அவர்கள் ஆகும்பேவில் இருந்து ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அதன் பின்னர் மால்தீவ்ஸ் சென்று விட்டனர். அங்கும் திரும்பின பக்கம் எல்லாம் நீராக இருக்க, தங்கி இருந்த காட்டேஜ் கூட கடலுக்கு மேலே இருக்க, பல்லவி முகம் முழுக்க மகிழ்ச்சி மட்டும் தானிருந்தது. அதை அவள் முகத்தில் நிரந்தரமாக நிலைக்கச் செய்தான் தேவா. அவனுக்கும் அதையே திருப்பி தந்தாள் பல்லவி.
அந்த ஒரு வார காலம் அவர்களை எல்லா விதத்திலும் நெருங்கி வரச் செய்திருந்தது. முன்னெப்போதையும் விட அவர்களுக்குள் புரிதலும், அன்பும், காதலும் பல மடங்கு கூடி இருந்தது.
அவர்களுக்கு திருமணமாகி பதினைந்து நாட்கள் கடந்திருக்க, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர்.
திருமணம் இருவரின் தினசரி வாழ்விலும் பெரிதாக எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வந்து விடவில்லை.
பல்லவி, தேவாவின் வீட்டிற்கு நிரந்தரமாக வந்து விட்டிருந்தாள். அவ்வளவு தான். மற்றபடி பிறந்த வீடு, புகுந்த வீடு என மாறி மாறி இருந்து கொண்டாள். அவளை எல்லா இடங்களிலும் வால் பிடித்தான் தேவா.
அவளது விருப்பம் தான் எதிலும் தேவாவிற்கு பிரதானம்.
கனிமொழி பல்லவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார் என்றால் மிகையாகாது.
அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என்று அனைவருமே முன்பை காட்டிலும், இப்போது அதிகமாய் அவளிடம் பாசமாக இருந்தனர்.
தேவா அவளை கொண்டாடி தீர்த்தான். ஆர்ப்பட்டமாய் நேசித்தான். அளவில்லாமல் காதலித்தான். காமத்தை அவளையும் உணர வைத்தான். இரவுகளில் இனிமை கூட்டினான்.
இல்லறம் இனித்தது. மொத்தத்தில் அவள் வாழ்க்கை மழை நனைத்த பூமியாய் அழகாக மாறி இருந்தது.
கதிர்வேலனுடன் தேவா டிராவல்ஸ் தினமும் சென்றாள். பல நாட்கள் அவரை வீட்டில் உட்கார வைத்து விட்டு, அவளே அலுவலகத்தை முழுதாக கவனித்துக் கொண்டாள்.
கனிமொழி சந்தோசமாக கணவருடன் கோவில், சொந்த பந்தங்களின் வீடு, விஷேச வீடு என்று சுற்றி வந்தார்.
பல்லவி புதிதாக டூரிசம் மேனேஜ்மென்ட் படித்த ஒருவரை வேலைக்கு அமர்த்தி, மாமாவை கட்டாயப்படுத்தி அவருக்கு வேலையில் முழுமையான பயிற்சி அளிக்க செய்தாள்.
ஒரே வாரத்தில் அவர், தேவா டிராவல்ஸின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இப்போது டிராவல்ஸில் மேனஜர் என ஒருவருக்கு இருவர் இருக்க, கவலைகள் இன்றி, கணவனுக்கு பிடித்த வேலையைப் பார்க்கப் போனாள் பல்லவி.
காலை நான்கு மணி நேரம் மட்டும் மீண்டும் பழையபடி, தான் படித்த படிப்புக்கான வேலைக்கு செல்லத் தொடங்கினாள் பல்லவி.
மதியம் வீட்டிற்கு வந்து உணவை முடித்துக் கொண்டு, தேவா டிராவல்ஸ் சென்று விடுவாள்.
அவளது தினசரி வாழ்க்கை ஒரு சுழற்சியில் இயங்கத் தொடங்கியது.
அன்று மதிய உணவு முடித்து, கனிமொழியுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் பல்லவி.
“நான் சொல்ற பொருளை எல்லாம் ஒரு லிஸ்டா எழுது டா பல்லவி. மாமா கிட்ட கொடுத்தா வாங்கிட்டு வந்து தந்திடுவாங்க” என்று அவர் சொல்ல,
“சரிங்க அத்த” என்றவள்,
“வீட்டு மளிகை, அப்புறம் மத்த பொருளுங்க தானே அத்த. நானும், தேவாவும் சாயங்காலம் போய் வாங்கிட்டு வர்றோம்” என்று அவள் சொல்ல,
“சரிடா” என்றார் கனிமொழி.
அவர் சொல்ல, சொல்ல எழுதத் தொடங்கினாள் பல்லவி.
“இந்தா, இது வித்யா இருக்கும் போது வாங்கறது. இப்போ பொம்பளை பிள்ளை நீ இருக்கியே. இதையும் சேர்த்து வாங்குங்க” என்று அவர் நீட்டிய பட்டியலை வாங்கி, அதில் இருந்ததை எழுதத் தொடங்கினாள்.
ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டே வந்தவள், ஒரு நொடி நிறுத்தி விட்டு, பின்னர் எழுதுவதை தொடர்ந்தாள்.
சிறிது நேரத்தில் எல்லாம், “நீங்க படுங்க அத்த. நான் தேவா பார்க்க போறேன்” என்று விட்டு, வாசலை நோக்கி நடந்தாள்.
“சரிடா. கவனம். வண்டியை மெதுவா ஓட்டிட்டு போ” என்று அவர் எச்சரிக்க, அதற்கு அவசியமே இருக்கவில்லை.
அவள் ஆட்டோ பிடித்து தான் கணவனை காண சென்றாள்.
திடீரென்று எதிர்பாரா நேரம் அறைக்குள் நுழைந்த மனைவியை புன்னகையுடன் ஏறிட்ட தேவா, “வாவ், என் ரூம் பளிச்சுன்னு ஆகிடுச்சு” என்றபடியே எழுந்து அவளின் அருகில் வந்து, அவளை தோளோடு சேர்த்து அணைத்தான்.
“உங்களுக்கு ஷிஃப்ட் முடியுற நேரம் தானே தேவா?” என்று அவள் கேட்க, “ஆமா டா” என்றவன், ரிசப்ஷன் அழைத்து தனது அப்பாயின்மெண்ட் செக் செய்து விட்டு நிமிர்ந்தான்.
“இன்னைக்கு அவ்ளோ தான் டா. வா, கிளம்பலாம். டாக்டர் பிரகாஷ் இருக்கார். அவர் பாத்துப்பார்” என்று விட்டு, அவனது கார் சாவி, வாலெட்டை கையில் எடுத்து கொண்டான்.
அறை வாயிலை நோக்கி நகரப் போனவள் ஒரு முறை நின்று அவனது அறையின் சுவரை அலங்கரித்து இருந்த புகைப்படங்களை ரசித்துப் பார்த்தாள்.
ஆம், அவளுக்கு பிடித்த, அப்பா, குழந்தையை ஏந்தி நிற்கும் புகைப்படங்கள்.
மனைவியின் ரசனை தெரிந்த தேவாவும் அந்தப் புகைப்படங்களை அவள் ரசித்துப் பார்ப்பதை முப்பதாவது முறையாக தன் கைப்பேசியில் புகைப்படமாக எடுத்துக் கொண்டான்.
அவனுக்கு எப்போதும் அவள் தானே அதிசயம்.
“அழகு தேவா” என்றாள். மெலிதாக புன்னகையுடன் அவளை அணைத்தப்படியே கதவை திறந்தான் தேவா.
அடுத்த முப்பதாம் நிமிடம் வீட்டில் இருந்தனர்.
எப்போதும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும், முதல் வேலையாக குளித்து விடுவான் தேவா. இன்று உடை கூட மாற்றாமல் படுக்கையில் சரிந்தான்.
அவன் வேலை பார்ப்பது, இந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டிருந்த கார்ப்பரேட் மருத்துவனை. சில நாட்கள் நிறைய அப்பாயிண்ட்மெண்ட் இருக்கும். இன்றும் அப்படியான ஒரு நாள் தான்.
அவன் கண்கள் தானாக சோர்வுடன் மூடிக் கொள்ள, அவனுக்கு பக்கத்தில் போய், “தேவா” என மெல்ல அழைத்தாள் பல்லவி.
“என்னடா?” என்று கண் மூடியபடியே கேட்டவன், கை நீட்டி மனைவியை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.
எப்படி, என்ன ரியாக்ட் செய்வது என்றே புரியாத நிலை அவனுக்கு. உறைந்து போய் அமர்ந்திருந்தான். பல்லவி தான் பேசினாள்.
“கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா எல்லாம் மாசமும் தேதி கேட்டு குறிச்சி வைப்பாங்க. இங்க வந்து நான் கவனிக்கவே இல்ல” என்றாள் மெல்லிய குரலில். அவனுக்குப் புரிந்தது.
அவளை அப்படியே கண் மூடி அணைத்துக் கொண்டான்.
“ஹோம் டெஸ்ட் கிட் வாங்கினேன். இப்போ டெஸ்ட் பண்ணவா?” என்று அவள் கேட்க, அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பாத்ரூமிற்குள் விட்டான் தேவா.
அவள் கேட்கவும் அவளின் கைப்பையை எடுத்து கொடுத்தான்.
சில நிமிடங்கள் கழித்து அவள் உள்ளே அழைக்க, இதயம் இரு மடங்கு வேகமாக துடிக்க, பல்லவி கையில் இருந்ததை, வாங்கி காத்திருக்கத் தொடங்கினான் தேவா.
ஒன்றுக்கு மூன்று கிட் வாங்கி வந்திருந்தாள் அவள். மூன்றிலும் டெஸ்ட் செய்திருந்தாள். தேவா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூன்றிலும் ரோஜா நிறத்தில் இரண்டு கோடுகள் அழுத்தமாக விழ ஆரம்பித்தன.
கையில் இருந்ததை பாத்ரூம் ஷெல்பில் பத்திரமாக வைத்து விட்டு, மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டான்.
அவளோ கைகளை கழுவி கொண்டிருந்தாள்.
“கங்கிராட்ஸ் சக்கர” தந்தையாக போகும் மகிழ்ச்சியில் அவளை முத்தமிட்டு கொண்டாடினான்.
“தேவா, டாக்டர் பார்க்கலாம். வாங்க” என்று பல்லவி அழைக்க,
“நானே டாக்டர் தான் பொண்டாட்டி” என்று சிரிப்புடன் சொன்னான்.
“கைனக்காலஜிஸ்ட் பார்க்கணும் தேவா”
“வா, போகலாம்” அவன் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கே அழைத்துப் போனான்.
மருத்துவர் இரண்டு மாத கர்ப்பத்தை ஸ்கேன் மற்றும் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்து, சத்து மாத்திரைகளை எழுதித் தர வாங்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.
அதே மருத்துவமனையில் இருந்த அவனது அறைக்கு போகச் சொன்ன மனதை அடக்கிக் கொண்டு வெளியில் வந்தான் தேவா. மனம் நிறைத்திருந்த மகிழ்ச்சியை உடனே மனைவியிடம் வெளிப்படுத்த முடியாமல் தவித்த படி, காரை நோக்கி நடந்தான் அவன்.
வீடு நோக்கி வரும் போதே, “வீட்ல காலையில் சொல்லலாம் தேவா” என்று பல்லவி சொல்ல,
“ம்ம். சரி டா. நீ இன்னைக்கு டிராவல்ஸ் போகாததால, எப்படியும் அப்பா வீட்டுக்கு வர நைட் ரொம்ப லேட் ஆகும். சோ, காலையில ரெண்டு குடும்பத்தையும் ஒரே வீட்ல வச்சு சொல்லிடலாம்.” என்றான் அவன்.
“சரி” என்று தலையசைத்தாள் பல்லவி.
வீட்டை அடைந்து, அறைக்குள் நுழைந்ததும், மின்னல் வேகத்தில் பல்லவியின் முகம் பற்றி, “தேங்க்ஸ் சக்கர. என் பல்லவி. இப்போ அம்மா ஆகப் போறா” என்று கிசுகிசுப்பான குரலில் மகிழ்ச்சிப் பொங்க சொன்னான்.
“எல்லாமே கனவு போல இருக்கு பல்லவி” என்று அதிசயித்தான் தேவா. அவளை அழுத்தமாய் முத்தமிட்டு, உண்மை தான் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.
மெல்ல மெல்ல அவன் முன்னேற, “தேவா, டாக்டர் கிட்ட கேட்கல” என்று மென்குரலில் பல்லவி மறுக்க,
“இந்த டாக்டருக்கு பொண்டாட்டியை, என் பல்லவியை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு தெரியும்”
சொன்னவன், அத்தனை மென்மையாய் தன் காதலை, அவள் கர்ப்பம் என்பதும் வந்த மனதின் நிறைவை, அப்பாவாகப் போகும் தன் மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியை முழுவதுமாக அவளுக்கு கடத்தத் தொடங்கினான்.
மறுநாள் காலை, “அத்த, மாமா இங்க வாங்களேன்” என்று பல்லவி அழைக்க,
“என்ன பல்லவி மா” என்று வந்து நின்றனர் இருவரும்.
“அப்பா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னாங்க. வாங்க போகலாம்” என்று அவள் சொல்ல, கேள்வியின்றி அவளுடன் வந்தார்கள் இருவரும்.
முந்தைய இரவே தேவாவிடம் தெளிவாக சொல்லி விட்டாள் பல்லவி. “வீட்ல நீங்க தான் சொல்றீங்க. எனக்கு கூச்சமா இருக்கு தேவா” என்று, அவனும் “சரி” என்று விட்டான்.
இப்போது இரண்டு குடும்பத்தின் பெரியவர்களும் பல்லவி வீட்டின் ஹாலில் அமர்ந்து அவர்களைப் பார்த்து கொண்டிருக்க, சூர்யா, பாரதி இருவரும் கூட அலுவலகம் கிளம்பாமல் அங்கு வந்து நின்றனர்.
அனைவரையும் ஒரு முறை கண்கள் உயர்த்திப் பார்த்த தேவா, “பல்லவி உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்னு சொன்னா மாமா” என்று சேதுராமனை பார்த்து சொன்னவன்,
“அப்பா உங்க கிட்ட இருந்து, நம்ம டிராவல்ஸை அவ பேருக்கு எழுதி வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தா” என்று கதிர்வேலனை பார்த்து அவன் சொல்ல, அனைவர் முகத்திலும் குழப்ப ரேகைகள்.
“ஆசிர்வாதம் பண்ணி பெரிய அமவுண்டா நீங்களே கொடுத்திடுங்க மாமா” என்று அவன் சிரிப்புடன் சொல்ல,
அவனை கேள்வியுடன் பார்த்து,”சரிப்பா தேவா” என்றார் சேதுராமன்.
“என்ன தேவா?” என்று கனிமொழி கேட்க,
அவனுக்கு சிரிப்பாக வந்தது. நல்ல செய்தியை நேரடியாக சொல்ல முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது.
அவனது அவஸ்தையை, வெட்கத்தை கனிமொழியின் பக்கத்தில் நின்றுக் கொண்டு ரசித்துப் பார்த்திருந்தாள் பல்லவி.
“டிராவல்ஸ் தானே டா பல்லவி. அது உனக்கு தான் என்னைக்கு இருந்தாலும்…” என்று கதிர்வேலன் சொல்லிக் கொண்டே போக, இடையிட்ட தேவா,
“அப்போ பேரன், பேத்திக்கு ஒன்னுமில்லையா பா? எல்லாத்தையும் உங்க மருமகளுக்கே கொடுத்துட்டா, எட்டு மாசம் கழிச்சு வரப் போற பேரனுக்கோ, பேத்திக்கோ என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்று கேட்க, பளிச்சென்று அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் வந்து விட்டிருந்தது.
கனிமொழி பக்கத்தில் இருந்த பல்லவியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
தன் கடைக்குட்டி மகள் தாயாக போவதை நம்ப முடியா ஆச்சரியத்துடன் கண்கள் கலங்க பார்த்தார் கஸ்தூரி.
மகளை உச்சி முகர்ந்து, கண் கலங்கினார் அவர்.
மகளின் தலைக் கோதி ஆசிர்வதித்து, தன் சட்டை பையில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து மகளிடம் கொடுத்தார் சேதுராமன்.
“பேரன், பேத்தி யார் வந்தாலும் டிராவல்ஸ் உனக்கு தான் பல்லவி” என்று சிரித்தபடி கதிர்வேலன் சொல்ல, மனம் நெகிழ்ந்து நின்றாள் பல்லவி.
மகளை தனது பக்கத்தில் அமர வைத்து, விவரங்களை கேட்க ஆரம்பித்தார் கஸ்தூரி. அவருடன் இணைந்து கொண்டார் கனிமொழி. பாரதியும் ஓடிப் போய் பல்லவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கே அமர்ந்து விட்டாள்.
தேவா வேறு வழியின்றி திரும்பி நண்பனை பார்த்தான்.
இருவருக்கும் சூர்யாவின் திருமண வரவேற்பு அன்று பேசிய பேச்சுக்கள் தான் நினைவில் வந்தது. சிரிப்பை மறைக்க படாதபாடு பட்டனர்.
சூர்யா, தேவாவின் எதிரே வந்து நின்றான்.
“தேவா..” என்று அவன் அழைக்க,
“டேய், நான் உன் தங்கச்சி புருஷன் டா” சூர்யா எதுவும் கிண்டலாக சொல்லி விடும் முன்பு முந்திக் கொண்டு சொன்னான் தேவா.
மெல்ல சிரிக்க ஆரம்பித்தான் சூர்யா. சிரித்துக் கொண்டே அவன் எதையோ சொல்ல வர, “வேணாம் சூர்யா. நான், உன் தங்கச்சி புருஷன்” என்று சொன்னதையே திரும்பச் சொன்னான் தேவா.
சத்தமாக சிரித்துக் கொண்டே, தேவாவை இழுத்து தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சூர்யா.
“கங்கிராட்ஸ் டா தேவா.” என்றான் முகம் மலர, வெட்கத்துடன், “தேங்க்ஸ் டா” என்றான் தேவா.
“வெட்கமா தேவா? பாரேன்” என்று சூர்யா வியக்க,
“உனக்கும் ஒரு நேரம் வரும் டா. அப்போ நான் என்ன பண்றேன் பாரு” என்று தேவா சிரிப்புடன் சொல்ல,
பல்லவி கர்ப்ப காலம் முழுவதும் வேலைக்கும், டிராவல்ஸ் ஆஃபீஸிற்கும் செல்லவே செய்தாள். தேவாவும் அவளைத் தடுக்கவில்லை. கூடுதல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டான் அவ்வளவே.
கனிமொழி அவள் கேட்டது மட்டுமல்ல, கேட்காததையும் செய்து நீட்டினார்.
மாமியார், நாத்தனார் சண்டைக்கு ஆசைப்பட்டவள், அது நடக்காது என்பது தெரிந்ததால், அம்மா, மகளுக்கு நடுவே சண்டையை கிளப்பி விட்டு உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்தாள்.
“அத்த, வித்யா என்னை அண்ணி சொல்ல மாட்டேங்கறா.”
“அத்த, பூ பறிச்சு தர மாட்டேங்கறா”
“அத்த, துணி மடிச்சு தர மாட்டேங்கறா வித்யா” என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
“ஏன் வித்யா இப்படி இருக்க. அவ மாசமா இருக்கா டா. ஆசையா அண்ணின்னு கூப்பிட சொல்லி கேட்கறா இல்ல?. ஒரு முறை கூப்பிட்டா என்ன குறைஞ்சா போய்ட போற நீ?” என்று மகளை திட்டுவார் கனிமொழி.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, பல்லவியை முறைப்பாள் வித்யா. ஆனாலும், கோபம் எல்லாம் வராது. அவளுக்குத் தான் பல்லவியை பற்றி நன்றாக தெரியுமே.
“அடுத்த மாசம் உன்ன, நான் பாக்க வர மாட்டேன் போ” என்று கோபமாக சொல்வாள். ஆனாலும், மறக்காமல் மகன் விக்ரமை தூக்கிக் கொண்டு மாதம் ஒரு முறை அம்மா வீடு வந்து விடுவாள் வித்யா.
ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்தினர். ஒரு வாரம் மட்டுமே அம்மா வீட்டில் இருந்தாள் பல்லவி. அதற்கு மேல் முடியாமல் தேவா வீட்டிற்கு வந்து விட்டாள்.
கஸ்தூரி மகளிடம் பாசம் கலந்த கண்டிப்பு காட்டினார்.
ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருந்தார். அவளை சோம்பி ஓரிடத்தில் அமர விடவில்லை அவர்.
“மா, நான் தான் ஏற்கனவே வேலைக்கு போறேன் இல்லம்மா. அப்புறம் வீட்லயும் வேலை சொல்றீங்க?” என்று அவள் புலம்ப, அவர் கேட்பதாகவே இல்லை.
“போ மா. நான் எங்க வீட்டுக்கு போறேன். அத்த, என்னை திட்டவே மாட்டாங்க” என்று பொய் கோபத்துடன் வாசலை நோக்கி அவள் நடக்க, அவரும் சிரித்துக் கொண்டே அவளுடன் தேவா வீடு வரை வந்தார்.