பதினொன்றாம் மாதம் முடிவில் இருக்கும் சஞ்ஜய்க்கு தந்தையோடு மார்கெட் செல்வதென்றால் அத்தனை சந்தோசம். தினமும் காலை ஏழு மணிக்கு தந்தையும் மகனும் கிளம்பினார்கள் என்றால் எட்டரை, அல்லது ஒன்பது மணிபோல்தான் வீடு வருவார்கள்.
மார்கெட் செல்லும்போது வழக்கமாக லோயர்தான் போடுவான் என்பதால், தற்போது தேவா லோயர் டீசர்ட்டோடு கிளம்பவும்.. “ப்பா…” என அழ ஆரம்பித்தான் சஞ்சய்.
“ம்மா..” என கற்பகத்தை துணைக்கழைக்க, அறையிலிருந்து வெளியே வந்த கற்பகத்தை கண்டதும்.. “ம்மா.. ப்பா..” என அழுதுகொண்டே தானும் புகார் வாசித்தான் குழந்தை.
“அடிச்சமாதிரி எப்படி அழறான் பாரும்மா..” என குழந்தையை தூக்கி. “அப்பா ஊசி போட போறேன்டா.. நீ வந்தா உனக்கும் ஊசி போட்டுடுவாங்க.” என பயமுறுத்தியபடி சமாதனம் செய்ய,
குழந்தை அழுகையை நிறுத்தினான். ஆனால் தேவேஷைவிட்டு கீழிறங்கவில்லை.. மகனின் உடைகண்டு.. “ஏன் தேவா.. இன்னைக்கு கம்பெனிக்கு போகலையா?” என்றார் கற்பகம்.
“இல்லம்மா, கொஞ்சம் வெளில போகனும்.. இவன் விடமாட்டுக்கிறான்.” என மகனின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“இந்த டிரெஸ்ல போனா விடமாட்டான், நீ போய் கம்பெனிக்கு கிளம்புறதைபோல ரெடியாகி வா.” என்றார் கற்பகம்.
“ம்மா.. அவனைப் பார்க்க இதுவே போதும்.” என இவன் சலிக்க,
“அவ்வளோ சலிப்பா யாரைப் பார்க்க போற தேவா? உனக்கு பிடிக்கலனா ஒதுக்கிருவியே..” என மகனிடம் கேட்டுக்கொண்டே பேரனிடம்.. “சஞ்சய் பட்டு.. ஆயாகிட்ட வா.” என பேரனை கொஞ்சலோடு அழைக்க.. மறுப்பாக தலையாட்டி கற்பகத்திடம் போக மறுத்தான் குழந்தை.
“குழந்தையை அழவச்சிட்டு போனா போற காரியம் நடக்காது. உள்ளபோய் நல்லதா உடுத்திட்டு போ தேவா..” என கற்பகம் அதட்ட, தேவாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லையென்றாலும், அன்னை சொல்வதுபோல் உடை மாற்றவில்லையென்றால் இவனிடம் தப்புவது சிரமம் என தனதறைக்கு போனவன் மகனை கட்டில்மேல் அமரவைத்து உடைமாற்றவும் சஞ்சயின் முகம் வாடியது.
தந்தை சொன்னதை ஏற்றவன்.. தந்தையைப் போலவே தன் கண்களையும் பெரிதாக்கி..“ப்பா டுர்ர்ர்..” என்றான்
மகனின் புரிதலில் மயங்கியவன்.. “என் பட்டு..” என தூக்கி, “அப்பா சீக்கிரம் வந்துடுவேன், நீ சாப்பிட்டு தூங்கி எழுந்ததும் இன்னைக்கு நிறைய நேரம் பைக்ல போலாம்.” என்றான்.
“ப்பா..” என கைத்தட்டினான் சந்தோசமாக.
மகனுக்கு.. “உம்ம்ம்மா..” என அழுத்தமான முத்தம் வைத்து அறிவைப் பார்க்க கிளம்பினான்.
**** **** *****
முன்பெல்லாம் மங்கையைப் பற்றி தன்னிடம் பேசத்தயங்கும் அன்னை, கடந்த இரண்டு மாதமாக உங்கம்மா மாதிரியே நாக்கு ருசி தேடுதாடா? என குழந்தைக்கு ஊட்டும்போது பெருமையாக சொல்வதும்..
நீ பிறந்தப்ப உன்னை ஒரு நர்சுப்புள்ள குட்டிசாத்தானு சொன்னதுக்கு உங்கம்மா தண்ணி காட்டிட்டாளாம்.. பின்ன இருக்காதா? என்னதான் நாங்க வளர்த்துனாலும் உன் உடம்புல அவ ரத்தமும்தான ஓடுது.. என குழந்தையின் மீது மங்கைக்கிருக்கும் பாசத்தை விளக்குவதும்..
பைக்கில் தன்னோடு வர சஞ்சய் பிடிவாதம் செய்யும் போதெல்லாம்.. என் மகன் உன்னமாதிரி இருக்கும்போதே ரொம்ப சமத்தா இருப்பான்.. நீதான் இவ்வளோ சேட்டை பண்ற.. மங்கையும் குழந்தையில இப்படித்தான் அடங்காம இருந்திருப்பா.. என மங்கையைப் பற்றி தேவா காதுபடவே பேச ஆரம்பித்தார்.
அவளைப் பத்தி குழந்தைகிட்ட பேசாதே என தேவா திட்டினால்.. எப்படியானாலும் மங்கைதான் இவன் அம்மாங்கிறது மாறாதில்ல.. இப்போ உண்மையை சொன்னதுல என்னாகிடுச்சி.. என கற்பகமும் திட்டுவார்.
அனைத்தும் நினைத்தபடி பயணித்தவன்.. குழந்தையின் அம்மா இவளென்பதாலும், அவளே திருமணத்திற்கு கேட்டதாலும்தான் அம்மா நம்மளை டார்ச்சர் பண்றாங்க.. இனி அம்மாவை திருத்த முடியாது..
இவன்கிட்ட பேசியாவது அவ பேச்சுக்கு ஒரு முடிவு கட்டிடனும் என உறுதியோடு ரெஸ்டாரண்ட் வந்து சேர்ந்தான் தேவேஷ்.
அறிவுக்கரசு.. “ஹாய்..” என இயல்பாய் சொல்ல..
“ஹம்..” என தலையசைத்து அருகிலிருக்கும் இருக்கையில் அமர்ந்தான் தேவேஷ்.
“என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என்றான் அறிவு.
எதுவும் வேணாம் என்பதாய் தலையசைத்தவன்.. “எக் டொனேட் செய்த ஒரே காரணத்துக்காக கல்யாணம் செய்துக்க நினைக்கிறது தப்புனு உங்க தங்கைக்கு நீங்க சொல்லலாமில்ல?” என நேரே விசயத்திற்கு வந்தான் தேவேஷ்.
“மங்கை எக் டொனேட் செய்தது உங்க ஒய்ஃப்க்காக, அவங்க இருந்திருந்தா மங்கை இப்படி யோசிச்சிருக்கவேமாட்டா..” எனும்போதே..
தேவேஷ்.. “ஷப்ப்பா..” என போதும் என்பதாய் கடுப்பாக கையை உயர்த்தியவன்.. “எங்கம்மா பேச்சு கேட்டு நான் இன்னொரு கல்யாணம் செய்வேன், வரவ குழந்தையை கொடுமைபடுத்துவா.. குழந்தைமேல என் தங்கைக்கு உரிமையிருக்கு.. எக்ஸட்ரா.. இதைத்தான சொல்லவரிங்க?” என்றான் கடுப்பாக.
சில நொடி திகைத்தவன்.. “ஆமாம், நீங்க விரும்பறிங்களே இல்லையோ? ஆனா உங்களுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கிறதுல ஆன்ட்டி ரொம்ப தீவிரமா இருக்கிறது உண்மைதானே? இந்த ரீசன்க்காகத்தான் மங்கை உங்களை கல்யாணம் செய்துக்க நினைக்கிறா. அது தப்பும் இல்லையே..” என்றான் அறிவுக்கரசு.
“இன்னொரு கல்யாணம் செய்துக்கமாட்டேனு உங்க தங்கைகிட்ட தெளிவா சொல்லிட்டேன்.. அவளுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணனும்ன்ற அவசியம் எனக்கில்லனாலும், நல்ல எண்ணத்தோட டொனேட் செய்திருக்காளேன்ற ஒரே காரணத்துக்காகத்தான் இத்தனை பொறுமையா உங்கவரைக்கும் பேசிட்டிருக்கேன்..” என உள்ளடக்கிய கோபத்தோடு சொன்னவன்..
“இரண்டு வருஷம் காதல், அஞ்சு வருஷம் கல்யாண வாழ்க்கைனு ஏழு வருசம் ஷர்மிளாவோட உயிருக்குயிரா வாழ்ந்தவன் நான். அவ இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
நான் கல்யாணம் செய்துக்காத வரைக்கும் குழந்தை என்கிட்டயிருந்து யாராலும் பிரிக்க முடியாது.
அதனால ஷர்மி இல்லாத பட்சத்துல, குழந்தைமேல உரிமையிருக்குனு லீகல் ஆக்ஷன் எடுக்கலாம்னு கோர்ட்டுக்கே போனாலும், அங்கையும் இன்னொரு கல்யாணம் செய்துக்கமாட்டேன்..
ஒருவேளை கல்யாணம் செய்தேன்னா அப்போ குழந்தையை கொடுத்துடுறேன்.. அதுவரை என்னோட இருக்கட்டும்னு இந்த பிரச்சனையை ஸிம்ப்பிலா முடிச்சிக்குவேன்.
ஆனா இப்படி ஒரு கேஸ்.. இன்னும் இந்தியாவுல நடந்ததானு எனக்கு சரியா தெரியல, ஒருவேளை என் குழந்தை கேஸ்தான் முதல் கேஸா இருந்ததுனா.. நியூஸ்பேப்பர், டி.வி சேனல்லனு ரொம்ப பரபரப்பா இந்த நியூஸ்தான் ஓடும்.. உங்க தங்கைக்கு ஒரு குழந்தையிருக்குனு வெட்ட வெளிச்சமாகிடும்.!” என எச்சரிக்கும் தோரணையில் சொல்லி..
“இப்படி குழந்தையிருக்குற பொண்ணை கட்டிக்க யாராயிருந்தாலும் தயங்குவாங்க.. நல்ல எண்ணத்தோட உதவி செய்தவளோட வாழ்க்கை, அவ செய்த உதவியாலயே வீணாகிடக்கூடாதுனு பார்க்கிறேன்.
அதனால, கருமுட்டை தானம் செய்ததுக்காக குழந்தைமேல உரிமை கொண்டாடுறது தப்புனும்.. உங்க தங்கையைப் பொறுத்தவரை அது சரியாவே இருந்தாலும், குழந்தைக்காக தேவாவை கல்யாணம் செய்துகிட்டு கிடைக்கிற ஒரு வாழ்க்கையையும் கிரிட்டிக்கல் ஆக்கிக்க வேணாம்னும் உங்க தங்கைக்கு நீங்க புரிய வைய்ங்க.. அந்த புரியாத பைத்தியத்துக்காக பேச வந்த நீங்களும் புரிஞ்சிக்கோங்க.” என்றான் முடிவாக.
அறிவுக்கரசு தேவாவையே பார்த்திருக்க.. “நான் கிளம்பறேன்.” என கிளம்புவதற்காக எழுந்தவனை.. “இரண்டு பேரும்தான பேச வந்தோம்? நீங்க பேசிட்டிங்க.. நான் பேசனும்ல? ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க.” என்றான் அறிவுக்கரசு.
தேவேஷ்.. “என் முடிவைத்தான் சொல்லிட்டனே.. இன்னும் என்ன பேசவேண்டியிருக்கு?” என்ற முறைப்போடும் முனுமுனுப்போடும் அமர்ந்தான்.
தன் குடும்பத்தைப் பற்றி சுருக்கமாக சொன்னவன்.. “பிறந்ததுலயிருந்து செல்வ செழிப்போட வளர்ந்தவ, எங்கப்பாவோட இறப்புக்கு பின்ன, அவர் அரக்க குணம் தெரிந்ததும்.. எத்தனை குடும்பங்கள் நம்ம அப்பாவால பாதிக்கப்பட்டவங்களோனு அவர் செய்த தப்புக்கு இன்னைக்கு வரைக்கும் ரொம்ப ஃபீல் பண்ணுவா..
எங்ககிட்டயிருக்க சொத்தெல்லாம் பாவம் செய்து சம்பாதிச்சதுனு தெரிஞ்ச நாள்லயிருந்து அவர் பணத்துலயிருந்து ஒத்த ரூபா எடுத்துக்கிட்டதில்ல.
நல்லகாலம்.. எங்கப்பா இறக்கும்போது நான் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன்.. நீ பணம் கட்டுறதுனா படிக்கிறேன். இல்ல வேலைக்கு போறேனு அன்னைக்கு ஆரம்பிச்ச பிடிவாதம். இன்னைக்கு வரைக்கும் அதுல உறுதியாத்தான் இருக்கா..
எங்கப்பா செய்த பாவத்துக்கே இவ்வளோ கில்டியா ஃபீல் பண்றவ.. அவ குழந்தை விசயத்துல எப்படியிருப்பானு யோசிச்சு பாருங்க..” என வருத்தத்தோடு சொன்னவன்..
“ஆனாலும் என் தங்கைமேல உங்களுக்கு விருப்பமில்லங்கும்போது கல்யாணத்தைப் பத்தி எப்படி பேசறதுனு.. குழந்தையைப் பத்தி கவலைப்படாத, உன் குழந்தைன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அவனுக்கு ஒன்னுனா நான் விட்டுருவேனா?
நல்ல பையனா, உனக்கு பிடிச்சவனா நான் பார்க்குறேன்.. குழந்தையைப் பத்தின கவலையை என்கிட்ட விட்டுட்டு.. கல்யாணம் செய்துக்கோனு சொன்னேன்..
கல்யாணம் செய்து எனக்குனு ஒரு வாழ்க்கை வந்ததுக்கப்புறம்.. நாலஞ்சு வருசம் கழிச்சி தேவா கல்யாணம் செய்துகிட்டா, அந்த சூழல்ல என் குழந்தையை கொடுங்கனு எந்த உரிமையில நான் கேட்பேன்னு அழறா..” என வேதனையோடு சொன்னவன்..
“இனி இந்த சம்பளம் எனக்கு பத்தாது, என் மகனுக்காக இன்னும் நிறைய சம்பாதிக்கனும்னு, வேலைக்கும் போய்கிட்டு, எம்.ஆர்.பி எக்ஸாம்க்கும் படிச்சிட்டிருந்திருக்கா, போன வாரம் எக்ஸாம் எழுதி முடிச்சதும் எனக்கு கால் பண்ணி எக்ஸாம் நல்லா பண்ணியிருக்கேன், கண்டிப்பா எனக்கு வேலை கிடைக்கும்னு, எல்லாமும் குழந்தையோட எதிர்காலத்தை மனசுல வச்சே செய்யிறா..
தேவாவின் பார்வை அறிவின் கண்களை விட்டு, நேரெதிரே முறைத்திருக்க.. “நான் பேசுறதை கவனிச்சிங்களா?” என அறிவு குரல் உயர்த்தினான்.
சற்றுமுன் அறிவு தனக்காக கெஞ்சலாய் பேசுவதை தாள முடியாத மங்கைக்கு கண்ணீர் வரவும்.. “எதுக்குமா அழறிங்க? சாப்பிட்டு ரொம்ப நேரமாகியும் கிளம்பாம இருக்கிங்க? பர்ஸ் எடுத்துட்டு வரலையா?” என சர்வர் சந்தேகத்தோடு கேட்கவும்..
“இல்லயில்ல, அழல..” என கண்ணைத் துடைத்து.. “என் ஃப்ரண்ட் வரேன்னா.. அவளுக்காக வெய்ட் பண்ணினேன்.” என்று.. தான் சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்து சர்வரை அனுப்பி..
தனக்கு நேரெதிரே அமர்ந்திருக்கும் தேவா, தன் இருப்பை கண்டுகொண்டானா என மறைந்திருந்த சுவற்றிலிருந்து மங்கை எட்டிப்பார்க்க, தேவேஷ் மங்கையை முறைக்க.. தேவேஷ் பார்வை சென்ற திசையில் தன் பார்வையை செலுத்திய அறிவுக்கரசும் கோபத்தோடும், அதிர்வோடும் முறைத்தான் தங்கையை.
நல்லா மாட்டியாச்சு.. இனி இங்கயிருந்து யூஸ் இல்ல, என எழுந்தவள் அண்ணனருகே செல்ல.. “ஹாஸ்பிட்டலுக்கு போன்னு சொன்னதுக்கு சரின்னு சொல்லிட்டு இங்க எதுக்கு வந்த?” என்றான் கோபமாக.
“ம்.. சாப்பிட வந்தேன்.” என அண்ணனிடம் நக்கலாக சொன்னவள்.. “கல்யாணம் வேணுமா வேணாவானு மட்டும் கேக்குறதை விட்டுட்டு எதுக்கு அறிவு இவர்கிட்ட கெஞ்சிட்டு இருக்க? கல்யாணம் வேணாம்னா ஒரு பிரச்சனையும் இல்ல.. வா போலாம்.” என்றாள் கோபமாக.
“ப்ச்.. மங்கை நீ போ, நான் பேசிட்டு வரேன்.” என்றான் அறிவு.
“வேணாம் அறிவு.. நீ எப்படி கேட்டாலும் இவர் ஒத்துக்கப்போறதில்ல, வா போலாம்.” என்றாள்.
தங்கையின் பொறுமையற்ற பேச்சில் கோபம் வர.. “அப்போ நான் பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கனும்.. ஓ.கே வா.” என்றான் கட்டளையாக.
“அது முடியாது..” என திடமாய் மறுத்தவள்.. “அடுத்த மாசத்தோட ஷர்மிளாக்கா இறந்து ஒரு வருசம் ஆகப்போகுது.. இவங்க பொண்டாட்டிக்கு திதி கும்பிட்டதும், ஆன்ட்டி இவருக்கு கண்டிப்பா கல்யாணம் செய்து வைக்கிறேனு சொல்லியிருக்காங்க.
ஆன்ட்டியை ரொம்ப நாளைக்கு இவரால சமாளிக்க முடியாது. ஒரு வருசமோ இரண்டு வருசமோ.. இவர் கல்யாணம் முடிஞ்சதும் என் மகனை என்னோட லீகலா அழைச்சிப்பேன்..” என தேவாவை முறைத்தவாறே சவாலாக சொல்லி, “வா போலாம்.” என அண்ணனை அழைத்தாள் கோபமாக.
தன் திருமணம் குறித்து அன்னை நினைப்பது அனைத்தும் இவளிற்கு தெரிந்திருக்கிறதென்றால்? அந்தளவிற்கு அன்னையோடு நல்லுறவாக இருக்கிறாள்.. அந்த நம்பிக்கையில்தான் அன்னையும் குழந்தையிடம் இவளைப் பற்றி பேசுகிறார்..
சின்னப்பொண்ணாச்சேனு இவகிட்டயிருந்து டீசன்ட்டா விலகி வந்ததுதான் நாம செய்த பெரிய தப்பு என்று கோபமாய் நினைத்தவன்.. “என்னை கல்யாணம் செய்துகிட்டா குழந்தைக்கு அம்மான்ற தவிர வேறெதுவும் கிடைக்காது.. லைஃப்லாங்க்கு அதுமட்டும் போதுமா?” என்றான் கோபமாக.