ஈசன் எல்லாம் பேசி முடித்து வேகமாய் அவர்களிடம் வந்தவன், முத்தரசி அழுவதை கண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க, “எங்களை மன்னிச்சிடுங்க தம்பி..” என்று அந்த நேரத்தில் முத்தரசி கையெடுத்து கும்பிட,
“அச்சோ…. என்ன இது..” என்று கணவன் மனைவி இருவரும் சொல்ல, முத்தரசி இன்னும் இன்னும் அழுதார்..
யாருக்குமே என்ன பேசுவது என்பது தெரியவில்லை, முத்தரசி அழுதபடி இருக்க, லட்சுமியின் கண்களும் கண்ணீர் சுரந்துகொண்டு தான் இருந்தது. ஆனால் மௌனமாய் அழுதாள். ஈசன் மனோஜை இரு முறை அழைத்துப் பார்க்க, அவனோ இவனை யாரோ என்பதுபோல் பார்க்க, அது இன்னும் பேரதிர்ச்சியாய் இருந்தது.
‘என்னாச்சு இவனுக்கு..’ என்று யோசித்து நிற்கையிலேயே, வேல்பாண்டி வந்து, கிளம்பலாம் எல்லாம் முடிஞ்சது என்று சொல்லி,
“ஈசா இதுல நீ ஒரு சைனும், இதுல அண்ணி ஒரு சைனும் போடணும்..” என்று ஒரு பார்மை நீட்ட, என்ன எதேன்றேல்லாம் யாரும் விசாரிக்கவில்லை, கேட்ட இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு கிளம்பினர்..
ஊர் வந்து சேர்ந்த பின், அடுத்தடுத்து எல்லாமே வேகம் தான்.. யார் இருக்கிறார்கள்.. யார் வந்தார்கள் என்றெல்லாம் யாரும் கவனிக்கவில்லை.. நடக்கவேண்டிய எல்லா சம்பிரதாயங்களும் சரியாய் நடந்து முடிக்க, ஈசன்தான் அனைத்தையும் முன் நின்று செய்தான்.
மனோஜ் எதுவுமே உணரும் நிலையில் இல்லை என்பதால், ஈசனே அணைத்து சாங்கியங்களையும் மனோஜை வைத்து செய்ய, பெண்கள் எல்லாம் வீட்டில் இருந்தனர்..
ஆண்கள் அனைவரும் வீடு வந்து சேர, நெருக்கி விடியற்காலை ஆகிட, ஒருவழியாய் பாலாவும் அப்போது தான் வந்து சேர்ந்தான்..
அனைவரும் வீட்டிற்கு வந்ததும், உள்ளே அறைக்குள் அரை மயக்க நிலையில் இருந்த முத்தரசி எழுந்து வேகமாய் தள்ளாடி வந்தவர், மீண்டும் கை கூப்பி “அண்ணே எங்கள மன்னிச்சிடுங்க..” என்று மண்டியிட்டு அழ, கஜேந்திரனுக்கு ஒருமாதிரியாகி போனது..
என்ன சொல்ல என்று தெரியாமல் மரகதம் முகம் பார்க்க, அவரோ “முத்து.. என்ன இது.. எந்திரி.. எந்த நேரத்துல என்ன பேசிட்டு.. நீங்க ரெண்டும் உருப்படியா வந்ததே பெரிய விஷயம்..” என்று லேசாய் அதட்டியபடி எழுப்ப,
“இல்ல மதினி நான் பேசிக்கிறேன்… இனி இழக்க எதுவுமில்ல.. எல்லாம் போச்சு.. என் மகனைப் பாருங்க..” என்றவருக்கு மனோஜ் இப்படியானது பெரும் கவலையாய் போனது.
“சித்தி ப்ளீஸ்.. நாங்க யாரும் எதுவும் நினைக்கல, நீங்க இப்படி அழாதீங்க… முதல்ல எந்திரிங்க..” என்று லட்சுமியும் எழுப்ப,
“இல்ல லட்சுமி.. நான் பேசிக்கிறேன்..” என்றவருக்கு, வேலாயுதம் இறந்ததை விட, தாங்கள் செய்த தவறு தான் இப்படியெல்லாம் நடக்கக் காரணம் என்று மனதில் ஆழமாய் பதிந்து போனது.
“எனக்கும் முதல்ல அவர் என்ன செய்ய போறார்னு தெரியாது லட்சுமி.. இங்கிருந்து கிளம்புறப்போ எனக்கு எதுவுமே சொல்லல.. கேட்டதுக்கும் எல்லா விபரமும் கஜா அண்ணனுக்குத் தெரியும்னு தான் சொல்லி கூட்டிட்டு போனார்.. நாங்க போனது கேரளால எதோ ஒரு ஊர்.. எனக்கு அந்த ஊர் பேர் கூட சரியா தெரியலை… அங்க ஏற்கனவே இவருக்கு பழக்கமான ஒருத்தர் எங்களுக்காக வீடெல்லாம் பார்த்து வச்சிருந்தார்.. பெரிய வீடு… முதல்ல கொஞ்ச நாள் நல்லா இருந்தது.. கார்… பங்களா…. வசதி.. அடிக்கடி டூருன்னு ரொம்ப சந்தோசமா இருந்தது..
இவர் கூட சொன்னார், இனி இப்படிதான் சந்தோசமா இருப்போம்னு.. மனோஜும் முதல்ல எதுவும் கேட்கல.. அப்புறம் தான் தெரிஞ்சது, இவரும், அங்க இருந்த ஆளும் சேர்ந்து துபாய்ல தங்கக் கட்டி வாங்கி இங்க மாத்திவிடுற பிஸ்னஸ் செய்றாங்கன்னு.. ‘அதுக்கேன் இங்க வரணும்.. நம்ம ஊர்ல இருந்தே செய்யலாமேன்னு..’ கேட்டது இவர் சரியா முதல்ல பதிலே சொல்லலை..
அப்புறம் போக போக் தான் தெரிஞ்சது எல்லாமே கணக்குல வராத தங்கம்னு.. ஏற்கனவே இவர் அதுல நிறைய முதல் போட்டிருப்பார் போல.. அந்தாளும் இவருக்கு நம்பிக்கை வர்ற மாதிரி பேசி அங்க வரவச்சிட்டான்.. கஜா அண்ணாக்கிட்ட பேசித்தான் இவர் பணம் வாங்கிட்டு வந்திருப்பார்னு நினைச்சேன்..
அதுவுமில்லைன்னு அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.. மனோஜ் ரொம்ப சண்டை போட்டான்.. நானும் நிறைய சொன்னேன்.. ஆனா அவர் கேட்கவேயில்லை.. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும், போட்ட காசை விட கொஞ்சம் லாபம் பார்த்திட்டு ஊருக்கே போயிடலாம் அப்படி இப்படின்னு எங்களை சமாளிச்சார்..
ஆனா நாள் ஆக ஆக, எங்க கைல இருக்க பணம் முழுசும் அந்தாளு பக்கம் போக, அது நஷ்டம் இது நஷ்டம்னு எங்கக்கிட்ட போய் சொல்லி எங்களை மொத்தமா ஏமாத்திட்டான். உண்மை தெரிஞ்சு அவர் சண்டை போட, முதல்ல எங்களை அது இதுன்னு சொல்லி சமாளிச்சவன் அப்புறம் எங்களை அந்த வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சிட்டான்.
இதெல்லாம் பார்த்ததுல தான் மனோஜுக்கு கொஞ்சம் கொஞ்சமா இப்ப்டியாகிடுச்சு.. முதல்ல அமைதியா இருந்தான்.. அப்புறம் என்னவோ அவனே பேசிக்கிட்டான்.. இப்போ அதுவுமில்ல.. தப்பிக்க எத்தனையோ வழியில முயற்சி செஞ்சும் எங்கனால முடியலை..
கடைசில போலீஸ் எங்களை தேடுதுன்னு தெரியவும், அந்த இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு போய் அடைச்சு வச்சாங்க.. இப்படியே ரெண்டு மூணு இடம் மாத்தி மாத்தி வைக்கிறப்போ தான் கடைசியா குமுளி வந்தோம் அங்க வந்து இவருக்கும் அந்த ஆளுக்கும் ரொம்ப சண்டை.. ஏற்கனவே அந்தாளு மேல நிறைய கம்பளைன்ட் இருக்கு போல, அங்கயும் போலீஸ் வர்றதா தகவல் வரவும், எங்களை நடு காட்ல இறக்கிவிட்டு அவன் தப்பிச்சு போக முயற்சி செய்யவும் இவர் விடாம அவனை பிடிக்கப்போக, அவன் இவரைத் தள்ளி விட்டதுல பாறைல மோதி…” என்று சொல்லிக்கொண்டே வந்தவர், அடுத்து சொல்ல முடியாமல் மீண்டும் அழத் தொடங்க, அனைவருக்குமே புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று..
ஈசனுக்கு இதெல்லாம் ஓரளவு வேல்பாண்டியே சொல்லியிருக்க, மற்றவர்களுக்கோ முத்தரசி சொன்னதை எல்லாம் கேட்டு என்ன பேச என்றுகூட தெரியவில்லை.. சினிமா படங்களில் காணும் காட்சிகளை போல் இருக்க, இதெல்லாம் நிஜம்தானா என்றும் இருந்தது..
பேராசை ஒரு மனிதனை எந்த நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது என்பதற்கு சிறந்த உதாரணம் இதைவிட வேறெதுவும் இல்லை என்பது அனைவருக்கு நன்றாகவே புரிய, மௌனமாய் அமர்ந்திருந்தனர்.
அனைத்தையும் விடுத்து அந்த நேரத்தில் முத்தரசியை தேற்றவே லட்சுமிக்குத் தோன்ற, “சித்தி போதும் சித்தி.. விடுங்க….” என்று சொல்ல,
“எப்புடி லட்சுமி.. எப்படி விட…. நாங்க பண்ணத் தப்புக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.. ஆனா அவர் போனதுமில்லாமல் மனோஜுக்கும் இப்படியாகிப் போச்சே…” என்று அழ,
“சித்தி.. மனோஜ் நல்லாகிடுவான்.. நாங்க எல்லாம் இருக்கோம் தான.. அவனை சரி பண்ணிடலாம்..” என்று ஆறுதல் சொல்ல,
“இல்ல லட்சுமி.. எவ்வளோ பெரிய தப்பு.. நம்பினவங்களுக்கே துரோகம் பண்ணிட்டோம்.. இப்போக்கூட நீங்க அங்க வரலைன்னா எங்க நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தியா.. அவர் அப்படி செத்துக் கிடக்கார்.. இவன் புத்தி பெசகி நிக்கிறான்.. சுத்தி போலீஸ் வந்து நிக்கிது, அந்தாளு தப்பிச்சு போனவனை சுட்டுப் பிடிச்சாங்க.. இதெல்லாம் நடக்கிறப்போ நான் ஒருத்தியா அங்க இருந்தேன்.. அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா…” என்று பெருங்குரல் எடுத்து அழ, அனைவர்க்கும் முத்தரசியின் நிலை என்னவென்று மிக நன்றாகவே புரிந்தது..
அனைவரின் மனமும் பாரமாய் இருக்க, யாருக்கும் பேச்சே வரவில்லை.. முத்தரசி சொன்னதை எல்லாம் ஜீரணிக்கவே நாட்கள் பல ஆகும் போலிருக்க, மௌனமாய் அங்கே பொழுது கழிய, முத்தரசியோ லட்சுமி மீது சாய்ந்தபடி அழுதுகொண்டே இருந்தார்..
அத்தனை நேரம் அமைதியாய் இருந்த ஈசன், மெதுவாய் சென்று முதரசியின் அருகே அமர்ந்தவன்,
“அத்தை.. தைரியமா இருங்க.. நடந்ததை எல்லாம் விடுங்க.. நாங்க இருக்கோம்.. உங்களை அப்படியே விட்டிட மாட்டோம்.. மனோஜ் இனி எங்க பொறுப்பு.. போனதெல்லாம் போகட்டும்..” என்று ஆறுதல் சொல்ல, முத்தரசியோ அப்போதும் மன்னிப்பை வேண்டி கரம் கூப்பினார்..
வேலாயுதம்.. இருப்பதை விட்டு பறப்பதற்கு பேராசை கொண்டார்.. இப்போது அவரே இல்லை. பணம் பணம் பணம் என்று தன்னை நம்பிய மனிதர்களுக்கு துரோகம் செய்து இப்போது பிணமாய் திரும்பினார். அவர் மனதில் ஏற்பட்ட பேராசை எத்தனை பேரின் வாழ்வை இப்போது மாற்றிவிட்டது. ஈசனும் லட்சுமியும் நன்றாகிவிட்டாலும், இப்போது பாதிக்கப்பட்டது அவரின் மனைவியும் மகனும் தானே..
வாழ்க்கை யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்று யாருக்குமே தெரியாது.. ஆனால் இருக்கும் பொழுதுகளை முடிந்த அளவு நியாயமாய் கழித்திட வேண்டும்.. கஜேந்திரன் அவர் தொழில் நியாயம் தர்மம் கடைப்பிடித்தினால் தான் வாழ்வில் பெரும் சறுக்கல் வந்தபோதும் சட்டென்று நிமிர்ந்து நிற்க முடிந்தது. அவர் பிள்ளைகளும் தலை நிமிர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வர முடிந்தது..
ஆனால் வேலாயுதம் செய்த செயல், இனி அவர் தலைமுறைக்கும் எப்படியான ஒரு பெயரைத் தேடிக்கொடுத்துவிட்டது…