“என்ன திடுதிப்புன்னு ஊருப்பக்கம்?…” என கேட்க ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவள் பார்வை அவன் புஜங்களை தழுவியது.
“இந்தாங்க…” என்று நீட்ட அதனை வாங்கிகொண்டாள் மதுரா.
“இருங்க வாரேன்…” என உள்ளே சென்றவன் சட்டையை அணிந்துகொண்டு வந்து அங்கிருந்த படியில் அமர்ந்துகொண்டான் மதுராவின் எதிரே.
“மறுக்கா அந்த நாரு வீட்டு பக்கம் வந்தியானா?…” என்று கேட்க,
“இல்லை…” என்றாள் மதுரா சிரிப்புடன்.
“நல்லதுங்க. கொஞ்சமேனும் அடங்கி கெடக்கட்டும்…”
“ஆமா, அதோட கோர்ட்ல ஜகா சொன்ன மாதிரி ஒரு வருஷத்துக்கு டைம் வாங்கியிருக்கோமே. பிரச்சனை பண்ணினா லோக்கல் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ண சொல்லிருக்காங்க. அதனால வரலை….” என சொல்ல தலையசைத்தான்.
“நான் உங்ககிட்ட தான் பேச வந்திருக்கேன்…” என்று மீண்டும் சொல்ல,
“நல்லதுங்க. மாப்பிள்ளை யார்? எந்த ஊர்? ஏதாவது விசாரிக்கனுமா?…” என கேட்க கடுப்பாகி போனாள் மதுரா.
“இன்னும் மாப்பிள்ளை பார்க்கலை. பார்த்து வேணா சொல்லுங்களேன்…” என்று மதுரா சொல்ல புரியாமல் பார்த்தவன் அவள் கோபமாய் பேசியதில் புருவம் சுருக்கினான்.
இதென்னவித பார்வை? தன் யூகம் சரியோ? பொய்யோ? அம்மாடியோவ் என சீராய் கிடைக்காமல் தடுமாறிய மூச்சை நிரப்பினான் உள்ளுக்குள்.
மனது சமன் பட மறுத்தது. இதில் அதனை ஏற்கவும் தயக்கம். தயக்கம் என்பதை விட இத்தனை நாட்கள் வேண்டாம் என்று ஒருபக்கம் வளர்த்திருந்தது அவனை முரண்டியது.
பல்லை கடித்தவன் தற்சமையம் அவளிடம் என்ன பேசுவது என யோசித்தபடி இருந்தான்.
அவனின் அமைதியே மதுராவை சிந்திக்க வைத்தது. ‘இதென்ன தான் சொல்லியும் பேசவில்லை இவன்?’ என்று. லேசாய் படபடப்பும் கூட,
“என்ன திரும்ப சைலன்ட்? அம்மா உங்களை பேச சொன்னாங்க. ப்ச், உங்ககிட்ட பேச சொன்னாங்க. அச்சோ, நான் உங்களை கல்யாணம் செஞ்சுக்கனும்ன்றதை பத்தி சொன்னாங்க. அதான் உங்ககிட்ட பேச வந்தேன்…” மாற்றி மாற்றி அவள் சொல்ல மெல்லிய புன்னகை பாண்டியன் முகத்தில்.
“முடிவுக்கு வரதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சிட்டு பேசுங்க. அதுக்கப்பறம் முதல்லையே யோசிக்காம பண்ணிட்டோமேன்னு ஒரு நிமிஷம் நினைச்சிட்டாலும் அந்த வாழ்க்கை பொய்யா போயிரும். எனக்கு அது வேணாம்…” என்றான் உறுதியுடன்.
‘ஏன் என்னால் இங்கே வாழ முடியாதா? இதுவும் மனிதர்கள் இருக்கும் வசிப்பிடம் தானே?’ என நினைத்தவளுக்கு ஏன் இத்தனை பெரிதுபடுத்த வேண்டும் என்று புரியவில்லை.
“என்னை உங்களுக்கு புடிக்கும் தானே? சும்மா இல்லைன்னு மழுப்ப கூடாது. எனக்கு தெரியும். உங்களுக்கு என்னை இன்னும் புடிக்கத்தான் செய்யும். சரியா?…” என்று கேட்டவளுக்கு புருவம் உயர்த்தினான்.
“சரி இப்ப நா வேணாமின்னு சொன்னா?…” பாண்டியன் கேட்கவும்,
“சொல்லமாட்டீங்க. அதான் வந்தேன்…” மதுரா புன்னகையுடன் உறுதியாக சொல்ல அதில் வியப்புடன் தலையசைத்து பார்த்தான்.
“ஆனா சொல்லனும்னு கூட ஒருமனசு அடிச்சிக்கிது. என்னத்த செய்யட்டும்?…” என்றவன் முகம் இப்போது எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை.
“உங்கப்பா அன்னிக்கு சொன்ன அம்புட்டும் இன்னும் அப்பிடியே தான் இருக்குது. எதுவுமே மாறல. எம்படிப்பு, எந்தொழில், எவ்வூரு, இங்க எங்க வாழ்க்கன்னு எல்லாமே இதேம். இத்த ஒங்களால ஒத்துக்கிட்டு இங்கின வாழ்நாமுச்சூடும் பொழப்பை நடத்த ஆவுமா?…” என்றான் அவளிடம்.
“வாவ், இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது பாருங்க. ஏங்க நாம சேர்ந்து வாழறதை பத்தி நான் பேசினா நீங்க புருஷன்ற வேலைக்கு இதெல்லாம் வேணும்ன்ற மாதிரில சொல்றீங்க?…” என்றவள் எல்லாமே யோசித்திருக்கிறாள் என புரிந்தது பாண்டியனுக்கு.
“எங்கப்பாவும் இங்க தான் பிறந்து வளர்ந்தார். நானும் இங்க வந்திருக்கேன். இருந்திருக்கேன். எனக்கும் தெரியும்…”
“அது என்னங்க அவ்வளோ அடமென்ட் உங்களுக்கு? இப்படித்தான் நான் இருப்பேன், என்னால முடியாதுன்னு நீங்கலாம் எப்படி சொல்ல முடியும்? நான் தான் சொல்லனும்னு என்னை. எனக்கு பிடிச்சா எங்கவேணாலும் நான் இருப்பேன்…” என்றவள்,
“எஸ், வாழ்க்கை முழுக்கன்னு எனக்கு தெரியாதா? கண்ணை கட்டி எங்கையோ கொண்டுவந்து விடலை. என்னோட பூர்வீகம் இது. இங்க எனக்கு எதிர்காலம்ன்னு வரப்போ அதை எப்படி வாழனும்னு நான் தானே முடிவு பண்ண முடியும்?…”