ரிசப்ஷனிலிருந்து மரவீட்டிற்கு மேலே ஏறி வரும்பொழுது நனைந்திருந்தனர் இருவருமே.
“கவனிக்கவே இல்லை பாரேன். மழைல நனைஞ்ச பீலே இல்லை பார்….” என தன் பக்கம் ஆராத்தியாவை திருப்பியவன் அவள் முகம் பார்த்து,
“இந்த இடம் பிடிக்கலையா தியா?…”
“அதெல்லாம் இல்லைத்தான். பிடிச்சிருக்கு…” என்றாள் உடனே புன்னகையுடன்.
“ஹ்ம்ம், என்னோட வா…” என அவளை பின்பக்கம் அழைத்து சென்று தன் கைவளைவில் நிறுத்தியவன் அவ்விடத்தை காண்பிக்க கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சை பசேல் என்று காட்சியளித்தது.
இதுவரை கண்ணில் பட்டும் கருத்தில் படாத அழகியல் இப்போது தான் நடைபயிலும் குழந்தையின் பிஞ்சுக்கால்களை போல மெதுவாய் அவள் மனதில் ஓசையின்றி நுழைந்தது கணவன் மீதான பிரியத்தை போலவே.
திரவியம் அவ்விடத்தை பற்றி சொல்லிக்கொண்டே அவளை பார்க்க அவளும் அவனை தான் திரும்பி பார்த்தாள்.
அழகான புன்னகை தான் அவனின் புன்னகை. கூடவே அவள் அழைக்காமலே வந்தனாவின் நினைப்பும் வந்தது.
“உங்கத்தான் சிரிப்பு, வாரே வாவ். இந்த கோயம்புத்தூர் மட்டும் என்னோடதா இருந்தா அப்படியே எழுதி குடுத்திருவேன் அந்த சிரிப்புக்கு…” என்று சொல்லியது ஞாபகம் வர ஆராத்தியாவின் கண்களிலும் புன்னகை ஒளிர குறும்பாய் ஒரு புன்னகை அவளிதழில் பூத்தது.
திருமணமாகி இத்தனை நாட்களில் இந்த புன்னகையை அவளிடம் முதன் முதலில் அந்த நொடி தான் காண்கிறான் திரவியம்.
தன்னை மறந்து அவனை பார்த்துக்கொண்டே அவளிருக்க இன்னுமே ஒரு விரிந்த புன்னகை திரவியம் முகத்தில்.
“தியா…” என சத்தமில்லாமல் சொல்லியவன் அதனை எதிர்பார்க்கவில்லை அவளிடமிருந்து.
ஆராத்தியா பேச்சு மயக்கத்தில் இருப்பவள் பேசுவதை போலிருக்க சுவாரசியமானவன் மேலும் அவள் என்ன பேசுகிறாள் என ஆவலாக எதிர்பார்த்திருந்தான்.
எங்கே அவளின் இந்த மயக்கநிலையை கலைத்துவிட்டால் எதையும் பகிர மாட்டாளோ என அசையாமல், அசராமல் அவளை பார்த்தபடியே நின்றவன் மனது அடித்துக்கொண்டது.
‘என்னடி இப்படி பார்க்கிற? என்னை வெட்கப்பட வச்சிடுவ போல?’ என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன் விழிகள் ஒளிர்ந்தது.
“என்னவோ பண்ணுது இது…” என அவனின் கன்னகுழியை தன் சுட்டு விரலால் தொட்டு காண்பிக்க இன்னுமே அவன் விழிகள் விரிந்துகொண்டது.
“என்னடா பன்ற தியா?…” என்று ஆசையுடன் கேட்டேவிட அவன் கேட்ட நொடி மெதுவாய் அவனின் கன்னத்தை நோக்கி எம்பி நின்றவள்,
“நிஜம் தான். வந்தனாக்கா கூட சொல்லிட்டே இருப்பாங்க…” என சொல்லியதும் முகம் மாறியவன் பொறுக்கமாட்டாமல் அப்படியே அவளை தூக்கிக்கொண்டு உள்ளே வந்துவிட்டான்.
“அத்தான் விடுங்க, விடுங்க…” என அவன் தூக்கி வந்ததில் சுயம் உணர்ந்து அவனின் கைகளுக்குள் இருந்து விலக,
“வெளில என்ன சொன்ன? இப்ப சொல்லு…” என்றான்.
“என்ன, என்ன சொன்னேன்?…” என்றவளுக்கு அப்போது தான் தான் பேசியதே மண்டையில் உரைத்தது.
“நான் நீ பேசினதை கேட்டா யாரையோ சொல்ற? யார் என்னை என்ன நினைச்சா என்ன? ஏன் என்கிட்டே சொல்ற?….” என்றான் கோபத்துடன்.
“அத்தான்…”
“இங்க நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம். அதுவும் எதுக்கு வந்திருக்கோம், நீ யாரை பேசற தியா?…” என எரிந்து விழுந்தவன் கோபத்தில் மிரண்டு பின்னே நகர்ந்தாள்.
“நல்ல மூட். ஸ்பாயில் பன்ற நீ…” என அங்கிருந்த பெட்டியை டம்மென்று மூடியவன் அறையிலிருந்து வெளியேற விக்கித்த பார்வையுடன் நின்றிருந்தாள் ஆராத்தியா.
மதிய நேரமே அங்கே மாலை கவிழ்ந்ததை போல மெல்லிய இருளை பூசி இருக்க புது இடம் வேறு.
மழை, இடி சத்தம், பளீரிடும் மின்னல் என்று அறையுனுள் வரை ஊடுருவி முதுகுத்தண்டை சில்லிட செய்தது.
“தப்பு, தப்பு…” என தான் வந்தனாவை பற்றி சொல்லியதை எண்ணி தன்னையே அடித்துக்கொண்டாள் ஆராத்தியா.
லேசாய் நனைந்திருந்த உடை மேலும் குளிரூட்ட நடுங்கியபடி திரவியத்தை தேடினாள்.
நிச்சயம் தன்னை தனியே விட்டு சென்றிருக்கமாட்டான் அவன் என்பதில் அவளுக்கு அத்தனை நம்பிக்கை.
“அத்தான், எங்க இருக்கீங்க?…” என அந்த மரவீட்டை சுற்றிக்கொண்டு பின்னால் சென்று தேடியவள் வெளிப்பக்கத்திலிருந்தே முன்பகுதிக்கு வந்தாள்.
முன்னால் இருந்த கதவின் பக்கம் பக்கவாட்டில் ஒரு கயிற்று ஊஞ்சல் இருக்க அவ்விடம் மழையால் நனைந்திருக்க அதில் தான் படுத்திருந்தான் திரவியம்.
லேசாய் ஊஞ்சல் காற்றுக்கும் ஆட ஒரு கையால் முகத்தை மறைத்துக்கொண்டு மழையில் நனைந்தபடி படுத்திருந்தான்.
“அத்தான் என்ன இது? மழை பெய்யுது. உள்ள வாங்க….” என அவன் கையை பிடித்து இழுக்க ,
“பரவாயில்லை. சேர்ந்தே விழுந்துப்போம்…” என அவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டவள் கைகள் அவனின் மேல் படர அணைக்க துடித்த தன் கைகளை முயன்று அசைக்காமல் கூட இருந்துகொண்டான் திரவியம்.
அண்ணார்ந்து பார்க்கையில் அவன் முகத்தின் நீர் துளிகளும், மழை துளிகளும் சேர்த்து கண்களை திறக்கவிடாமல் சொட்டடிக்க பதில் சொல்லும் முன் அவளின் இதழணைத்திருந்தான் திரவியம்.
மெதுவாய் அவளின் முகத்திலிருந்து விலகியவன் முகத்தில் உண்மையில் கோபத்தின் சிறு சுவடுமின்றி தெளிந்திருந்தது.
“புருஷனாவே இருந்தாலும் சின்னதா ஒரு பிடித்தம் இல்லைன்னா இந்த பொண்ணுக்கிட்ட இருந்து எனக்கு சம்மதம் கிடைச்சிருக்காது. நம்மோட தாம்பத்தியத்தோட ஆரம்பம் கடமைன்னு நான் சொல்லமாட்டேன். என்னால உணர முடியுது…” என சொல்லவும் ஆராத்தியாவின் கைகள் அவனின் சட்டையை இறுக்கமாய் பற்றிக்கொண்டது.