பல்லவி கண்களில் கேள்வியுடன் அவர்களைப் பார்த்தாள். அவளின் அம்மா கஸ்தூரி அங்கிருக்க, கனிமொழியின் கைப் பிடித்து கொண்டு தேவாவின் வீட்டிற்குள் சென்று, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள் அவள்.
பயணப் பெட்டிகளை கொண்டு வந்து ஹாலில் வைத்து விட்டு, தேவாவும் அவளின் பக்கத்தில் அமர்ந்தான்.
கஸ்தூரி, கனிமொழி இருவருமே அதுவரை ஏதோ முக்கியமான வேலையில் ஈடுபட்டு இருந்திருப்பார்கள் போலும், அவர்கள் முன்னே பேனாவும், பேப்பரும் இருக்க, கண்ணை சுருக்கி அவர்களைப் பார்த்தாள் பல்லவி.
“புது ஹாஸ்பிட்டல் எப்படி போகுது தேவா?” என்று கஸ்தூரி கேட்க, தேவா பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
கனிமொழி, பல்லவியிடம் பேசிக் கொண்டிருக்க, வித்யா அனைவருக்கும் தேநீர் எடுத்துக் கொண்டு வந்தாள்.
அந்நேரம் கதிர்வேலனும், சேதுராமனும் ஒன்றாக வந்து அவர்களுடன் இணைந்து கொள்ள, பல்லவியின் விழிகள் தானாக விரிய, கேள்வியாக திரும்பி தேவாவை பார்த்தாள். ஆனால், அவனோ அவளை கண்டுக் கொள்ளவேயில்லை.
அப்பா, மாமா எல்லாம் வேலையை விட்டுட்டு வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால், ஏதோ முக்கியமான விஷயம் என்று அவளுக்கு புரியவே செய்தது. ஓரளவு சூழ்நிலையை சரியாக கணிக்க முடிந்தது அவளால்.
வித்யா காலி தேநீர் ட்ரேயுடன் சோஃபாவில் சாய்ந்து நிற்க, அனைவரும் தேநீரை அருந்தத் தொடங்கினர்.
கனிமொழி, கதிர்வேலனிடம் எதையோ பேசச் சொல்லி, கண் காட்டிக் கொண்டிருக்க, வித்யா சிரிப்பை அடக்குவது நன்றாக தெரிந்தது.
ஒரு மிடறு தேநீரை நிதானமாக அருந்திய பல்லவி,
“டீ நல்லா இல்ல. எனக்குப் பிடிக்கல. ஆனா, மாப்பிள்ளை பையனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த கல்யாணத்தில் எனக்கு முழு சம்மதம். நீங்க மேல ஆக வேண்டிய காரியத்தை பேசுங்க மாமா” என்று கதிர்வேலனை பார்த்து, பல்லவி சொல்ல, குடித்துக் கொண்டிருந்த தேநீர் வெளியில் வந்து விடாமல் இருக்க, பட்டென்று கையால் வாயை மூடினான் தேவா.
மற்ற அனைவரும் வெடித்து சத்தமாக சிரிக்க ஆரம்பித்திருந்தனர்.
“பல்லவி…” என்று சிரித்துக் கொண்டே மகளை அதட்டினார் கஸ்தூரி.
“அட விடுங்க, அண்ணி. நாம அதைப் பத்தி பேச தானே தயங்கிட்டு உட்கார்ந்து இருந்தோம். இப்போ அவளே சம்மதம் சொல்லிட்டா. அப்புறம் என்ன? அவ்வளவு தான். சந்தோசமா, கல்யாண வேலையை கவனிக்க வேண்டியது தான்” என்று எப்போதும் போல அவளுக்கு ஆதரவாக பேசினார் கனிமொழி.
கன்னம் குழைய அவரைப் பார்த்து சிரித்த பல்லவி, திரும்பி தேவாவை பார்த்து மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம், கண் சிமிட்டினாள். கண்களால் சிரித்தான் அவன்.
“எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரமாச்சு மாமா. நீங்க பெரியவங்க பேசிக்கோங்க. நான் நைட் வந்து உங்ககிட்ட பேசுறேன். எதுனாலும், எனக்கு மொபைல்ல கால் பண்ணுங்க மாமா” என்று தேவா எழுந்து கொள்ள முயற்சிக்க, சேதுராமன் எழுந்து அவனுக்கு அருகில் வந்தார்.
அவனின் கைப் பிடித்து,
“தை மாசம், முதல் வாரத்தில வர்ற முகூர்த்த நாள்ல கல்யாணத்தை வச்சுக்கலாம் இல்ல மாப்பிள்ளை? உங்களுக்கு லீவ் கிடைக்கும் தானே?” என்று கேட்க,
“மாமா, நீங்க முதல்ல என்னை தேவான்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க.” என்றவன்,
“லீவ் கிடைக்கும் மாமா. நான் இப்பவே சொல்லி வைக்கறேன்” என்றான்.
“சரிப்பா” என்றார் சேதுராமன்.
அம்மா, அப்பாவை பார்த்து தலையை அசைத்து விட்டு, அறைக்குள் சென்று மறைந்தான் தேவா.
பல்லவியும் எழுந்துக் கொண்டாள். விழியால் வித்யாவை அழைத்து, “நானும் நம்ம வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் தூங்கறேன் மா. நீங்க பேசுங்க” என்று சொல்ல,
“சரிடா. ஏதாவது சாப்பிட்டு படு” என்றார் கஸ்தூரி.
“ஏற்கனவே சாப்பிட்டேன் மா. தேவா வர்ற வழியில ப்ரேக்பாஸ்ட் வாங்கி தந்தான்” என்று விட்டு, வித்யாவுடன் அவளின் வீட்டை நோக்கி நடந்தாள் பல்லவி.
வீட்டை அடைந்து, உடை மாற்றி, படுக்கையில் சரிந்தாள்.
வித்யா அவள் தூங்கப் போகிறாள் போல என்று பார்த்துக் கொண்டிருக்க, “அப்புறம் வித்யா, என்ன நடந்தது? எப்படி நடந்தது? சொல்லு கேட்போம்” என்று கேட்க,
“அதானே, பாத்தேன்” என்றாள் வித்யா.
“பிளீஸ், சொல்லு வித்யா” என்று அவள் கெஞ்சிக் கேட்க,
“நேத்து நைட்டு தேவா ண்ணா கால் பண்ணான். உங்க வீட்ல போய் உன்னை பொண்ணு கேட்க சொல்லி அம்மா கிட்ட சொன்னான். உங்க கனி அத்தையை பத்தி தான் உனக்கு நல்லா தெரியுமே. அண்ணாவை அத்தனை கேள்வி. உனக்கு முழு சம்மதம்னு தெரிஞ்சதும், அவங்களை கையில பிடிக்க முடியல. துள்ளி குதிக்காத குறை தான். அந்த நேரத்துல சாமி கும்பிட்டு, வேண்டுதல் எல்லாம் வச்சு… ஷப்பா..
அப்புறம் ஒரு வழியா நார்மல் ஆகி, உடனே அப்பாக்கு கால் பண்ணி, அவரை வீட்டுக்கு வர வச்சு, உங்க வீட்டுக்கு வெத்தலை, பாக்கு, பூ, பழத்தோட போனோம்.
அங்க பார்த்தா, உங்க வீட்டு ஆளுங்க, நம்ம வீட்டுக்கு வர, குடும்பமா வெளில வந்துட்டு இருக்காங்க” என்று வித்யா சொல்ல, பல்லவிக்கு சிரிப்பு தான் வந்தது.
முன் தினம் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது, தேவா வீட்டிற்கு பேசி இருப்பான் என்பது அவளுக்கு புரிந்தது.
“எங்க வீடு எப்படி வித்யா? அவங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவள் கேட்க,
“தேவா உன்னை விரும்பி கல்யாணம் பண்ண கேட்டான்னு, சூர்யா வீட்ல சொல்லி இருப்பான் போல” என்றவள் சத்தமாக சிரிக்க, பல்லவி அவளை கேள்வியாக பார்த்தாள்.
இதுவே அவளுக்கு புது செய்தி தான்.
“அதுக்கு ஏன் சிரிக்கற வித்யா?”
“உங்க அப்பா, ஏன்டா தேவா கேட்ட பிறகுமா, அந்த பிரவீன் பையனுக்கு பல்லவியை பேசினன்னு உங்க அண்ணா முதுகுலயே ஒன்னு போட்டு இருக்கார். அப்புறம் சூர்யா, அவங்களை சமாதானப்படுத்தி, நம்ம வீட்டுக்கு பேச கிளம்பி வர, எதிர்க்க நாங்க போய் நின்னோம்.
முறைப்படி மாப்பிள்ளை வீடு தானே, பொண்ணு கேட்டு போகனும். சோ, அப்படியே இந்த வீட்டில் உட்கார்ந்து கல்யாணம் பேசியாச்சு. தேதி எல்லாம் கூட செலக்ட் பண்ணியாச்சு. ஐயர், மண்டபம் இதெல்லாம் எந்த தேதியில் கிடைக்குதோ அன்னைக்கு கல்யாணம் வைக்கற பிளான். இன்னும் பத்து, பதினைந்து நாள் தான் இருக்கு” என்று வித்யா சொல்ல, திரும்பி குப்புறப் படுத்துக் கொண்டாள் பல்லவி.
“எனக்கு தூக்கம் வருது. நீ போ, வித்யா” என்று அவள் சொல்ல,
“சேட்டை உனக்கு” என்று செல்லமாக அவளின் தோளில் அடித்தாள் வித்யா.
“என்னை, இனிமே அண்ணி சொல்லு வித்யா. இன்னும் பத்தே நாள்ல, நான் உனக்கு அண்ணன் வைஃப்” என்று பல்லவி கறார் குரலில் சொல்ல, வாய் விட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்திருந்தாள் வித்யா.
அடுத்து வந்த தினங்களில் திருமண வேலைகள் மளமளவென நடக்க ஆரம்பித்தன.
தை மாதத்தில் இருந்த முதல் முகூர்த்த நாளிலே திருமணத்தை வைத்திருந்தனர்.
இடையில் வெறும் பனிரெண்டு நாட்களே இருக்க, திருமண ஜவுளி, நகை எடுக்க என்று பெண்கள் அலைய, இதர வேலைகள் அனைத்தையும் ஆளுக்கொன்றாக இழுத்துப் போட்டு ஆண்கள் கவனித்தனர்.
கஸ்தூரி மூத்த மகளை அலைபேசியில் அழைத்து, தங்கையின் திருமணத்திற்கு உடனே சென்னை கிளம்பி வர சொல்ல, அவளோ பிடிவாதமாக வர மறுத்தாள்.
வேறு வழியின்றி கடைசியில் பல்லவி தான் சங்கவியை அழைக்க வேண்டி இருந்தது.
சங்கவி எடுத்ததும், “என்கிட்ட பேசாத பல்லவி. நான் எத்தனை சாரி சொன்னேன். ஆனா, நீ? என்கிட்ட பேசவே இல்லல்ல?” என்று அழுகுரலில் சொல்ல,
“சாரி கா. இனி பேசறேன்” என்றாள் பல்லவி, சமாதான கொடியை அசைத்து,
“ஒன்னும் வேணாம் போ. உனக்காக, நான் அந்த பிரவீன் மண்டையை எல்லாம் உடைச்சேன். ஆனா, நீ? பேசாத, என்கிட்ட” என்று மேலும் முறுக்கி கொண்டாள் சங்கவி.
பல்லவி இப்போது அதைப் பற்றி பேச விரும்பவில்லை தான். ஆனாலும், பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில், தொண்டையை செருமி கொண்டாள்.
“அக்கா, நீ எத்தனையோ முறை என்னை வலிக்க அடிச்சு இருக்க. கீழ தள்ளி காயப்படுத்தி இருக்க. திட்டி இருக்க. ஆனா, அப்போ எல்லாம் நான் இவ்வளவு கோபப்பட்டது இல்ல. ஏன்னா, எனக்குத் தெரியும். அதெல்லாம் நீ பொறாமையில், கோபத்தில் பண்றன்னு.
ஆனா, அன்னைக்கு.. நீ கூட இருந்திருந்தா அவனுக்கு என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண தைரியம் வந்திருக்குமா கா? நீயே சொல்லு” என்று பல்லவி கேட்க, சங்கவியிடம் பதிலில்லை.
“கையை தான் பிடிச்சான். அதுக்கே அவ்வளவு அருவெறுப்பா இருந்தது கா. வேற ஏதாவது தப்பா டச் பண்ணி இருந்தா.. என்னால அவ்வளவு ஈசியா அதில இருந்து வெளில வந்திருக்க முடியாது இல்ல கா?” பல்லவி உடைந்த குரலில் கேட்க,
“சாரி, சாரி டா பாப்பா. அக்கா வேணும்னு பண்ணலை டா. எப்பவும் உன்கிட்ட இருந்து ஒதுங்கியே இருந்து பழகிடுச்சு எனக்கு. இனி, இப்படி பண்ண மாட்டேன் டா. சத்தியமா சொல்றேன் பாப்பா” என்று அழுது கொண்டே சங்கவி சொல்ல,
“ஓகே கா. அழுதது போதும். இப்போ சிரி, உடனே என் கல்யாணத்துக்கு கிளம்பி வா. என் கூடவே நீ இருக்கணும். பிளீஸ் வா கா” என்று பல்லவி சொல்ல, மறுநாள் மாலை மும்பைக்கு “பை” சொல்லி விட்டு, மகளுடன் சென்னை வந்திறங்கி விட்டாள் சங்கவி.
அவளின் கணவருக்கு விடுமுறை கிடைக்காததால், திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்னர் அவர் வருவதாக திட்டம்.
அன்று காலை மணமக்களுக்கு முகூர்த்த உடைகள் எடுத்து விட்டு, மதியம் அப்படியே பல்லவிக்கு பட்டு சேலைகள் சிலவும், மற்ற வகைகளில் சில, பல சேலைகளையும் எடுத்துக் கொண்டிருந்தனர் பெரியவர்கள்.
அவளும், தேவாவும் மட்டும் அவளுக்கு பிடித்த விதமாக, சுடிதார், டாப்ஸ் என்று தனியாக வாங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த வேலை முடிய மாலை ஆகியிருந்தது.
பெரியவர்கள் சூர்யாவின் காரில் சென்று விட, பல்லவி தேவாவின் காரில் ஏறிக் கொண்டாள்.
அவர்கள் வீட்டை நெருங்க, மழை பூந்துறலாக பொழியத் தொடங்கி இருந்தது. இருவரின் முகத்திலும் தன்னிச்சையாக வந்து அமர்ந்தது புன்னகை.
அந்த தூறலில் கைக் கோர்த்து நன்றாக நனைந்து கொண்டே வீட்டிற்குள் சென்றனர்.
பல்லவி இருவருக்கும் தேநீர் எடுத்துக் கொண்டு மாடி ஏறிப் போக, ஏற்கனவே அவளுக்காக அங்கு காத்திருந்தான் தேவா.
அவனை நெருங்கி நின்று, அவன் கையில் தேநீர் கோப்பையை கொடுத்தவள்,
“எனக்கு மழையை முதல் முதலில் நீ தான் அறிமுகப்படுத்தின தேவா” என்றாள் பல்லவி.
மெல்ல திரும்பி அவளை புருவம் உயர்த்திப் பார்த்தான் தேவா.
“எனக்கு நினைவு தெரிஞ்சு, உன் கைப் பிடிச்சு தான் முதல் மழைத் துளியை ஸ்பரிசித்தேன் தேவா. அந்த குளுமையும், சிலிர்ப்பும், மனதை மயக்கிய மண் வாசமும், மழையில் ரொம்ப ரொம்ப அழகா பளிச்சுன்னு தெரியற இந்த உலகமும் ரொம்ப பிடிச்சது.
மழையை எப்போ இவ்வளவு காதலிக்க தொடங்கினேன்னு எனக்குத் தெரியல. எவ்வளவு யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வரல தேவா.
அது போல தான் உன் மேலான அன்பும். என் வாழ்க்கையில் மழைப் போல எல்லாத்தையும் அழகாக்கினவன் நீ.
என் மழை நீ, தேவா. இந்த பல்லவி, தேவாவை தானே சரணடைவா? மழை மண்ணை சேர்வது போல, நான் உன்னை சேர்வது தானே….” அவ்வளவு தான். அவளை அப்படியே இறுக்கமாக தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் தேவா.
அவன் மனம் நெகிழ்ந்திருந்தது. மிகவும் உணர்ச்சிகரமாக உணர்ந்தான். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் ஏன் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்ற எண்ணமே அவனை மிரட்டியது.
பல்லவியின் முகம் நிமிர்த்தி, மீசை அழுந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டான் தேவா.
“மழை சீசன் முடியப் போகுது தேவா. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பல்லவி கேட்க, இதழ் பிரித்து அழகாக சிரித்து அவள் நெற்றியில் முட்டினான் அவன்.
அவள் அப்படியே அமைதியாக நிற்க, “ஆர் யூ சீரியஸ் பல்லவி?” என்று கேட்க,
“ம்ம்ம்” என்று தலையை ஆட்டினாள் பல்லவி.
“என்னடா சொல்ற பல்லவி. கல்யாணத்துக்கு இன்னும் ஆறு நாள் தான்டா இருக்கு. வெயிட் பண்ணுவோம்” என்றவனின் வார்த்தைகளை தலையை அசைத்து மறுத்தாள் பல்லவி.
“ப்ச், தேவா. மழையில் கல்யாணம் தான் கேட்டேன். மழையில் நனைஞ்சுட்டே உன் கைப் பிடிச்சு, கழுத்துல பன்னீர் ரோஜா, மல்லிப்பூ மாலையோட, பட்டுச் சேலை கட்டி, நீயும் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமா, உன் கைப் பிடிச்சு, புது தாலி மின்ன நடக்கணும் எனக்கு. ஆனா, தை மாசம் மழை நின்னுடும் இல்ல?” என்று அவள் தீவிரமாக பேசிக் கொண்டு செல்ல, தேவாவின் முகத்தில் வருத்தத்தின் ரேகைகள்.
அதைப் பார்த்த பல்லவி, சட்டென்று அவன் கைப் பிடித்து, “இட்ஸ் ஓகே தேவா. நான் சும்மா, என் ஆசையை சொன்னேன்.” என்று சொல்ல அவன் முகம் அப்போதும் தெளியவில்லை.
“தேவா, உண்மையா வீட்ல ஃபிக்ஸ் பண்ண தேதியில் கல்யாணம் பண்ணிக்கலாம். என் மழை நீ தான் சொன்னேன் இல்ல. நீ, என் கூட இருந்தா போதும். வேற எதுவும் வேணாம்” என்று சொல்லி, மீண்டும் அழுத்தமாக அவனிடம் இருந்து முத்தம் வாங்கிக் கொண்டாள் பல்லவி.
பதிலுக்கு அவன் கழுத்தை வளைத்து, அவன் கன்னத்தில் தன் இதழ்களை புதைத்தாள் பல்லவி.
அவர்களை சுற்றி இருந்த அத்தனையும் அப்படியே தான் இருந்தது. அவர்கள் உலகில் எதுவும் மாறவில்லை. ஆனால், அவர்கள் இருவருக்குள்ளும் எல்லாமே மாறி இருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வை தொடங்கி, தொடுகை வரை அனைத்தும் மாறி இருந்தது.
கண்களால் பேசி, சிரித்துக் கொண்டனர். அவர்களின் கண்கள் சந்திக்கும் போதே, இதழ்கள் தாமாக புன்னகைத்து கொண்டன. காரணமற்று கைப் பற்றிக் கொண்டனர்.
அவ்வப்போது அணைத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
வெகு இயல்பாக அவர்களை அறியாமலேயே அவர்கள் உறவு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தது.
மனதளவில் அந்த மாற்றத்தை அவர்களும் இயல்பாக ஏற்றுக் கொண்டனர்.
நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைய திருமண நாளும் வந்து சேர்ந்தது.
மிகப் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தினார் கதிர்வேலன். அவரின் ஒரே மகனின் திருமணம் அல்லவா? அதுவும் அவருக்கு பிரியமான பல்லவி உடன். கேட்கவும் வேண்டுமா?
மேலும், இத்திருமணம் தான், இரு வீட்டினருக்கும் கடைசி திருமணம் என்பதால் அத்தனை செலவு செய்திருந்தனர்.
தேவா, பல்லவி இருவருக்குமே அதில் விருப்பமில்லை. ஆனாலும், பெரியவர்களை அவர்கள் தடுக்க முற்படவில்லை.
பெற்றோர், குடும்பத்தினர், சொந்த பந்தங்களின் ஆசீர்வாதத்தோடு, குறித்த முகூர்த்தத்தில் பல்லவி, தேவா இருவரும் திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.
சேதுராமன், கஸ்தூரி கண்கள் பனிக்க மணமக்களை ஆசிர்வதித்தனர்.
கதிர்வேலன், கனிமொழி ஆசிர்வதித்து மணமக்களை சேர்த்து அணைத்துக் கொண்டனர்.
கனிமொழி, பல்லவியின் முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் பாசமாய் முத்தமிட்டு அவளை இறுக அணைத்து விடுவித்தார்.
அங்கிருந்த அனைவரையும் காட்டிலும் அவரின் முகம் தான் மிக பிரகாசமாக இருந்தது.
சூர்யா தனக்கு மிகப் பிரியமான இருவரின் திருமணம், தன் வீட்டு திருமணம் என்பதால் ஓடி, ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
வித்யாவை பற்றி சொல்லவே வேண்டாம். பல்லவி அணிந்திருந்த அதே நிறத்தில் சேலை உடுத்தி, அவளோடு ஒட்டிக் கொண்டே திரிந்தாள் அவள். ஒவ்வொன்றையும் அவளுக்காக பார்த்து, பார்த்து செய்தாள் வித்யா.
தேவா, இப்போது அவளின் கணவன். பல்லவிக்கு நினைக்கையிலேயே தித்தித்தது.
கண்களால், கையின் அழுத்தத்தால், அவள் நலனை அத்தனை பேரின் முன்னிலும், அவளுக்கு மட்டும் புரியும் படியாக விசாரித்து கொண்டே இருந்தான் தேவா.
உண்மையில் தான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றே பல்லவிக்குத் தோன்றியது.
கண்களை சுழற்றி பார்த்தாள். அவளுக்கு நெருக்கமான அத்தனை முகங்களிலும் அளவில்லா மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது.
ஒரு திருமணம் தங்களை சுற்றி இருந்த அத்தனை பேர் முகத்திலும், இத்தனை மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்குமா என்று ஆச்சரியமாய் பார்த்தாள் பல்லவி.