“என்ன இவ்வளோ வியர்த்திருக்கு? உடம்புக்கு ஒன்னுமில்லையே?…” என்று விசாரித்தார் மருமகளை.
“ம்கூம், ஒண்ணுமில்லை…” என்றவள் பார்வை அண்ணாமலையிடம் சென்று,
“அவங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும். அதான்…” என்றாள் சத்தமாக.
அண்ணாமலையின் காதிலும் விழுந்தது. சாப்பிட்டு முடித்தவர் வந்து சோபாவில் அமர்ந்தார்.
அதற்குள் மனோ ஆத்மாவிற்கு அழைத்து கீழே ரிது நிற்பதையும், தந்தையிடம் பேச வந்திருப்பதாக சொன்னதையும் கீழிருந்தே போனில் சொல்ல அவனும் வந்தவன் மாடி படியிலேயே நின்றுவிட்டான்.
பேச வந்துவிட்டு பேச முடியாமல் கண்கள் கலங்க, கைகள் நடுங்க அண்ணாமலையின் எதிரே நின்றவள் கையில் பணக்கட்டு கனத்தது.
கனமோ கனம். மனதின் கனத்திற்கு இணையான கனம் அந்த பணம். அது அண்ணாமலையின் பணம் என்பதனால் கொண்ட கனம்.
அவள் பேசட்டும் என்பதை போல அமர்ந்திருந்த அண்ணாமலை அத்தனை அருகில் தங்கை மகளை கவனித்து பார்த்தார்.
அவளின் மனநிலை விளங்கியது மனிதருக்கு. கைகளை இறுக்கியவர் மனது அதற்கு நேராக இளகிக்கொண்டிருந்தது.
மாடிப்படியில் நின்றவனுக்கு அவளின் பரிதவிப்பு எதற்கென புரிந்துகொண்டவன் அருகே செல்ல நினைத்தாலும் ‘இல்லை, இது அவளுக்கான உணர்வின் வெளிப்பாடு. வெளிப்படட்டுமே’ என தூரமிருந்து அவளுக்கு துணை நின்றன் ஆத்மா.
“அண்ணி, என்னாச்சு?…” என்று மனோ தொட்டதும் கையிலிருந்த பணத்தை அண்ணாமலையிடம் நீட்டினாள்.
“நீங்க செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லி வார்த்தையால முடிச்சுக்க முடியாது. அந்த நன்றி என்னைக்கும் நான் உயிரோட இருக்கற வரைக்கும் மனசு உங்களுக்கு நன்றியோடவே இருக்கும்…” என்றாள்.
முதன் முதலில் அவரிடம் நேரடியாக ஒரு பேச்சு. ஆனால் கொஞ்சமும் மனதிற்குள் திடமில்லையோ என்னும் வண்ணமிருந்தது அவள் முகமும், உடல்மொழியும்.
பணத்தை வாங்காமல் அவளை பார்த்தபடி அண்ணாமலை அசையாமல் இருந்தார்.
“உங்க உதவி ரத்தம் குடுத்ததோட போதும். இந்த பணம். இது வேண்டாம். இது எனக்கு ரொம்ப சுமக்க முடியாத ஒரு பாரமா இருக்குது…” என்று சொல்லி அவரின் முன்னிருந்த டீப்பாயில் வைத்தாள்.
“இதை நான் வாங்க முடியாதுன்னு சொன்னா?…” அண்ணாமலையும் வாயை திறக்க,
“அது உங்க விருப்பம். உங்ககிட்ட சேர்க்க வேண்டியது, சேர்த்துட்டேன். இதை நீங்க எடுத்தாலும் சரி. இல்லைன்னாலும் சரி. ஆனா என்கிட்டே வேண்டாம்…” என்றவளின் முகம் அத்தனை கசங்கி இருந்தது.
“அப்படியா? சரி இருக்கட்டும்…” என்று அண்ணாமலை ஒன்றும் சொல்லவில்லை.
கண்கள் இரண்டும் சிவந்து போய் மனதில் அலைமோதும் உணர்வுகளை அடக்கிக்கொண்டிருந்தார்.
தான் திருப்பி கொடுத்ததை தவறாக நினைக்கிறாரோ என ரிதுவிற்கு ஒருவித தவிப்பை இருந்தது. அதை தெளிவு படுத்திவிடும் வேகம் ஒருபுறம் அவளை இழுத்தது.
“செஞ்சதை திருப்பி தரேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம். இது அதிகபிரசிங்கித்தனமும் இல்லை. எனக்கு இதை சுமக்க முடியலை. சட்டுன்னு நீங்க ஏன் செய்யனும்ன்னு சொல்லி வீசி எரியற அளவுக்கு மனசுல தெம்பும் இல்லை. அது உதாசீனமா போகும்…”
“உதாசீனம் எத்தனை பெரிய கஷ்டம்ன்னு அனுபவிச்சதனால தான் அதை யாருக்கும் குடுக்க கூடாதுன்னு நினைக்கறேன்….” என்று சொல்ல அண்ணாமலையும் எழுந்து நின்றுகொண்டார்.
“அதான் குடுத்துட்டியே? என்னவோ பணத்தை கட்டனுணும்னு தோணுச்சு. கட்டிட்டேன். இப்ப என்ன?…” என்றார் சற்று அதட்டல் குரலில்.
“அவசியமில்லை. அதான் திரும்ப கொண்டு வந்தேன். இதை சும்மா கூட நீங்க குடுக்க வேண்டாம் பாருங்க. ஏற்கனவே நாங்க காலத்துக்கும் மறக்கமுடியாத உதவியை செஞ்சிட்டீங்க. அது இப்ப என்னை மொத்தமா கட்டி போட்டிருச்சு…” என்ற ரிது,
“இனிமேலும் இப்படி எங்களுக்கு நீங்க பண விஷயத்துல செய்யாதீங்க…” என்று சொல்ல,
“செய்யாதீங்கன்னா, என்ன எனக்கு ஆடரா போடற நீ? அப்படித்தான் செய்வேன்னா?…” என்றார் சுள்ளென்று அவளிடம்.
“அப்பவும் திருப்பி குடுப்பேன். என்ன செஞ்சாலும் சில விஷயங்கள் மாறாது. வேண்டாம். நாங்க நினைக்காத ஒன்னை எதிர்பாராத நேரத்துல பண்ணிட்டீங்க. காலத்துக்கும் அது போதும்….” என ரிதுவும் அவரை எதிர்த்து.
மாற்றி மாற்றி பேச மனோவும், ஆனந்தியும் கலவரமாய் பார்க்க ஆத்மா சுவாரசியமாய் பார்த்தான்.
“கண்ணா…” என்றழைத்தார் மகனை பார்த்ததும்.
“இவ என்ன சொல்றா பாரு. இனிமே செய்யாதீங்கலாம். நான் செய்யனும், செய்யக்கூடாதுன்னு இவ ஏன் சொல்றா?…” என்று மகனிடம் சிறுபிள்ளை போல சொல்ல,
“என்னை கேட்டு ஒன்னும் நீங்க பணம் கட்டலை. என்னை கேட்டும் அவ இங்க பணத்தை எடுத்துட்டு வரலை. அதனால என்னை இதுல இழுக்காதீங்க. நீங்களாச்சு, அவளாச்சு…” ஆத்மா நைஸாக கழன்றுகொண்டான்.
கொஞ்சமும் பிடி குடுக்காமல் பேசும் மகனின் சாமர்த்தியத்தில் அண்ணாமலை பல்லை கடித்தார் முறைப்புடன்.
அவர் நின்றுகொண்டிருக்க ரிதுபர்ணா ஆத்மாவை தாண்டிக்கொண்டு உள்ளே செல்ல போக,
“ஏம்மா நில்லும்மா…” என்றார் அண்ணாமலை.
“நீ எம்புள்ளைக்கு பொண்டாட்டி தான? இந்த வீட்டு மருமகன்னா அதுக்கேத்த மாதிரி இரு. இதை எடுத்துட்டு போய் அவன்கிட்ட குடு…” என்றார் வீம்பாக.
ஆனந்திக்கு ஆச்சர்யத்தில் மூச்சே வரவில்லை. மனோவிற்கு அப்பாவின் இந்த தோரணையில் சிரிப்பு வர இதென்ன விளையாட்டு என்பதை போல ரிது அவரை திரும்பி பார்த்தாள்.
“ஆனந்தி, இவக்கிட்ட இதை எங்க வைக்கனும்னு சொல்லிக்குடு. கிழவி நீ எவ்வளவு நாளைக்கு தான் அந்த கொத்துசாவியை கையில புடிச்சுட்டே சுத்துவ. அடுத்தடுத்து அதுக்கான ஆள் வந்தா என்ன செய்யனும்னு உனக்கு ஒருத்தவங்க பாடம் எடுக்கனுமா?…” என மனைவியிடம் காய்ந்தார்.
ரிதுவிற்கோ ஒருபக்கம் கடுப்பு. எப்படி இதில் தன்னை மாட்டிவிடுகிறார் இவர் என்று.
அதுவும் இத்தனை நாள் இல்லாமல் இன்று தெரிந்ததோ மருமகள் என்று என அண்ணாமலையை நேராக முறைத்துவிட்டாள் அவரின் இந்த பேச்சில்.
“ஹேய் என்னடி பன்ற?…” ஆத்மா ரிதுவின் கையை பிடிக்க,
“ஏன் இந்த வீட்டு மருமகன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சதாமா?…” என ஆத்மாவிடம் அவள் கேட்க அது மற்றவர்களுக்கும் கேட்க அவனுக்கு அதுவரை இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து ஒரு விளையாட்டு சண்டை பார்க்கும் இதம் பரவியது.
ஆனால் அப்படி அந்த இதமெல்லாம் ரிதுவிற்கு இல்லை. மனதில் இன்னும் அழுத்தங்கள் கூடியிருந்தது.
“ஆனந்தி…” அண்ணாமலை அழைக்க,
“ரிது இங்க வா…” என்றார் ஆனந்தி.
“என்னன்னு சொல்லுங்க…” என ஆத்மாவின் அருகில் நின்றவள் நகரவில்லை.
“இந்த பணத்தை…” ஆனந்தி ஆரம்பிக்கும் பொழுதே,
“நான் எடுக்கமாட்டேன். எதுக்காக அதை கட்டனும்னு உங்களுக்கு தோணுச்சோ எனக்கு தெரியலை. ஆனா நீங்க சொன்ன வார்த்தைகள் நிறையவே பச்சை குத்தினமாதிரி இருக்கு. அதுல பிச்சையா கூட போடமாட்டேன்னு சொன்னதும் சேர்த்தே…”
“நான் ஒன்னும் அப்படி நினைச்சு இதை கட்டலை…” அண்ணாமலை உடனே சொல்ல,
“இல்லை தான். எனக்கும் தெரியும். ஆனா சட்டுன்னு அது தான் தோணுது. அது மனசை சுத்தி சுத்தி வந்து கிழிக்குது. அந்த ரத்தம் மனிதாபிமானத்துல நீங்க குடுத்தது. அதுக்கு நான் மரியாதை தருவேன். ஆனா இந்த பணம்…” என சொல்லும் பொழுதே தேங்கி நின்ற கண்ணீர் வடிந்தது ரிதுவின் விழிகளில்.
“இப்பவும் நான் அம்மா சொத்துல இருந்து வந்த வருமானத்துல வித்யாவுக்கு கட்டலை. என்னோட சொந்த சம்பாத்தியத்துல இருந்த சேமிப்பை தான் கட்டியிருக்கேன். ஏனா நாளைக்கு அதுவும் ஒரு பேச்சாகிரும். கோவம்ன்னு வந்தா மனுஷங்க மனுஷங்களா தெரியமாட்டாங்க…”
“உதவி செஞ்சிட்டு அதை எதாச்சும் ஒரு சூழ்நிலையில சொல்லவேண்டியது வந்தாலும் வந்திரும். நான் திருப்பி தந்திட்டேன். இனி இதை மாதிரி ஒரு சூழ்நிலைல என்னை நிறுத்த வேண்டாம்…”
“இந்த வீட்டு மருமகளா நான் என்ன செய்யனும்னு சொல்லுறது சந்தோஷம் தான். ஆனா நான் முதல்ல தமயந்தி பொண்ணு. வித்யாவுக்கு என் அப்பாவால நான் அக்கா. இங்க என் புருஷனுக்கு மனைவி. மருமகன்ற ஸ்தானம் இது எல்லாத்துக்கும் தாண்டி தான் எனக்கு….”
“கட்டாயத்தின் பேர்ல இப்படி ஒரு சூழ்நிலையில வர இந்த உரிமையும், அதிகாரமும் என்னை இன்னும் கட்டி வச்சிடுமோன்னு தோணுது. எதுவுமே தானா இயல்பா நடக்கனும். எதிர்பார்ப்பில்லாம இருக்கனும். எனக்கும் இவருக்கும் நடந்த கல்யாணம் மாதிரி….” என்றவள் ஆத்மாவின் முகம் பார்த்து புன்னகைத்தாள் மெலிதாய்.
“மருமகன்னு நீங்க சொன்னதே எனக்கு போதும். சில விஷயங்கள மறக்க முயற்சி பன்றேன். ஆனா இப்ப நடக்கறது நல்லதாவே நடந்தாலும் அது முன்னாடி நடந்த விஷயங்களை ஞாபகப்படுத்தாம இல்லை. மாறும். மாறாதது இங்க என்ன? எதுவுமில்லை….” என்றவள் கைகளை ஆத்மா இறுக்கமாய் பற்றியிருந்தான்.
ரிதுபர்ணாவின் பேச்சில் அண்ணாமலை முகம் வெகுவாய் வாடியது. தன்னுடைய சொற்கள் அவளின் ஆழ்மனதில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்திருந்தால் இத்தனை தூரம் காயப்பட்டிருப்பாள் என புரிந்தது.
அமைதியாக அவர் நிற்க ஆனந்தியும், மனோவும் ரிதுவை கவலையுடன் பார்த்தனர்.
“ரிது, போதும். நீ மாடிக்கு வா…” என்று ஆத்மா அவளை அழைத்து செல்ல அண்ணாமலையும் தன்னறைக்கு சென்றார்.
மனதிற்குள் மீண்டும் மீண்டும் ரிதுபர்ணாவின் பேச்சுக்கள். பெண் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறியவருக்கு வாய் வார்த்தையாய் வலிக்க அவள் சொல்லிய விஷயங்கள் சுழற்றியது.
“என்னங்க இந்த பணம்?…” என்று ஆனந்தி கொண்டுவந்து காண்பிக்க,
“என்கிட்டே குடு…” என்று வாங்கிக்கொண்டார்.
கையில் வாங்கிய அந்த பணம் தனக்குமே கனத்தது. மருமகள், தங்கை மகளின் தன்மானம். அது தங்கமனமாய் அவருக்கு பரிமளித்தது.
அவள் உழைப்பின் கர்வமாய் தன் கண்முன் இருந்த காகிதங்களின் மதிப்பை அண்ணாமலையின் உள்மனது உணர்ந்திருந்ததே.
“உள்ள வைக்க வேண்டாமா? நாளைக்கு பேங்க்ல போட்டுடுவோம்….” என்றார் ஆனந்தி.
“ம்ஹூம், இது என்கிட்டையே இருக்கட்டும்….”
“பேங்க்ல?…”
“வேண்டாம். என்கிட்ட இருக்கட்டும்…” என்று வைத்துக்கொண்டார் அவர்.
அண்ணாமலையில் செய்கைகளை வித்தியாசமாக பார்த்தபடி ஆனந்தி அறையை விட்டு வெளியே வந்துவிட்டார்.
ஆத்மாவின் மடியில் சாய்ந்திருந்த ரிதுவின் விழிகளில் நீர் வடிந்தபடி இருக்க அவள் கன்னத்தில் தட்டிக்கொடுத்தான் ஆத்மா.
இருவருக்குள்ளும் பேச்சுகள் இல்லை. ரிதுவின் மனமோ சஞ்சலத்துடன் தான் இருந்தது.
“நான் எதாச்சும் தப்பு பண்ணிட்டேனா?…” என சட்டென அவனின் முகம் பார்த்து அவள் கேட்க,
“உனக்கு அப்படி தோணுதா?…” ஆத்மா எதிர் கேள்வி கேட்டான்.
“நான் கேட்டா பதில் வரலை. கேள்வி தான் வருது…” அவன் மடியில் இருந்து எழுந்தமர்ந்தவள் கலைந்திருந்த கூந்தலை மொத்தமாய் தூக்கி கொண்டையிட்டாள்.
“பேங்க் போனியே, என்கிட்டே சொல்லவே இல்லை? கூட வந்திருப்பேனே? ஸ்கூட்டில போனியா நீ?…” என மீண்டும் அடுத்தடுத்து கேள்வியாய் கேட்க,
“சொல்லியிருப்பேன். ஆனா என்னவோ அந்த பணத்தை உடனே திருப்பி தரனும்னு தோணுச்சு. அதான் கிளம்பி போனேன்…” என்றவள்,
“உங்கப்பா தப்புன்னு சொல்லலை. ஆனா ஏத்துக்க என்னால முடியலை. ரத்தம் குடுக்கும் போது ஏத்துக்க முடிஞ்சது இது முடியலையான்னு நினைக்கலாம். ஆனா ரெண்டும் ஒண்ணில்லையே….” கைகளை விரித்து பாவம் போல அவள் சொல்லியவிதம் ஆத்மாவின் மனதை பிசைந்தது.
“இங்க வா…” என தன்னருகே இழுத்து மார்பில் சாய்த்துக்கொண்டான்.
“நீ செஞ்சதை தப்புன்னு சொல்லலை. இவ்வளவு விளக்கம் நீ குடுக்கனும்னு இல்லை. ஏன் நீயே உன்னை கஷ்டப்படுத்திக்கறன்னு தான் தெரியலை ரிது…”
“கஷ்டம் தான். ஆனா…” என்றவள் வாயை மூடியவன்,
“போதும், நீ பேசி பேசி உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தற. ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. அன்னைக்கு அப்படி நடந்துச்சேன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் இன்னைக்கோட முடிச்சு போட்டா வலி இன்னும் அதிகமாகும்…”
“இல்ல…” ரித்து மறுக்க வர,
“நீ குடுத்ததை தப்புன்னு சொல்ல வரலை. அதை நீ புரிய வைக்க நினைக்கிறது தான் வேண்டாம்ன்னு சொல்றேன். உன்னை நான் மட்டுமில்லை, உன் மாமாவும் புரிஞ்சு தான் வச்சிருக்காங்கடா. அது உனக்கு தான் புரியலை ரிது…”
ஆத்மா என்ன சொல்கிறான் என்று முழுதாய் விளங்கவில்லை. மனதெல்லாம் அண்ணாமலையின் உதவியை எங்காவது காயப்படுத்திவிட்டோமா என்ற யோசனையில் இருக்க மனதில் ஒரு அலைப்புருதல்.
அது கண்களை எட்ட இன்னும் கலங்கிக்கொண்டிருந்த விழிகளில் தன்னிதழ் பதித்தான் ஆத்மா.
“பாஸ்ட் இஸ் பாஸ்ட். தட்ஸ் இட். ஓகே…” என்றவன் கழுத்தில் முகத்தை வைத்துக்கொண்டவள் பிடி இறுக வாகாய் சாய்ந்தமர்ந்து மனைவியையும் தன் மீது சாய்த்துக்கொண்டான் ஆத்மா.
அண்ணாமலை வித்யாவிற்கு பணத்தை கட்டி ரிதுவின் பழைய காயங்களை கிளறிவிட்டிருந்தது அவனால் உணர முடிந்தது.
எங்கும் எதுவும் வேண்டுமென்று செய்யப்படவில்லை. ஆனால் நிகழ்ந்துவிட்டதில் புரையோடி இருந்த புண்ணை கீறிவிட்டதை போலாகியிருந்தது.
இருந்தாலும் அது நன்மைக்காக இருந்தால் நல்லது. இன்னும் விண்ணென்று தெறித்துக்கொண்டு தன்னிருப்பை உணர்த்திக்கொண்டிருக்கும் அந்த காயங்கள் ஆறட்டும்.
ஒரு பெருமூச்சுடன் மனைவியின் தலையை வருடியவன் எண்ணமெல்லாம் ஒன்று தான்.
இப்போதைக்கு தேவை ரிதுபர்ணா மனதிற்கு ஒரு அமைதி என்பது மட்டும் தான்.