பரத்தின் திருமணம் நல்லவிதமாகவே முடிந்தது. முருகேஸ்வரி செல்லவே இல்லை.
வித்யாவை விட்டு நகரமுடியாதென்று சொல்லியவர் ரிதுவை அனுப்பவும் தவறவில்லை.
முகூர்த்த நேரத்திற்கு சென்று தாலி கட்டி முடிந்ததும் ரிதுபர்ணா கிளம்பி வந்துவிட்டாள் மருத்துவமனைக்கு.
வித்யாவை யாராவது அருகில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தாலும் அவளுக்கு துணையாக இருந்தாலும் ரிது, முருகேஸ்வரி, விசாலாட்சி தவிர்த்து வேறு யாருக்கும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை.
அதனை கொண்டு அவர்கள் மூவரில் யாரேனும் இருந்தால் மட்டுமே வித்யாவிற்கு இன்னும் உதவியாக இருந்தது.
விசாலாட்சியால் அடிக்கடி வரமுடியாது போனது மகனின் திருமண வேலைகளினால்.
இதோ ஒருவாரம் கடந்த நிலையில் வித்யாவின் மருத்துவமனை வாசம் முடிவுற்றது.
வீட்டிற்கு கிளம்பலாம் என்றிருக்க டிஸ்சார்ஜ் சம்மரியை கையில் வைத்தபடி ஆத்மா வந்தான்.
“பில் பே பண்ணிட்டு வந்ததும் கிளம்புவோம்…” என ஆத்மா சொல்லவும்,
“போய் பணத்தை கட்டிட்டு வந்திடறேன் சித்தி…” என முருகேஸ்வரியிடம் கூறிய ரிதுபர்ணா தனது டெபிட் கார்டை எடுத்துக்கொண்டாள்.
“வாங்க போகலாம்…” என ஆத்மாவிடம் சொல்ல அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“என்ன, என்ன கண்ணு? நான் பில் கட்டறேன்னு சொல்றதுல என்ன தப்பு சித்தி?…” என்றாள்.
“ஒண்ணுமில்லை தான். ஆனாலும் அந்த தம்பி…”
“அவர் ஒன்னும் சொல்லமாட்டார். நான் ஏற்கனவே பேசிட்டேன்…” என்றவள்,
“இதை யோசிக்காம எல்லாம் எடுத்து வைங்க. கிளம்புவோம். முதல்ல வீட்டுக்கு போனா போதும்னு இருக்கா வித்யா…” என்ற ரிது வெளியே வர போனில் பேசியபடி நின்றிருந்தான் ஆத்மா.
ரிது அருகே வந்து நின்றதும் ஐந்து நிமிடம் என்று கை காண்பித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தான் முரளியிடம்.
இப்போது அவனிடம் தான் பேச்சுக்கள் ஆத்மாவிற்கு. பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவள் ஆத்மாவின் முகத்தையே கவனித்துக்கொண்டு இருந்தாள்.
முரளியிடம் பேசி முடித்தவன் முகமோ விளக்கம் சொல்லி விவரித்ததிலேயே களைத்திருந்தது.
“இதுக்கு தான் நீங்க கிளம்புங்கன்னு சொல்றேன். கேட்கமாட்டேன்னு பிடிவாதம் பன்றீங்க…” ரிது மீண்டும் ஆரம்பிக்க,
“ப்ச், நிறுத்து ரிது. சும்மா அதையே பேசாத. முரளி புரிஞ்சுப்பான். இன்னும் ஒரு ஒருவாரம். அப்பறம் ரெண்டுபேரும் சேர்ந்தே கிளம்பிருவோம். அதுவரை சமாளிக்க கூடியது தான்…” என்றவன்,
“நான் முடிவு பண்ணின பின்னாடி அதை மாத்த வைக்க நினைக்காத. அது உன்னாலயும் முடியாது. என்னாலையும் முடியாது. புரியுதா?…” என கேட்க,
“உங்ககிட்ட பேச முடியுமா?…” என்று அவனுடன் நடந்தாள்.
“ஆமா, அப்படியே மேடம் மட்டும் எல்லாம் கேட்டுக்கற மாதிரி தான். போவியா…” என கிண்டலுடன் ஆத்மா வர இருவரும் மாற்றி மாற்றி முறைத்தபடி பில் கவுண்டர் நோக்கி வந்தனர்.
“பேஷன்ட் நேம் வித்திவ்யா….” என சொல்லி ரிது கார்டை தர,
“அந்த பேஷன்ட்க்கு பில் செட்டில் பண்ணிட்டாங்களே?…” என்றார் அங்கிருந்த பெண்மணி.
“என்ன?…” என்ற ரிது ஆத்மாவை பார்க்க,
“யார் பில் செட்டில் பண்ணினாங்க? நாங்க இப்பதான் வரோம்…” என்றான் முன்னே வந்து.
“அவர் பேர் அண்ணாமலை. இன்னைக்கு மார்னிங் தான் வந்து விசாரிச்சார். இன்னைக்கு டிஸ்சார்ஜ்ன்னு சொல்லவும் பணத்தை கட்டிட்டார். உங்க ரிலேட்டிவ் தான்னு…” அப்பெண் சொல்ல சொல்ல ரிதுவின் முகம் மாறிவிட்டது.
“போச்சுடா…” என ஆத்மா தலையை கோதியவன் அப்பெண் தங்களை பார்ப்பதை உணர்ந்து ரிதுவுடன் மீண்டும் அறைக்கு வந்துவிட்டான்.
“ரிது இப்ப வீட்டுக்கு கிளம்புவோம். மத்ததை அங்க வச்சு பேசிப்போம்…” என்று சொல்லவும் தலையசைத்தவள் வித்யாவுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
அவள் என்ன நினைக்கிறாள் என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால் முகத்தில் ஒருவித அலைகழிப்பு இருந்தது என்னவோ அத்தனை உண்மை.
ஆத்மா ரிதுவிடம் கேட்க நினைத்து பின் அமைதியாகிவிட்டான் அவளே சொல்லட்டும் என்று.
வீட்டு வாசலில் விசாலாட்சி ஆரத்தியுடன் இருந்தார் வித்யாவிற்கு திருஷ்டி கழிக்க.
செண்பகமும் அவரருக்கிருக்க பரத்தின் மனைவி சபர்மதி, சுந்தரி, மனோ என்று அத்தனைபேரும் வாசலில் தான்.
முதல் நாள் தான் பரத் மறுவீட்டு விருந்து முடிந்து மனைவியுடன் தன் இல்லம் வந்திருந்தான்.
வழக்கம் போல ஆனந்தி தன் வீட்டு வாசலில் இருந்தபடி இவர்களை வேடிக்கை பார்த்து நின்றார்.
அண்ணாமலை ரத்தமே தந்திருக்க அதன் பின்னர் அவருக்கு சென்று பார்க்க தோன்றினாலும் யாருமே அதை அழைத்து சொல்லாததில் கொஞ்சம் வீம்பும் கூட.
தானாக செல்லவும் மனது வரவில்லை. இத்தனை நாட்கள் அவர் உருவகப்படுத்தி எழுப்பியிருந்த சுவர் தகர்ந்து விழுந்ததை போல ஒரு அழுத்தம்.
அப்போது தான் அவருக்கு தோன்றவும் செய்தது. அண்ணாமலை அவர் தான் தங்கையின் மீது கோபமாக இருந்தாரே தவிர மனைவி, பிள்ளைகளை பேசாதே என்றோ தள்ளி இரு என்றோ என்றும் சொல்லியதில்லை.
இப்போது வரை வேறொன்றை நினைத்து தான் தள்ளி இருக்க அதுவெல்லாம் விஷயமே இல்லை என்பதை போல அண்ணாமலையே சென்று வந்து வித்யாவை தினமும் விசாரித்து என கணவரின் செயல்கள் ஆனந்திக்கு இன்னும் நம்பமுடியாத ஒன்றாக தான் இருந்தது.
“நானும் போய் பார்க்கனுமா?…” ஆனந்தி அண்ணாமலையிடம் தயங்கி தயங்கி கேட்க,
“பார்க்கனும்னு நினைப்பிருந்தா பார்த்துட்டு வரேன்னு சொல்லியிருப்ப. பார்க்கனுமான்னு கேட்டு நிக்கிற?…” என்ற எதிர்கேள்வியில் ஆனந்தி வாயை மூடிக்கொள்ள,
“எல்லாம் அவங்கவங்களுக்கா தோணனும். உன் இஷ்டம்…” என்றுவிட்டார் அண்ணாமலை.
மற்றவர்களும் வா, வந்து பார் என்று அழைக்காதது ஒருபக்கம் எரிச்சல், இன்னொருபக்கம் யாரும் சொல்லாமல் செல்வது கௌரவ குறைச்சலாக இருந்தது.
விசாலாட்சியாவது அழைப்பார், பார்த்துவிட்டு வா என்று சொல்லுவார் என பேச்சுவாக்கில்,
“இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகலையா விசாலம்?…” என கேட்டிருந்தார் ஆனந்தி.
“நைட்டுக்கு தான் டிபன் செஞ்சு எடுத்துட்டு போகனும் மதினி. வேலையை முடிச்சிட்டு சமைக்கனும். உங்கண்ணன் கொண்டு போய் விடறேன்னு சொல்லியிருக்கார்…” என்றுமட்டுமே சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். ஆனந்திக்கு அத்தனை எரிச்சல்.
“வாங்களேன், ரெண்டுபேரும் போவோம்ன்னு சொல்றாளா பாரு?…” என கடுப்பில் முனங்கிக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தவர் ராணியிடம் அவரை சமைத்து எடுத்து செல்ல சொல்வோமா என்றும் நினைத்து பார்த்தார்.
முருகேஸ்வரியை நினைக்கவும் மனதோடு முகம் போன போக்கில் ஒன்றும் வேண்டாம் என்று விட்டுவிட்டார். முருகேஸ்வரியை நினைத்ததும் வரும் அந்த பிடித்தமின்மையை தவிர்க்க முடியவில்லை.
இப்போதும் அருகே கூட செல்லாமல் தன் வீட்டு வாசலில் இருந்தாலும் வித்யாவை அத்தனை கவனித்தது ஆனந்தியின் பார்வை.
மனதிற்குள் வருத்தம் தான். தன்னுடைய வேண்டுதல்களில் ஒன்றாக வித்யா குணமாக வேண்டும் என்றும் இருந்தது.
இத்தனை வருடங்கள் மனதிற்கும், புத்திக்குமாக உருப்போட்டு வைத்திருந்தது அவரை சட்டென மாறவிடவில்லை.
மகளிடம் மட்டும் கேட்டு கொள்வார் ‘இப்போ பிரச்சனை இல்லையே? எப்படி இருக்கிறாள் வித்யா?’ என்று.
மனோ அங்கே செல்வதை கூட தடுக்கவில்லை அவர். இப்போதும் விசாலாட்சியுடன் மனோ நிற்க வீட்டிற்குள் செல்வாளோ இல்லையோ என்ற எண்ணமெல்லாம் இல்லை.
அவரின் நினைப்பில் இருந்தது எல்லாம் வேறு ஒன்று. அன்று பேச்சுவாக்கில் அண்ணாமலை சொல்லியதில் ஒரு நடுக்கம் இன்னும் அவருக்குள்.
“அன்னைக்கு அந்த பொண்ணு வேகமா அந்த இடத்தை விட்டு போகாம இருந்து நான் போயிருந்தா யார் கண்டா என் தலையில கூட அந்த மணி விழுந்திருக்கும்? பாவம் சின்ன பிள்ளை…” என அவர் சொல்லியது இன்னும் நெஞ்சில் குத்திக்கொண்டு இருந்தது.
உண்மையும் கூட அதுதானே? கோலம் போட்டுக்கொண்டிருந்தவள் நிச்சயம் எழுந்து சென்றிருக்க வேண்டியதில்லை. என்னவோ எல்லாம் இறைவன் செயலாகவே தோன்றியது ஆனந்திக்கு.
அதனை மனதிற்குள் வைத்துக்கொண்டார் யாரிடமும் சொல்லாமல். வறட்டு பிடிவாதம் அவருக்கு யாரிடமும் சொல்லவும் இடமளிக்கவில்லை.
செண்பகம் சென்றதை போல தன்னால் ஏன் செல்லமுடியவில்லை என்ற யோசனை கூட இல்லை. எப்படி சென்றிருக்கிறாள் பார்? என தான் நினைத்தார்.
இதோ திருஷ்டி எடுக்கப்பட்டு வித்யா வீட்டிற்குள் செல்ல அவளுடன் மற்றவர்களும் செல்ல செண்பகம் தன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மருத்துவமனையில் பேசியதை போல பேச்சளவில் தான் இப்போது இருக்கிறார் செண்பகம்.
அதை போல ஆத்மாவும் தங்கள் வீடு நோக்கி வந்துகொண்டிருக்க அவன் அருகே வரவும்,
“ஹ்ம்ம், நல்லாயிருக்கா. சீக்கிரம் காயம் ஆறிடும்ன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
நீங்கள் அங்கே சென்று பார்க்கவேண்டியது தானே? என்றோ, பார்க்க வரவில்லை ஏன் கேட்கிறீர்கள்? என்றோ எதுவும் கேட்காமல் கேட்டதற்கு பதிலை சொல்லி சென்றுவிட அதுவும் ஆனந்திக்கு வருத்தமாகி போனது.
ஒரு பெருமூச்சுடன் மீண்டும் ஆனந்தி அவர்கள் வீட்டு வாசலை பார்த்துவிட்டு உள்ளே வந்துவிட்டார்.
சற்று நேரத்தில் மனோ வந்துவிட அண்ணாமலை அப்போது தான் மதிய உணவிற்கு வீடு வந்திருந்தார்.
சாப்பிட கையை கழுவிக்கொண்டு அண்ணாமலை அமர போக ரிதுபர்ணா வந்துவிட்டாள் அங்கே.
அண்ணாமலை சாப்பிடுவதை கண்டு அருகே செல்லாமல் ஹாலில் ஒரு இடத்தில் நின்றுகொண்டாள்.
அவளை திரும்பி பார்த்த அண்ணாமலை வந்திருக்கும் காரணம் தெரிந்தும் கவனிக்காததை போல நிதானமாக சாப்பிட்டார்.
“மனோ உன் அண்ணிய சாப்பிட கூப்பிடுடி…” ஆனந்தி சொல்ல,
ரிதுவிற்கு கேட்கவில்லை அவர் அங்கே பேசுவது. தன்னை திகைப்புடன் பார்ப்பதும் அங்கே திரும்புவதுமாக ஆனந்தி இருக்க ரிது வாசலருகே இருந்த ஜன்னலை வெறித்தபடி நின்றாள்.
மாடிக்கு சென்று வரலாம் என்றால் அதற்குள் அண்ணாமலை தன்னறைக்குள் சென்றுவிடுவாரே.
இப்போதே பேசி முடித்துவிட வேண்டும் என்று அங்கேயே நகராமல் நின்றிருந்தாள்.
முதலில் சாப்பிட்டு முடித்த ஆனந்தி எழுந்து ரிதுவருகே வர அதை உணராத ஒருவித உணர்வின் பிடியில் ரிதுபர்ணா இருந்தாள்.
“ரிது…” என்ற அழைப்பு கூட அவளை எட்டவில்லை. அவளின் தோளில் கை வைத்து திருப்ப,