படிப்பு முடிந்து ஊருக்கு வரவும் பத்திரிக்கை அடிக்க கொடுக்க தயாராக இருக்க கடகடவென்று கண்ணை மூடி திறக்கும் முன் வேலைகள் ஜரூராக நடந்தது.
என்ன டிஸைன் வேண்டுமென்று கேட்டு அவளையே ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்க வைத்திருந்தார் சீதா.
திரவியம் முதலிலேயே சொல்லிவிட்டான் வீட்டினரிடம். எல்லாமே அவளின் தேர்ந்தெடுப்பாக மட்டுமே இருக்கவேண்டும் என்று.
அதனை கொண்டு ஆராத்தியாவை கேட்டு கேட்டு செய்ய பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.
‘இவங்களுக்கு இந்த கல்யாணம் நடக்கனும்ன்னா மட்டும் உடனே என் விருப்பமா? இத்தனை நாள் நான் என்னவா இருந்தேன்?’ என நினைத்து உள்ளுக்குள் எழும் பொருமலை அடக்கவே அத்தனை பெரும்பாடாக இருந்தது.
“என்னம்மா? ஏன் முன்ன மாதிரி கலகலப்பா இல்ல?…” என சீதா கூட கேட்டுவிட தென்னரசு கலக்கமாக தான் மகளை பார்த்தார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. நல்லா தான் இருக்கேன். திடீர்ன்னு கல்யாணம்ன்னதும் தான்…” என சொல்லிவிட்டு புன்னகையுடன் அமைதியாகிவிடுவாள்.
அது அவர்கள் கண்ணிற்கு மகள் திருமணம் என்றதும் கூச்சத்தில் இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டனர்.
அதனால் அவளிடம் ஏற்பட்ட மாற்றம் என்று நினைத்திருக்க அதற்கு திரவியமும் காரணமாக இருந்தான்.
ஆராத்தியாவிடம் ஒதுங்கி இருக்காமல் அவ்வப்போது அவளிடமும் ஒவ்வொன்றாய் கேட்டு பேச வைத்தான்.
அதில் ஒற்றை வார்த்தை பதிலானாலும் அவள் அவனுக்கு வழங்கவும் தவறவில்லை.
இனி இதுதான் தன் வாழ்க்கை என்று வரும் பொழுது எல்லாமே பேசித்தானாக வேண்டும் என்று முயன்று தன்னை மாற்றிக்கொள்ளவே முயன்றாள்.
பூமிகாவிற்கு குழந்தை பிறந்து இரண்டாம் மாதமே அவர்களுக்கான திருமண முகூர்த்தநாள் அமைந்திருந்தது.
எதையும் தள்ளிப்போட அங்கே யாருக்கும் விருப்பமில்லை. இதுவே கால தாமதம் என்று தான் நினைத்தனர்.
வரிசையாக சொந்தங்களுக்கு பத்திரிகை வைத்து முடிக்க, கோவிலுக்கு சென்றுவர என்று நிற்க நேரமில்லாதளவிற்கு தான் ஓடினார்கள் ஆராத்தியாவை தவிர அத்தனைபேரும்.
நாட்கள் புயல் வேகத்தில் விரைந்து திருமணத்திற்கு முந்தைய நாளில் வந்து நின்றது.
மண்டபத்திற்கு வந்துவிட அன்று மாலை நிச்சயதார்த்தம் அமோகமாய் நடந்து முடிந்திருக்க மறுநாள் அதிகாலை முகூர்த்தம்.
ஆராத்தியாவை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் மண்டபத்திலேயே தங்க வைத்திருந்தார்கள்.
இரவு உறக்கமின்றி அத்தனை குளிரிலும் மொட்டை மாடியில் நின்றிருந்தவள் பார்வை தூரத்தில் எட்டியதெல்லாம் இருள் மட்டுமே.
விடிந்தால் அவள் திருமதி. மகிழ்திரவியம். நினைவே மனதிற்குள் திடுக்கென்று என்னவோ எழுந்தமர்ந்தது.
வீட்டில் சம்மதம் சொல்லிய பொழுதே அவளிடம் அத்தனை தெளிவாக பேசியிருந்தான் திரவியம்.
“இதுதான்னு முடிவெடுத்துட்ட நீ. மேரேஜ் ஜஸ்ட் ஒரு கமிட்மென்ட் இல்லை தியா. எனக்கும் என் கல்யாண வாழ்க்கை பத்தி நிறையவே கனவிருக்கு. உனக்கும் இருக்கு தான். அதை பத்தியும் நிறையவே நான் பேசியாச்சு…” என்றிருந்தான்.
“உனக்காக நான் ஓரளவு தான் பேசமுடியும். நீ சரின்னு சொல்லியும் நான் கல்யாணத்தை தள்ளி போட்டா அது வேறமாதிரியாகிடும். என்னோட வாழ்க்கை இப்படி தான் துவங்கனும்னு நிறைய எதிர்பார்ப்பிருக்கு. இதுக்கெல்லாம் நீ தயாராகிக்கோ…” என தெளிவாய் சொல்லியிருந்தான்.
அவனின் அந்த பேச்சே திருமண வாழ்க்கை எப்படி இருக்குமென உணர்த்திவிட இப்போது நினைத்தாலும் உள்ளுக்குள் பதட்டம் தான் ஆராத்தியாவிற்கு.
மீண்டும் ஒரு சுய அலசல். தன்னால் அவனின் எதிர்பார்ப்புகளுக்கு துணையாக நிற்க முடியுமா என்றொருபுறம் தோன்ற அதற்கு மேல் எதிர்மறையாகவோ, சாதகமான பதில்கள் எதுவும் மனதளவில் கூட அனுமானிக்க முடியவில்லை.
பதிலை தேடி வாடும் பொழுதுகளில் எல்லாம் இதுவரை தங்கள் குடும்பத்தின் நிகழ்வுகளில் இத்தனை சந்தோஷமாய் எதாவது விசேஷம் நடந்துள்ளதா என்ற எண்ணம் பிறந்து அதை நினைத்து பார்க்க இல்லை, இல்லவே இல்லை.
தன் திருமணம், அதுவும் திரவியத்துடன் என்பது அவர்களின் கனவாக இருந்திருந்தது என ஒவ்வொருவரின் முகத்தில் கலந்தோடிய அதீத சந்தோஷத்தில் கண்டுகொண்டாள்.
இப்படி ஒரு எண்ணத்தை எப்படி தன்னால் கண்டுகொள்ள முடியவில்லை என்ற யோசனையுடன் இருந்தவளுக்கு தனக்கு பின் வந்து நின்றவனை கூட உணர முடிந்தது.
அதுவே இலகுவாய் இருந்தவள் உடல்மொழி இறுக்கம் பெற அந்த மாற்றத்தை அவனும் கண்டுகொண்டான்.
“இவ்வளோ குளிர்ல ஏன் நின்னுட்டிருக்க தியா? இந்து கூட இல்லையே?…” என திரவியம் கேட்கவும் தான் தன்னுடலும் நடுங்கிக்கொண்டிருப்பதே அவளுக்கு புலப்பட்டது.
அந்த குளிரை ஆராத்தியாவின் மனது உணராததில் உடலின் நடுக்கமும் மூளையை எட்டவில்லை.
“தூக்கம் வரலை. அண்ணிட்ட சொல்லிட்டு தான் இங்க வந்தேன்…” என்றாள் அவனுக்கு பதில் தரும் விதமாக.
இப்போதெல்லாம் யோசிப்பதில்லை. கேட்டால் இது தானே வேண்டும் என்பதை போல பதிலும் அவனுக்கு கொடுத்தாள்.
“மார்னிங் அஞ்சு மணிக்கு முகூர்த்தம். இப்பவே மணி பதினொன்னாச்சு. தூங்க வேண்டாமா தியா?…”
“ஹ்ம்ம், சரி போறேன்…” என்றவளை வழிவிடாமல் அவன் நிறுத்தி,
“என்ன?…” என்றான்.
“அத்தான்…” என்று சொல்லவும் மென்னகை புரிந்தவன்,
“ஒவ்வொன்னும் கேட்டு தான் வாங்கனுமோ தியா?…” என கேட்கவும் கலக்கத்துடன் அவனை பார்த்தாள்.
“மனசுல இருக்கறது தான் சரளமா பேச்சுல வரும். என்னவோ உன்னை கட்டி போட்டுட்ட மாதிரி இருக்கு. உன் சந்தோஷத்தை பறிச்சிட்ட மாதிரி தோணுது…” என அந்த சுவற்றின் கை பிடியில் சாய்ந்து நின்றான் அவன்.
ஆராத்தியாவிற்கு தான் திரவியத்தின் அந்த கேள்வி நெஞ்சில் முள் தைத்ததை போலிருந்தது.
அத்தனைமுறை கேட்டானே விருப்பமில்லை என்றால் சொல்லிவிடு என்று. தான் தான் இன்னும் முரண்டு பிடிப்பதாகவே தோன்றியது.
தன்னுடைய இந்த மௌனமும், அழுத்தமும் எங்கே கொண்டு விடுமோ என உள்ளுக்குள் அச்சத்துடன் திரவியத்தை பார்த்தவள்,
“அதெல்லாம் இல்லைத்தான். சும்மா தான் யோசிச்சிட்டு இருந்தேன்…”
“இல்ல சரியாகிடும்…” என்றவள் இன்னும் அழுத்தி கசக்கிவிட்டு கையை எடுக்க கண்ணை திறக்கமுடியவில்லை.
“கேட்கமாட்ட நீ…” என்றவன் ஆராத்தியாவின் கை பிடித்து அருகில் இழுத்து அவளின் கன்னத்தை பற்றவும் அதிர்ச்சியில் அவள் விழிகள் விரிய மெதுவாய் ஊதிவிட்டான் திரவியம்.
“ஹ்ம்ம், நீ கண்ணை கசக்கினதுல உன்னோட கண் முடியும் உள்ளே போய்டுச்சு. அதான் கலங்கிட்டே இருந்திருக்கு. இப்ப ஓகேவா?…” என்றான்.
திரவியம் விரல்கள் அவளின் கன்னத்திலே பதிந்திருக்க பதில் சொல்லாமல் இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லை ஆராத்தியா.