது.
குழந்தை எதிர் பார்க்குறாங்கன்னாலே உங்களுக்கெல்லாம் வெளியூர்ப் பயணத்தை குறைச்சு, இதைத்தான் சாப்பிடணும், இந்த வேலை செய்யக் கூடாதுன்னு எவ்வளவு சொல்லி இருப்பாங்க. நீங்க எதுவும் அப்படி இப்ப இருக்க பொண்ணுங்களுக்கு சொல்லிக் குடுத்து செய்ய வைக்கிறிங்களா?
அதுவும் வேதா போல வெளி நாட்டுல இருக்கும் போது கர்ப்பம் ஆகுற இல்ல கர்பமாக முயற்சி பண்ணுற பொண்ணுங்க நிலைமையை யோசிங்கம்மா. அது இன்னும் மோசம் ம்மா.
உங்களுக்கு சொன்னா எந்த அளவுக்குப் புரியும்ன்னு எனக்குத் தெரியலை. வெளி நாட்ல இருக்க மருத்துவ முறை, அங்க இருக்க கிளைமேட்ன்னு அதுக்கு அவங்க பழகி புரிஞ்சுக்கவே சில வருஷம் ஆகுது. இதுல இது போல ஆரோக்கியமா குழந்தையை பெத்து எடுக்குறதுக்கெல்லாம் மனசளவுல எவ்வளவு போராடணும்னு அனுபவிக்கிறவங்களுக்குத் தான் தெரியும்.
மத்தவங்க பார்வைல வெளிநாட்டுல நல்லா இருக்காங்கன்னு மட்டும் தான் தெரியும். ஆனா அன்னைக்குப் புள்ளைய அள்ளிக் கொடுத்துட்டு நாங்க நின்ன நிலைமை உங்களால எல்லாம் கொஞ்சகமும் புரிஞ்சுக்க முடியாதும்மா.
அப்படி புரிஞ்சுக்கவும் நீங்கல்லாம் முயற்சி கூட செய்ய மாட்டிங்க. சும்மா அவளை இனி குறை சொல்லுறத நிறுத்துங்கம்மா. எங்களுக்கு குழந்தை பிறக்கும் போது கொஞ்சிக்குங்க. இல்லை அப்படி ஒன்னு எங்களுக்கு கிடைக்கவே இல்லைன்னாலும் அதை பத்தி இன நாங்க கவலைப் படறதா இல்ல.” நீண்ட பெரு மூச்சுடன் தன் மனதில் இருந்ததை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி நிறுத்தினான் அர்ஜுன்.
“இன்னைக்கு உனக்கு அம்மாவை எடுத்ததெரிஞ்சுட்டு போகத் தோணும். ஏன்னா அவ உன்னை நல்லா மயக்கி வச்சிருக்கா டா. நான் செஞ்சது எல்லாமே தப்புன்னு தான் சொல்லுவா.
அன்னைக்கு அவசரப்பட்டு இவளை உனக்குக் கட்டி வச்சேனில்ல. எனக்கு இதெல்லாம் தேவையான ஒன்னு தான். எவ்வளவு நல்ல வரனை எல்லாம் விட்டுட்டேன்.
நம்ம முத்தண்ணன் அவரோட மூத்த பொண்ண நூறு பவுன் போட்டு கல்யாணம் பண்ணி குடுத்துருக்காரு. நீ ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொன்னா ரெண்டாந்தாரம்ன்னு கூட யோசிக்காம அவரோட ரெண்டாவது பொண்ணை உனக்குக் கொடுப்பாரு. நான் அதெல்லாம் இன்னும் யோசிக்கல. நாட்டுல நடக்காத ஒன்னையும் நான் சொல்லல.
என்னமோ கிடந்து குதிக்கிற. இதெல்லாம் நீ பேசல டா. அவ பேச சொல்லுறா. என் பிள்ளையைப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்று அவரும் பேசி முடிக்க அசரீரியாய் அவர்களின் பின்னே ஒரு குரல்.
“நல்லா படியா உங்க பையனுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைங்க அத்தை. அது உங்க உரிமை. கடமையும் கூட. ஆனா என்னோட புருஷனையோ என்னையோ பேசவோ, இல்ல எங்களுக்காக முடிவெடுக்கவோ உங்களுக்கு எந்த உரிமையும் நாங்க கொடுக்கல.” என சொல்ல இருவரும் சில நொடி சிலையாக சமைந்திருந்தனர்.
அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் அது பெண்ணின் தொழில் இல்லையே சரித்திரம் படைக்கவும் தரித்திரம் துடைக்கவும் வருவதில் பிழை இல்லையே