“ஏற்கனவே இங்க வச்சு முடிவு பண்ணினது தானே? அப்பாகிட்ட கேட்டுட்டு தானே அத்தையும் சொன்னாங்க…” ஆதவன் வருத்தத்துடன் சொல்ல,
“ஹ்ம்ம், பூமி தான் சொன்னா. அண்ணனுக்கு தியாவை எடுக்கனும்னு அவ்வளோ ஆசையாம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும். ஆனா தியாவுக்காக யோசிக்கிறாங்க…”
“தியாவுக்காக மட்டுமில்லை இந்து. தீராவே இந்த பேச்சை எடுக்காதீங்கனு சொல்லிட்டான். இப்படி பயந்துட்டே இருந்தா சரிவராதுன்னு. அவ ஒதுங்கறான்னு இவனும் பேசறதில்லை. பேசினாலும் இப்படி அதட்டலா தான் முடியுது…”
இருவருமாக பேசிக்கொண்டிருக்க சீதா வந்துவிட்டார். வந்ததும் பேத்தியை தான் பார்க்க சென்றார் அவர்.
சற்று நேரத்தில் பூமிகாவும், ரகுவுமே வந்துவிட அவர்களுடனே தென்னரசு வந்துவித அதுவரை ஆராத்தியா வெளியே வரவில்லை.
“எங்க அவ? காலேஜ் போகனும் நாளைக்கு. சாமானியமா தூங்க போகமாட்டாளே? எப்படி போனா?…” என கேட்டுக்கொண்டே சீதா அடுக்களை செல்ல அங்கே அடிப்பிடித்த இட்லி பாத்திரம் அவரை வரவேற்றது.
“இந்து என்ன இது?…” என சீதா சத்தமாய் அழைக்க,
“அடி பிடிச்சிடுச்சு த்தை…” என்றாள் அவள்.
சீதாவின் சத்தத்தில் பூமிகாவும் வந்துவிட என்னவென பார்க்கும் முன் இந்து சொல்ல,
“நல்லா இவளை விட்டுட்டு போனேன் போ. உன் மாமாவுக்கு தெரிஞ்சா என்னை உண்டில்லைன்னு ஆகிடுவார். சட்டியோட போச்சு. பிள்ளைக்கு சுட்டுட்டா என்னாகன்னு ஆடிருவார்…” என்றார் சீதா.
“ஏன் மாட்டோமா என்ன? உள்ளூருக்குள்ளையே பார்க்கலாமே? நாங்க அடிக்கடி போய் பார்த்துப்போம்…” பூமிகா இந்துவிடம் கண்ணடித்து சொல்ல,
“அவளையும் கெடுத்து வச்சிருவ நீ. ஏற்கனவே அவ தலைக்கு மேல நிப்பா. கம்முன்னு இருங்கடி…” என்றவர் மடமடவென்று தென்னரசுவிற்கு இரவு உணவை தயாரித்தார்.
“நாங்க செய்யறோமே? எங்கட்ட சொல்லுங்க…” என்று பூமிகா கேட்க,
“ஒன்னும் வேண்டாம். போய் அவளை எழுப்புங்க. இல்லைன்னா நாளைக்கு கிளம்பற வரைக்கும் மூஞ்சியை தூக்கி வச்சிட்டிருப்பா…” என்று சொல்லவும் இருவரும் சிரித்தபடி நகர போக,
“இந்து இங்க வா…” என்றழைத்தவர்,
“ஒழுங்கா சாப்பிடவாச்சும் செஞ்சாளா உன் நாத்தி?…” என கேட்டுக்கொண்டே வேலையை பார்த்தார் சீதா.
“சாப்பிட்டா த்தை. நீங்க கவலைப்படாதீங்க…” இந்து சொல்ல,
“என்னத்தையோ? அங்க போனா ஹாஸ்டல்ல என்ன குடுக்கராங்களோ அதை தான் முழுங்கனும். புடிக்குதோ இல்லையோ அதுதான்….” என பெருமூச்சுவிட்டவர்,
“சாயங்காலம் என்ன ஆட்டம் தெரியுமா? இட்லியை ஊத்தி வச்சிட்டு போன்னு நிக்கிறா. நான் ஊத்தற மாதிரி வராதாம். ஹாஸ்டல் போனா என்னத்த பண்ண போறாளோ?…” என்றார் சீதா.
“அச்சோ அத்தை, நான் தான் இட்லி ஊத்தி குடுத்தேன். ஏற்கனவே இருந்ததை அவருக்கும் அண்ணனுக்கும் வச்சுட்டேன். தியாவுக்கு சூடா தான் ஊத்தினேன்…” என்று இந்து சொல்லவும்,
“இதுவேறையா? சரி விடு…” என்றவர் மீண்டும் இட்லி பாத்திரத்தை எடுத்து வைத்து மகளுக்கு ஊற்றினார்.
“எனக்கு தெரியலை த்தை. ரெண்டுபேருக்கும் இட்லி பத்தாதேன்னு அவிச்சு ஏற்கனவே வச்சிருந்ததோட சேர்த்து பரிமாறிட்டேன்…” இந்து சொல்ல,
“அதுக்கென்ன? இப்ப ஒரு ஈடு தான் ஊத்தறேன். பேச்சுவாக்குல ஊட்டிவிட்டா சாப்பிடுவா…” என்ற சீதா,
“சரி சரி. போய் அவளை எழுப்புங்க. அவங்கப்பா பார்த்தா என்ன ஏதுன்னுட்டு கேட்டுட்டு இருப்பார்….” என்று அனுப்ப பூமிகாவுடன் இந்து வெளியே வந்தாள்.
அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு ஆராத்தியாவும் வந்துவிட ஆதவன் ரகுவிடம் ஏற்கனவே சொல்லியிருக்க தங்கை வரவும் பேச்சை மாற்றி அவளின் மனநிலையையும் மாற்றினார்கள்.
தென்னரசுவின் கண்கள் நிறைந்து போனது. இதுதானே அவர் எதிர்பார்ப்பது. மனதெல்லாம் மகிழ்ச்சி பரவியது.
சாப்பிட்டுக்கொண்டே அவர்களின் விளையாட்டை கவனித்தபடி இருந்தார். கூடவே அனுவும் எழுந்துகொள்ள பிள்ளைகளை வைத்துக்கொண்டு அங்கே கச்சேரியே நடந்தது.
பேசிக்கொண்டே சீதா மகளுக்கு இட்லியை ஊட்ட ஆரம்பிக்க எல்லோருமே அவரிடம் வாங்கிக்கொண்டனர்.
இந்து மீண்டும் இரண்டு ஈடு ஊற்றி எடுத்துவந்தாள் உடனே. மகளுக்கு அவளும் ஊட்ட ஆரம்பிக்க பதினோரு மணி வரை யாரும் உறங்கவில்லை.
தென்னரசு உறங்க சென்றுவிட அதன் பின்னரே ஒவ்வொருவராய் கிளம்பினார்கள் அவரவர் அறைக்கு.
சீதா மகளுடன் வந்துவிட்டார். ஆராத்தியா உறங்கும் வரை பேசிக்கொண்டே இருந்தவருக்கு அதன் பின்னர் தான் உறக்கமே அண்டியது.
காலை எழுந்ததும் கிளம்பி வழக்கம் போல பேக்கை எல்லாம் எடுத்து வெளியே வைத்து தயாராக இருந்தாள் ஆராத்தியா.
“நினைச்சேன். இன்னும் அண்ணன் வர ஒருமணி நேரம் இருக்கு. அதுக்குள்ளே கிளம்பி வந்து இப்படி உட்காரனுமா?…” பூமிகா தானும் விருந்திற்கு தயாராகி வந்து கேட்க,
“எல்லாம் இருக்கட்டும். முன்னாடியே கிளம்பி இருந்தா திட்டாமலாச்சும் இருப்பாங்க. நான் கொஞ்சம் லேட்டாக்கி அதுக்கு எதுக்கு திட்டு?…” என்றாள் சலிப்புடன்.
கல்லூரிக்கு எப்போதும் சந்தோஷமாய் தான் கிளம்புவாள் ஆராத்தியா. இந்தமுறை செல்லவே தோன்றவில்லை.
அதுவும் இந்த பரிட்சை விடுமுறையில் பூமிகாவும் தங்களுடனே இருக்க கடந்த பொழுதுகள் எல்லாம் அற்புதம்.
குடும்பத்தை விட்டு செல்லவும், அங்கே கல்லூரி விடுதியில் தனியே இருக்கவும், முக்கியமாக தனியாக திரவியத்துடன் செல்லவும் என எதுவுமே பிடித்தமில்லை.
அது ஆராத்தியாவின் முகத்திலேயே அப்பட்டமாய் தெரிய அவளை இழுத்து அமர வைத்த பூமிகா,
“அண்ணி, நான் வேணும்னா இங்க படிக்கவா?…” என பூமிகாவிடம் ஆராத்தியா கேட்க,
“என்ன?…” என திகைத்துவிட்டாள் அவள்.
“நிஜமாண்ணி, இங்க உள்ள காலேஜ்ல சேர்ந்து படிக்கறேன்னு சொல்றேன். அப்பாட்ட பேசவா?…” என்றதும் திகைப்பு மறைந்து இப்போது சிரிப்பு வந்தது பூமிகாவிற்கு.
“ஹ்ம்ம், இந்த மேடம் தான் பாரின்ல, இல்லை வேற ஸ்டேட்ல மேரேஜ் பண்ணி போக போறீங்களாக்கும்?…” என்று கேட்கவும் பனித்துவிட்ட கண்களை துடைக்கவும் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் ஆராத்தியா.