பயத்தின் விளைவு மகளை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்த்தார். பத்தாம் வகுப்புவரை தாய் தந்தை தாத்தாபாட்டி அரவணைப்பில் வளர்ந்த மங்கைக்கு விடுதிவாசமும்.. தந்தையின் செய்திகளும் மனஇறுக்கத்தை உண்டாக்க படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. பத்தாம் வகுப்பில்போல் பனிரண்டாம் வகுப்பில் மங்கையால் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை.
தன்னால்தான் மருத்துவராக முடியாமல் போனது, மகளாவது மருத்துவம் படிக்கட்டும் என்ற தவமணியின் ஆசையும் வீணானது. காரணம் மருத்துவ துறைக்கான நீட் தேர்விலும் மங்கை தேர்ச்சியடையவில்லை.
தந்தையின் செயலால் மனமுடைந்ததால்தான் மகள் சரியாக படிக்கவில்லை என மகளின் அறிவுத்திறனறிந்து இன்னொருமுறை நீட் தேர்வெழுத தவமணி யோசனை சொல்ல.. அதில் மங்கைக்கு விருப்பமில்லாமல் போகவே கணிதம் படிக்கிறேன் என்றாள்.
டாக்டராகலன்னாலும் பரவால்ல, செவிலியருக்காவது படி, உயிர்காக்கும் மருத்துவப் பணி மனநிம்மதியைக் கொடுக்கும் என தவமணியின் வற்புறுத்தலில் பி.எஸ்.சி நர்ஸிங் சேர்ந்தாள் மங்கை.
மாமனார் மாமியார் இறப்பிற்கு பின்னே தவமணி அவரின் பெற்றோரோடு வசிக்கிறார். பெற்றோர்கள் வயதானவர்கள் என்பதால் மகளை தன்னோடு அழைத்துக்கொள்ள தவமணிக்கு பயம். அதனால்தான் அங்கேயே வேலைக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்.
பதினொன்றாம் வகுப்புவரை தாய்தந்தை, தாத்தா பாட்டியோடு வளர்ந்த மங்கைக்கு தற்போதைய விடுதி வாழ்க்கை பிடித்தமில்லையென்றாலும் தன்மீதான அன்னையின் பயத்திற்காகவும், அப்பாவைப் பற்றி கேட்பவர்களுக்கு பதிலளிக்க பிடிக்காமலும் சென்னையிலே தங்கவேண்டிய சூழல் உண்டானது.
தாமோதரன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்திருப்பதாலும், அன்னை அவரின் பெற்றோரிடம் இருப்பதாலும் ஊருக்கு வர விருப்பம் தெரிவித்தாள்.
தற்போதும் தவமணி மறுக்கவே பெரும் ஏமாற்றம் வர வழக்கமாய் வரும் கோவிலுக்கு வந்தாள் மங்கை.
தரிசனம் முடித்து பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தவள் கண்ணில் கண்மூடிய நிலையிலும் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த கற்பகம் மீதே கவனம் போக.. மூன்றாவது முறை வலம்முடித்த மங்கை கற்பகம் அருகே வந்தமர்ந்தாள்.
பத்து நிமிடம் கழித்து கண்விழித்த கற்பகம் கண்ணீரை துடைத்தவாறு எழவே.. ஹம்.. நமக்கே பல வலிகள் இருக்கும்போது கிட்டதட்ட ஐம்பது வயதை கடந்திருக்கும் இந்த அம்மாவிற்கு கவலையிருக்காதா என்ன? என நினைத்து அமைதியானாள்.
அந்த நேரம் தவமணி அழைக்கவும்.. “ம்மா..” என்றவளின் குரல் சோர்வாக இருக்கவே.. “கோவில்ல இருக்கியா மங்கை?” என்றார் தவிப்பாக.
“ஆமாம்.. டியூட்டி முடிஞ்சதும் நேர இங்க வந்துட்டேன்.. வேற எங்க போறது?” என்றவள் குரல் உடைந்திருக்க இரண்டடி முன்னே சென்ற கற்பகம் மங்கையருகே வந்தார்.
“ப்ச் மங்கை.. அம்மா உன் நல்லதுக்குதான சொன்னேன்..” என தவித்தவர்.. “படிப்பு முடிஞ்சதும் நானும் உன்னோடவே வந்துடறேன்.. இரண்டு மாசத்துக்குள்ள வாடகைக்கு வீடு பார்த்து வை..” என்றார்.
“உண்மையைத்தான் சொல்றேன்.. உனக்கு நைட் டியூட்டியப்போ உன்னோட இருக்கேன்.. பகல் டியூட்டியப்போ இங்க வந்துடறேன்.. வீடு பாரு..” என்றார் தவமணி.
அன்னையின் பேச்சு சந்தோசமளித்தபோதும்.. “எனக்கு யாரையும் தெரியாதேமா.. வீடு எப்படி பார்க்கிறது? அப்படியே கிடைச்சாலும் ஹவுஸ் ஓனர் நல்லவங்களா இருக்கனுமே.. நீயும் உங்கம்மாவும் மட்டும்தானா? அப்படியிப்படின்னு தேவையில்லாம நம்ம பிரச்சனையை நோண்டினாங்கனா?” என்றாள் கவலையாக.
“அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு.. வாடகை கரெக்ட்டா கொடுத்துட்டா யார் என்ன கேட்பாங்க.. அதையும் மீறி பிரச்சனை வந்தா வரும்போது பார்த்துக்கலாம்.. நீ வீடு பாரு.. வீடு வேணும்னு உன் ஃப்ரண்ட்ஸ்கிட்டயும் சொல்லி வை.” என்றார்.
“என்னம்மா நீ? வேலை கேட்டு வைங்கிற.. வீடு பாருன்ற.. எனக்கிருக்கிற ரெஸ்ட் டைமே கொஞ்சநேரம்தான்.” என சலித்தவள்.. “சரி ட்ரை பண்றேன்..” என்றாள்.
“நேரமே ரூம்க்கு போ..” என அறிவுருத்தி தவமணி இணைப்பை துண்டிக்கவும்.. அருகில் தன்னையே பார்த்தவாறு நின்றிருந்த கற்பகத்திடம்.. “என்கிட்ட எதாவது கேட்கனுமா ஆன்ட்டி?” என்றாள்.
மங்கை தடுமாறவே.. “வாடகை வீடு தேவையிருக்கும்போல.. நாங்களும் வாடகை வீட்டுலதான் இருக்கோம்.. மேல் வீடுன்னா பரவால்லையா? நான் குடியிருக்குற வீட்டுக்கு எதிர்த்தாப்புல வீட்டுல மேல்வீடு காலியா இருக்கு.. யாராவது வாடகைக்கு கேட்டா சொல்லுங்கனு ஹவுஸ் ஓனர் சொல்லி வச்சிருக்கார்..” என்றார்.
என்ன? வலிய வந்து உதவுறாங்க என நினைத்தபோதும்.. சற்றுமுன் கண்ணீரோடு இருந்த சாந்தமான முகம் கற்பகத்தை தவறாக நினைக்க முடியாமல் போகவே.. “வீடு வேணும்தான்.. ஆனா என் பர்சனல் விசயம் கேட்க கூடாது..” என்றாள் உள்ளே போன குரலில்.
கற்பகம்.. “சரிம்மா.. உன் விசயம் எனக்கெதுக்கு?” என மெச்சுதலாய் சொன்னவர்.. “ஆனா வீடு வாடகைகு விடறவங்க யார் என்னனு விசாரிக்காம விடமாட்டாங்களே.. வீடு சேதாரமாக்கூடாதுனும், தண்ணி நிறைய செலவோகுமோனும் தெரிஞ்சிக்க எத்தனை பேர் தங்குவிங்கனு கேட்பாங்க.. சரியா வாடகை வந்திடுமானு தெரிஞ்சிக்க என்ன வேலை பார்க்குறனு கேட்பாங்க.. இதையாவது சொல்வியா?” என்றார்.
“ம் அது சொல்லிதான ஆகனும்.. நான் நர்ஸிங் படிச்சிட்டிருக்கேன், இன்னும் இரண்டு மாசத்துல படிப்பு முடிஞ்சிடும், அதுக்கப்புறம் அம்மா என்னோடவே இருப்பாங்க, நானும் அம்மாவும் மட்டும்தான். வேலை கிடைக்க லேட்டானாலும் அம்மாக்கு அப்பாவோட பென்ஷன் வருது. அதுவச்சி வீட்டு வாடகை கட்டிடுவோம்.” என்றாள்.
“சரிம்மா..” என தான் குடியிருக்கும் விலாசத்தை சொல்லி.. தனது மொபைல் நம்பரையும் கொடுத்து.. “இரண்டுமாசம் கழிச்சிதான வீடு தேவைப்படுதுனு அசால்ட்டா இருக்காத, நாம நினைச்ச நேரம் வீடு வாடகைக்கு கிடைக்காது, கிடைக்கும்போது புக் பண்ணிடனும்.. அதனால முடிந்தவரை சீக்கிரம் வா.. இல்ல வேற யாராவது பேசி முடிச்சிடுவாங்க, அந்த ஏரியால வாடகை வீடு கிடைக்கிறது ரொம்ப சிரமம்.. வீடு காலியான பத்து நாளுக்குள்ள யாராவது வந்திடுவாங்க..
வீடு பார்க்க வரும் முன்ன போன் செய்துட்டு வா.. அப்பதான் ஓனர்கிட்ட சொல்லி நீ வரும்நேரம் அவர் இருக்கமாதிரி பார்த்துக்க முடியும்.. வாடகை அட்வான்ஸ் என்னனு அவர்கிட்ட பேசிக்கோ..” என்று கிளம்பினார்.
*** ***** *****
“அந்தம்மா பேரு என்ன?” என தவமணி கேட்க.. “நான் கேட்கலையேம்மா.. வீடு இருக்குனு சொல்லி அவங்க நம்பர் கொடுத்தாங்க.. முன்னபின்ன தெரியாதவங்களுக்கு உதவறாங்களேனு எனக்கு பேர்கூட கேட்க தோணல..” என்றாள் மங்கை.
“சரி அந்தம்மா போன் நம்பர் கொடு, நான் பேசறேன்.” என நம்பரை வாங்கி கற்பகத்திற்கு அழைத்தார் தவமணி.
“ஹலோ..” என்க.. “நான் தவமணி பேசுறேன்ங்க, நேத்து இரண்டுநாள் முன்ன கோவில்ல என் பொண்ணுகிட்ட வீடு காலியிருக்குனு நம்பர் கொடுத்திங்களாம். இன்னைக்குதான் ஊர்லயிருந்து வந்தேன், வீடு பார்க்க வரலாமானு கேக்கதான் போன் செய்தேன்.” என்றார்.
கற்பகம்.. “ஹவுஸ் ஓனர்கிட்ட கேட்டு சொல்றேன்.. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி பண்ணுங்க.” என கட் செய்த கற்பகம் வீட்டு ஓனருக்கு அழைத்து பேசி, தவமணி அழைப்பிற்காக காத்திருந்தார்.
தேவேஷ்.. “உனக்கெதுக்குமா தேவையில்லாத வேலை, வரவங்க சரியில்லனா நீ சொல்லித்தான இவங்களுக்கு வீடு விட்டேன்னு உன்னதான் கேட்பாங்க..” என கடுகடுத்தான்.
“இல்ல தேவா..” என மங்கை கோவிலில் அழுத்தை சொல்லி, “சென்னைக்கு புதுசு போல, பாவமா இருந்தது, அதோட அந்த வீட்டு ஓனர் என்கிட்ட சொல்லி வச்சிருந்தார்.. நாம சொல்லுவோம், அவங்களுக்கு பிடிச்சா விடட்டும், இல்ல வேணாம்..” என்றார்.
தவமணி அழைக்கவே.. “ம் நான் ஓனர்கிட்ட சொன்னேனுங்க, சாயங்காலம் போல வர சொன்னாங்க, இப்போ வெளில இருக்காராம்.” என்றார்.
“சரிங்க நாங்க ஈவ்னிங் வரோம்.” என்றவர் மங்கை ஹாஸ்பிட்டல் சென்று வந்ததும் கிளம்பினர்.
மாலை கற்பகம் சொன்ன இடத்திற்கு வந்த்தும் கற்பகத்தை அழைக்கவே அவரும் வந்தார். பின்னே ஓனரிடம் அறிமுகம் செய்து வைக்கவும், வீட்டை திறந்து காட்டினார் வீட்டு ஓனர்.
ஒரு பெட்ரூம், கிச்சன், ஹால் என இருந்தபோதும் அனைத்தும் சற்று பெரிதாகவே இருக்க.. “சின்னதா இருந்தாலும் கச்சிதமா இருக்கு, நாம இரண்டு பேர்தான? தாராளமா போதும்.” என்று மகளிடம் தவமணி சொல்ல, “என்ன? இதுவே சின்ன வீடா?” என உள்ளுக்குள் வியந்தார் கற்பகம்.
ஹவுஸ் ஓனர் சொன்ன முன்பணத்திற்கும், வாடகைக்கும் பேரம் பேசாமல் ஒப்புக்கொண்டு, அருகிலுள்ள ஏ.டி.எம்மில் மகளை பணம் எடுத்துவர பணித்து இன்றே முன்பணத்தையும் கொடுத்த தவமணி.. “நாளை மறுநாள் நாள் நல்லா இருக்கு, நாளைக்கே பால் காய்ச்சிடறோம்.. என் பொண்ணு படிப்பு முடிய இன்னும் இரண்டு மாசம் இருக்குங்க, அதுக்கப்புறம்தான் இங்க தங்குவோம், உங்க அக்கௌன்ட்டுக்கு வாடகை அனுப்பிடட்டுங்களா?” என்றார் ஓனரிடம்.
“சரிங்கமா..” என்றவர் வீட்டை சுத்தம் செய்து சாவியை கற்பகம்மாகிட்ட கொடுத்திடறேன். உங்களுக்கு எப்போ தேவையோ வாங்கிக்கோங்க.” என்க.. மூவரும் வெளியே வரவும் வீட்டை பூட்டி கிளம்பினார்.
இரண்டு நாள் கழித்து அதிகாலை மகளோடு வந்த தவமணி, கற்பகத்திற்கு அழைத்து சாவியை பெற்று பால்காய்ச்சி விளக்கேற்றிய பின்னே.. ஃப்ளாஸ்கில் பால் ஊற்றிக்கொண்டிருக்க.. கற்பகம் வந்தார்.
“வாங்க.. வாங்க.. உங்களுக்கு கொடுக்கத்தான் பால் ஊத்திட்டிருந்தேன்.. நீங்களே வந்துட்டிங்க. ரொம்ப சந்தோசம்.” என வரவேற்றபடி பாலை டம்ளரில் ஊற்றி கொடுக்கவும்.. “உக்காருங்க ஆன்ட்டி.” என்றாள் மங்கை.
இரண்டு சேர்கள் இருக்க அதிலமர்ந்த கற்பகம்.. “முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு ஏன் முன்ன நிக்கிறன்னு என் பையன் திட்டிட்டே இருந்தாங்க, எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கங்க.” என்றார் தயக்கத்தோடு.
என் என் வீட்டுக்காரர் இறந்து அஞ்சி வருசமாகுது. இன்ஸ்பெக்டரா இருந்தார், ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டார். அவர் என் மாமனார் மாமியாரும் மகன் போன துக்கம் தாங்காம அடுத்தடுத்து போய் சேர்ந்துட்டாங்க.. வேலைல இருந்தப்போ நிறைய எதிரிகளை சம்பாதிச்சிருந்திருக்கார். சிலதெல்லாம் வெளில சொல்ல முடியாது.. வயசு புள்ளையை வீட்டுல வச்சிட்டிருக்க பயந்துதான் படிச்சதும் வேலைக்கு போக சொல்லிட்டிருக்கேன்..
என் அப்பாம்மாக்கு ரொம்ப வயசாகிடுச்சி, நான் ஒரே பொண்ணு.. என்னை விட்டா அவங்களை பார்த்துக்க ஆளில்லை, என்னால இங்கயே இருக்கமுடியாது. மாசத்துக்கு பத்து நாள் ஊருக்கும் போய்வந்துட்டுதான் இருப்பேன்.. என் பொண்ணை கொஞ்சம் பார்த்துக்கோங்க.” என மங்கை சொல்லக்கூடாது என நினைத்த விசயங்களையெல்லாம் தவமணி கற்பகத்திடம் சொல்லிமுடித்தார்.
“எனக்கொன்னும் இல்லைங்க, என் பையனுக்குத்தான் தேவையில்லாம யார்கிட்ட பேசினாலும் பிடிக்காது. ஆனாலும் எதாவது தேவையிருந்தா என்னால முடிஞ்சதை செய்யிறேன்..” என்றார் கற்பகம்.
சரியென்பதாய் தலையசத்த தவமணி.. “பால் குடிங்க ஆறிடும்.” என்றார். கற்பகம் பால் குடித்துக்கொண்டிருக்க.. தவமணிக்கு அழைப்பு வரவும்.. “ஒரு நிமிஷம்ங்க..” என வெளியே எட்டிப்பார்த்தவர்.. “இங்கதான்.. மேல எடுத்து வாங்க.” என பணித்து உள்ளே வந்தார்.
சற்று நேரத்தில் பீரோ கட்டில் டி.வி ஃபிரிட்ஜ் என தேவையான சாமான்கள் வர.. இருவர் தங்குவதற்கு இத்தனையா? என வியந்தார் கற்பகம்.
பின்னே சாமான்கள் வைப்பதற்கு கற்பகம் ஆட்களை பணிக்க ஆரம்பிக்க.. “நான் போய்ட்டு வரேனுங்க.. வேலைக்கு போகும்போது சொல்லிட்டு போக பையன் தேடுவான்.” என கிளம்பினார் கற்பகம்.
(தவமணியின் மகன் பற்றி வரும் பதிவுகளில் வரும்.. மங்கை எனும் மங்கையர்கரசியே நம் கதையின் சின்னவள் ஃப்ரண்ட்ஸ்.)