“கண்ணன் எங்க?…” என்று அவனையும் அழைக்க அவன் வந்ததும் இருவரின் கண்களிலும் ஒரு பரிபாஷை.
“என்ன பன்றது?…” என்றாள் வாயசைத்து அவனுக்கு மட்டும் புரியும்படி.
“என்ஜாய்…” என்றான் கண்சிமிட்டி ஆத்மாவும்.
அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் அது. இன்னும் சொல்லப்படும் முன் அங்கே இந்த நிகழ்வு நடந்தேற ஆரம்பிக்க சரி முடியட்டும் என்று இருந்தான்.
“ரிதுவுக்கு வளையல் போட ஆரம்பிங்க…” என்று அது ஆனந்தமாக தான் ஆரம்பித்தது.
கன்னத்தில் சந்தானம் பூச்ப்பட்டு, குட்டி குட்டியாய் நறுக்கி இருந்த பூச்சரத்தை தலையில் வைத்து மஞ்சள் பூசப்பட்ட அரிசியும், பூக்களுமாக அட்சதையிட்டு ஆசிர்வாதங்கள் வழங்க தன்னை போல அவள் கைகள் தன் மணிவயிற்றை வருடியது.
“கையை கொண்டா ரிது. அடுத்த வருஷம் நீயும் ஒரு பிள்ளையோட நிக்கனும்…” என்று உறவுகள் சந்தோஷமாக வளையலை அடுக்கினார்கள்.
வளைகாப்பில் இப்படி குழந்தைக்காக தயாராக இருப்பவர்களுக்கு எப்போதும் நடக்கும் நிகழ்வு தான்.
அதனால் இலகுவாக அதனை பார்த்திருக்க வளைப்பூட்டு முடிந்ததும் ரிது மனையை விட்டு எழுந்துகொண்டாள்.
“ரெண்டுபேரும் ஆசிர்வாதம் வாங்குங்க…” என்று மூத்த வயதான தம்பதியினரை பார்த்து சொல்ல காலில் விழுந்து எழுந்தார்கள் இருவருமே.
“சொல்லிடட்டுமா?…” ரிது மெல்லிய குரலில் கேட்க,
“ம்ஹூம், இப்ப வேண்டாம். நாளைக்கு சொல்லலாம். நான் தான் சொல்லுவேன்…” என்று சொல்லிவிட்டான் ஆத்மா.
வரும் வழியில் தான் அவர்களும் அதனை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து சேர்ந்திருந்தனர்.
இங்கே அன்றே சொல்ல தான் ஆத்மா விடவில்லை. மறுநாள் அவனின் பிறந்தநாள்.
அன்று சொல்லிக்கொள்ளலாம் என்று அவள் வாயை அடைத்து அழைத்து வந்திருந்தான்.
“எல்லாரும் முதல்ல சாப்பிட போங்க…” என சொல்லவும் மற்றவர்கள் கலைய ஒருசில நெருங்கிய உறவுகள் மட்டுமே உள்ளே இருந்தார்கள்.
ரிது அங்கிருந்த சேர்களை ஒதுக்கி வைக்க அதனை பார்த்தபடி இருந்த ஆனந்திக்கு தன் மருமகளுக்கு செய்யும் பொழுது இதை விட பெரிதாய் செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தார்.
“முதல்ல ரிதுவுக்கு சுத்தி போடனும்…” என ஆனந்தி பூரித்து சொல்ல ரிதுவின் முகத்தில் புன்னகை.
இந்த இடைப்பட்ட காலங்களில் ஓரளவு ரிது ஆனந்தியுடன் நன்றாகவே பழக ஆரம்பித்திருந்தாள்.
முன்பிருந்ததை போன்ற ஒதுக்கம் குறைந்திருந்தது. தானாக சென்று பேசுவது, எதுவும் கேட்பது என்று அவரிடமும் சொல்லி செய்ய பழகி இருக்க பூரித்து போனார் ஆனந்தி.
ஆனாலும் ஆனந்தியின் மனதை வாட்டும் ஒரே விஷயம் குழந்தை விஷயம் மட்டுமே.
மனதிற்குள் கவலைப்பட்டாலும், செண்பகம், விசாலாட்சியிடம் புலம்பினாலும் அதனை ரிதுவிடம் காட்டுவதில்லை.
இப்போது மருமகளை இப்படி கைநிறைய வளையல்களுடன், உச்சந்தலையில் அட்சதையும், கன்னத்தில் சந்தனமுமாய் பார்க்கையில் மனது நிறைந்துபோனது.
“என்ன மதினி நான் சொன்னதுக்கு சிரிக்கறீங்க?…” என தன் அண்ணன் மனைவியின் அடக்கமாட்டாத சிரிப்பில் ஆனந்தி முகம் சுளிக்க,
“பின்ன இன்னும் பிள்ளையே உண்டாகல. அதுக்குள்ளே சுத்தி போடுவியாம்? அழக வச்சு என்ன செய்ய? அலங்கார பொம்மையா அவ? முதல்ல அவ மாசமாகட்டும். அப்பறம் சுத்தி போடு….” என பட்டென்று சொல்லிவிட்டார்.
இப்படி யோசிக்காமல் கேலி பேச ரிது மட்டுமல்லாது செண்பகமும், அங்கிருந்த மற்ற உறவுகளுமே இந்த கேலியில் திகைத்து போயினர்.
“மதினி என்ன பேசறீங்க? இப்ப இல்லைன்னா என்னமோ இல்லாமையே போன மாதிரி இருக்கு உங்க பேச்சு…” என்றார் ஆனந்தி.
அதுவும் அத்தனைபேரை வைத்துக்கொண்டு தன் மருமகளை கேலி பேசியதை ஆனந்தியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“இப்ப என்ன இல்லாததை சொல்லிட்டேன்? இவ அம்மாவுக்கும் ரெண்டுவருஷம் பிள்ளை இல்லாம டாக்டர்கிட்ட எல்லாம் போய் தானே இவ பிறந்தா? அப்ப இவளுக்கு மட்டும் எப்படி உடனே இருக்கும்? முதல்ல டாக்டரை போய் பாருங்க…” என்று பேச ஆனந்தியின் முகம் கலவரமானது.
“யார் கண்டா? இருக்கோ என்னமோ?…” என்றும் நக்கலாக சொல்லிவிட நெஞ்சில் கை வைத்துவிட்டார் ஆனந்தி.
உண்மை தானே? தமயந்திக்கும் கர்ப்ப பையில் என்னவோ பிரச்சனை என்று தானே மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து பின் குழந்தை பிறந்தது.
கலக்கம் சுமந்த முகத்துடன் ரிதுவை அவர் பார்க்க அதுவரை இருந்த மொத்த சந்தோஷமும் ரிதுவிற்கு துடைத்துவிட்டார் போல போய்விட்டது.
“இங்க பாருங்க, எங்க வீட்டு பொண்ணை பார்த்துக்க எங்களுக்கு தெரியும். விசேஷத்துக்கு வந்தமா போனோமான்னு இருங்க. அவ்வளோ தான். குடும்பத்துக்கு கலகம் பண்ணனும்னே வருவீங்களோ?…” என செண்பகம் சத்தம் போட்டுவிட்டு,
“என்ன ஆனந்தியக்கா பார்த்துட்டு சும்மா இருக்கீங்க? இதெல்லாம் என்ன பேச்சு? இவங்களை வாயடைக்க வைக்கமாட்டீங்களா?…” என்று ஆனந்தியையும் பிடித்து பேச,
“அவங்கக்கிட்ட என்ன பேச்சு? நான் என்ன பொய்யா சொன்னேன்? இவளுக்கு முன்னாடி தான உன் மூத்தார் மகன் கல்யாணம். கண்ணன் எப்படி கல்யாணம் செஞ்சுக்கிட்டான்? இன்னும் குழந்தைன்னு இல்லைன்னா நாலு பேர் கேட்க தான செய்வாங்க?…”
ஆனந்தியின் அண்ணி இன்னும் பேச பேச அத்தனை கோபம் செண்பகத்திற்கு. அதிலும் இப்போது ஆனந்தியும் ஒன்றும் பேசாமல் யோசித்துக்கொண்டே இருக்க ஆண்கள் எல்லாம் வெளியில் இருந்தனர்.
“நான் யோசனை தானே சொன்னேன்? ஒருவேளை அப்படி எதுவும் இருந்தா இப்பவே டாக்டரை பார்த்திடறது, மேற்கொண்டு என்னன்னு முடிவுக்கு வரதுன்னு. எனக்கு தெரிஞ்ச டாக்டர் கூட இருக்காங்க…”
“நீங்க சும்மா இருங்க மதினி…” என்ற ஆனந்தி,
“டாக்டரை நாங்களே பார்த்துக்கறோம். நீங்க பேசாதீங்க…” என்று அங்கே அவரின் வாயடைக்க ஆனந்தி கூறினார்.
தனது அண்ணன் மனைவியிடம் வாதாடினால் தான் சொல்லியதையே திரும்ப திரும்ப பேசி பிரச்சனை பெரிதாகிவிடும் என்று ஆனந்தி அவரின் போக்கிலேயே பதில் சொல்லி நிறுத்த பார்த்தார்.
மருத்துவமனை போவது, போகாதது எல்லாம் தங்கள் விருப்பம். அதை இப்போது சபையில் பேசி அது நிச்சயம் ரிதுவின் மனதை நோகடிக்கும் என்று ஆனந்தி பேச்சை நிறுத்த நினைக்க ஆனந்தியின் இந்த பேச்சில் அனைவருமே அதிர்ந்துவிட்டனர்.
“அப்படி சொல்லு. இதுக்கு தான், நாள் நட்சத்திரம் பொருத்தம் எல்லாம் பார்த்து செஞ்சதே இந்த காலத்துல உருப்படி இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு மத்தவங்களை பத்தி கவலையில்லாம கல்யாணம் பண்ணினா இப்படித்தான்…” என்றவர் முடிக்கும் முன்,
“அட ச்சீ, வாயை மூடுங்க…” என்று இரைந்தான் ஆத்மா.
“கண்ணா அமைதியா இருப்பா…” என விசாலாட்சி அவனின் பிடிக்க,
“நீங்க சும்மா இருங்கத்தை….” என்று வேஷ்டியை ஏற்றி மடித்துக்கொண்டு வந்து நின்றான் ஆத்மா.
“இன்னொரு வார்த்தை எதாச்சும் பேசினீங்க சொந்தம், வயசுல பெரியவங்கன்னு பார்க்கமாட்டேன்….” என்று விரல் நீட்டி எச்சரிக்க,
“நான் உங்க தாய்மாமா பொண்டாட்டி. இப்படி பேசறீங்க?…” என அவர் ஆத்மாவிடம் பேச,
“வாயை மூடுங்க…” என்ற ஆத்மா,
“அத்தை இவங்களை வெளில போக சொல்லுங்க முதல்ல…” என்றான் அவன்.
“என்ன கண்ணா? கோவப்படாதப்பா….” என்ற பொழுதே மற்ற சொந்தங்களும் அங்கே வந்துவிட்டனர்.
“என் பொண்டாட்டியை சொல்ல இவங்க யாரு? அதுக்கு அம்மாவும் ஒத்து பாடறாங்க. நான் கேட்டுட்டு சும்மா இருக்கனுமா? பிள்ளை இருக்கு, இல்லை. இவங்களுக்கென்னவாம்? பெத்தா இவங்களா வளர்க்க போறாங்க?…” என்றவன் பேச்சில் வீடே அதிர்ந்தது.
“கண்ணா, நான் அக்கறையில…”
“இந்தா பேசாம இருங்க. அப்பறம் எதாச்சும் சொல்லிட போறேன். மனசாட்சியே இல்லாம இப்படி சபையில ஒரு பொண்ணு மனசை நோகடிக்கிறீங்களே? நீங்கலாம் மனுஷங்களா?…” என்றவன்,
“உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு. ஞாபகம் இருக்கட்டும். நல்லது செய்யறவங்களையே அந்த ஆண்டவன் வச்சி செய்வான். நாராசமா பேசற வாய்க்கு எதாச்சும் செஞ்சிட போறான். இருக்கற மரியாதையை காப்பாத்திட்டு போய்டுங்க…” என்று அவன் சொல்ல அத்தனை திண்ணக்கமாய் நின்றார் அவர்.
அவ்விடம் அத்தனை அமைதி. யாராலும் அருகில் சென்று சமாதானம் சொல்லமுடியவில்லை ஆத்மாவிற்கும், ரிதுவிற்கும்.
ஆத்மாவின் பேச்சு தான் அத்தனை ஆக்ரோஷமாக இருந்ததே தவிர முகமும், குரலும் கலங்கி போயிருந்தது.
“ஏன்ம்மா நீங்களும் இவங்க பேச்சுக்கு தலையாட்டறீங்க? ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் அது இதுன்னு. என்ன பேச்சு இது? நீங்க மாறவே மாட்டீங்களா? சின்ன வயசுல என் மனசை புரிஞ்சுக்கலை. இப்ப இவ மனசை புரிஞ்சுக்கலை….” என ஆதங்கமாய் கேட்டவன்,
“ரிது இங்க வா…” என்று அருகே அழைக்க கண்கள் கலங்கி போய் அவனருகே வந்தவளின் தோளில் கையிட்டு ஆதரவாய் நின்றான்.