“நீ.. நீ.. நீ எதுக்கு வந்த..?? யாரை கேட்டு வந்த…??”
என கூச்சலிட,
“நீ யாரை கேட்டு நேத்தி அங்க வீட்டுக்கு வந்தியோ அவங்களை கேட்டு தான்..” என அலட்சியமாய் மொழிந்தான்.
“நான் வந்ததும் நீ வந்ததும் ஒன்னா..?? நான் தூங்கும்போது திருடன் மாதிரி பூட்டி இருக்கும் வீட்ல புகுந்து உட்கார்ந்து இருக்க..!! இது தான் உங்க அம்மா சொல்லி கொடுத்த மேனர்ஸா..?”
என்று நறுக்கென்று அவள் சொல்லவே,
“திருடன் யாருக்கும் தெரியாம சுவர் ஏறி குதிச்சு வருவான்.. நான் வரும்போது கீழ செக்யூரிட்டில தொடங்கி பக்கத்து வீட்டு பங்கஜம் ஆண்ட்டி வரையில் எல்லாருக்கும் ஒரு ஹாய் வைச்சுட்டு தான் வந்தேன்.. ஸோ எனக்கு எதுவும் தப்பா தெரியல…”
என வழக்கமான தன் அமைதி பாவனையில் பதில் கூறியவன் கையில் இருந்த க்ளாஸை நீட்டி,
“இந்தா குடி.. இஞ்சி சாறு கலந்த லெமன் ஜுஸ்… ஹேங்ஓவருக்கு கேட்குமாம்.. எப்படி தெரியும் பார்க்கறீயா..? ம்ஹூம்.. என்ன செய்யுறது.. குடிகாரிக்கு வாக்கப்பட்டுடேன்.. இனி இதையும் தெரிஞ்சுக்க வேண்டியது தான்..”
என்று முகம் மாறாமல் சொல்ல அவனை மேலும் முறைத்து,
“நான் குடிகாரி ஆகிறேன்.. கொலைகாரி ஆகிறேன்.. தேர்ட் ரேட்டட் பர்ஷனாவே இருந்துட்டு போறேன்… அது என் பிரச்சனை… செத்து போன எங்கம்மாவோட பிரச்சனை… உனக்கென்ன வந்தது..?? என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா வினோ..”
என ஆவேசமாய் கத்தியது எல்லாம் அவனை கொஞ்சமும் அசைக்கவில்லை.
“ஹோ.. ‘ப்ளான் பி’ அது வேற இருக்கா..!! மர்டர் லிஸ்ட்ல முதல் ஆளு யாரு நானா..?? வெரி குட்.. வெரி குட்.. இதை குடிச்சுட்டு தெளிவா ஒரு ப்ளான் போடு..”
வினோதகன் பேச பேச நளினி மூச்சில் அனல் தெறித்தது. உள்ள தலைவலி இரட்டிப்பு ஆனது போல் வெடித்தது.
அவளின் கையில் வலுக்கட்டாயமாக க்ளாஸை அவன் திணிக்க அதனை கோபத்தில் தட்டிவிட முனையவும்,
“நளினி..” என்ற அதட்டலோடு அவள் கையோடு இறுக்கி பிடித்து ஒரு பார்வை பார்க்க அதில் தன்னைபோல் க்ளாஸை பிடித்துக் கொண்டாள்.
மெல்ல அவள் கை மீதிருந்து தன் விரல்களை எடுத்தவன்,
“என்னை நீ எவ்வளவு வேணும்னாலும் பேசுவ.. என்கிட்ட எப்படி வேணும்னாலும் பிஹேவ் பண்ணுவ.. அது ஒரு விஷயமே கிடையாது.. ஆனா நான் ஒரு வார்த்தை சொல்லிட கூடாது.. ஒரு செயல் உனக்கு எதிரா செஞ்சிட கூடாது.. அதையே பிடிச்சுக்கிட்டு என்னை குத்தி குத்தி கிழிப்ப..!! இது எந்த வகையில் நியாயம்..?? இப்ப மட்டும் இல்ல ஆரம்பத்தில் இருந்து நீ இதை தான் பண்ணிட்டு இருக்க நளினி..!! இது தப்புன்னு உனக்கு ஒரு தடவை கூட தோனினதே இல்லையா..”
என்று கூர்மையாய் அவள் கண்களை பார்த்து கூறினான்.
அனைத்தையும் விட அப்போது தலைவலியே பிரதானமாக தெரிந்ததால் ஜுஸை ஒரே மூச்சில் குடித்து முடித்த நளினி தானும் கத்தி ஆர்பாட்டம் செய்வதை நிறுத்தி,
“தப்பு, சரி எல்லாம் அவங்கவங்க கண்ணோட்டத்தை பொருத்தது.. என் அளவில் எது சரியோ அப்படி தான் நான் நடந்துப்பேன்.. என்னால மாற முடியாது..
நான் இப்படி தான்னு தெரியுதுல வினோ.. மறுபடியும் மறுபடியும் உன்னுடைய நியாயத்தை பேசி என்ன பிரயோஜனம்..?? என்னை விட்டுட்டு உன் வாழ்க்கையை பாரு.. ரெண்டு பேரும் மனகசப்பு எதுவும் இல்லாம அவங்க அவங்க வழியில போகலாம்..” என்றாள்.
“என்கிட்ட சண்டை போட்டாச்சு.. என் அண்ணன்களுட்ட போயும் எடுத்து எரிஞ்சு பேசியாச்சு.. அது எதுவும் வேலைக்கு ஆகலைனதும் இப்ப சமாதான உடன்படிக்கையா..?”
இதழின் ஓரம் வளைய கசந்த முறுவலுடன் அவன் கேட்டிடவும் பெருமூச்சுடன் க்ளாஸை ஓரமாக வைத்தபின் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தாள்.
“நேத்து நான் வந்ததும் உன்கிட்ட பொறுமையா பேசி எடுத்து சொல்ல தான்.. ஆனா நீ தான் என்னை டியூன் பண்ணி சண்டை போட வைச்சது..!! அதே ரீசனால தான் உங்க வீட்டுக்கு நான் போனதும்.. மத்தபடி உன்கிட்ட எடுத்துக்கட்டி பிரச்சனை பண்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்ல.. தேவையில்லாத இந்த டிராமாவை எல்லாம் நிறுத்திட்டு மியூச்சுவலா பிரிஞ்சிடலாம்.. என்ன சொல்ற..”
என்று நளினி சொல்ல ஏனோ அவளின் கோபங்களை காட்டிலும் இந்த விலகலான தெளிவு தான்
அவனை அதிகம் பாதித்தது.
“எவ்வளவு ஈஸியா சொல்லிட்ட நளினி.. உனக்கான என்னோட போராட்டமும் அடேச்மென்ட்டும் தேவையில்லாத டிராமாவா தெரியுதுல உனக்கு..?? நாம சேர்ந்து வாழ்ந்த ரெண்டு வருஷ வாழ்க்கையில நான் வேணும்னு நினைக்க ஒரு ரீசன் கூட இல்லையா..?”
எல்லையில்லா வருத்தங்களோடு வினோதகன் வினவியபோது பதிலின்றி அவனையே பார்த்தாள் நளினி.. அதில் பதிந்திருந்த அர்த்தமென்ன என்று அவள் மட்டுமே அறிந்திருக்க கூடும்..!!
“சென்டியா பேசி என்னை லாக் பண்ணலாம் நினைக்காத வினோ.. என்னோட முடிவில் எந்த மாற்றமும் இல்ல..”
என்று மீண்டும் கிளிப்பிள்ளை போல் சொல்லி அவன் பொறுமையை பறக்க செய்தாள்.
“அப்போ நல்லா கேட்டுக்கோ நளினி.. என்னோட முடிவிலும் மாற்றம் எதுவும் இல்லை.. உனக்கு தோனினதும் டிவோர்ஸ் வேணும்னு நினைக்கிற.. அது உன்னோட விருப்பம்.. அதே மாதிரி எனக்கும் தோணனும்.. என் மனசில் உன்னை விடணும்னு எப்ப தோணுதோ அப்போ நானும் டிவோர்ஸுக்கு சம்மதிக்கிறேன்..!! சில நாட்கள் ஆகலாம்.. சில மாசம் ஆகலாம்.. வருஷங்கள் கூட ஆகலாம்.. அது என் விருப்பம்.. என் மனசு மாறணும் ஆண்டவானு எதிர்பார்த்து காத்திரு.. இல்லையா உன்னால என்ன பண்ணி டிவோர்ஸ் வாங்க முடியுமோ பண்ணிக்கோ..”
என திமிராகவே கூறியவன் அவள் முகம் மீண்டும் கோபத்தில் சிவப்பதை திருப்தியாக பார்த்துவிட்டு,
“பை த வே.. இன்னைக்கு நைட்டும் குடிக்கிற ஐடியா இருந்தால் எங்க.. எப்போன்னு லொகேஷன் ஷேர் பண்ணிடு மா.. நீ இப்பவரை இந்த வினோதகன் பொண்டாட்டி தான்.. ஸோ உன்னை பத்திரமா கரை சேக்கிறது புருஷன் என்னோட கடமை இல்லையா..!!”
என மேலும் நக்கலாய் சொல்ல,
“ஆஹ்..” என கத்தி கடுப்பாய் அவன் மீது எறிந்த தலையணையில் இருந்து இலாவகமாய் விலகி கையசைத்து அங்கிருந்து சென்று விட்டான்.
இரவு முழுவதும் வீட்டிற்கும் வராது கைபேசியில் அழைத்தபோதும் எடுக்காது இருந்துவிட்டு இப்போது சாவகாசமாய் வந்து நிற்கும் வினோதகனை முதலில் கண்டது மணிமாறன் தான்..!!
“எங்க டா போன..? எத்தனை தடவை ஃபோன் பண்றது..!! நீ நைட் வராததுக்கு என்னை வேலு அண்ணனும் இளா அண்ணனும் பாடா படுத்திட்டாங்க.. ஏதோ தினமும் நீ இப்படி தான் பண்றா மாதிரியும்.. நான் கண்டும் காணாமலும் உன் போக்கில் உன்னை விட்டுடதாகவும் என்னை ஒருவழி ஆக்கிட்டாங்க… ஏன் டா இந்த கொலைவெறி உனக்கு..”
என படபடவென்று பொரிந்து தள்ள,
“நானென்ன டீனேஜ் பையனா டா..?? ஒரு நைட் வீட்டுக்கு வரலைனதும் எல்லாரும் பதறி போக.. ஒரு பிஸ்னெஸ் ரன் பண்றேன்..!! அத்தனை பேரை வைச்சு வேலை வாங்குறேன்.. வேலைல இப்படி தான் முன்ன பின்ன ஆகும்னு எடுத்து சொல்ல வேண்டியது..”
என்று கேஷுவலாக கூற அவனை முறைத்து நின்ற மணிமாறன்,
“இதெல்லாம் என்கிட்ட நல்லா பேசு.. ஐயா அப்படி எத்தனை நாள் வேலைன்னு வெளியே தங்கி இருக்கீங்க…” என நக்கலாய் கேட்டவன்,
“டீனேஜ் பையன் மாதிரி தான் நேத்து அண்ணனுங்களை ஃபேஸ் பண்ண பயந்து எஸ்கேப் ஆகிட்டு இப்ப வந்து வியாக்கியானம் பேசுறான்..”
என உன்னை நானறிவேன் என்பதாக சொல்ல,
“சரி.. சரி.. விடு மணி..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெரியவர்கள் இருவரும் வந்துவிட்டனர்.
“எங்க வினோ போயிருந்த..?? நைட் வெளியே தங்குறது எல்லாம் என்ன பழக்கம்..” என்று வடிவேலன் கண்டிப்பாய் சொல்ல,
“வெளியே எல்லாம் தங்கலை ண்ணா.. நளினி ஃபிளாட்ல தான் இருந்தேன்..” என்று சாதாரணமாய் சொல்லி மூன்று சகோதரர்களையும் அதிர வைத்தான்.
“அங்க போனீயா..? அங்க போக வர தான் இருக்கியா நீ..?” என அவர் நம்பாமல் கேட்கவே,
“ஆமா அண்ணா.. அங்க பாதி நாள் இங்க பாதி நாள்ன்னு தான் இருக்கேன்.. சண்டைன்னு ஒரேடியா பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியுங்களா..?”
என்று மிகவும் தன்மையாய் கூறியவன்,
“என்ன மணி.. நீ அண்ணன் கிட்ட சொல்லலயா..?” என நல்லவனாய் அவனையும் கோர்த்துவிட,
‘எனக்கே எப்போடா சொன்ன தடியா..’
என கடுப்பானாலும்,
“ஆங்.. ஆமாங்க அண்ணா..” என்றான்.
அப்போதும் இருவரும் குறுகுறுவென பார்க்கவும்,
“அது ஒன்னும் இல்ல அண்ணா.. நேத்து ஆபிஸ்ல வைச்சு எல்லார் முன்னாடியும் அவளை ரொம்ப திட்டிட்டேன்.. அந்த கோபத்தை மனசில் வைச்சு தான் இங்க வந்து டிவோர்ஸ் அது இதுன்னு வேணும்னே பேசி இருக்கா..!! என்ன கோபமா இருந்தாலும் பெரியவங்களை மரியாதை இல்லாம பேசினது தப்பு தானே..!! அதான் எப்படி அப்படிலாம் பேசுவன்னு சத்தம் போட்டேன்.. அவளும் தப்புன்னு புரிஞ்சுக்கிட்டா அண்ணா.. மன்னிப்பு கூட கேட்டா.. நீங்க மனசுல எதுவும் வைச்சுக்காதீங்க..”
என்று வினோதகன் பேச பேச,
‘இதை தான் நைட் முழுக்க யோசிச்சுட்டு வந்தான் போல..’ என்பது போல் பார்த்திருந்தான் மணிமாறன்.
“என்னவோ நீ சொல்ற பா.. நீ குடும்பம் குழந்தைன்னு வாழுறதை பார்த்தால் நாங்க ஏன் கவலை படப் போறோம் சொல்லு..”
“உண்மை தான் அண்ணா.. எனக்கு நல்லது கேட்டது சொல்ல நீங்க எல்லாரும் இருக்கீங்க..!! நான் தப்பு செஞ்சாலும் எடுத்து சொல்லி புரிய வைப்பீங்க.. ஆனா அவளுக்கு அப்படி எடுத்து சொல்லி புரிய யாரும் இல்லையே அண்ணா..”
என்று அவன் தூக்கி வைத்த ஐஸ் கட்டியில் அவர் மனம் பாகாய் இளகி இருக்க,
“ஏன் வினோ அப்படி சொல்ற..!! நாம எல்லாரும் இருக்கும்போது யாரும் இல்லைன்னு சொல்லாமா..? இப்படி எல்லாம் பேசாத.. இதெல்லாம் பண்ணாதன்னு நீ சொல்லி புரிய வை.. கணவன் – மனைவி உறவு என்றது அது தான்..”
என பிரித்துவிட வந்த அவரையே ஆறுதல் சொல்ல வைத்து இருந்தான்.
“இங்க பார் வினோ.. நம்ம கௌரிக்கு இன்னும் ஆறு மாசத்தில் கல்யாணம் வைச்சு இருக்கோம்ல.. அதுல நம்ம குடும்பம் முழுசும் நிறைவா வந்து இருக்கணும்.. நளினியையும் சேர்த்து தான் சொல்றேன்..”
கௌரி வடிவேலனின் மூத்த மகள்..!! வடிவேலனின் மகள் கௌரி டிகிரி முடித்து தற்போது நிச்சயம் முடிந்து திருமணத்திற்காக காத்திருக்க மகன் கதிர் கல்லூரி பருவத்தில் இருக்கிறான்.
இளங்கோவின் ஒரே மகன் வெங்கட் இப்போது தான் பள்ளி இறுதியாண்டில் அடியெடுத்து வைத்துள்ளான். மணிமாறனுக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் ப்ரித்வி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் ரித்தி என இரண்டு மகள்கள்..!!
அவர்கள் வீட்டில் நடக்கும் முதல் பெண்பிள்ளை திருமணம் என்பதால் அத்தனை சிறப்பாக அத்தனையும் செய்து வருகின்றனர்.
“கவலையே படாதீங்க அண்ணா.. எங்க பிரச்சனை எல்லாம் சரியாகி நம்ம கௌரி கல்யாணத்தில் தம்பதி சகிதம் இருந்து எல்லாமும் செய்ய வேண்டியது என் பொறுப்பு ..”
என வினோதகன் உறுதியாக கூறியதில் வடிவேலனுக்கு மிகுந்த திருப்தி..!!
“நல்லா பேச கத்துக்கிட்ட டா.. சொன்னா மாதிரியே நடக்கலைன்னா உன்னை பேசிக்கிறேன்..”
என இளங்கோ அப்போதும் சந்தேகமாய் பேச,
“இளா.. அவன் தான் சொல்றான்ல.. அத்தோட விடு…நாம சாயுங்காலம் கிளம்பனும்.. அதுக்கு வேண்டியதை பார்..” என்று வடிவேலனே அப்பேச்சை நிறுத்த வினோதகனுக்கு,
‘ ஹப்பாடா..’ என்று இருந்தது.
**
நளினி வீட்டில் தாட்.. பூட் என பொருட்களை உருட்டிக் கொண்டிருந்தாள். இன்னமும் தலைவலி அதிகரித்ததே தவிர சிறிதும் குறையாமல் போக நிச்சயம் எந்த அலுவலக வேலையும் ஓடாது என்பதால் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டாள்.
அதற்கும் சேர்த்து காரணகர்த்தாவாக வினோதகனையே ஆக்கி மனதார வறுத்து எடுக்க பாவம் தண்டனையை அவள் கையில் மாட்டிய பொருட்கள் தான் அனுபவித்தது.
கோபத்தின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும்..!! சிலர் அதிகம் சாப்பிடுவர்.. சிலர் அதீத அமைதியில் இருப்பர்.. அப்படி நளினியின் கோபம் உடலை வருத்தி வழமையை காட்டிலும் அதிகமாக அவளை மாங்கு மாங்கென்று வேலை பார்க்க தூண்டும்..!!
அவ்வாறு வீடு முழுவதையும் பெருக்கி கழுவி துடைத்து சுத்தம் செய்து அழுக்கு துணிகள் அனைத்தையும் ஒரே மூச்சாய் துவைத்து பொருட்களை ஒதுங்க வைத்து என பம்பரமாய் சுழன்று அசுர வேகத்தில் செய்த வேலைகளால் வீடு பளிச்சென்று மாற நளினியோ உடலும் மனமும் களைத்து சோர்ந்து போனாள்..!!
வெறும் வயிறு பசியில் கபகபவென பறக்க பிரெட் டோஸ்ட், ஹாப் பாயில், காஃபி மட்டும் செய்துக் கொள்ள நினைத்தவள் அதற்கான பொருட்களை எடுக்கவேண்டி ஃப்ரிட்ஜை திறக்க அவள் கண்ணில் நேற்று குடித்துவிட்டு மீதம் வைத்த மதுபாட்டில் தான் முதலில் பட்டது.
அதனை கண்டதும் வினோ போற போக்கில் நக்கலடித்து விட்டுச் சென்றது நினைவில் வர,
“எல்லாம் உன்னால வந்தது.. அவன் வந்தது கூட தெரியாம நைட் முழுக்க இருந்து இருக்கேன்..” என பல்லை கடித்தவள் மீதம் இருந்ததை வாஷ்பேசனில் ஊற்றிவிட்டு பாட்டிலை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு தனக்கான காலை உணவை செய்துக் கொண்டு உட்கார்ந்தபோது உடல் அசதியில் உள்ளத்தின் கோபமும் வடிந்து இருக்க மெல்ல பிரெட்டை மென்று விழுங்கினாள்.
சில நாட்களாக தான் இந்த குடியின் வசம்..!! ஏனோ தன்னிலை மறந்து சிந்தனைகள் துறந்து மயக்கத்தில் கிடக்க தான் அவள் மனம் இப்போது எல்லாம் விரும்புகிறது..!!
நிதர்சனத்தை எதிர்க்கொள்ளாமல் இருக்க உபயோகிக்கும் மட்டமான ‘எஸ்கேபிசம்’ என அறிந்தே தான் செய்தாள். இப்போது அவை நினைக்க உள்மனம் குறுகுறுத்தது.
வாழ்க்கையில் தான் என்ன தான் செய்துக் கொண்டிருக்கிறோம் என
திரும்பி பார்த்தால் சொல்லிக் கொள்ளும்படி உவப்பாக ஒன்றும் இல்லை. எதற்காக தான் இந்த உயிரும் உடலும் ஓடிக் கொண்டிருக்கிறது..?? கடனே என்று வாழ்ந்து என்ன செய்ய..!!
வினோதகன் தன் வாழ்க்கையில் வேண்டாம் என திண்ணமாக இருந்தால் மட்டும் போதாதே..!! அவனை தவிர்த்த தன் வாழ்க்கையும் அர்த்தமானதாக தான் இருக்க வேண்டும்..!!
என்ன செய்வது என்று எந்த யோசனையும் இல்லை. ஆனால் மொத்தமாய் கலைந்து அலங்கோலமாய் கிடக்கும் தன் வாழ்க்கையையும் நேர் படுத்த வேண்டும் என்பது புரிந்தது.
வயிற்றையும் சற்று கவனித்து விட்டதால் தலைவலியும் குறைந்திருக்க உண்ட பாத்திரங்களை சிங்கில் போட்டுவிட்டு உடல் களைப்பு தீர தெளிந்த மனதுடன் மீண்டும் தூக்கத்தை நாடினாள்.
ஆனால் தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பதே விதியின் விளையாட்டு என்பது பாவம் அக்கணம் அவள் உணரவில்லை.
மதியம் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை அலைபேசி இசைக்கும் ஒலி தான் எழுப்பியது..!! திரையை பார்க்காமலே அழைப்பை ஏற்று காதில் வைக்க
“ஹலோ நளின்.. நான் சிபி பேசுறேன்..”
என மறுமுனையில் ஒரு ஆணின் குரல் கேட்க,
“எந்த சிபி..” என தூக்க கலக்கத்தில் கேட்டாள். அந்த பக்கம் சில நொடி அமைதிக்கு பின்,
“சிபி நந்தன் ஃப்ரம் எஸ்.வி.சி குரூப்
ஆஃப் இன்டஸ்ட்ரீஸ்..” என்று சொல்ல பட்டென்று கண்களை திறந்தவள் ஏற்கெனவே பதிந்து வைத்திருந்த அவனின் எண்ணை திரையில் பார்த்து தலையில் தட்டிக் கொண்டு உடனே எழுந்து அமர்ந்தாள்.