“இப்ப பேசலாம்…” என முல்லை தெளிவாய் ஆரம்பிக்க அர்னவ்வும் தன்னிரு கைகளை கோர்த்து மடக்கியபடி மீண்டும் சேரில் அமர்ந்துகொண்டான்.
அது முல்லையின் அறை. திருமணத்துடனான கலவரங்கள் எல்லாம் முடிந்து மணமக்கள் முல்லையின் வீடு வந்து சேர்ந்திருக்க அங்கே ஆரம்பித்த அடுத்த பேச்சுக்களில் அர்னவ் திணறி போனான்.
தவறாக இருப்பினும் நிகழ்ந்துவிட்ட இந்த திருமணத்தை அங்கீகரிக்கும் விதமாக பெரியவர்கள் இரு குடும்பத்தினரும் கலந்து பேச அவனுக்கு சட்டென எதையும் ஏற்க முடியாத தடுமாற்றம்.
அந்த வீட்டிற்குள்ளே அமர்ந்திருந்ததையே நெருப்பில் இருந்ததை போல உணர்ந்தவனுக்கு அனைவரும் பேசுவதை கேட்க கேட்க எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதை போலிருந்தது.
கொஞ்சம் முன்னர் தான் அத்தனை அடிதடி, அவமானம் என்று நடந்திருக்க இங்கோ நடந்த திருமணத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல ஆயத்தமானார்கள்.
“ம்மா…” என அன்னக்கிளியை பார்த்தவன்,
“அக்கா நீயும் ஏன்?…” என்றான் அருந்ததியிடம்.
முல்லையின் வீட்டினருக்கு அர்னவ்வின் இந்த பிடித்தமில்லா முகபாவனையும் பேச்சும் அடிவயிற்றில் நெருப்பை வைத்தது.
“என்னங்க இது? இவர் என்னவோ வேண்டாம்ன்னு முடிவெடுத்த மாதிரி அவங்க வீட்டுல யாரையும் பேச விடலை…” உஷா சொல்ல கௌஷிக் செய்வதறியாமல் பார்த்தான்.
தந்தை இல்லாத வீடு. தான் தான் அங்கே அந்த ஸ்தானத்தில் தங்கையின் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும்.
இங்கே என்ன முடிவெடுக்க? எதுவும் தெரியாமல் ஒருவித அழுத்தத்தில் கண்கள் கலங்கிவிடும் போலிருந்தது.
அதிலும் தங்கையின் நிலை. அறைக்குள் சென்றவள் யாரிடமும் எதுவும் பேசவில்லை.
இன்னும் நடந்துவிட்டதில் இருந்து வெளிவர முடியாமல் திக் பிரம்மையில் தான் அவள் இருந்தாள்.
“இங்க பாரு அர்னவ், என்ன எப்படி நடந்திருந்தாலும் நீ தாலி கட்டினது கட்டினது தானே? ஏன் உனக்கு கூட அவங்க செய்ய வந்தது ஏத்துக்க முடியலையே அந்த நிமிஷம். இப்ப மட்டும் என்ன?…” என்றாள் அருந்ததி அவனை தனியே அழைத்து வந்து.
நிஜம் தானே? கட்டிய மாங்கல்யத்தை சௌமியாவின் வீட்டினர் அற்று செல்ல முயன்ற நிமிடம் எத்தனை பதறி போனான்? எவ்வளவு ஆக்ரோஷம் கொண்டான் அவர்களின் செயல்களில்.
“இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இதை கல்யாணம்ன்னு எப்படி அக்ஸப்ட் பண்ண முடியும்? என்ன பேசற நீ?…” என்றான் அர்னவ்.
“அப்ப அந்த பொண்ணோட ப்யூச்சர்?…” என்றதும் அர்னவ் மௌனமாக,
“நான் எல்லாம் விசாரிச்சிட்டேன். இதுக்கு முன்னாடி சௌமியாட்ட பேசும் போது அவளே இந்த பொண்ணை பத்தி நிறைய போன்ல சொல்லியிருக்கா. ரெண்டுபேரும் சேர்ந்து போட்டோவையும் கூட நான் பார்த்திருக்கேன் ஏற்கனவே. அதை வச்சு தான் எனக்கும் தெரியும்…”
“அக்கா அதுவும் இதுவும் ஒண்ணா?…”
“ஒண்ணில்லைன்னா? என்ன செய்யறதா இருக்க நீ? சரி வேண்டாம்ன்னு நாம கிளம்பிட்டோம்ன்னா நெக்ஸ்ட்?…”
“அந்த பொண்ணுக்கு வேற நல்ல லைப்…”
“உன்னோட வாழ்ந்தா அது நல்ல லைப் இல்லையா அர்னவ்?…” என்ற அருந்ததி,
“ஆனா உனக்கு இது தான் லைப். உன்னை பார்த்ததால சொல்றேன். நீங்க ரெண்டுபேரும் தான் சேர்ந்து வாழனும் போல…”
“அக்கா என்ன இது சும்மா பத்தாம்பசலித்தனமா இருக்கு? அந்த பொண்ணுக்கும் வேற விருப்பம் இருக்கும். என்னையே இவ்வளோ போர்ஸ் பன்றீங்க? அந்த பொண்ணு பாவமில்லையா?…”
“அப்போ அவ ஓகே சொன்னா உனக்கு அப்ஜெக்ஷன் இல்லை. அப்படித்தானே?…” என்னும் பொழுதே சுதாகரனும் வந்துவிட்டான்.
“என்னத்தான் இது?…” என அர்னவ் சலிக்க அருந்ததி, சுதாகரன் இருவருமாய் அவனை பேசியே கரைத்தனர்.
“ஓகே, நான் அந்த பொண்ணுகிட்ட பேசனும். அதுக்கப்பறம் தான் மத்தது…” என்று மூவருமாக பேசி முடித்து வர வெளியே இரு குடும்பத்தினரும் பேசி எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டிருந்தது.
“இன்னைக்கு இங்க இருக்கோம் ம்மா. நாளைக்கு மார்னிங் பொண்ணையும், மாப்பிள்ளையையும் பாபநாசம் கூட்டிட்டு போறோம் மறுவீட்டுக்கு…” என சொல்லிக்கொண்டிருந்தார் கலைவாணன் முல்லையின் தாய் ஞானத்திடம்.
“என்ன கௌஷிக் உங்களுக்கு திருப்தியா?…” என கேட்டவர்,
“இப்பவே கூட்டிட்டு போகலாம் தான். ஆனா கொஞ்சம் இந்த சூழ்நிலை சரியாகட்டும்…” என்று சொல்லியிருக்க,
“சரிங்க…” என்றான் கௌஷிக்.
“மாமான்னு கூப்பிடுங்க மாப்பிள்ளை. உறவுன்னு ஆகிட்டு இப்படி என்ன மொட்டைக்கட்டையா சரிங்கன்னு?…” என்றார் சம்பூரணம் கௌஷிக்கை.
‘என்னடா நடக்குது இங்க?’ என்றவிதத்தில் விழிகள் தெறிக்க அவர்களை பார்த்தபடி இருந்தான் அர்னவ்.
“வா சபரி, உட்கார்…” என்றவர் மகனின் நலுங்கிய தோற்றத்தில் உள்ளம் கசிந்தார்.
எப்படி வளர்த்த மகன், இன்று இந்த நிலைக்கு ஆளாகிவிட்டானே என பார்த்தவருக்கு தாள முடியவில்லை.
“உட்கார் சபரி..” என்றார் அன்னக்கிளியும்.
தன் வீட்டினர் மட்டும் இருந்தால் கூட சட்டென கேட்டுவிடலாம். இருப்பதோ இன்னொருவர் வீடு.
அதிலும் முன்பின் அறியாதவர் வேறு. அவர்களுடைய சொந்தங்கள் என அர்னவ்வை பேசவிடாமல் தேங்க வைத்தது.
“அப்பா…” என்றவன் அனைவரையும் பார்க்க,
“நாங்க பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டோம்ப்பா…” என்றார்.
“புரியுது எனக்கு, ஆனா நான் முதல்ல அந்த பொண்ணுகிட்ட பேசனும்…” என்று சொல்லவும் அனைவரிடத்திலும் கிசுகிசுப்பாய் சில கேலிகளும், பேச்சுக்களும் அவனின் காதை எட்டியது.
முயன்று தன் பொறுமையை மீட்டெடுத்தான் அர்னவ். ஏற்கனவே தன்னிலை இழந்து அங்கே தான் நடந்துகொண்டது தரம் குறைந்ததாக கருதினான்.
இப்போதும் அதனை செய்ய உடன்பாடில்லை. அதிலும் தன் கவனக்குறைவால் இன்னொரு பெண் சமந்தப்பட்டிருக்க மௌனமானான்.
“சரி பேசலாம். இப்ப நீ உட்கார்…” என்று சொல்ல அவரருகே அமர்ந்தான் அர்னவ்.
“நாளைக்கு நம்ம ஊருக்கு போய்ட்டு இங்க வந்து…” என்று அவர் சொல்லிக்கொண்டே செல்ல,
“அந்த பொண்ணு என்ன நினைக்கிதுன்னு யோசிக்கமாட்டீங்களா ப்பா?…” என்றான் சட்டென.
“பார்த்தா படிக்கிற பொண்ணு மாதிரி தெரியுது. அதோட…” என்றவன் தன் குரல் உயர்ந்துவிட்டதை எண்ணி சட்டென அடக்கிகொண்டவன்,
“நான் முதல்ல பேசிட்டு சொல்றேன்…” என்றுவிட்டான்.
அவனின் பிடிவாதத்தில் அன்னக்கிளி இன்னுமே கவலை பொங்க மகனை பார்த்தார்.
“ம்மா, அவனை சும்மா இப்படி பார்த்தே கடுப்பேத்தாம இருங்க. நீங்க நார்மலா இருந்தாலே அவன் பாதி சரியாகிருவான்…” என அருந்ததி தாயை அதட்டிவிட்டு உஷாவை பார்த்தவள் தலையசைத்தாள்.
“என்ன?…” என உஷா புரியாமல் பார்க்கவும் புன்னகைத்த அருந்ததி,
“எங்க வீட்டு மருமக பொண்ணை பார்க்க போகலாமா?…” என கேட்டதும் உஷாவும் முகம் மலர்ந்தாள்.
இருவருமாக முதலில் தனியே பேசிவிட்டு முல்லை இருக்கும் அறைக்குள் செல்ல அவள் கட்டிலில் சுருண்டு படுத்திருக்க உடன் சொந்தங்களில் ஓரிருவர் அமர்ந்து அங்கலாய்த்துக்கொண்டு இருந்தார்கள்.
“அக்கா நீங்க போய் அம்மா கூட இருங்க….” உஷா அவர்களை வெளியேற்ற நினைத்தாள்.
அருந்ததி தன்னை அழைக்கவுமே என்னவோ பேச வருகிறாள் என்று புரிந்து போக அவர்களை வெளியே அனுப்ப பார்த்தாள் உஷா.
“அதான் இம்புட்டுக்கு ஆகிருச்சுல. அப்பறம் என்ன ரகசியம்? நாங்க போனாத்தான் உன் நாத்திட்ட பேசுவியோ?…” என்றார் அதில் ஒருவர்.
அருந்ததி அவரிடம் எப்படி பேசி வெளியேற்ற என்று உஷாவை பார்க்க உஷா பதட்டமே இன்றி,
“ரகசியம்ன்னே வச்சுக்கோங்க. அதுவும் ஊரறிஞ்ச ரகசியம் தான். பர்ஸ்ட் நைட்க்கு ஏற்பாடு செய்யனும்ல. அதான் அம்மா உங்களை கூப்பிட்டு பேசலாம்ன்னு இருந்தாங்க. நீங்கன்னா விவரமா சொல்லுவீங்கன்னு…” என சொல்ல,
“முக்கியமான சமாச்சாரம்ல. அதான் என்னைய கூப்பிடுதாங்க…” என்று வேகமாய் சென்றார் அவர். உடன் அந்த இன்னொரு பெண்ணும் நகர,