“அப்பா ப்ளீஸ், நானுமே சரின்னு தான் சொன்னேன். என்கிட்ட கேட்டுட்டாங்க. எனக்கு அத்தை, அண்ணா, அக்கா எல்லாம் வரனும். அதோட நமக்கு தெரியாத விஷயங்கள் இதுல இருக்கும் போது பேச வேண்டாம்…” என்றாள் பிரனித்தா தன்மையாக.
“ஓகே, நான் கிளம்பறேன். ரெஸ்ட் எடுங்க…” என்றுவிட்டு திரும்பியவன் மீண்டும் மனோகரனிடம் வந்தான்.
“நீங்க இப்போதைக்கு ஊருக்கு போக முடியாது. உங்க ஆபீஸ்க்கு ஒரு மெயில் அனுப்பிருங்க. மெடிக்கல் லீவ் போடுங்க. இங்க இருக்கறது தான் உங்களுக்கு பாதுகாப்பு…” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்துவிட்டான்.
“என்னங்க இது?…” மனோகரன் அசோகனை பார்க்க,
“எல்லாம் நல்லதுக்கு தான். ராஜா சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்ப்பா…” என்றார் அவரும்.
இப்போது வாசுகியும், பிரனித்தாவும் தான் அவரை சமாளித்து சமாதானம் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினார்கள்.
சிங்காரத்தை அழைப்பேன் என்றதிலே மனோகரனுக்கு பிடித்தமில்லாது போனது.
என்னதான் இருக்கட்டுமே? முதுகில் குத்தியவரை எப்படி மேடையில் நிறுத்தி உறவாட நினைக்க முடிகிறது என அவர் அத்தனை பேசினார் மனைவியிடம்.
“நீங்க அமைதியா இருங்க. இதுக்கு மேல இதுல பேச வேண்டாம். அதுவும் ஏற்கனவே உங்க பொண்ணு என்னையும் கூட்டிட்டு போங்கன்னு ஒரு வார்த்தை சொன்னதிலையே நான் அரண்டு போயிருக்கேன். இப்ப நீங்க இப்படி பேசினா?…”
“பேசினா? பேசினா என்ன?…”
“அவ திரும்ப அதையே சொல்ல மாட்டாளா? அதோட இனி திரும்பி போக கூடிய சூழ்நிலை இல்லை. கல்யாணமாகிருச்சு. அவளும் இப்ப மருமகனுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசிருக்கா. அவ தெளிவா இருக்கும் போது நாம குழப்ப கூடாது…”
“என்ன குழப்பறேன்? எனக்கு அவர் வரது பிடிக்கலை. இது சொல்றது தப்பா?…”
“உங்க மக கிட்ட கேட்காம ஒன்னும் இந்த முடிவுக்கு வரலையே அவரு? அவளை தனியா கூப்பிட்டும் பேசிருக்கார். அசோகன் அண்ணனும் என்ன சொல்றார் கேட்டீங்கல்ல. காரணம் இருக்க போய் தானே கூப்பிடறாங்க…”
“என்னவோ சொல்ற. ஆனா எனக்கு இஷ்டமில்லை…”
“அதுக்கு என்ன செய்ய முடியும்? இந்த இடத்துல யார்கிட்ட எப்படி நடக்கனும்னு அனுபவப்பட்டவங்க அவங்க. இது அவங்க வேலை சம்பந்தப்பட்டது. நமக்கு இதுல அடியும் தெரியாது. நுனியும் தெரியாது. பேசாம இருங்க…”
“இங்கயே ஜெயில் மாதிரி…” என சொல்லிவிட்டு பால்கனி பக்கம் செல்ல அங்கே அத்தனை ஆட்கள் நின்றிருந்தனர்.
பார்த்தவருக்கு அங்கேயும் நிற்க முடியவில்லை. வேகமாக உள்ளே வந்துவிட்டார்.
எத்தனை நாட்கள் இப்படியே செல்லுமோ என நினைத்து நகர்ந்த நிமிடங்கள் எல்லாம் ஆமை வேகம் போலிருக்க ஆவுடையப்பனுக்கு முயல் வேகத்தில் சென்றது.
கண்ணை மூடி கண்ணை திறக்கும் முன் வரவேற்பு இன்னும் மூன்று நாட்களில் என்று வந்திருந்தது.
அன்று விரைவிலேயே வீடு திரும்பி இருந்தான் ஆவுடையப்பன். இத்தனை நாட்களும் ரிசப்ஷன் வேலையை அசோகனிடம் ஒப்படைத்துவிட்டு தனது வேலையில் கவனமாக இருக்க அவன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்திருந்தது.
வரவேற்பு முடியட்டும் என காத்திருந்தான். ஓரளவு இலகுவான சூழ்நிலை தான் அன்று.
அசோகனும் நன்றாக உடல் தேறி அவர்களின் சொந்த நிறுவனமான சிமென்ட் பேக்டரிக்கு மனோகரனை அழைத்து செல்ல அவருக்கு ஓரளவு அங்கிருந்து விடுதலை போலிருந்தது.
ஆனாலும் போன இடத்திலும் அசோகனின் கண் பார்வையில், இல்லை என்றால் யாராவது இருவர் அவருடனே இருந்து கொண்டிருக்கும்படி இருந்தது.
பிரனித்தா அபிநயாவிடம் சொல்லி தங்கள் கம்பெனியில் இருந்து விலக இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டு அதுவரை வீட்டிலிருந்தே வேலை செய்ய முடிவு செய்திருந்தாள்.
இப்போதைக்கு வேலையை விட முடியவில்லை. வேண்டாம் என்று நினைத்திருக்க இருக்கும் சூழ்நிலையில் மனதை திசை திருப்ப, தனக்கு ஒரு இளைப்பாறல் வேண்டி இதனை தொடர நினைக்க ஆவுடையப்பன் அதற்கு தடை சொல்லவில்லை.
“எப்போ வேணாலும் இந்த ஆப்பர்சுனட்டி கேன்சலாகலாம். என்ன பண்ணலாம்ன்னு இருக்க? பொழுது போகலைனா சித்தப்பா கூட பேக்டரிக்கு போ. நீயும் கத்துகிட்ட மாதிரி இருக்கும்…” என்றிருந்தான்.
“இப்ப வேண்டாம். தெரிஞ்ச வேலையா இருக்கும் போது அது வேற. அதை தெரிஞ்சுக்க கொஞ்சம் மைன்ட் செட்டாகட்டும். எப்படியும் அதுக்கு தானே வருவேன்…” என்று சொல்லியிருந்தாள்.
ஆவுடையப்பனும் பெரும்பாலும் வீட்டில் இருக்க முடிவதில்லை என்பதால் இப்போதைக்கு அவளின் விருப்பம் என்றுவிட்டான்.
வாசுகிக்கு தான் மிகவும் பொறுமை இழந்து இருந்தது. போதாததிற்கு ரிசப்ஷனுக்கு அழைக்கும் பொறுப்பு அவரிடம் வந்திருக்க பேசுபவர்கள் எல்லாம் திருமணத்தை கேட்டனர்.
“சிங்காரம் கூட இல்லாமலா கல்யாணம் நடந்துச்சு?…” என்று கேட்க,
“இங்க பக்கத்தில சொந்தம்ன்னு அவங்க தான் இருந்தாங்க. அதான் அவங்க பொறுப்புல மாப்பிள்ளையோட சித்தப்பாவை விட்டுட்டு நாங்க போய் கல்யாணத்தை முடிச்சுட்டு வந்துட்டோம்…” என ஆவுடையப்பன் சொல்லியபடி பேசியிருந்தார்.
அதன் பின் பேச்சுக்கள் எழுந்தாலும் பெரிதாய் தீர ஆராயும் அளவிற்கு இதில் இல்லை.
ஓரளவு அனைவரையுமே அழைத்தாகிவிட்டது. பிரனித்தாவும் தனது நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுத்துவிட்டிருந்தாள்.
இப்போதும் அபிநயாவிடம் தான் பேசிக்கொண்டிருக்க ஆவுடையப்பன் வந்ததையும் அவள் கவனிக்கவில்லை.
லேப்டாப்பில் ஒரு பார்வையுடன் காதில் ப்ளூடூத்தை சொருகியபடி படபடவென்று பேச்சு தான்.
“இன்னும் நாலு நாள் லீவ். ரெண்டு நாள்ல ரிசப்ஷன். நீ எப்ப இங்க சென்னை வர?…” என்றாள் அபிநயாவிடம்.
“நாளைக்கு தான் கிளம்பலாம்ன்னு ப்ளான். ஆமா வந்ததும் உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வரலாமா? மறுபடியும் மினிஸ்டர் ஸாரை பார்த்து இந்ததடவை செல்ஃபி எடுத்துக்கனும். உன் என்கேஜ்மேண்டல் மேடையில கூட நிக்க முடியலை…”
“தாராளமா வாயேன். எப்ப வர சொல்லு…” என பேசியபடி பிரனித்தா லேப்டாப்பை ஷட் டவுன் செய்தாள்.
“வாவ், வீட்டுக்கா? நிஜமாவா?…” அபிநயா அதிசயிக்க,
“என்ன வாவ்?…”
“மினிஸ்டர்ன்னா வாவ் இல்லாமலா?…”
“உனக்கு தான் மிஸ்டர். வொய்ட் ஆவ் வாவ்? எனக்கு ஆவ் அவ்வ்வ்வ். இதுல என்னை பார்க்கனும்னு உனக்கு கொஞ்சமும் நினைப்பே இல்ல…”
“உன்னை ஏன்டி நான் நினைக்க போறேன்?…” அபிநயா கிண்டலாய் சொல்ல,
“அப்ப போனை கட் பண்ணுடி பிசாசே…” என அழைப்பை துண்டித்தவள்,
“ஆனாலும் இந்த வட்ட செயலாளர் வண்டு முருகனுக்கு ரொம்ப தான் கிரேஸ். வரட்டும் வச்சுக்கறேன்…” என்றபடி லேப்ட்டாப்பை மூடி கையில் எடுத்துக்கொண்டவள் திரும்ப அங்கே கையை கைட்டியபடி நின்றிருந்தான் ஆவுடையப்பன்.
‘அச்சோ ஆவ், நிஜமாவே அவ்வ் தான்’ என மானசீகமாக தலையில் கொட்டிக்கொண்டவள் எல்லாம் கேட்டுவிட்டானோ என பிடிபட்ட பாவனையில் நின்றாள் பிரனித்தா.
அவன் நின்ற விதமே அத்தனையும் கேட்டுவிட்டதை உறுதிப்படுத்தியது. மெதுவாய் லேப்டாப்பை கீழே வைத்தவள் சாதாரணம் போல காண்பிக்க முயன்று புன்னகைத்தாள். (canadianpharmacy365.net)
“என்ன இன்னைக்கு சீக்கிரம் இவ்வளோ சீக்கிரம் வந்துட்டீங்க?…” என அங்கிருந்தே கேட்டவளை தன் ஒற்றை விரல் நீட்டி தன்னருகே அழைத்தான் ஆவுடையப்பன்.
“இல்ல சொல்லுங்க. இங்கயே நிக்கறேன். பால்கனி காத்து இங்க தான் நல்லா வருது…” என்று உளறி கொட்ட அங்கே பால்கனி சாற்றியிருந்தது.
அவளை பார்த்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் சென்று பால்கனியை திறந்தவன் திரைகளை நன்றாக இழுத்து மூடிவிட்டான்.
சில்லென்ற காற்று முகத்தில் வந்து மோத அறைக்குள் இதமான ஒரு சுகம் பரவுவதை போலிருந்தது.
“இவ்வளோ நேரம் திறந்து தான் இருந்துச்சு. கொஞ்சம் முன்னாடி தான் மூடி வச்சேன். மறந்துட்டேன்…” என்றாள் மெதுவாய்.
“ஓஹ்…” என்றவன் டவலை எடுத்துக்கொண்டு வாஷ்ரூம் சென்றுவிட ஒன்றும் புரியவில்லை பிரனித்தாவிற்கு.
கோபமாக இருக்கிறானோ என்னவோ என யோசித்து மண்டை வெடிக்காத குறை தான் அந்த பத்து நிமிடத்திற்கு.
குளித்துவிட்டு வந்தவன் இன்னும் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தவளை பார்த்துவிட்டு தனது மொபைலை எடுத்து என்னவோ செய்தான்.
‘நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்’ என்ற வடிவேலின் சத்தத்தில் திடுக்கிட்டு ஆவுடையப்பனை பார்த்தவள் எச்சிலை கூட்டி விழுங்கினாள் அவனின் அழுத்தமான முறைப்பில்.
“நீ ஏற்கனவே என்னை பத்ரியோட பார்க்க வந்தப்பவும் இதை சொன்ன தானே?…” என்றான் கண்டிக்கும் பாவனையில் அவளிடம்.
‘ஆத்தீ, இது வேறையா? அப்பவே சிக்கிருக்கேன். என் வாய்லையே அடிக்கனும்’ என்று நினைத்தபடி நின்றிருக்க,
“கிட்ட வான்னு கூப்பிட்டா வரமாட்டியோ?…” என்றவாறு அவளை நெருங்கி சென்றவன்,
“இந்த பேர் மட்டும் தானா? இன்னும் இருக்கா?…” என கேட்க,
“ஆமா, இல்லை, இல்லை…” என மீண்டும் உளற அவள் முன் கைகளை கட்டிக்கொண்டு பார்த்தவன் பார்வையில் ஒவ்வொரு பெயராக வந்து விழுந்தது அவளறியாமலே.