“தேவா…” பிடித்திருந்த நண்பனின் கையில் அழுத்தத்தை கூட்டிக் அழைத்தான் சூர்யா.
அவன் கேள்விக் கேட்டு முழுதாய் அரை நிமிடம் கடந்திருக்க, தேவாவிடம் பதிலில்லை.
அதற்குள் ஒரு குடும்பம் மேடையேறி வர, “ரிசப்ஷன் முடிஞ்சதும் பேசலாம் தேவா” என்று விட்டு நகர்ந்து பாரதியின் பக்கத்தில் சென்று நின்றான் சூர்யா.
அவன் மனம் முழுவதும் கலவையான உணர்வுகள். ‘நண்பனை எப்படிக் கண்டுக் கொள்ளாமல் விட்டோம், அவன் மனதை எப்படி அறியாமல் போனோம்?’ என்பதில் தொடங்கி, தங்கை அவர்கள் வீட்டில் நன்றாக இருப்பாள், தேவாவை விட தங்கையை ஒருவனால் சந்தோசமாக வைத்திருக்க முடியாது.
தன் கண் எதிரிலேயே பல்லவி எப்போதும் இருப்பாள், இனி எப்போதும் அவளை குறித்து, அவள் வாழ்வை குறித்து கவலைக் கொள்ளத் தேவையில்லை என்பது வரை அவன் சிந்தனை சென்று கொண்டிருந்தது.
மிகவும் மகிழ்வாக உணர்ந்தான் சூர்யா. ஆனால், அந்த மகிழ்ச்சியை நீர்க் குமிழிப் போல தேவாவின் ஒற்றை வார்த்தை பட்டென உடைக்கப் போகிறது என்று அவன் கற்பனை செய்துக் கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மெல்ல அவன் கையை பூமாலை மறைவில் பற்றி சுரண்டிய பாரதி, “என்ன விஷயம் சூர்யா? தேவா என்ன பேசினார்?” என்று கேட்க,
சூர்யாவிற்கு அப்போது தான் பாரதியும், அவளது அண்ணனிற்காக பல்லவியை கேட்டது நினைவு வர, மிக கவனமாக அவளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தான் அவன்.
“ஒன்னுமில்ல பாரதி” என்றவனை கண்களில் தொக்கி நின்ற கேள்வியுடன் பார்த்தாள் அவள்.
“அவர் பேசிட்டு போனதில் இருந்து ஸ்மைல் பண்ணிட்டே இருக்கீங்க. அப்படி மனசுல என்ன ஓடுது? உங்க ப்ரெண்ட் என்னப் பேசினார்னு தெரிஞ்சுக்க கேட்டேன். வேற ஒன்னுமில்ல” என்றாள் தன்னிலை விளக்கமாக,
“அது நமக்கு ஹனிமூன் பேக்கேஜ் கிஃப்ட் பண்ணி இருக்கான். பிளைட் டிக்கெட்ஸ் எந்த தேதியில் புக் பண்ணனும்னு கேட்டான். இப்ப அதுவாடா முக்கியம், அப்புறமா சொல்றேன் சொன்னேன்.” என்று தேவா எப்போதோ கேட்ட கேள்வியை இப்போது கேட்டதாக சொன்னான் சூர்யா.
ஹனிமூன் என்றதும் அவள் முகம் சிவந்து, முன்னர் பேசிக் கொண்டிருந்த விஷயம் அவளுக்கு அப்படியே மறந்துப் போனது. அவனுக்கும் அது தானே வேண்டும், அப்பாடா என்று பெருமூச்சு விட்டு, பார்வையை முன்னே பதித்து நிமிர்ந்து நின்றான் சூர்யா.
மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. ரிசப்ஷன் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, விருந்தினர்கள் எல்லாம் சென்று, நெருங்கிய உறவுகளும், வீட்டினரும் மட்டுமே மண்டபத்தில் இருந்தனர்.
மணமக்கள் அப்போது தான் உணவருந்த அமர்ந்தனர். அவர்களுடன் கூடவே, வித்யா, சங்கவி, தேவா, பல்லவி என்று குடும்பத்தின் இளைய உறுப்பினர்களும் அமர்ந்தனர்.
அனைவருக்குமே நல்லப் பசி. ஆனாலும், பேசி சிரித்துக் கொண்டே உணவை உண்டுக் கொண்டிருந்தனர்.
“பல்லவி, இளநீர் பாயாசம், மெனுல நீ தானே சேர்த்த?” என்று தேவா கேட்க, இடியாப்பத்தை காய்கறி குருமாவில் பிரட்டி வாயில் இட்டுக் கொண்டே தலையை அசைத்தாள் பல்லவி.
“உனக்கு பிடிக்காது இல்ல? அப்புறம் ஏன்…” என்று அவன் கேள்வியை முடிக்கும் முன்னே,
“ஆனா, உனக்கு பிடிக்குமே தேவா” என்றாள் பல்லவி.
தங்கையின் மறுபக்கம் அமர்ந்திருந்த சூர்யா உணவோடு, புன்னகையையும் சேர்த்து மென்று விழுங்கினான்.
“பைனாப்பிள் கேசரி வித்யா, சங்கவி கா ரெண்டு பேருக்கும் பிடிக்கும். அதனால, அதையும் சேர்த்தேன். அப்புறம் அண்ணாக்கு பிடிச்ச பட்டாணி புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தி சென்னா, உனக்கு பிடிச்ச இடியாப்பம், எனக்கு பிடிச்ச வெள்ளைப் பணியாரம், கார சட்னி…” என்று பல்லவி அடுக்கிக் கொண்டே போக,
“அடிப்பாவி, மெனு கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு போட சொன்னா, நீ வீட்டு ஆளுங்களுக்கு போட்டு இருக்க” என்று வித்யா சொல்ல,
“நம்ம வீட்டு விசேஷம் வித்யா. நமக்கு பிடிச்சது இல்லனா எப்படி?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க, சூர்யாவின் மனதில் தங்கை தேவாவிற்காக செய்தது மட்டுமே ஆழமாக பதிந்தது.
சட்டென்று நண்பனின் கேள்வியும் நினைவில் வர, “பல்லவி என்னைக்கும் உனக்கு தான் தேவா. இதே போல ஒரு நல்ல நாள்ல இதை விட பிரம்மாண்டமா உங்க கல்யாணத்தை நடத்தி, அவளை உனக்கு தாரை வார்த்து தரேன் தேவா” என்று மனதினுள் சொல்லிக் கொண்டான் சூர்யா.
அவனுக்கு உணவு உள்ளே இறங்கிய வேகத்தில், பழைய நினைவுகள் மேலேழுந்து வந்தன.
அவனுக்கும், தேவாவுக்கும் அப்போது பதினொரு வயது. ஐந்தே வயதான பல்லவி தேவாவின் வீட்டில் இருந்து கொண்டு தங்கள் வீட்டுக்கு வர மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்ய, “இன்னும் கொஞ்சம் நேரம் பாப்பா அங்க விளையாடட்டும் சூர்யா. அம்மா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் கஸ்தூரி.
ஆனால், மணி இரவு எட்டை நெருங்கியும் வீட்டிற்கு வர மறுத்து பல்லவி ஒரே அழுகை, அடம்.
கஸ்தூரி இரு முறை சென்று அழைத்துப் பார்த்தார், சேதுராமன் ஒரு முறை சென்று கெஞ்சி அழைத்தார். சூர்யா இரு வீட்டிற்கும் இடையே வேண்டுதல் போல நடையாக நடந்துக் கொண்டிருந்தான். ஆனால், பல்லவி அங்கிருந்து நகர்வதாகவே இல்லை.
எட்டு முப்பது மணிக்கு அவன் குடும்பமே தேவாவின் வீட்டிற்கு செல்ல, அப்போதும் ஓடிப் போய், வித்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு தேவாவின் பின்னே ஒளிந்தாள் பல்லவி.
“பல்லவி குட்டி, என்ன பழக்கம் இது? அம்மா, அப்பா எவ்வளவு நேரமா கூப்பிடுறாங்க. வீட்டுக்கு போடா. நாளைக்கு வருவ” என்று கனிமொழி சொல்ல, உதடு பிதுக்கி, அழுகைக்கு தயாராகி கொண்டே தலையை எல்லா பக்கமும் அசைத்தாள் பல்லவி.
“என்னடா பாப்பா, வா வீட்டுக்குப் போகலாம்” என்று அழைத்த தந்தையின் முகம் பார்க்க மறுத்தாள் அவள். ஆனால், லேசாக எட்டி எட்டி சங்கவியை கலவரமாக பார்த்தாள் பல்லவி.
“அக்கா அடிச்சாளா டா?” என்று கஸ்தூரி கேட்க, சிறியதாக விசும்பினாள் பல்லவி.
பத்தே வயதான சங்கவி, கண்களில் நிறைந்திருந்த பயத்துடன் பெற்றோரையும், தங்கையையும் மாறி மாறிப் பார்த்தாள்.
பல்லவி வாயை திறக்கவே இல்லை. ஆனால், தேவா தான் அவளுக்காக பேசினான்.
“அவளை குப்பை தொட்டியில் இருந்து எடுத்துட்டு வந்தீங்கன்னு சொல்லி இருக்கா சங்கவி. இன்னைக்கு என் முன்னாடி சொல்லி பல்லவியை அழ வச்சா, வேணும்னா வித்யாவை கேளுங்க அத்த. அவளும் இருந்தா அப்போ…” அப்படி ஒரு கோபம் அவன் குரலில், கஸ்தூரி திரும்பி மூத்த மகளை ஆயாசத்துடன் பார்த்தார்.
கனிமொழி மெல்ல சிரித்து, “அது சும்மா விளையாட்டுக்கு தேவா. அவங்க பாப்பா தானே? அவ தங்கச்சியை உரிமையா அப்படி கிண்டல் பண்ணி இருக்கா. அதுக்குப் போய்..” அவர் சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் இடையிட்டான் தேவா.
“அதுக்கு? குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்துட்டு வந்தாங்க சொல்லலாமா மா? அன்னைக்கு ஒரு கூடை மாம்பழத்துக்கு வாங்கினோம்னு சொல்லி இருக்கா? அப்புறம் ஹாஸ்பிட்டல்ல இருந்து தூக்கிட்டு வந்தோம். உனக்கு யாரும் இல்லைனு சொல்லி இருக்கா…” என்று அவன் குற்றச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போக, பெரியவர்கள் மூவரும் கவலை தோய்ந்த முகத்துடன் சங்கவியை பார்த்தனர்.
அனைவரும் அவளையே பார்க்க, சங்கவியும் அழுகைக்கு தயாராவது தெரிந்தது.
“ஏன் சங்கவி? உன்னோட குட்டி தங்கச்சி தானே? இப்படி எல்லாம் பேசலாமா டா? தப்பு தானே செல்லக் குட்டி. பாப்பா பாவம் இல்ல?” என்று கனிமொழி சொல்லிக் கொண்டிருக்க, வந்த கோபத்திற்கு அப்படியே அவளை அடிக்க கையை ஓங்கிக் கொண்டுப் போனார் கஸ்தூரி.
அவரை கைப் பிடித்து தடுத்து நிறுத்திய கனிமொழி, “விடுங்க அண்ணி. அவளும் சின்னக் குழந்தை தானே?” என்று சொல்ல,
“இது போல எவ்வளவு நாளா சொல்றானு தெரியலையே அண்ணி. இப்போ தேவா சொல்லப் போய் தெரியுது. இல்லனா..” கலங்கிய குரலில் சொன்னார் கஸ்தூரி.
“அட, என்ன அண்ணி நீங்க. நம்ம சின்ன வயசுல இதை விட மோசமா எல்லாம் சொல்லி வம்பு இழுப்பாங்க. ஏதோ சங்கவி தெரியாம சொல்லிட்டா. அவளுக்கு நல்லபடியா எடுத்துச் சொன்னா புரிஞ்சுப்பா. ஆனா, அதை விட்டுட்டு இப்போ அடிச்சு மிரட்டி அவளுக்கு சொன்னோம்னா, வீணா பல்லவி மேல இன்னும் கோபத்தை வளர்த்துப்பா… அவளும் சின்னப் பொண்ணு தானே” என்று மெல்லிய குரலில் அவருக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல, புரிதலுடன் மௌனமாய் தலையசைத்தார் கஸ்தூரி.
சில, பல கெஞ்சல், கொஞ்சல்களுக்கு பிறகு, “வாடா பல்லவி. வீட்டுக்கு போகலாம்” என்று கஸ்தூரி கை நீட்ட, அப்போதும் வரத் தயாராயில்லை பல்லவி. மிரண்ட பார்வையுடன் வித்யாவை மேலும் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளை நோக்கி கையை நீட்டிய கனிமொழியிடம் கூட செல்லத் தயாராயில்லை அவள்.
“அப்பா சாக்லேட் வாங்கித் தரேன் வாடா” என்று சேதுராமன் ஆசைக் காட்ட, ம்ஹூம் அதற்கும் மசியவில்லை பல்லவி.
லேசாக கோபம் துளிர்க்க, “பல்லவி, வா. இங்க” என்று அதட்டினார் கஸ்தூரி.
அவ்வளவு தான், சட்டென நிமிர்ந்த தேவா, “அவ எங்க வீட்டிலேயே இருக்கட்டும் அத்த. உங்க வீட்டுக்கு வந்தா, சங்கவி அவளை அடிப்பா. அழ வைப்பா. அவ எங்க வீட்லயே இருக்கட்டும்.” என்றவன், திரும்பி கனிமொழியை பார்த்து,
“பல்லவியை நாமளே வச்சுக்கலாம் மா. அவ நம்ம வீட்ல இருக்கட்டும். முன்ன நீ கூட சொன்னியே மா, பல்லவி நம்ம வீட்லயே இருந்தா நல்லா இருக்கும்னு” என்று கேட்க, கனிமொழிக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு சங்கடமாகிப் போனது.
“ஆங், அவ எங்க பாப்பா” என்று எட்டி பல்லவியின் கையைப் பிடிக்க முயன்றான் சூர்யா. ஆனால், அதற்குள் வித்யா பல்லவியை தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்துக் கொண்டாள்.
அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த சேதுராமனிற்கு சிரிப்பு வரும் போலிருந்தது. மெலிதாக புன்னகைத்து, “வித்யா, தேவா. ரெண்டு பேரும் இங்க வாங்க” என்று அவர்களை அழைக்க,
அவரை ஏறெடுத்து பார்த்து, “பல்லவியை எங்களுக்கு கொடுத்துடுங்க மாமா. நாங்க அவளை அழாம பார்த்துக்கறோம்” என்றான் தேவா.
“ஆமா, மாமா” என்று வித்யாவும் வேகமாக சொல்ல, இரண்டே எட்டில் அவர்களை நெருங்கி, வித்யாவையும், பல்லவியையும் இழுத்து அணைத்துக் கொண்டார் கஸ்தூரி.
சிறு வயது நினைவுகள் இனிமையாக கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பை கிளப்பி விட, உணவு உண்டு கொண்டிருந்த சூர்யாவிற்கு சிரிப்பில் புரையேறியது.
மெல்லத் திரும்பி நண்பனையும், தங்கையையும் பார்த்தான்.
அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தேவாவின் கேள்வியும், கோரிக்கையும் ஒன்று தான். ஆனால், வார்த்தைகள் தான் மாறி இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
அன்று, “பல்லவியை எங்களுக்கு கொடுத்துடுங்க” என்று கேட்டான். ஆனால், இன்று, “பல்லவியை எனக்கு கொடுத்துடு” என்று கேட்கிறான். அவ்வளவே வித்தியாசம் என்று புன்னகைத்துக் கொண்டான் சூர்யா.
அவனை தனது முழங்கையால் இடித்து, “என்ன ஒரே சிரிப்பா இருக்கு?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள் பாரதி.
“நாளைக்கு இந்நேரம்… நினைச்சேன், சிரிச்சேன்” என்று அவன் பட்டென்று சொல்ல, நாளை இந்நேரம் தங்களுக்கு திருமண இரவு என்பது உரைக்க, “சூர்யா…” என்று அவனின் இடுப்பில் குத்தினாள் பாரதி. சத்தமாக சிரித்தான் சூர்யா.
அடுத்த பத்தாம் நிமிடம் உணவு முடிந்து, புகைப்பட கலைஞர்களிடம் பேசிக் கொண்டே வெளியேறினர் அனைவரும்.
மறுநாள் காலை ஒன்பது – பத்து முகூர்த்தம் என்பதால் நிதானமாக படுக்கைக்கு செல்ல முடிந்தது அவர்களால்.
காலை விடிந்தால் தனது மனைவியாக போகும் பாரதியை சீண்டி, சிவக்க வைத்து பதிலுக்கு அவனும் வெட்கப்பட்டு, என்று நின்றுக் கொண்டிருந்த நண்பனை தொல்லை செய்ய விரும்பாமல் அங்கிருந்து விலகி நடந்தான் தேவா.
“பல்லவி, அண்ணியை கூட்டிட்டு ரூமுக்கு போமா, சீக்கிரம் போய் படுங்க. சூர்யா, வித்யா தூங்க போங்க. காலையில சீக்கிரம் எழுந்திருக்கனும்” என்ற கதிர்வேலனின் குரலில் அவர்கள் சட்டென கலைந்து, மண்டபத்தில் இருந்த அறைகளை நோக்கி நகர்ந்தனர்.