“மத்த தோடை போடறதே இல்லை. எப்ப பாரு ஜிமிக்கி. எத்தனை தான் வாங்கி வச்சிருக்கன்னு கேட்காங்க…” என்று சிணுங்கலுடன் அவள் கூற ஆத்மாவிடம் குறும்பாய் குறுஞ்சிரிப்பு.
“ப்ச், சுந்தரி அக்கா கூட சொல்லிட்டாங்க. இதென்ன ஜிமிக்கி கடையே வச்சிருப்ப போல. இந்த டிஸைன் எல்லாம் எங்கருந்து வாங்கறன்னு கிண்டல் பன்ற மாதிரி…”
“யார் என்ன சொன்னா என்ன? காதுல மட்டுமில்லை. கழுத்து கை எல்லாமே ஜிமிக்கியாவே போடுவோம். அவங்களுக்கு என்னவாம்? இதெல்லாம் நீ கேட்கமாட்டியா?…”என்றவனின் வாயில் அடித்தவள்,
“எப்ப பார் ஏட்டிக்கு போட்டி. நான் என்ன சொன்னா அதை அப்படித்தான் செய்வேன், அதுக்கும் மேல செய்வேன்னு பேசறீங்க? போங்க போங்க…” என்றாள்.
“ப்ச் ஓகே, இப்ப என் கிப்ட். ஆனா நகையா வேண்டாம்…” என்றவன் கண்களில் காதல் மின்னியது.
“டாக்டர் தான் சொல்லிட்டாங்களே? நான் நோ சொல்லலை…” வெட்கத்துடன் ரிது புன்னகைக்க,
“கள்ளி, நினைப்பை பாரு. நான் அதை கேட்கலை…” என்று அவளின் கன்னத்தை கிள்ளி அவன் அடக்கமாட்டாமல் சிரிக்க அசடு வழிந்தது ரிதுவிடம்.
“உங்களால நான் என்ன பேசறேன் பாருங்க?…” என்று அவன் தோளில் அடித்தாள்.
“கிப்ட்ன்னா அது தானா? சொல்ல போனா அது கிப்ட் இல்லை. பரஸ்பர உணர்வு. அது கிப்ட் வகையறாலையே வராது மை வொய்ப்…” என்று அவள் காதிலாடிய ஜிமிக்கியை நிமிண்டியவன்,
“நேத்து சொன்னியே நானா கேட்காம, நானே எதிர்பாராம ஒரு வார்த்தை. அந்த உரிமை. புருஷனா அந்த உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லையோ அதே மாதிரி உன் அத்தானா அந்த வார்த்தை. ப்பாஹ், ஐ பீல் கம்ப்ளீட் ரிது. சொல்லு…”
அத்தனை லயித்து போய் அவன் வெளிப்படுத்திய அந்த உணர்வுகளை விழிவிரித்து அவள் பார்த்திருக்க,
“இதுதான், இந்த பார்வை. என்னை என் மனசை ஒரு நிமிஷம் புரட்டிடுச்சு. உன்னை என் மனைவியா ம்ஹூம், உனக்குள்ள நான் மொத்தமா வந்து விழுந்திடனும்னு தோண வச்ச அந்த பார்வை….” என்றவன் கைகள் அவள் முகத்தை தாங்கிக்கொண்டு மயக்கத்தில் பிதற்றியது.
விழிகள் அகலாது அவளின் உலகம் அவனின் முகத்திலும், அவனின் வார்த்தைகளிலும் மட்டும் நின்றுவிட்டதை போல பார்த்திருந்தாள் ரிது.
“ப்ச், அடியே நான் ரொம்ப உளறிட்டு இருக்கேன். சொல்லிட்டு போய் வேலையை பார்ப்பியா? இதென்ன பார்வை?…” என்றான் அவள் நெற்றியில் முட்டி நின்று கண்மூடியபடி.
இருவரின் மூச்சுக்காற்று ஒன்றோடொன்று சண்டையிட ஆழ்ந்த மூச்செடுப்பு ரிதுவிடம்.
“சொல்லு ரிது. எவ்வளவு தவிக்க விடற? இவ்வளோ நாள் கேட்டனா நான்? நீயா சொல்லிட்டு இப்ப ஏங்க விடற நீயும்….”
“கண்ணத்தான்…” என அவள் மெல்லிய குரலில் சொல்ல,
“கேட்கலை…” என சிரித்தான்.
“கேட்டுச்சு. உங்களை நான் நம்பமாட்டேன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்…”
“ஓகே, நீயும் நம்பாத. நானும் நம்பலை. இன்னொருதடவை சொல்லுவியாம்…” என்றவன் கரங்கள் அவள் கன்னத்தில் அழுத்தத்தை கூட்ட,
“என்ன இது? இது ஒரு பேர்…”
“ம்ஹூம், இது வெறும் பேரில்லை. நம்ம பிடித்தத்தோட வேர்ன்னு சொல்லலாம்…” என்றவன் விலகி வந்து கட்டிலில் அமர்ந்தான்.
“எந்த உறவால நாம வாழ்கையை தொடங்க முடியாதுன்னு நினைச்சேனோ அந்த உறவை இப்ப எனக்கு நீ குடுத்திருக்க…”
“யோசிக்க எதாச்சும் இருந்தா தானே தலையில. போடி. வெளில போ. எனக்கு கொஞ்சம் நேரம் தனியா இருக்கனும்…” என கட்டிலில் மல்லாந்து விழுந்தவன் முகத்தில் அத்தனை நிறைவு.
திருமணத்திற்கு முன், பின் என்று அவன் வாழ்க்கையை வகுக்க இரண்டும் இருவேறு பரிமாணம்.
ஒரு நொடி பிடித்தத்தை பிடித்துக்கொண்டு திருமணம் என்னும் மிக முக்கியமான முடிவை எடுத்துவிட்டவன் அதனை சரியாக எடுத்து சென்றாலும் ஆங்காங்கே சிறு பிசகல்கள் இல்லாமல் இல்லை.
எந்தளவிற்கு பிடித்தம் இருந்ததோ அந்தளவிற்கு வேறுபாடும் இருந்தது. எல்லாவற்றையும் கடந்து அவர்களை செலுத்திய சக்தி எதுவோ?
நினைக்க நினைக்க பேருவகை ஊற்றெடுக்க அது அகத்திலிருந்து முகத்திலும் நிறைந்தது.
“நானும் கொஞ்ச நேரம்…” என்று அவனருகே அவன் கை வளைவில் வந்து நுழைந்தவளை முறைத்தவன்,
“மனுஷனை கொஞ்ச நேரம் தனியா சந்தோஷமா இருக்க விடமாட்ட நீ…”
“ஏன் நீங்க எந்திச்சு போங்க. நான் சந்தோஷமா இருந்துக்கறேனே?…” என ரிதுவும் அவனை போலவே பேச,
“படுத்துறடி நீ. அவ்வளவு கொழுப்பு…”
“எல்லாம் புருஷனோடது. திருப்பி எல்லாம் குடுக்க முடியாது…” என்று கண் சிமிட்ட,
“மயங்கிட்டேன் போ…” என்றவன் பேச்சுக்கள் எல்லாம் மடை திறந்த வெள்ளமென தான் இருந்தது.
ஏற்கனவே பேசிய பேச்சுக்கள் தான். ஆனால் மீண்டும் புதிதாய் பேசுவதை போலவே இருவரும் பகிர்ந்துகொள்ள நேரங்கள் உறங்காமலே கடந்தது.
மாலை கதவு தட்டப்பட்ட சத்தத்தில் தான் பேச்சை நிறுத்திவிட்டு இருவரும் எழுந்தனர்.
“நீ போய் பாரு. நான் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்…” என்று ஆத்மா பாத்ரூம் சென்றுவிட கதவை திறந்தாள் ரித்து.
வித்யா தான் நின்றுகொண்டிருந்தாள் மனோவுடன். இருவரையும் கீழே வரும்படி சொல்ல வந்ததாக வித்யா கையசைக்க,
“கீழே வெய்ட் பன்றாங்க அண்ணி. நீங்களா வருவீங்கன்னு பார்த்தாங்க…” என்றதும் தான் அவர்கள் தயாராக இருந்ததே கவனத்தில் வந்தது.
“அச்சோ அவ்வளோ நேரமாகிடுச்சா? பத்து நிமிஷத்துல வரேன்….” என்று அவர்களை அனுப்பிவிட்டு பத்து நிமிடத்தில் கிளம்பி கீழே வந்துவிட்டாள் ஆத்மாவுடன்.
தனது சொந்தங்களையும், டேபிளில் இருந்த கேக்கையும், சுற்றியிருந்த அலங்காரத்தையும் பார்த்தவன் மனது இப்போது ஆர்ப்பரிக்காமல் அமைதியாக இருந்தது.
முதலில் சட்டென பார்த்ததும் அலைமோதிய நிஜங்கள் எல்லாம் அவனின் இத்தனை நேர நிதானத்தில் பின்னுக்கு சென்றுவிட்டது.
நிஜங்கள் என்றும் நிழலாகவேணும் இருந்துகொண்டே தான் இருக்கும். அதற்கு நிஜத்தை தள்ள முடியாதே?
ஆத்மா அந்த நிமிட சந்தோஷத்தை கையிலெடுத்துக்கொண்டான். தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் திரும்பி புருவம் உயர்த்தியவன் புன்னகையில் அவளும் சமாதானமாகினாள்.
“எல்லாருக்குமே செர்வ் பண்ணு ரிது…” என்று சொல்லிவிட்டு தலையசைத்துவிட்டு சென்று அமர்ந்துகொண்டான்.
ஊட்டவேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் தரவேண்டும். ஒருவரையும் விடமுடியாது.
அதையும் விட ஆத்மாவிற்கு சிறு கூச்சம் வேறு. இத்தனை வருடங்கள் கழித்து இந்த நிகழ்வு மகிழ்ச்சி என்றாலும் இந்த வயதில் இதென்ன எனும் வெட்கத்தையும் தந்திருந்தது.
தனித்தனியாய் அனைவருக்கும் கேக் வைத்து அனைவரும் சாப்பிட கிட்சன் உள்ளே சாப்பிட்ட பேப்பர் ப்ளேட்களை எடுத்து சென்று வைக்க போனவள் பின்னே சென்றான் ஆத்மா.
“ரிது கொஞ்சம் ஹாட் வாட்டர் தாயேன்…” என்றதும் அவனை பார்த்துவிட்டு வெந்நீரை அடுப்பில் வைத்தவள் தலையை நீட்டி வெளியே மற்றவர்களை பார்க்க ஏனையோர் வெளியே தோட்டத்திற்கு சென்றிருந்தனர்.
“எல்லாருமே வெளில போய்ட்டாங்க. அப்படி என்ன அங்க பார்வை?…” என்றவன் தானே தம்ளரில் தண்ணீரை ஊற்றிவிட்டு குடிக்க போக,
“ஹேப்பி பார்த்த டே…” என்று அவனுக்கு கேக்கை நீட்ட ஆத்மா சிரித்துவிட்டான்.
“நான் என்ன சின்ன பிள்ளையா?…”
“ஹேப்பி பார்த்த டே கண்ணத்தான்…” மீண்டும் சொல்ல,
“சாதிக்கிறடி…” என்று வாங்கிக்கொண்டவன் பார்வை இப்போது தோட்டத்தை எட்டியது.
வந்தவன் வருகை ஊருக்கு மட்டுமல்ல. அவன் எவ்வித நிர்பந்தமும் இன்றி, முருகேஸ்வரி அழைப்பும் இன்றி ரிதுவின் வீட்டிற்குள்ளும் நுழைந்திருந்தான்.
“எதிர்பாராதா உறவும், நிற்பந்திக்காத பந்தமும் எல்லாருக்கும் அமைஞ்சிடாது. எனக்கு அமைஞ்சது. இது போதும்…” என்றிருந்த ரிதுவின் சொல்லை தான் செயல்படுத்தியிருந்தான்.
சந்தோஷ நிகழ்வுகள் எதிர்பாராத விதமாக இருப்பின் சுவைக்கு சுவை சேர்ப்பதை போலவே வாழ்க்கைக்கும் இனிமை சேர்ப்பது.
அச்சுவையை அனுபவித்து பார்த்தவர்கள் வாழ்க்கையில் எதையும் எதிர்பார்ப்பதில்லை.