“என்ன பேசற தியா? உனக்கு கால் பண்ணி பண்ணி நான் சலிச்சிட்டேன். அதான் கூட்டிட்டு போக வந்தேன்…” என்றதும் வேறு வழியின்றி இந்துவுடன் சென்றாள்.
“பூமியை எப்படியும் நீ தான் கூப்பிட வர போற. அப்பறம் என்ன?…” என பேசிக்கொண்டே தன்னுடன் வைத்துக்கொண்டாள் இந்து.
பூமிகாவிற்கு அண்ணனாக திரவியம் அங்கே வேலை வேலை என்று சுழல இந்து சொல்லியதை எல்லாம் செய்தாள் ஆராத்தியா.
ரகுநந்தன் மேடைக்கு வரவும் அடுத்ததாக பெண்ணை அழைத்துவரும்படி சொல்ல,
“இப்ப வா போவோம்…” என இந்து பூமிகாவை அழைத்து வர சென்றாள்.
புகைப்படம் எடுப்பவர்கள் உடன் வர உள்ளே பூமிகாவிற்கு மாலை போடுவது, தனியே நிற்க வைத்து, பின் உடன் இருந்தவர்களுடன் என சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் மணமேடைக்கு நகர அவர்களின் முன்னே வீடியோ எடுப்பவர் வெளிச்சத்தை பாய்ச்சிக்கொண்டே பின்னே நகர்ந்துகொண்டிருந்தார்.
பூமிகாவை ரகுவின் அருகே அமர வைத்ததும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இயல்பாக புன்னகைத்துகொண்டனர்.
அதன் பின் சடங்குகள் நடைபெற இதோ திருமாங்கல்யம் கைக்கு வந்தது. சற்று தள்ளி நின்ற ஆராத்தியாவை பூமிகாவிற்கு நேரே சரியாய் நிறுத்தினார் அபிராமி.
“துணை முடிச்சு போடனும். இங்க நில்லு தியா…” என்று சொல்லவும் சிரிப்புடன் திருமணத்தில் கவனம் வைத்தாள்.
கெட்டிமேளம் முழங்க ரகுநந்தன் பூமிகாவின் கழுத்தில் முடிச்சிட ஆராத்தியா துணை முடிச்சிட்டாள்.
திருமணம் சிறப்பாக நடந்து முடிந்ததும் சொந்தங்கள் மணமக்களை சூழ்ந்துகொண்டனர்.
ஆசிர்வாதங்கள், பரிசுகள் என மணமக்களை திணறடிக்க பூமிகா ஆராத்தியாவின் கையை பிடித்துக்கொண்டாள்.
“கூடவே நிக்கனும். எங்கையாச்சும் போன, பார்த்துக்கோ…” என்று அதட்டியே சொல்லிவிட்டாள்.
“எங்க போக போறேன்? இங்க தான் இருக்கேன்…” என்று ஆராத்தியாவும் எங்கும் நகரவில்லை.
அதன் பின் வந்தவர்களை கவனித்து சாப்பிட அனுப்பி வைத்து என்று குடும்பத்தினர் ஓரிடத்தில் நிற்க நேரமின்றி பறந்துகொண்டு தான் இருந்தார்கள்.
பிற்பகல் மூன்றுமணி போல தான் நல்ல நேரம் என்று அப்போது தான் அங்கிருந்தே கிளம்பினார்கள்.
முதலில் மணமகள் வீடு சென்று பால் பழம் சம்பிரதாயம் முடித்துவிட்டு மணமகன் வீட்டிற்கு வந்துவிட அடுத்து மறுவீடு என பூமிகாவின் தாய் வீட்டிற்கு நான்கு நாட்கள் கழித்து தான் செல்லமுடியும்.
வீடு நிறைய சொந்தங்கள். மறுவீட்டு விருந்தும் முடியும் வரை அதில் பலர் அவர்களுடன் தான் இருப்பார்கள்.
வெளியூர் சொந்தங்கள் எல்லாம் ஊட்டியை சுற்றி பார்க்க என வேன் வைத்து கிளம்பிவிட அந்த ஒருவாரமும் வீட்டில் பேச்சுக்குரல்கள் ஓயவில்லை.
பூமிகாவும் தங்கள் வீட்டில் இருக்க இந்து, ஆராத்தியா, பூமிகா கூட்டணி இன்னும் கலகலப்பாக இருந்தது.
அதில் ஆராத்தியாவிற்கு அத்தனை சந்தோஷம். இனிமேல் நினைத்த நேரத்தில் பூமிகாவுடன் அரட்டையடிக்கலாம் என்னும் அளவில் தான் அவளின் எண்ணங்கள்.
மூன்றாம் ஆண்டு செமஸ்டர் விடுமுறை வரை அந்த வீட்டின் ஒரே கொண்டாட்டம் தான்.
மீண்டும் கல்லூரி கிளம்ப வேண்டிய கட்டாயம். நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்க தன்னை அழைத்துக்கொண்டு செல்ல ஆதவனாவது, ராகுவாவது வருவார்களென நினைத்திருந்தாள் ஆராத்தியா.
முதல் நாள் அதற்கான பேக்கிங்கில் இருக்க அவளுக்கு உதவியாக பூமிகாவும், இந்துவும் இருந்தனர்.
“இந்த சுடி அயர்ன் பண்ணாம இருக்கே? வேணுமா தியா?…” இந்து கட்டிலில் இருந்த உடையில் ஒன்றை காண்பித்து ஆராத்தியாவிடம் கேட்க,
“ஆமாண்ணி, நான் அங்க போய் பண்ணிக்கறேன். இது என்னோட ஃபேவரெட் ட்ரெஸ். இதில்லாமலா?..” என சொல்லவும் பூமிகாவும், இந்துவும் சிரித்தனர்.
“என்ன ரகசியம்?…” என இடுப்பில் கைவைத்து அவர்களை முறைத்த ஆராத்தியா,
“எனக்கு தெரியும், இந்த பூமி அண்ணி தான் சொல்லிருப்பாங்க அவ இதில்லாம போகமாட்டான்னு…” என கூற,
“இல்லனாலும் இந்த ரகசியம் எங்களுக்கு தெரியாது பாரு…” என இன்னும் சிரித்தாள் இந்து.
“ப்ச், சும்மா இருங்கண்ணி…” என கடுப்பாய் கட்டிலில் அமர்ந்தாள்.
“நிஜமாவே நாளைக்கு விருந்துக்கு போவீங்களா?…” என சோர்ந்து போய் ஆராத்தியா பூமிகாவிடம் கேட்க,
“ஆமாடா. அவாய்ட் பண்ண முடியாதுல. இன்னும் விருந்து அழைப்பு முடியவே இல்லை…” பூமிகா அதில் அலுத்துக்கொண்டாள்.
“இப்ப எதுக்கு நீ இவ்வளோ சோக கீதம் வாசிக்கிற?…” என்ற இந்து,
“நாளைக்கு காலேஜ் போகனும். கொஞ்சம் அதை பத்தி யோசி…” என்றாள் பூமிகாவும்.
“ஆமா, ரூம் க்ளீனிங் எல்லாம் தனியா செஞ்சிடுவியா தியா?…” என இந்து கவலையுடன் கேட்டாள்.
வேலை தெரிந்த பெண் தான். ஓரளவு அதையெல்லாம் ஆராத்தியாவிற்கு சீதா பழக்கியே விட்டிருந்தார்.
விடுதியில் ஆராத்தியாவுடன் பூமிகாவுடன் இருந்தவரை அதற்கு பிரச்சனையே இல்லை. இருவருமாக பகிர்ந்து வேலைகளை பார்த்துக்கொள்வார்கள்.
இப்போது புதிதாய் வந்து உடன் தங்கியிருக்கும் பெண்ணோ அத்தனை சுத்தபத்தமில்லை.
இஷ்டத்திற்கு உடைகளை கடாசுவது, ஈர உடைகளை உலர்த்தாமல் புலுங்கல் வாடை வீசுமளவிற்கு போட்டு வைப்பது என ஏற்கனவே ஆராத்தியா புலம்பி இருந்தாள்.
“அந்த கொஞ்ச நாள்லயே எனக்கு வெறுத்துருச்சு. வேற யாராச்சும் ரூம் மாத்திக்கறாங்களான்னு கேட்கனும். இல்லைன்னா ப்ரஷர்ஸ் வந்தாங்கன்னா யாரையாச்சும் அனுப்ப சொல்லனும்…” என்று கல்லூரி முடிந்து வந்த நாளன்றே கதையாய் சொல்லியிருந்தாள் ஆராத்தியா.
இப்போது இந்து கேட்கவும் மீண்டும் தலைவலியே வந்துவிட்டது ஆராத்தியாவிற்கு.
“இருக்கறது போதாதுன்னு இதுவேற. ப்ச். எனக்கு காலேஜ் போகவே புடிக்கலை…” என தன்னுடைய பேக்கில் தலையை சாய்த்துக்கொண்டவள் மீண்டும் புலம்ப பூமிகா, இந்து இருவரும் சிரித்துவிட்டனர்.
“ப்ச், என் நிலைமை சிரிப்பா இருக்கோ?…” என முறைத்தவள்,
“நீங்க தனியா எப்படி அண்ணி மேனேஜ் பண்ணுனீங்க?…” என்றாள் பூமிகாவிடம்.
பின் நேரம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக ஆராத்தியாவை உற்சாகப்படுத்தி எல்லாவற்றையும் பேக் செய்துவிட்டு வெளியே வந்தனர்.
மாலை ஆதவன் மகளுக்கு முடியவில்லை என மருத்துவரிடம் மகளை அழைத்துக்கொண்டு இந்துவுடன் மருத்துவமனை சென்றிருந்தான்.
பூமிகாவும், ரகுவும் வெளியே அவனின் நண்பன் ஒருவனின் அழைப்பின் பேரில் அங்கே சென்றிருக்க சீதா மட்டுமே மகளுடன் இருந்தார் வீட்டில்.
மகள் கிளம்ப தயாராக எடுத்து வைத்திருந்த எல்லாவற்றையும் பார்த்துவிட்டு திருப்தியானவர்,
“எதையும் மறக்கலையே? ஏனா நீ தனியா இருக்க போற. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தான் போகனும் தியா. வேற ஏதாவது வேணுமா நல்லா பார்த்துக்கோ. ஒவ்வொருதடவையும் தனியா வந்திட்டிருக்க முடியாது…” என்றார்.
“எல்லாம் வச்சிட்டேன்ம்மா. நீங்க சொல்லுமுன்னவே எனக்கும் தெரியும். அதெல்லாம் எல்லாம் நாலு நாளா நோட்பேட்ல எழுதி வச்சு காலையிலே எடுத்து வைக்கும் போது அதையும் செக் பண்ணிட்டு தான் பேக் பண்ணேன்…” என்றாள் ஆராத்தியா.