“எனக்கு மனசு வலிக்குதே. ஒவ்வொருவாட்டியும் உன் கிட்ட வரப்போ எல்லாம் நீ என்ன நினைக்கிறன்னு உனக்கு பார்த்து பார்த்தே ச்சை. எத்தனை நாள் எத்தனை நாள் இப்படியே நானும் வாழ?…”
“ரெண்டுவருஷம் போகட்டும். கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க ட்ரை பண்ணாலம்ன்னு சொன்னேன் தானே? கேட்டியா நீ? எதுக்கும் கேட்கலை. வீட்டுல கேட்ட உடனே தலையாட்டிடனும். ஏன் என்கிட்ட தானே பேசமாட்ட. மத்தவங்கட்ட சொல்ல என்ன உனக்கு?…”
“ஒரு ஆறுதலுக்கு கூட பக்கத்துல நிக்கலைன்னா நீ என்னடி பொண்டாட்டி? டென்ஷன்னு வரேன். பேச கூட வேண்டாமா. கிட்ட வந்து என் கையை பிடிச்சிருக்கலாமே? எப்பவுமே நானா தான் உன்கிட்ட வரனும், சொல்லனும். இல்லையா?…”
“குடும்பம் குடும்பம்ன்னு என்னை ஏன்டி படுத்தின? ஆசையா பேசமாட்டியா, தானா வந்து அணைச்சுக்க மாட்டியா, என்கிட்ட கோபமா எதுவும் கேட்கமாட்டியான்னு இன்னும் எவ்வளோ நாள் நான் நிக்கனும் இப்படி?…”
“எப்ப பாரு அமைதியா, நீ என்ன ரோபோவா ஸ்விட்ச் போட்டா சிரிக்க, பேசன்னு? என்னதான் நினைச்சிட்டு இருக்க? அதுவும் நேத்து நீ இருந்த பார்…” என்றவன் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீச இன்னும் ஒடுங்கி போய் உடல் நடுங்க நின்றாள்.
திரவியத்திற்கு தெரிந்தது தன் கோபம் அவள் மீதில்லை என்று. ஆனால் இத்தனை நாட்களில் சிறிது சிறிதாய் படிந்திருந்த அதிருப்திகள் எல்லாம் இந்த சூழ்நிலையில் அவள் மீது கோபமாய் உருவெடுக்க அவனின் மொத்த ஆக்ரோஷத்திற்கும் வடிகாலாகி போனாள் ஆராத்தியா.
“புருஷன் சட்டையில சாராய நாத்தம் வருதே, என்னாச்சோன்னு ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா நீ? கதவை திறந்து நான் பக்கத்துல வரவுமே சட்டுன்னு வாயை மூடி பின்னாடி தள்ளி போனப்பவே என்னன்னு கேட்டியா?…”
“அப்போ நான் எப்படி வந்தாலும் உனக்கு கவலை இல்லை. உன்னோடது ஊருக்கும், உன் குடும்பத்துக்கும் என்னோட பொண்டாட்டியா கடமையோட இருந்தா போதும். அவ்வளோ தானா?…”
“எத்தனை ஆசையோட கல்யாணம் பண்ணினேன். உன் பிடிவாதம், உன்னோட பயம். ம்ஹூம். பயம். பயமா உனக்கு? என்னை பார்த்து சொல்லேன் பாப்போம்….” என அதுவரை கத்திக்கொண்டிருந்தவன்,
“உனக்கு என்மேல பயம். அதனால என் பக்கமே வரலை. இதை நான் நம்பனும். இல்லையா?…” என்று கேட்க கண்ணீர் வழியும் விழிகளுடன் அவனை அசையாது பார்த்தபடி நின்றாள் ஆராத்தியா.
“என் மேல உனக்கு பயமா தியா? நோ சான்ஸ். பயம்ன்ற போர்வையில என்னை நீ ஒதுக்கி வச்சிருந்த. வீராப்பு, இடும்பு. பிடிவாதம். இவன்கிட்ட நாம என்ன பேசன்னு தள்ளி வச்சிருந்த. அதுக்கு பேர் பயமா? இப்ப என்னை பிடிக்காத பொண்ணோட என் வாழ்க்கை…” என தண்ணீர் ஜக்கை எடுத்து கீழே வீசினான்.
கண்ணாடி ஜக் சில்லு சில்லாய் சிதறி தெறித்தது திரவியம் வார்த்தையை போல, ஆராத்தியாவின் மனதை போல.
“அத்தனைதடவை சொன்னேன். யார் கேட்டா? வீட்டுல சொந்தம் விட்டுட கூடாது, நீ தான் எனக்கு பொண்டாட்டிய வரனும்னு பிடிவாதம். உனக்கு வீட்டுல சொல்லிட்டாங்களேன்னு மறுக்கமாட்டேன்னு பிடிவாதம். கடைசியில நான் தான் இங்க பலிகடா…” என்றவன் தொய்ந்து போய் சோபாவில் அமர்ந்தான்.
கால் முட்டியில் கைகளை ஊன்றி தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தவன் மூச்சு வேகமாய் வந்தது.
“என்ன வாழ்க்கைடா இது? மூணு மாசமே மூச்சு முட்டிருச்சு. இதுல லைஃப் லாங். ஓஹ் காட்…” என்று சொல்ல குற்றுயிராய் நின்றாள் ஆராத்தியா.
இத்தனை நாட்கள் தன்னை அவன் அனுசரணையாக பார்த்துக்கொண்டிருக்கிறான் என நினைத்திருக்க அவனோ சகித்துக்கொண்டிருந்ததை போல பேச அவள் மனதெல்லாம் ரணம்.
“தீரா என்னடா, என்ன பேசற நீ?…” என ஆதவன் உள்ளே வந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்த திரவியம்,
“ப்ச், நீ எப்போ வந்த?…” என்றான் அதிராமல்.
“எவ்வளோ ஈசியா பேசற நீ? அப்பவே வந்துட்டோம். சரி நாம தலையிட வேணாம்ன்னு பொறுமையா இருந்தா…” என ஆதவன் சொல்ல,
“உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலைத்தான். தியா பாவம்…” என்றான் ரகு.
“தாராளமா உக்கார்ந்து பொறுமையா அவளுக்கு பாவம் பாருங்கடா. யார் வேண்டாம்ன்னா…” என்றவன் ஆராத்தியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான்.
“தியாம்மா…” என ஆதவன் அவளை நெருங்க கண்ணீரை துடைத்தவள் வந்து அமர்ந்துவிட்டாள்.
“எப்படி தியா சொல்லாம இருக்கறது? அதுவும் அத்தான் எப்படி பேசறார்?…” ரகு கொந்தளிக்க,
“ஹ்ம்ம், நம்ம வீட்டுல யாருக்குமே இப்படி சண்டை போடற பழக்கம் இல்லை. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை…” ஆதவனும் சொல்ல,
“அண்ணா ரெண்டுபேரும் பேசாம இருங்க. அவங்க தான் எதோ கோபத்துல பேசிட்டு போனா நீங்களும் சேர்ந்து பதிலுக்கு பேசறதா?…” என்று சொல்லவும் இருவருமே வியந்து பார்த்தனர்.
ஆராத்தியா திரவியத்தை விட்டுக்கொடுக்காமல் பேசியது நிச்சயமாய் அவர்களுக்கு ஆச்சர்யத்தை தான் தந்தது.
‘இதுக்குத்தான் வேண்டாம்ன்னு இருந்தேன். என்னை கட்டி வச்சு இப்ப பாருங்க’ இப்படி ஏதாவது தங்களை சொல்வாள் என தாங்கள் நினைக்க நடப்பதோ வேறாக இருந்தது.
“தப்பு என் மேலையும் இருக்கு. அத்தான் சொல்ற மாதிரி தான் நானும் இருந்தேன். அதான் அவருக்கு கோவம். சரியாகிடும்…” என தனக்கும் சேர்த்தே சமாதானம் சொல்லிக்கொண்டவள் மனதின் வேதனையை மறைத்தாள்.
இத்தனை நாட்கள் தன்னை அவன் எவ்வாறு நினைத்திருக்கிறான் என வாய்மொழியாக கேட்ட பின்பு அந்த பேச்சும் தனக்கு தேவை தான் என நினைத்துக்கொண்டாள்.
ரகுவும் ஆதவனும் அங்கே சிறிது நேரம் இருந்தவர்கள் வீட்டிற்கு போன் செய்து பேசிவிட்டு ஆராத்தியாவிடம் வந்தனர்.
“நீ சொல்றதும் சரி தான் தியா. ஏற்கனவே கோபமா இருக்கான். இங்க வேற பிரச்சனை. போலீஸ் ஸ்டேஷன், கேஸ்ன்னு நிறைய பிரச்சனை. நீ இருந்தா இன்னும் கஷ்டம்…” ஆதவன் சொல்ல,
“ஊருக்கு கூட்டிட்டு போறோம்ன்னு சொன்னேன். இங்க பிரச்சனை எல்லாம் முடியட்டும். உன் கோபமும் குறையட்டும். அப்பறம் பார்ப்போம்…”
“பார்ப்போம்ன்னா?…”
“அப்பறமா பேசிப்போம். இப்ப தியா இங்க இருந்தா சரிவராது…” என ஆதவன் சொல்ல பல்லை கடித்தவன்,
“நீ தியாக்கிட்ட போனை குடு ஆதி…” என்றான் அவன்.
“உன்கிட்ட தான் பேசனுமாம். பேசு…” என மொபைலை கொடுத்துவிட்டு ஆதவன் நகர,
“சொல்லுங்க…” என்றாள் ஆராத்தியா.
“அத்தான் என்ன தொலைஞ்சுட்டானா?…” என இன்னும் குறையாத கோபத்துடன் திரவியம் கேட்டதற்கு அவளிடம் பதிலில்லை.
“உங்கண்ணன் ஊருக்கு கூப்பிடறான். போறியா?…”
“ஹ்ம்ம்..” என்று மட்டும் அவள் சொல்ல இதை எதிர்பார்க்காத திரவியம்,
“கிளம்பிரு. அப்படியே போயிரு. திரும்ப வராதடி…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டான் திரவியம்.
அதனை பிடித்தபடி நின்றவளுக்கு கண்ணீர் துளிகள் உருண்டு விழ சட்டென அதனை துடைத்தவள் மீண்டும் திரவியத்திற்கு அழைத்தாள்.
“அதான் போன்னு உன் தங்கச்சிட்ட சொல்லிட்டேன்ல. இன்னும் என்ன ஆதி?…” என்றவன் கத்தலில் இங்கே காதே வலித்தது ஆராத்தியாவிற்கு.
“நான் தியா…” என்றதும் அவனிடம் மௌனம்.
குரலை செருமிக்கொண்டவள் அழுகை வந்துவிடாதபடிக்கு தன்னை திடப்படுத்திக்கொண்டு மனதில் இருந்தவற்றை சொல்ல சொல்ல திரவியம் அசையாது அமர்ந்திருந்தான்.
“பைனலி தேங்க்ஸ் அத்தான்…” என்றவள் வேறு எதுவும் பேசவில்லை.
அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க துடிக்கும் மனதுடன் அவள் கிளம்பியிருப்பாளா? இல்லையா? என திரவியம் உடனே கிளம்பி வீட்டிற்கு பார்க்க வர கிளம்பித்தான் சென்றிருந்தாள் ஆராத்தியா.
நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கும். தான் ஒன்று நினைத்திருக்க அவள் ஒன்று நினைத்திருந்தாள்.