“நம்மோடது பையனோ? பொண்ணோ? ஆனா என் சந்ததிக்கு இந்த சமூகத்தை ஆரோக்கியமாகவும், தைரியமாகவும் எதிர்க்கொள்ள சொல்லி தந்து வளர்க்கனும் ரிது. குழந்தை பெத்துக்கறது பெரிய விஷயமில்லை. ஆனா அந்த குழந்தையை எப்படி வளர்க்கறோம்ன்றது தான் முக்கியம்…”
“கண்டிப்பா நல்லபடியா வளர்ப்போம்…” ரிது கூற,
“ஹ்ம்ம், அதுமட்டுமில்லை உறவுகள், பிரிவு, ஏமாற்றம், தோல்வி இப்படி எந்தவித சூழ்நிலை வந்தாலும் அதை சரியான வழில ஹேண்டில் பண்ண தெரிஞ்சிட்டாலே பிள்ளைங்க வாழ்க்கையில் ஜெயிச்சிருவாங்க. எதிலையும் துவண்டு போயிட கூடாது….”
“கண்டிப்பா…”
“என்ன கண்டிப்பா? நான் சொல்றதுக்கெல்லாம் எஸ் சொல்லிட்டிருக்க?…” என்று கேட்க,
“எல்லாமே நீங்க சொல்லிட்டா நான் சொல்ல என்ன இருக்கு? அதான் எஸ்…” என்றதும் மருத்துவர் வந்துவிட்டார்.
“கங்க்ராட்ஸ் மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஆத்மா…” என்றவர் ரிதுவிற்கான கர்பகால அறிவுரைகளையும், மருந்துகளையும் எடுத்துரைத்து எழுதி தர வாங்கிக்கொண்டவர்கள் தங்களின் சந்தேகங்களையும் கேட்டுவிட்டு கிளம்பினார்கள்.
வெளியே வரவுமே ஆனந்தியும், விசாலாட்சியும் ஆளுக்கொரு திசையில் பிடித்துக்கொண்டார்கள்.
“கண்ணா என்ன சொன்னாங்க? என்ன ரிது எல்லாம் கேட்டுட்டியா?…” என்று ஆவலாய் பற்றிக்கொண்டனர்.
“ஹ்ம்ம், எல்லாம் நார்மல் தான். ப்ளட் லெவல் கொஞ்சம் கம்மியா இருக்கு. மத்தபடி ஓகே. நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கனுமாம்…” என ரிது சொல்ல ஆத்மா அவள் பேசுவதை கவனித்தபடி நின்றான்.
“நீ நல்லா கேட்டியா? வேற ஒன்னுமிலையே கண்ணா?…” என ஆனந்தி கேட்க,
“ம்ஹூம். எதுவுமில்லை. இது தான் சொன்னாங்க…” என்றான் அவனும் பொறுமையாக.
அத்தனைபேரும் வந்துவிட்டதிலேயே அவனின் அத்தனை ஆதங்கமும் குறைந்து முன்மை விட வலுவிழந்திருந்தது.
முந்தைய நாள் பேச்சுக்களை எதுவும் பேசவில்லை அவன். இந்த சந்தோஷத்தை எந்தவித சங்கடங்களும் இன்றி அனுபவிக்கவே விரும்பினான்.
“சரி கிளம்பலாமா?…” என்று வெளியே வந்தனர்.
வரும் வழியில் இனிப்புகள், பழங்கள் என்று இன்னும் வீட்டிற்கு தேவை என்பது என நிறையவே வாங்கி வந்திருக்க வீடே திருவிழா கோலம்.
உள்நுழைந்தவன் பார்வை அத்தனையையும் சுற்றி பார்த்தது. அவனின் பிறந்தநாளிற்கான ஏற்பாடுகளால் வீடே அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சட்டென கண்கள் பனிக்கவும் ஒன்றும் சொல்லாமல் மாடிக்கு சென்றுவிட்டான் ஆத்மா.
“நீயும் போய் ரெஸ்ட் எடு ரிது. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வா. கேக் கட் எல்லாரும் வந்ததும் பண்ணலாம்…” என விசாலாட்சி சொல்ல,
“அவன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு. என்னன்னு போய் பாரும்மா…” என்றார் ஆனந்தியும்.
ரிது அவளறைக்கு செல்லும் பொழுது இன்னும் நேரம் பிடித்திருந்தது. மாற்றி மாற்றி ஒவ்வொருவரும் அவளின் உடல்நலனை விசாரித்துவிட்டே விட்டனர்.
அண்ணாமலையும், இளவரசுவும் ஷோரூமிற்கு சென்றிருந்தனர் மதிய உணவை முடித்துவிட்டு.
இன்னும் மாலையாகவில்லை. அதுவரை அனைவரும் சிறு உறக்கத்தில் ஆழ்ந்துவிட ரிது அறைக்கு வருகையில் ஜன்னலாருகே நின்று கடலை வெறித்தபடி இருந்தான்.
ரிது கதவை அடைக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தவன் முகத்தில் என்ன இருந்ததென்று தெரியவில்லை.
“என்ன அங்க தனியா நின்னிட்டிருக்கீங்க?…” என கேட்டு அருகே செல்ல,
“ரூம்ல நான் மட்டும் இருந்தேன். தனியா நின்னேன். இப்ப நீயும் வந்துட்ட. வா சேர்ந்தே நிப்போம்…” என்று அழைக்க,
“ஹப்பா அப்ப நீங்க நார்மல் தான்…” என சிரித்தபடி அவனருகிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“நான் எப்ப அப்நார்மலா இருந்தேன்?…” என்றவன் அவள் தலையில் வலிக்காமல் குட்டி வைக்க,
வலியை தாங்கி இருந்ததோ என்னும் விதமான புன்னகையின் பின்னால் மெல்லிய சோகம் இழையோடிருப்பதை அவன் விழிகள் பிரதிபலித்தது.
“பர்த்டே செலிபரேஷன் எல்லாம் பார்க்கவும் கொஞ்சம் ஜெர்க்காகிட்டேன். அதான் சட்டுன்னு ஒருமாதிரி அழுத்திருச்சு…”
“சந்தோஷம் தானே?…”
“ஹ்ம்ம், இல்லைன்னு சொல்லலை. ஆனா தாகமாயிருக்கும் போது தான் தண்ணி குடுக்கனும். நான் ஹாஸ்டல் போற வரை பிறந்தாநாள் எல்லாம் வீட்டுல தான். ஆனா அதுக்கப்பறம் இப்ப இங்க. இந்த இடைப்பட்ட வருஷத்துல ஒருகட்டத்துல வாழ்த்து கூட இல்லை…”
சிரித்துக்கொண்டே தான் கூறினான். ஆனால் அவனின் அடிமனத்தின் தாக்கங்கள் ஏக்கங்களை வெளிக்கொணர்ந்தது.
நிறைய எதிர்பார்த்திருந்திருப்பான் என்பதை அவள் புரிந்துகொண்டு அவன் கையை பிடித்து கோர்த்துக்கொண்டாள்.
“எனக்கும் வீம்பு அதிகம். நீங்க சொல்லலைன்னா எனக்கும் வேண்டாம்ன்னு சொல்ற வாய்ப்பையும் ஒருகட்டத்துல தர மறுத்துட்டேன். இப்படி அவங்க ஒருபக்கம் இழுத்தா நான் ஒருபக்கம் போக ஆரம்பிச்சு இப்ப வரை அப்படியே போயிருச்சு…”
“பழசை மறந்திடலாமே?…” ரிது சொல்ல,
“மறக்கலாம் தான், மறையாது ரிது. வெளில மத்தவங்க சந்தோஷத்துக்காக சொல்லிடுவோம், மறந்துட்டேன். இப்ப என்ன நீ தானேன்னு. ஆனா அந்த முள் என்னைக்கும் குத்திட்டே தான் இருக்கும். சில விஷயங்கள் முள் மாதிரி. என்னோடதும் அந்த வகை தான்…”
அவன் மனதிலிருந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்க சமாதானம் செய்ய நினைத்தவளிடம் அமைதி மட்டுமே.
பேசட்டும் என்று பொறுமையாய் அவன் பேச்சுக்களை கேட்டிருந்தாள். அந்த குறையும் அவனுக்கிருந்தது.
சொல்லி அழும் நேரம் கேட்க யாருமில்லை என்று வெகுவாய் அவன் தனிமையை அனுபவித்ததை கேட்டு மனதிற்குள் மருகல்.
“ஹேய் ரிது, என்ன உன்னை கஷ்டப்படுத்திட்டேனா?…” என கேட்க,
“ம்ஹூம்…” என்று தலையசைத்து மறுத்தவள் அவனின் இடையை கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்தாள்.
“என்னோட குழந்தைக்கு நான் எல்லாவிதத்திலையும் கூடவே இருப்பேன். அவங்களோட எல்லாம் சந்தோஷமான நேரங்களும், கஷ்டங்களும் என்னோட தான். ஒருகட்டம் வர வரைக்கும் பிள்ளைங்களுக்கு அந்த வாழ்க்கையின் முழுமை பெற்றோரின் அரவணைப்பு தான். அதை குடுக்க தவற மாட்டேன்….”
“என்ன நீங்க? ஏன் இதெல்லாம் சொல்லிட்டு? மத்ததை விடுங்க. இன்னைக்கு, இந்த நாள் சந்தோஷமா இருங்க…” என்று அவளின் கன்னத்தை தட்டினாள்.