அனிதாவும் தன் ஆசைக்காக முதலில் ஈசனிடம் வெளிநாடு செல்வோம் என்று கூற அவனோ முடியவே முடியாது என்று மறுக்க, அந்நேரம் பார்த்து கஜேந்திரனே வேறொரு ஆள் மூலமாய் ஒரு வெளிநாட்டு வரனை அனிதாவின் அப்பாவிடம் சொல்ல, அழகாய் அவர் நினைத்தது முடிந்தது.
என்ன இதெல்லாம் ஈசனுக்கு தெரியும் என்று யாருக்கும் தெரியாது. உண்மை தெரிந்ததும் வீட்டில் வந்து சத்தம் போடத்தான் நினைத்தான். ஆனால் என்னவென்று போடுவான்?? நீ தான் முக்கியம் என்று இருந்திருக்க வேண்டியவளே கை காட்டி சென்ற பின்னே யாரை கடிந்து என்ன லாபம். ஒருவகையில் அவளது சுயம் தெரிந்தது நல்லதோ என்று கூட தோன்றியது.
நாங்கள் சொன்னால் அவளுக்கு எங்க போனது புத்தி என்று கஜேந்திரன் கேட்டால் என்ன சொல்ல என்று தோன்ற, ஈசனும் அடுத்தது என்ன என்று சிந்திக்க இன்றோ அவன் அப்படி அமைதியாய் இருந்ததே அவனுக்கு தலைகுனிவை தரும் என்று யார் கண்டார்.
“அன்னிக்கு இருந்து இப்போ வரைக்கும் நீங்க சொன்னபடிதான் என் வாழ்கையில் நடந்திருக்கு.. அப்படி இருக்கும் போது நான் என்ன தப்பு பண்ணிட்டேன் மா.. சொல்லுங்க.. ஆனா என்னை பார்த்து அந்த துரைசாமி சொல்றான் நீ யோக்கியமான்னு… எனக்கு எதுக்கு இந்த தலைகுனிவு இப்போ…??” என்று ஈசன் இத்தனை வருட கோவத்தையும் குரலில் தேக்கி கத்த,
“போதும் நிறுத்துங்க மாமா….” என்ற பதில் லட்சுமியிடம் இருந்து வந்தது.
அம்மாவும் மகனும் பேசுகிறார்கள் என்று சற்று தள்ளியே நின்றிருந்த லட்சுமி முன்னே வந்து, “இதுக்கு மேல நீங்க ஒரு வார்த்தை பேச கூடாது..” என்று கையை நீட்டி பத்திரம் காட்டி உருத்து விழித்த லட்சுமி அங்கே அனைவருக்குமே புதியவள் தான்.
ஆம் இத்தனை நேரம் அமைதியாய் இருந்தவள், ஈசனது பேச்சில் ஓரளவு என்ன நடந்தது என்பதை யூகித்து அவனுக்காய் வருந்தி நிற்க, அவனோ என்னவோ அனிதாவை அவனிடம் இருந்து பிரித்ததினால் தான் இப்படி நடந்தது என்பது போல் பேச, வந்ததே கோவம். இதற்குமேலும் அமைதியாய் இருந்தால் ஆகாது என்று எண்ணியவள் தான் கத்தியே விட்டாள்.
“லட்சுமி…”
“அத்தை.. நடுவுல பேசுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்.. யாரும் இனி பேச கூடாது… உங்களுக்கும் தான் ஈஸ் மாமா…. நான் பேசி முடிக்கிற வரைக்கும் எதுவும் பேச கூடாது…” என்று அனைவரையும் ஒரு தீ பார்வை பார்த்துவிட்டு,
“என்ன மாமா விட்டா பேசிகிட்டே போறீங்க??? அந்த துரைசாமி எல்லாம் ஒரு ஆளுன்னு நீங்க தானே சொன்னீங்க.. இப்போ உங்களை ஒருவார்த்தை சொல்லவும் பொங்கி வருதோ..?? யாருக்கு நல்லவனா இருக்கணும்னு நினைக்கிறீங்க மாமா??? ஊர்ல இருக்க எல்லாரும் உங்களை உத்தம சிகாமணின்னு சொல்லி சிலை வைக்கணுமா???
சொல்லுங்க.. எங்கன வைக்கனும்னு சொல்லுங்க மாமா.. நானே வைக்கிறேன்.. என்ன பாக்குறீங்க.. அவன் ஒரு ஆளு. அவன் சொன்னானு இவரும் கேட்டாராம்.. கோவம் வந்துச்சாம்.. கோவம் வந்தா அங்கனையே அவன் நாக்க வெட்டி வீசிருக்கணும்.. அதை விட்டு இங்க வந்து கத்துன்னா என்ன அர்த்தம்…” என்று பேசி நிறுத்த,
ஈசனுக்கு அந்த நிலையில் கூட ‘அம்மாடி என்னமா பேசுறா…’ என்றே நினைக்க தோன்ற, அவளது தோற்றமும், பாவனையும், அவள் பேச்சுக்கு தக்க, உருண்டு உருண்டு பார்க்கும் கண்களும் ஈசனுக்கு அவளையே தான் பார்க்க செய்தது.
“நான் ஈசன் அப்படின்னு திமிரா சொல்ல தெரியுதில்ல.. அதை அவன்கிட்ட காட்டிருக்கணும்.. அதைவிட்டு அங்க அமைதியா இருந்துட்டு இங்க வந்து தாட் பூட்டுன்னு குதிச்சா எப்படி?? அமைதியா இருக்க வேண்டியது நல்லது தான் மாமா..
ஆனா அமைதியாவே இருந்தா நல்லதுன்னு யாரும் சொல்லல.. நீங்க எப்போ பேசிருக்கணும் தெரியுமா, அந்த அனிதா உங்களை விட்டு போனாளே அப்போ அவளை இழுத்து வச்சு நாலு அப்பு அப்பி அப்போ பேசிருக்கணும்…
சரி இதெல்லாம் பண்ணது பெரிய மாமான்னு தெரிஞ்சதுல்ல, அப்பயாவது வந்து வீட்ல என்ன எதுன்னு கேட்டு சத்தம் போட்டிருக்கணும்.. சரி அதெல்லாம் விடுங்க, அந்த அனிதாக்கு நம்ம ஊர்ல தானே கல்யாணம் நடந்துச்சு அப்போ போய் பேசி அவளை இழுத்துட்டு வந்திருக்கணும்.. அதாவது உங்களுக்கு அவ மேல நிஜமா லவ் இருந்திருந்தா… ” என்று தன் பேச்சை ஒருநொடி நிறுத்தி ஈசன் முகம் பார்க்க,
அவனோ “லஷ்மி….!!!” என்று அதிர்ந்தான்.
அவனது அந்த அதிர்ச்சி அவளுக்கு தேவையாக தான் இருந்தது. அவன் உணர்வுகளை பிரதிபலிக்க செய்யவேண்டும் என்று தோன்றியது. இவன் இனி பேச வேண்டும். என்னிடம் நீ உன் உணர்வுகளை பிரதிபலித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் லட்சுமியினுள் வேர் விட தொடங்கியது.
“என்ன பாக்குறீங்க. எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணேன்.. அப்போ நானும் இதை பத்தி பேசலாம்.. என் முன்னாடி நீங்க பேசுறப்போ நான் பேசினா மட்டும் என்ன வந்துட போகுது..??”என்று அவள் கேட்ட பாவனை ஈசனுக்கு அந்த நேரத்திலும் லேசாய் புன்னகையை வரவைக்க,
‘என்ன பொண்ணுடா இவ…’ என்று தான் அவனுக்கு நினைக்க தோன்றியது. நிச்சயமாய் இந்த விசயத்தை யார் பேசவும் மனதில் ஒரு துணிவு வேண்டும். லட்சுமி மீது லேசாய் ஒரு வியப்பு கூட தோன்றியது ஈசனுக்கு. ஈசனது கண்கள் அவள் மீது லேசான ஆர்வத்தோடு படிந்து மீள, ஈசனுக்கு அத்தனை நேரம் மனதில் இருந்த பாரமெல்லாம் குறைவது போல் தோன்றியது.
லட்சுமி பேசிய விதமும் அதற்கு ஈசன் முகத்தில் தெரிந்த மாறுதலும் மரகதத்திற்கு ஆச்சரியாமாய் போனது. இதுவரை அவரே தன் மகனிடம் குரல் உயர்த்தி பேசியதில்லை. எங்கே லட்சுமி பேச பேச ஈசன் எதுவும் சட்டென்று சொல்லிவிடுவானோ என்று அஞ்சிய மரகதம், மகனது முகம் பார்த்து அப்படியே நின்றுவிட்டார்.
பாலாவும் அப்படியே ‘என்னடா நடக்குது இங்க..’ என்று பார்த்து நின்றிருந்தான்.
அனால் லட்சுமியோ தான் சொல்ல வந்ததை சொல்லியே ஆவேன் என்பது போல, “என்ன மாமா அமைதியா இருக்கீங்க.. உண்மை தானே… அவ உங்களை உண்மையா லவ் பண்ணிருந்தா அவளும் உங்களை விட்டு போயிருக்க மாட்டா… நீங்க உண்மையா லவ் பண்ணிருந்தா நீங்க அவளை போக விட்டிருக்க மாட்டீங்க.. அப்போ என்னவோ அந்த ஏஜ்ல வந்த அட்ராக்சன். அந்த அனிதாவும் நீங்க என்னவோ ஆள் பார்க்க நல்லா கம்பீரமா இருக்கீங்க அப்படின்னு என்னவோ பண்ணிட்டா..
ஆனா அடுத்து அவ வாழ்கைய பார்த்திட்டு போனா தானே… அப்புறம் என்ன உங்களுக்கு வலிக்குது.. இது தான் நிஜம்.. பேச வேண்டிய நேரத்துல எல்லாம் பேசாம இருந்திட்டு, இப்போ வந்து எவனோ என்னவோ சொல்றான்னு அத்தையை பிடிச்சு அந்த பேச்சு பேசுறீங்க..
ஒன்னு நீங்க அப்போவே வீட்ல கன்வின்ஸ் பண்ணிருக்கணும்.. இல்லை அனிதாவை பண்ணிருக்கணும்.. அதுவுமில்லையா… கல்யாணம் பேசினாங்க தானே.. உங்க கிட்ட சொல்லிட்டு தான பண்ணாங்க… அப்போவாது பேசிருக்கணும்.. இப்படி எதையும் நேரத்துக்கு பண்ணாம, நல்ல புள்ளையாட்டம் இருந்துட்டு இங்க வந்து குதிக்க கூடாது.. புரிஞ்சதா…” என்று விடாமல் பேசிய லட்சுமிக்கு லேசாய் மூச்சு வாங்கத்தான் செய்தது.
ஆனால் ஈசனுகோ அவள் பேச பேச, மனதில் ஒரு இதம் பரவ, எதோ சிறு குழந்தை ஒன்று அழகாய் பாடினால் ரசிப்போமே அது போல் தான் ரசித்து பார்த்திருந்தான். இதுவரை யாரும் தன்னிடம் இப்படி பேசியதில்லை. இனியும் அப்படி பேச போவதுமில்லை இவளை தவிர என்ற எண்ணம் தோன்ற,
“தண்ணி குடி லஷ்மி….” என்றான் அவனும் அறியாது.
‘நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.. இவன் என்ன சொல்றான்..’ என்ற ரீதியில் பார்த்தவள்,
மீண்டும் அவனிடம் ஒரு முறைப்பை மட்டுமே கொடுத்து, “இப்போ எதுக்கு நீங்க என் மானம் போச்சு மரியாதை போச்சுன்னு கத்துனீங்க.. அந்த துரைசாமி பேசினதுக்கா?? இல்லை இந்த கல்யாணம் நடந்ததுனால தானே அவன் அப்படி பேச வேண்டி வந்ததுன்னா?? இல்லை வீட்ல கட்டாயபடுத்தி என்னை கல்யாணம் பண்ணி வச்சதுனாலயா…?? சொல்லுங்க இதுல உங்களுக்கு கவுரவ குறைச்சலா நினைக்க வச்சது எது மாமா???” என்று அவனை பார்த்தவளின் பார்வையில் நீ இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்றார் அர்த்தமிருக்க,
அதே நேரம் முன் வாசல் வழியே இங்கு வந்த பேச்சிக்கும், நடுவாசல் வழியே இங்கு வந்த கஜேந்திரனுக்கும் லட்சுமி கடைசியாய் பேசியது மட்டும் காதில் விழுந்து, இருவருமே திகைத்து தான் நின்றனர்.