சக்திக்கு விதுரனின் மனநிலையை எப்படி புரிந்து கொள்வதென்றே தெரியவில்லை.
“விளையாடாதே விது, பொண்ணு பார்த்து இப்ப நிச்சயத்துக்கு நாள் குறிக்க போறாங்க. நீ என்னன்னா புடிக்குதான்னே தெரியலைன்னு சொல்ற…” என பதட்டத்துடன் கேட்க,
“ஏன்டா என்னவோ கல்யாணம் வேண்டாம்னு சொல்ற மாதிரி பேசற? இப்ப எதுவும் தோணலைன்னு தான சொன்னேன். கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியாகிடும்…” என அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொள்ள,
“சரி ரோஜாவோட இன்விடேஷன் எங்க?…” என கேட்க அதுவோ காற்றில் பறந்து சென்று வெளியே மழையில் மொத்தமாய் நனைந்துவிட்டிருந்தது.
“இங்க தான் வச்சேன்…” என்று வீடு முழுக்க தேடியவன்,
“ப்ச் காணோம்…” சொல்லி மொபைலை வைத்து விட்டு உள்ளே படுக்க செல்ல சக்தி அங்கேயே அமர்ந்துகொண்டான்.
மறுநாள் தங்களுடைய பில்டிங்க்கு வந்தவன் ஸ்ரீயை தவிர்த்துவிட்டு சங்கவியை பார்த்து,
“ரோஜா எப்படி இருக்காங்க?…” என கேட்க அவள் “இவன் தன்னிடமா கேட்டான்?” என்று அதிசயித்த வண்ணம்,
“ஆல்ரைட் ஸார். ஊருக்கு கிளம்பிட்டா…” என கூடுதல் தகவலையும் சேர்த்து சொல்ல அவளை ஸ்ரீ முறைத்தாள். அதை சங்கவிதான் கவனிக்கவில்லையே.
“ஊருக்கா?…” என யோசனையுடன் இழுக்க,
“ஆமாம் ஸார், அவளுக்கு அடிப்பட்டிருக்கு, காய்ச்சல்ன்னு சொல்லவும் அவங்கம்மாவே வந்துட்டாங்க. வந்து உடனே கூட்டிட்டு போய்ட்டாங்க…” என்ற சொல்லிவிட்டு வேறு எதுவும் தெரியவேண்டுமா என்பதை போல பார்க்க,
“ஓகே ஓகே…” என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
அடுத்த இரண்டு நாட்களில் அவனுக்கு நிச்சயதார்த்தம் என்று கயல்விழியிடம் இருந்து தகவல் வர சரி என்றுவிட்டான்.
“அன்னைக்கு தான்டா ரோஜாவுக்கு மேரேஜ்…” சக்தி ஞாபகப்படுத்த.
“கல்யாணத்துக்கு போக முடியாது. எங்கேஜ்மென்ட் இருக்கு…” என முடித்துவிட சக்திக்கு நிம்மதியானது.
தான் பயப்படும் அளவிற்கு விதுரனிடம் எதுவும் மனதில் இல்லை என நினைத்துக்கொண்டான்.
——————————————————–
ரோஜா திருப்பூர் வந்து இதோ இன்னும் சில நாட்களில் திருமணம் என்று வந்து நிற்க வந்து ஒரு வாரம் நல்ல காய்ச்சலில் தான் இருந்தாள் ரோஜா. கால் காயம் வேறு இப்பொழுது நன்றாக ஆறிவிட்டிருந்தது.
வந்து பார்த்து சென்ற சொந்தங்கள் அனைவரும் கல்யாண காய்ச்சல் என்று சொல்லி சென்றனர். கண் திருஷ்டி என அதற்கு ஆளுக்கொரு யோசனை சொல்ல சொல்ல எரிச்சலாய் இருந்தது ரோஜாவிற்கு.
போதாததிற்கு நாட்கள் நெருங்க நெருங்க ஒருவித இம்சை மனதில் முணுமுணுவென்னும் வலியை கொடுத்துக்கொண்டே இருந்தது.
காதலித்தால் சேர்ந்தே ஆகவேண்டுமா? உலகத்தில் எத்தனையோ காதல் தோல்வி, அதில் தன்னுடையதும் ஒன்று என மனதை தேற்றி இருந்தவளுக்கு திருமண நாள் நெருங்க அப்படி எல்லாம் இல்லை என்று காட்டியது அந்த காதல்.
ஹரிஷ் வேறு ஊருக்கு வந்த பொழுதில் விசாரித்ததோடு சரி. அவ்வப்போது பேசினாலும் இரண்டொரு வார்த்தையுடன் நிறுத்திக்கொள்வான். பெரும் நிம்மதி தான் ரோஜாவிற்கு. ஆனால் தலைவலியாய் இருந்தது தன் அக்கா பிரஷாந்தி.
இதில் பிரஷாந்தி வேறு தன்னுடைய இருப்பை அங்கிருந்த அனைவருக்கும் உணர்த்திக்கொண்டே தான் இருந்தாள் ஏதாவது ஒரு வகையில். அதுவேறு நாள் செல்ல செல்ல கோபத்தை உண்டாக்கியது ரோஜாவிற்கு.
ஆனாலும் மௌனமாய் கடந்து விடத்தான் நினைத்தாள். ஏதாவது பேசி அதற்கு ஒரு பிரச்சனையை பிரஷாந்தி கூட்ட நினைக்கவே அலுப்பாய் இருந்தது.
“ரோஜா பெண்ணழைப்புக்கு இந்த புடவை மேட்சா இருக்கும். இந்த ப்ளவுஸ் டிஸைன் கூட நம்ம பெரிய பாப்பா தான் செலெக்ட் பண்ணினா. இதை பார்த்தியா அதுக்கு தோதா ஜ்வேல் செட்…” என்று வளர்மதி வந்து காண்பிக்க பொறுமையுடன் அமர்ந்திருந்தவளுக்கு அதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியாமல்,
“ஏன் மாம்? இப்படி அவ சொன்னா, அவ சொன்னான்னே நீங்க அவளுக்கு புடிச்ச மாதிரியே பன்றீங்க? கல்யாண பொண்ணு நான் தானே? கல்யாணம் எனக்கு தானே?…” என கேட்க,
“என்ன ரோஜா இது? அவ நீன்னு பிரிச்சு பேசற? அவ செலெக்ஷன் எப்பவும் பெஸ்ட்டா இருக்கும். அதான் எல்லாமே அவ சாய்ஸ்ல விட்டேன். உனக்கு எல்லாத்திலையும் விளையாட்டுத்தனம். என்ன சரியா சூஸ் பண்ண முடியும் உன்னால?…” என்று வழக்கம் போலவே மட்டம் தட்டி பேசிவிட பொங்கிவிட்டாள் ரோஜா.
“அப்போ எதுக்கு எனக்கு கல்யாணம்? விளையாட்டுத்தனமா இருந்தா அப்படியே விடுங்க. சும்மா சும்மா உனக்கு என்ன தெரியும்னு கேட்டுட்டே இருக்கீங்க? எதுவும் தெரியாத பொண்ணுக்கு தான் கல்யாணம் செய்வாங்களா?…” என கத்த சத்தம் கேட்டு உள்ளே வந்தார் சேகரன்.
ஒரு பக்கம் பிரஷாந்தி கண்ணை கசக்கிக்கொண்டு நிற்க மறுபக்கம் மனைவியும் சின்ன மகளும் கோபமாய் முறைத்துக்கொண்டு இருந்தனர்.
“நானா பிரச்சனை பன்றேன்?…” என குரலை உயர்த்தாமல் ஆனால் அழுத்தமாய் கேட்க,
“பின்ன நீ பன்றது முட்டாள்த்தனம், உன்னை இப்படி விட்டு விட்டுத்தான் இந்த அளவுக்கு மாறிட்ட நீ. அவ உன் அக்கா அவ அப்படித்தான் செய்வா. நீ சின்னவ அவளுக்காக ஏத்துக்க மாட்டியா இதை?…” என்று வளர்மதி மேலும் ரோஜாவை பேச வைக்க,
“அவ செலெக்ட் பண்ணின மாப்பிள்ளை, அவ செலெக்ட் பண்ணின சேரி, ஜ்வெல்ஸ், அவ செலெக்ட் பண்ணின வெடிங் தீம், அவ செலெக்ட் பண்ணின வெரைட்டி ஆஃப் டிஷஸ் இப்படியே அவளுக்கு புடிச்சதா என் கல்யாணத்துக்கு செய்யனும்னா பேசாம அவளுக்கே மாப்பிள்ளையை கட்டியும் வச்சிருங்க…” என கோபத்தில ரோஜா சொல்லிவிட்டிருக்க ஆத்திரத்தில் வளர்மதி அடித்திருந்தார் அவளை.
ரோஜா ஒன்றும் வேண்டுமென்று கேட்கவில்லை. வெறுமனே இருக்கும் புத்தியில் சைத்தான் புகுந்ததை போல ரோஜாவிற்கு எந்த வேலையும் வைக்காமல் வெறுமனே பொம்மை போல வைத்திருக்க அவளின் புத்தி, மனது இரண்டையும் விதுரனை சுற்றிக்கொண்டு இருக்க மறக்க முயல்பவளால் முடியாமல் போனது.
எதிலாவது தன்னை ஈடுபடுத்தவிட்டிருந்தால் அதை விட்டு வெளியே வந்திருப்பாளோ என்னவோ என்கிற வேகத்தில் தான் வார்த்தையை விட்டுவிட்டாள் ரோஜா.
முதல் முறை அடி என்று ஒன்று வாங்குகிறாள். சேகரனும் சரி, வளர்மதியும் சரி பிள்ளைகளை கண்டித்து வளர்த்தாலும் அவர்கள் மேல் கை வைத்ததில்லை. அதிகபட்சம் சத்தமாய் மிரட்டலுடன் பேசுவார்களே தவிர்த்து அடித்ததில்லை.
இன்று ரோஜாவை அடித்துவிட அதில் பிரஷாந்தி சற்று பின்வாங்கி நின்றாள். அவளுக்கும் இது அதிர்ச்சி தான்.
“திமிராடி உனக்கு? என்ன பேச்சு பேசற நீ?…” என்று மேலும் இரண்டு அறை வைக்க வலிக்காமல் அடித்தாலும் தாய் அடித்து விட்டது வலித்தது ரோஜாவிற்கு.
“வளர்…” என்று சத்தமிட்ட சேகரன் மனைவியை கண்டனப்பார்வை பார்க்க,
“அவ பேசறத கேட்டீங்க தானே? இத மாப்பிள்ளை கேட்டிருந்தா என்ன நினைப்பார் நம்ம பொண்ணை பத்தி. அவளோட வாழ்க்கை என்னாகறது?…” என வளர்மதி கவலைப்பட்டது ப்ரஷாந்தியை பற்றியே.
அதில் ரோஜாவுக்கு கண்ணீர் வர பார்க்க தன் அக்காவை அழுத்தம் மிகுந்த பார்வையுடன் எதிர்கொண்டவள் அழுகையை அடக்கினாள்.
“இதுக்குத்தான் நான் எதுலையும் தலையிடமாட்டேன்னு சொன்னேன். ஒரு மூணாம் மனுஷிய மாதிரி இருந்து என் தங்கச்சி கல்யாணத்தை பார்த்துட்டு போய்டறேன். என்ன ஒன்னு, என் வீட்டுக்காரருக்கு நான் ஏன் இப்டி பட்டும் படாத மாதிரி கல்யாணத்துல இருக்கேன்னு தெரிஞ்சா தான் என்ன சொல்வாரோன்னு பயமா இருக்கு…” என அவர்களை உண்மைக்கும் அப்போது மிரட்டுவதை போல தான் பேசினாள்.
“பார்த்தீங்களா நம்ம பொண்ணு என்ன சொல்றான்னு. இவளுக்காக தான நம்ம பொண்ணு அவ்வளவு தூரத்துல இருந்து புள்ளையோட வந்திருக்கா. இவளானா என்ன பேச்சு பேசிட்டா…” என வளர்மதி வார்த்தைக்கு வார்த்தை ப்ரஷாந்தியை நம் பெண் என்று சொல்ல வெறுமையுடன் அதனை பார்த்தபடி சலனமின்றி நின்றாள் ரோஜா.
“இத்தனை பேசறோமே நாம, அவ என்னன்னா கொஞ்சம் கூட வருத்தமில்லாம எவ்வளோ தெனாவெட்டா நிக்கிறா பாருங்க…” என்றும் சொல்ல தாயை பார்த்தாள் ரோஜா.
“அவ்வளவு தானே, இதுதானே வேண்டும் உங்களுக்கு” என்னும் விதமாய் தன் உடல்மொழியில் தானாய் ஒரு தெனாவெட்டை கொண்டு வந்தவள் பார்வையில் திமிருடன் நின்று விட அவளை கவனித்துக்கொண்டே இருந்த சேகரனுக்கு ரோஜாவின் மனநிலை அப்பட்டமாய் பிடிபட்டது.
பிரஷாந்தியோ அசராமல் திமிருடன் நிற்கும் தங்கையை பார்த்து கடுகடுத்த மனதுடன் வெளியில் பாவமாய் கண்ணீருடன் பார்த்தாள்.
“வளர். நீ போ நான் பேசிக்கறேன்…” என்றவர்,
“பாப்பா…” என அழைத்து ரோஜாவை தன் அருகே அமர்த்த அதை பார்த்த பிரஷாந்தி வேகமாய் மறுபுறம் வந்து அமர்ந்துகொண்டாள்.
“அப்பா, நான் வேணா திரும்ப ஊருக்கே கிளம்பிடவா… என தந்தையின் கவனத்தை தன் மீது திருப்பும் பொருட்டு அழ,
“வளர் புள்ளையை உள்ள கூட்டிட்டு போய் சமாதானப்படுத்து…” என்று சொன்னார்.
பிரஷாந்திக்கோ எங்கே தன்னை அனுப்பிவிட்டு இவர்கள் இங்கே என்ன பேசுவார்களோ? என்ற எண்ணமே அவளை அங்கிருந்து நகர விடவில்லை.
என்ன பேசுகிறார்கள் என கேட்கவேண்டுமே என்ற உந்துதலில்,
“இல்லை அப்பா, நான் இங்கயே இருக்கேன். உங்களுக்காக நா அழலை… என்று சொல்லவும் அவளை பார்த்து புன்னகைத்த சேகரன்,
“பார்த்தியா பாப்பா. அக்கா உனக்காக எத்தனை அட்ஜட்ஸ் பன்றான்னு. உன்னோட எதிர்காலம் நல்லா இருக்கனும்னு அவ எவ்வளோ பொறுப்பா இருக்கான்னு நீ புரிஞ்சுக்கனும் பாப்பா. பாரு இப்ப கூட உனக்கு புடிக்கலைனா போய்டறேன்னு சொல்றா. இதுல இருந்தே அவ மனசை பாரு பாப்பா…” என வார்த்தைக்கு வார்த்தை பெரியமகள் பற்றி பேச பேச,
“அவ இஷ்டம் போல செய்யட்டும் போதுமா?…” என வெறுமையான குரலில் சொல்லிய ரோஜா எழுந்து வெளியே சென்றுவிட சேகரனுக்குமே பிரஷாந்தி சற்று அதிகப்படியாக நடந்து கொள்கிறாளோ என்று தோன்றியது. கேட்டால் அதற்கும் அழுவாளே அதனால் அமைதியானார்.
“என்னங்க இந்த பொண்ணு இப்படி இருக்கு?…” என வளர்மதி கேட்க,
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா வளர், கல்யாணம் ஆக போற பொண்ணை அடிக்கிற? கன்னத்துல காயம், அடிச்ச தடம் தெரிஞ்சா கேட்கறவங்களுக்கு யார் பதில் சொல்றது?…” என சேகரன் எகிற அமைதியானார் வளர்மதி.
நடந்த களேபரத்தின் கோபம் தணியும் முன்னர் ஹரிஷிடமிருந்து அழைப்பு வர எடுத்து பேச ஆரம்பித்தார்.
“சொல்லுங்க மாப்பிள்ளை…” என வரவழைக்கப்பட்ட உற்சாகத்துடன் பேச அவனோ ஒரு நொடி மௌனத்திற்கு பிறகு,
“ஒண்ணுமில்லை மாமா, ரோஜாவுக்கு கால் பண்ணேன். ரிங் போய்ட்டே இருந்தது. அதான் உங்களுக்கு கூப்பிட்டேன்…” என்றவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தொனித்ததை அனுபவசாலியான சேகரன் கண்டுகொண்டார்.
“மாப்பிள்ளைக்கு எதுவும் வருத்தமோ?…” என கேட்க,
“இல்லை, இல்லையே என்ன வருத்தம்?…” என சுதாரிப்பாய் கேட்க,
“இல்லை உங்க குரலே ஒரு மாதிரி இருந்தது. அதான்…” என்றான் சேகரனும் பிடிகொடுக்காமல்,
“இங்க வேற ஒரு டென்ஷன் மாமா, அதான்…” என்றான்.
“சரி சரி, நான் பாப்பாவை பேச சொல்றேன்…” என்று சொல்லவும் டக்கென தொடர்பை துண்டித்துவிட எழுந்தவர் பார்வையில் அங்கே டீப்பாயில் இருந்த ரோஜாவின் மொபைல் கண்ணில் பட்டது.
யோசனையுடன் அந்த எண்ணிற்கு அழைப்பை விடுக்க நன்றாக சத்தத்துடன் அது இசைந்து முடிக்க அதில் ஒரு மிஸ்ட் கால் என்று இவரின் எண் மட்டும் தெரிய யோசனை பலமடங்கானது சேகரனுக்கு.
நல்லவேளையாய் இங்கே வரும் முன்பே ரிங்க்டோன், குடும்பத்தினரின் பெயர்கள் என அனைத்தையும் மாற்றியிருந்தாள் ரோஜா.
“வளர், ரோஜாவை கூப்பிடு…” என்றவர் தன் மகனுக்கு அழைத்தார்.
“பிரபு, வீட்டுக்கு வா…” என அழைக்க அவனோ நிர்மலுடன் வெளியில் இருந்தான்.
“சொல்லுங்கப்பா உடனே வரனுமா?…” என கேட்க,
“ஆமா, வான்னா உடனே தான?…” என்று சொல்லவும் சரி என்று வைத்து கிளம்பி விட்டான்.
பிரபு நிர்மலின் பெரியம்மா பெண் திவ்யாவை தான் மணம் முடித்திருக்கிறான். ஒரே நாளில் நடந்த திருமணம், அண்ணனுக்கும் தங்கைக்கும். திவ்யா இவர்களின் அடாவடி எதிலும் ஒத்துப்போகாத ரகம்.
நிர்மலின் குணம் அப்படியே இல்லை என்றாலும் கொஞ்சம் அவனை மாதிரி தான். பிரபுவிற்கு பிடித்திருந்ததால் இருவருக்கும் எந்த முட்டலும், மோதலுமின்றி வாழ்க்கை சுமூகமாக செல்கிறது.
வளர்மதி ரோஜாவை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார். ஏன் எதற்கென கேட்காமல் வந்தவள் ஒன்றும் பேசாமல் நிற்க,
“மாப்பிள்ளை கூட பேசற தான பாப்பா?…” என்றதும் புரியாமல் பார்க்க,
“மாப்பிள்ளை பேசினாரா?…” என அதே கேள்வியை மாற்றி கேட்டார்.
“ஹ்ம்ம் ரெண்டு நாள் இருக்கும்…” என்றதும் யோசனையானவர்,
“இப்ப கால் பண்ணினார், பேசிடு…” என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
எதற்கு திடீரென இப்ப சொல்லிவிட்டு செல்கிறான் என நினைத்தவள் தனது மொபைலை எடுக்க அதில் தந்தையின் மிஸ்ட்கால் தெரிய,
“கோட்டை சாமி தலைகீழா தான் குதிப்பாரு. என்ன ஏதுன்னு எதுவும் சொல்லிடமாட்டாரு” என கடுப்புடன் அதை பார்த்தவள் ஹரிஷுக்கு அழைத்தாள்.
அவன் பிசியாக இருக்கிறேன் என்னும் குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு அவளின் அழைப்பை துண்டித்துவிட எரிச்சல் மூண்டது ரோஜாவிற்கு.
“ஆளாளுக்கு நல்லா வச்சு செய்யறீங்கடா…” என கடுப்பானவள் அவனின் எண்ணை ப்ளாக் லிஸ்ட்டில் போட்டுவிட்டாள்.
“உன் மெசேஜும், வேணாம், உன்னோட பேசவும் வேணாம்” என சொல்லிக்கொண்டு.
ரோஜாவின் திருமணத்திற்கு முதல்நாளே ஸ்ரீ, சங்கவி, விலாசினி என தன் தோழிகள் வந்துவிட அவளுடைய கல்லூரி தோழிகளும் சிலர் வந்துவிட்டிருந்தனர்.
விலாசினி ரோஜாவின் திருமணத்திற்கு முன்பே வெளிநாடு செல்ல வேண்டியது. இதற்காய் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டிருந்தாள் தன் அலுவலகத்தில்.
இன்னும் சிலர் திருமணத்தன்று வருவதாய் சொல்லிவிட ரோஜாவின் வீடே அத்தனை கொண்டாட்டமாய் இருந்தது.
போதாததிற்கு பிரஷாந்தி வேறு தான் தான் எல்லாம், தன்னால் தான் இந்த திருமணம் என்பதை போல வலம் வந்து கொண்டிருந்தாள்.
விடிந்தால் திருமணம் பெண்ணழைப்பு அத்தனை சிறப்பாக கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது.
திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் வழியில் அந்த மண்டபம் இருக்க மண்டபத்தை சுற்றிலும் அத்தனை ஆடம்பரமாய் அலங்காரத்துடன் அழகாய் இருந்தது.
இரவு விளக்குகள் வண்ண வண்ண நட்சத்திரங்களாய் மின்ன பார்ப்பவரின் கண்களை கவர்ந்து வியந்து பார்க்க செய்துகொண்டிருந்தது.
————————————————————-
கோயம்புத்தூர் ஏர்போர்ட் அருகில் சென்றுகொண்டிருந்த காரில் சக்தி மிகுந்த டென்ஷனுடன் அமர்ந்திருக்க அவனின் டென்ஷனுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை போல விதுரன் நிர்மலமான முகத்துடன் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
எப்படித்தான் இவனால இப்படி இருக்க முடியுதோ? ஒரு மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்து முடிந்து விட்டது? நினைக்க மூச்சு முட்டியது.
அதிலும் கண்முன்னே கயல்விழி, இன்றைய விதுரனின் நிச்சயதார்த்தம் என கண்முன் தோன்ற பயத்துடன் கண்ணை மூடினான்.
நிச்சயம் இதனை சும்மா விடமாட்டார் கயல்விழி. அதிலும் தன்னிடம் அத்தனை உறுதியாக கேட்டு தெரிந்த பின்னர் தான் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றது.
அன்று மாலை நிச்சயதார்த்தத்திற்கென ஈரோடு சென்று கொண்டிருந்தவர்கள். அதற்கு செல்லாமலே பாதியில் காரை திருப்பிக்கொண்டு இப்பொழுது சென்னை திரும்பிக்கொண்டு இருக்கின்றனர்.
ஏர்போர்ட்டில் கார் நின்றதும் விலாசினி இறங்கிக்கொண்டாள். அவளின் பேக் டிக்கியில் இருக்க அதை ட்ரைவர் வந்து எடுத்து கொடுத்ததும் வாங்கியவள் மெதுவாய் கார் கதவை பூட்டிவிட்டு விதுரனை பார்த்தாள்.
“தேங்க் யூ விலாசினி. உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லையே?…” என விதுரன் கேட்க,
“நத்திங் ஸார், உண்மையை சொல்ல போனா எனக்கு இதுல சந்தோஷம் தான். ரோஜாவை பார்த்துக்கோங்க…” என்றவள்,
“நான் சென்னை போய்ட்டு உங்களுக்கு கால் பன்றேன்…” என்றவள் விடைபெற்று ஏர்போர்ட் உள்ளே சென்றுவிட,
“சக்தி போகலாம்…” என விதுரன் சொல்லவும் கார் கிளம்பியது.
சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த காரில் சக்தி தனது மொபைலை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவன்,
“விது, ஆன்ட்டி கால்…”
“யார் ஆன்ட்டி?…” என கேட்டான் கண்களை திறவாமல்.
“உன்னை தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ, உங்கம்மா கால் பன்றாங்கன்னு சொன்னேன்…” என அவனை பின்னால் திரும்பி பார்த்து சொல்ல,
“மொபைலை தாயேன்…” என்று வாங்க அவன் பேசுவான் என்று பார்த்தால் மொபைலை அணைத்துவிட்டு காரின் பின்னால் போட்டுவிட்டான்.
“விது…” என சக்தி பதற,
“சென்னை போனதும் உன் மொபைலை ஆன் பண்ணினா போதும். இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்…”
“என்ன விளையாடறியா? அங்க எங்கேஜ்மென்ட்க்கு உன்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க விது. நீயான இங்க…” என்றவனின் குரல் சற்று உயர தன் தோளில் உறங்கி கொண்டிருந்த ரோஜாவின் உறக்கம் லேசாய் கலைவதை போல தெரிய,
“ஷ்ஷ், சக்தி, ஏன் வாய்ஸ் ரைஸ் பன்ற? மெதுவா பேசு…” என்று அதட்டியவன்,
“எங்க வந்திட்டு இருக்கோம்ன்னு தெரியத்தான் உனக்கு கால் பன்றாங்க. எடுக்கலைனா ஆன் தி வேன்னு நினைச்சுப்பாங்க. மெதுவா சொல்லிக்கலாம்…”
“மெதுவானா?…”
“அடடா ஏன்டா படுத்துற? ஈவ்னிங் சொல்லிக்கலாம். இப்போ வேணாம்…” என்று திட்டிவிட்ட விதுரன் கைகள் இன்னும் அழுத்தமாய் ரோஜாவின் கையை சேர்த்து பின்னிக்கொண்டது.
இத்தனை நாட்கள் இல்லாத ஏதோ ஒரு அமைதி மனதினுள். அலைப்புறுதல்கள் நீங்க வீடு சேர்ந்த உணர்வு. ஏன் என்றே வரையறுக்க முடியாத நிம்மதி அவனில் குடிகொண்டிருந்தது.
அதை இழக்க விரும்பாதவன் போல ரோஜாவை திரும்பி பார்த்தான். மணப்பெண்ணின் சர்வ அலங்காரத்துடன் தான் அவளுக்கு அணிவித்த திருமாங்கல்யத்துடன் அவளை பார்க்க பார்க்க இது எப்படி சாத்தியமானது என்பது விளங்கவே இல்லை.
ஆனால் அது பிடித்து தான் இருந்தது. தானா ரோஜாவை திருமணம் செய்து கொண்டது? இப்பொழுதும் நம்பமுடியாமல் அவளையே பார்த்தபடி இருக்க லேசாய் அசைந்தவளை அப்படியே தன் மடியில் கிடத்தியவன் ஓரத்தில் நகர்ந்து அமர்ந்து நன்றாய் உறங்க வகை செய்தான்.
இப்பொழுது அவளின் முகம் நன்றாய் தெரிந்தது. அழுததில் கண்களில் பூசியிருந்த மை கண்ணீருடன் கரைந்து கன்னத்தில் இறங்கி இருந்தது. அத்துடன் அவளின் கன்னத்தின் ஐந்து விரல்கள் பதிந்து ரத்தம் கட்டிய தடம் தெரிய மெதுவாய் அதை வருடினான்.
“ரெடிகுலஸ், உன்னை போய் அடிக்க எப்படி மனசு வந்துச்சு அவங்களுக்கு?” என அவனின் மனம் ஆத்திரமாய் நினைத்து பார்த்தது.
ஓய்ந்து போன ஒரு தோற்றம் அவளிடத்தில். உறக்கத்திலும் முகத்தில் அத்தனை வேதனை.
“இனி உன்னை அழ விடமாட்டேன் லிட்டில் டெவில்…” என்றவனின் கைகள் அவளை இதமாய் அணைத்துக்கொள்ள அவனின் மனமோ,
“சேகரன் நீ இன்னும் திருந்தவே இல்ல. உன்னை நான் கவனிக்கிற விதத்துல கவனிச்சுக்கறேன்” என உள்ளுக்குள் வஞ்சம் கொண்டான் மாமனார் மீது.
அவனின் செயல்களை பார்த்த சக்திக்கு கவலையாய் இருந்தது விதுரனை பார்த்து. இப்படி சிக்கலாக்கி கொண்டானே என நினைத்து.