மகளை தங்க கூண்டிற்குள் அடைத்துவிட்டோம் என மனதில் சுருக்கென்று தோன்ற அமைச்சரின் மனைவி தன் மகள் என்னும் பெருமிதம் எல்லாம் பின்னால் சென்றுவிட்டது வாசுகிக்கு.
ஏற்கனவே சிங்காரத்தை நினைத்து அச்சம், போதாததிற்கு இப்போது மகளின் பேச்சு வேறு. ரத்த அழுத்தம் கூடியது அதில்.
காலையில் அசோகனின் அறைக்குள் வரும் பொழுதே மகள் முகத்தில் அருளில்லை.
அழுகையை அடக்கிக்கொண்டு சாதாரணம் போல இருக்க முயன்றதை தாய் மனம் கண்டுகொண்டது.
மகளை அறியாதவரா? ஆனால் என்னவென்று தெரிந்துகொண்டு அவளிடம் புரியவைக்க நினைத்து தனியே பேச அழைத்து சென்ற நேரம் நிதானமில்லை பேசும்பொழுது.
“உட்காருங்கம்மா…” பிரனித்தா தாயின் கையை பிடித்து சொல்லவும் தெளிந்தவர்,
“இல்ல பசிக்கலை, நீங்க சாப்பிடுங்க. எனக்கு நேரமாகட்டும்…” என்றார் பொதுவாய் அனைவரையும் பார்த்து.
“இன்னைக்கு தான் ஒண்ணா சாப்பிட முடியும். நாளை நேரம் எப்படி இருக்குமோ? உட்காருங்க…” என்றான் ஆவுடையப்பன்.
வாசுகி நிற்பதை கண்டு மனோகரனும் அமரும்படி தலையசைக்க சரி என சொல்லி அமரும் முன்,
ஏற்கனவே சாப்பிடும் மனநிலையில் இல்லை வாசுகி. அதிலும் சிங்காரம் குடும்பத்தில் வருகின்றனர் என்றதும் உணவே இறங்கவில்லை.
இப்போது சிங்காரமுமா? அவரிடம் பேசவோ, பார்க்கவோ எதற்கும் விருப்பமில்லை.
போனில் சிங்காரம் பேசியவை தான் ஞாபகம் வந்து முன்னின்றது. ஒருவேளை அன்று ஆவுடையப்பன் வராமல் போயிருந்தால் தங்கள் நிலை?
ஒருகவள உணவு உள்ளே இறங்கவும் சட்டென புரையேற கண்ணில் நீர் வரும் வரை இருமிவிட்டார் வாசுகி.
“பார்த்து, மெதுவா…” என பிரனித்தா தலையை தட்டி கொடுத்து தண்ணீரை தர மௌனமாக அதனை பார்த்தபடி உணவை தனக்குள் அனுப்பினான்.
“போதும் பிரனி…” என்று வாசுகி சாப்பிடவே இல்லை.
“நீ அவங்களுக்கு ரூம்ல வச்சு குடு பிரனித்தா…” என ஆவுடையப்பன் சொல்லவும் அவனை ஆற்றமாட்டாமல் பார்த்தாள்.
அவன் குரல் அத்தனை மெதுவாய் அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக இருந்தது.
சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை புரிந்துகொள்ள முடியாமல் பார்த்தவள் தானும் சாப்பிடவில்லை.
“வாங்கம்மா…” என்று அழைத்து சென்றாள்.
என்னவோ விருந்தாடி அங்கே வந்திருப்பதை போலிருந்தது. அதுவும் கைகள், கால்கள் கட்டப்பட்டு ஒவ்வொன்றிக்கும் இயல்பை தொலைத்து அங்கே இருப்பதை போலொரு உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.
போதாததிற்கு வெளியே இன்னும் சில கோஷங்கள், பேச்சுக்கள், சத்தங்கள் என உள்ளே வரை கேட்டது.
வாசுகிக்கான உணவை அங்கே அனுப்பியவன் மனோகரனிடம் பேசிக்கொண்டிருந்தான் சாப்பிட்டு முடிக்கும் வரை.
மரியாதைநிமித்தம் அவருமே அவன் உண்டுமுடிக்கும் வரை ஏதோவென சாப்பிட்டு அமர்ந்திருந்தார்.
ஆவுடையப்பனுக்கு அழைப்பு வரவும் எடுத்து பார்த்து பேசியவன் பெருமூச்சுடன் கீழே வைத்தான்.
“கிளம்பிட்டாங்களாம். இன்னும் ஒன்றரை மணி நேரத்தில வந்திருவாங்க…” மனோகரனிடம் சொல்ல,
“அவங்களுக்கு உங்களை பார்க்கனுமாம். அதோட இன்னும் ஏன் இந்த திடீர் கல்யாணம்ன்னு அவங்க வீட்டு மனுஷங்களுக்கு சிங்காரம் சொல்லலை போல. என்ன நிலவரம்ன்னு தெரிஞ்சுக்க தான் வராங்க…”
“அதெப்படி எல்லாம் பண்ணிட்டு அவரால வர முடியுது? என்ன மனுஷனோ?…” என மனோகரன் சொல்ல,
“வரட்டும். பார்ப்போம்…” என்று சொல்லியவன்,
“நானே கூப்பிடறேன். நீங்க அத்தையை பாருங்க. வந்திடறேன்…” என சொல்லிவிட்டு முன்னே நடந்துவிட்டான் வீட்டு வாசலுக்கு.
மனோகரன் எழுந்து வாசுகி இருந்த அறைக்கு செல்ல அங்கே பிரனித்தா வம்படியாக தாயை சாப்பிட வைத்துக்கொண்டு இருந்தாள்.
“ம்மா, எனக்காக. ப்ளீஸ் சாப்பிடுங்களேன்…” பிரனித்தா கெஞ்ச அதை கண்டுகொள்ளாதவர் மனோகரன் வரவும்,
“எவ்வளோ நாள் இங்க இருக்க? எப்ப நாம கிளம்பறது? (Modafinil) என்னால இங்க சாதாரணமா இருக்க முடியலை…” என்றவர் திறந்திருந்த கதவை பார்த்துவிட்டு பதறி போய் எழுந்து சென்று பூட்டிவிட்டு வந்தமர்ந்தார்.
“வாசுகி…” மனோகரனுக்கு அந்த செய்கையில் மனைவியின் மனநிலை புரிந்து போனது.
“சொல்லுங்க…” என்றவர் அப்போது தான் மகளை கவனித்தார்.
‘ஐயோ’ என மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டார் மகளை எண்ணி. மனோகரனுக்கும் புரிய உருக்கத்துடன் அவளை பார்த்து நின்றார்.
“பிரனிம்மா நான் அந்த அர்த்ததுல சொல்லலை. மகளை கல்யாணம் செஞ்சு குடுத்து அங்கயே எப்படி இருக்க? அதான் கேட்டேன்…” வாசுகி சமாதானம் செய்ய ஒன்றும் சொல்லாமல் கையிலிருந்த உணவை தட்டில் போட்டுவிட்டு,
“நீங்க போனா என்னையும் கூட்டிட்டு போறீங்களா? நான் மட்டும் இங்க தனியா?…” என்றதும் பெற்றோர்களுக்கு பதட்டமானது.
“பிரனி என்ன பேசற?…” என மனோகரன் அதிர்ந்து பார்க்க,
“நீங்களும் இல்லாம நான் எப்படி? ம்மா நீங்க போறப்போ கூட்டிட்டு போய்டுங்க. ம்ஹூம் நானும் வந்திடறேன். வருவேன்…” சட்டென பிடிவாதம் தலைதூக்க அவள் சொல்ல சொல்ல,
“பிரனி…” என்று சமாளிக்க முடியாமல் அடித்துவிட்டார் மகளை.
மனதின் அழுத்தங்களுக்கு எல்லாம் வடிகாலாக மகளின் கன்னத்தை பதம் பார்த்திருக்க வாசுகி அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டார்.
“ஏன்டி புரிஞ்சுக்காம பேசற?…” என்று விசும்ப தாய் அடித்ததும் தான் தான் பிதற்றியதே தெளிவானது பிரனித்தாவிற்கு.
நிச்சயம் தன்னுணர்வில் அதனை சொல்லவில்லை. பெற்றோர்கள் கிளம்புகிறேன் என்றதும் எல்லாம் மறந்து தன்னை தனியே விட்டு சென்றுவிடுவார்களோ என்றொரு பயத்தில் விடாமல் பேசிவிட்டாள்.
இப்போது அடித்ததும் சுயம் பெற்றவள் கண்ணீர் வழிய தாயை பார்த்தபடி நின்றிருந்தவள் ஒன்றும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
“பிரனிம்மா…” மனோகரன் அழைக்க,
“நான் கொஞ்ச நேரம் அந்த ரூம்ல இருக்கேன் ப்பா. அப்பறம் கண்டிப்பா உங்க கூட எல்லாம் வரமாட்டேன். இங்கயே இருக்கேன். இங்க தான இருக்கனும்…” என்று சொல்லிவிட்டு அவள் செல்லவும் இன்னுமே தேம்பி அழுதார் வாசுகி.
“என்ன வாசுகி இப்படி பண்ணிட்ட? நமக்கே முடியாதப்போ அவ சின்ன பொண்ணு. எவ்வளோ தான் அவளும் பார்ப்பா? தாங்கவேண்டிய நாமளே காயப்படுத்தி அனுப்பலாமா?…” என மனைவியை கண்டித்தார்.
“எனக்கு என்ன செய்யன்னு தெரியல. இப்ப நான் சரின்னு அவளுக்கு ஆறுதலா சொன்னா கூட வந்திருவா போல நினைச்சுட்டேன். அதோட நாம இங்கயே இருக்க முடியுமா? உங்க வேலை, நம்மோட வீடுன்னு எல்லாம் அங்க இருக்கே…”
“சரி அதுக்கு அடிப்பியா?…”
“யார் மேலையோ உள்ள கோவம். என் பொண்ணுமேல காமிச்சிட்டேன்…” என்றவரை மேலும் கேட்டு காயப்படுத்த முடியவில்லை.
தங்களுடைய அறைக்கு வேகமாய் வந்தவள் கவனமாக கதவையும் அடைத்துவிட்டு அழுகையை முழுங்கியபடி பாத்ரூம் நோக்கி செல்ல அங்கே நின்றவனை கவனிக்காமல் அவன் மீது மோதி தடுமாறினாள்.
“ஹேய் பார்த்தும்மா…” என்று அவன் பிடித்ததும்,
“நான் ஓகே, ஓகே தான்…” என்றவள் கண்ணீரை இன்னும் உள்ளிழுத்தாள்.
அடிவாங்கிய கன்னத்தை அவனிடம் காண்பிக்காத விதமாக வேகமாய் விலகி கையை கழுவ செல்ல போக,
“பிரனித்தா நில்லு…” என அவளை பிடித்து நிறுத்தினான்.
“அடிச்சாங்களா?…” அவளின் முகத்தை நிமிர்த்தி கன்னத்தை பார்த்து சொல்ல,
“அம்மா எதோ ஒரு நினைப்புல எப்ப ஊருக்கு போறதுன்னு அப்பாட்ட கேட்டாங்க. நான் அவங்க எங்க என்னை விட்டுட்டு போய்ருவாங்களோன்னு என்னையும் கூட்டிட்டு போக சொன்னேன்…”
“கூட்டிட்டு போக சொன்னியா? இங்க இருந்தா?…” என்றான் உள்ளுக்குள் திடுக்கிட்ட மனதோடு.
“ஹ்ம்ம்…” என தலையசைத்து அவனை பார்க்க ஆவுடையப்பன் மௌனம் அவளை தின்றது.
“போகனுமா உனக்கு?…” என்றவன் குரலில் இருந்த பேதத்தில் மீண்டும் கண்ணீர் பொங்கி கன்னத்தில் வழியாமல் நின்றது.
“நான் கேட்டேன், பதில் சொல்லு. உனக்கு இங்க இருந்து என்னை விட்டு போகனுமான்னு கேட்டேன்…” என்றான் அழுத்தமாக.
இதற்கு என்ன பதில் சொல்ல முடியும். உள்ளிருந்து பெரிதாய் ஒரு கேவல் கிளம்ப எங்கே அவனிடம் உடைந்துவிடுவோமோ என்று அஞ்சியவள் கண்ணீர் வழியும் முன் அவன் சட்டையை பற்றி நெஞ்சில் சாய்ந்திருந்தாள்.
“என்னடா பண்ணனும்? இன்னைக்கு காலையில இருந்தே நீ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்க. அதுவும் நானே?…” என்றபொழுதே அடக்கப்பட்ட கேவல் அவளிடம் வெளிவந்தது.
பெரிதாய் அவளிடம் தள்ளாட்டம். தாய் தகப்பனும் வேண்டும், கட்டியவனும் வேண்டும். ஆனால் மற்ற எதுவும் வேண்டாம் என்னும் நிலை.
மனது சமன் பட மறுத்தது. இயல்பு தொலைத்து தொலைந்து மனதளவில் இந்த அழுத்தத்தில் மரித்துவிடுமோ என சிதறிக்கொண்டிருந்தாள்.
இப்படியும் இருக்கமுடியாமல், அப்படியும் இருக்கமுடியாமல் மொத்தமாய் தன்னிலை இழந்து போயிருந்தாள் பிரனித்தா.
“எங்கயும் போக வேண்டாம். போகவும் முடியாது. சரியாகிடும்ன்னு சொன்னேன் தானே? கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு மோகினி…” என்று சொல்ல அதற்கும் அவள் உடனே தலையசைத்தாள்.
சொன்ன நிமிடம் மறுக்காமல் தன்னை ஒப்புக்கொடுத்து தன் கைகளுக்குள் நின்றவளை காணவே முடியவில்லை.
பேசினாலும் தீரபோவதில்லை என புரிந்தவன் அவளின் சிவந்திருந்த கன்னத்தில் மெதுவாய் இதழ் பதித்து அவள் இதழ்களை நெருங்க முயல முகத்தை மறைத்து அவன் மார்பில் ஒண்டிக்கொண்டு நின்றாள்.
“இங்க கேமரா இல்லை தானே?…” என்ற கேள்வியில் துணுக்குற்றவன்,
“படுத்தாதடி மோகினி. ஒரே நாள்ல இவ்வளோவெல்லாம் நானும் தாங்கமாட்டேன்…” என்றான் அவளிடம்.