விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்து குடும்பத்தினரை இறக்கிவிட்டுவிட்டு பாண்டியன் வேலையாய் கிளம்பி சென்றதும் மதுராவினுடனே தான் இருந்தார் காந்திமதி.
உடன் வடிவும் இருக்க என்ன தான் பேசி, சிரித்து, கிண்டல் செய்து என்றிருந்தாலும் மதுராவின் முகத்தில் சிறு புள்ளியாய் அவள் வருத்தங்கள்.
பெற்றோரை பிரிந்த ஏக்கம் ஒருபுறமிருக்க அதனை தங்களிடம் காட்டிவிடாமல் மறைக்க முயலும் அவள் மனதை புரிந்துகொண்டனர் பெண்மணிகள்.
ஏதேனும் ஒரு வேலையை சொல்லி, கதை பேசி, பழைய விஷயங்களை பகிர்ந்து என்று பொழுதும் மாலையை எட்டிவிட்டது.
காந்திமதிக்கு கால்கள் வலித்திருக்க வடிவு அவரை அறைக்கு அழைத்து சென்றார் மருந்து தேய்க்க. உடன் மதுராவும் செல்ல,
“நீயி இரு சாமி, நா பாத்துக்கிடுதேம்…” என்று அவளை அனுப்பி வைத்தார்.
மருந்து தேய்த்துவிட்டு காந்திமதி லேசாக கண்ணை மூடவும் எழுந்து வெளியே வந்த வடிவு மருமகளை தேட பால் கறக்கும் இடத்தில் அமர்ந்திருந்தாள் மதுரா.
“ரெண்டுமே ஓகே அத்தை. இந்த கைல டீ கப், அந்த கையில காபி கப்….” என்றவள் பேச்சில் சிரித்த வடிவு,
“ஒனக்கு காப்பி தான புடிக்கும். போடுதேம்…” என்று உள்ளே சென்றார்.
பெரும்பாலும் அந்த வீட்டில் அனைவரின் விருப்பம் டீயாக இருக்க எப்போதாவது தான் காபி என்பதை கண்டுகொண்டிருந்தவளுக்கு தன் மீதான மாமியாரின் கரிசனை இதமாக இருந்தது.
இன்னும் கையிலிருந்த அழைப்பு ஏற்கப்படாமல் அடித்து ஓய்ந்திருக்க தானே அழைத்தாள் மகேஷ்வரிக்கு.
“ம்மா, வீட்டுக்கு போயாச்சா?…”
“இப்ப கொஞ்சம் முன்னாடி தான் வந்தோம் மது. அதான் உனக்கு சொல்லிடுவோம்ன்னு கூப்பிட்டேன். நீ பிஸியா இருந்தா அப்பறமா பேசு…”
“நோ ம்மா, அப்படியெல்லாம் இல்லை. சும்மா தான் இருக்கேன்…”
“ஓஹ், நான் கூட அவங்க இருக்காங்கன்னு தான் நீ கால் அட்டன் பண்ணலைன்னு நினைச்சேன்….” என்றார்.
“இல்லம்மா, அத்தை கூட பேசிட்டிருந்தேன். அதான். சரி சொல்லுங்க…” என அவருடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாள்.
வந்ததும் எழில்மணி கம்பெனிக்கு சென்றிருப்பதாக சொல்ல மதுராவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“இன்னைக்கே அப்பா ஆபீஸ் போகனுமா?…”
“நானும் சொன்னேன், நாளைக்கு போகலாம்ன்னு. கேட்டா தானே?…”
“சரி விடுங்க. பார்த்துட்டு வரட்டும்…”
“ஓகே மது, நான் போய் மத்த வேலையை பார்க்கறேன். இங்க பாட்டிக்கு வேற ரூம் ரெடி பண்ணனும்….” என்றவர்,
“இதை கேட்க தான் கூப்பிட்டேன். மறந்துட்டேன் பாரு…” என்றார்.
“சொல்லுங்கம்மா…”
“இல்ல நீங்க வரப்போ உன்னோட ரூம்ல தங்கறதா இல்லை கீழே பெரிய ரூம் ரெடி பண்ணவா? சொன்னேனா எல்லாம் மாத்த கரெக்ட்டா இருக்கும்…”
“என்ன மாத்த போறீங்க?…”
“ரூம்ல கர்ட்டன்ஸ்ல இருந்து எல்லாமே?…” என்று பேசிக்கொண்டிருந்தார்.
“நான் எப்ப வரேன்னு அவங்கட்ட பேசிட்டு சொல்றேன்…” என்று வைத்துவிட்டவள் பாண்டியனுக்கு அழைப்போமா என யோசித்து ‘வேலையாக இருந்தால் அவனுக்கு தொந்தரவு’ என்று விட்டுவிட்டாள்.
வடிவும் காபியுடன் வர வாங்கிக்கொண்டவள் நன்றி சொல்லிவிட்டு குடித்தபடி மருது இருக்கும் இடம் வந்து நின்றாள்.
ஏற்கனவே பாண்டியனுடன் இருக்கும் பொழுது மருதுவுக்கு மதுராவும் அறிமுகம் என்பதால் அவளை பார்த்ததுமே தலையசைத்து அருகே அழைத்தான்.
செல்லத்தான் ஆசை, கணவன் இருந்தால் அவனின் அருகில் மருதுவை பயமில்லாமல் தொட்டு தடவ முடியும்.
ஆனால் தனியாக சென்றதில்லை என்பதால் தயங்கி பின்னால் நிற்க ‘ம்மா’ என்றழைத்தது அவளை.
“சத்தியமா பயமா இருக்குடா உன்கிட்ட வர…” வாய்விட்டே மதுரா சொல்ல மருது முன்னங்கால் இரண்டையும் தரையில் சுரண்டியது.
கட்டியிருக்கும் கயறின் நீளம் மதுராவை நெருங்க போதுமானதாக இல்லை என்பதனால் அடம் பிடிக்கும் குழந்தையாய் மாறிவிட்டான் மருது.
“ஏய் என்ன பன்ற? இரு இரு…” என அதனுடன் சடுகுடு விளையாடாத குறை தான் மதுரா.
வைக்கோல் எடுத்து போட்டும் அதை உதறி தள்ளி இன்னும் சத்தமாய் கத்தினான் மருது.
என்னவும் ஆகிவிட்டதோ என போனுடன், காபி தம்ளரை அங்கேயே வைத்துவிட்டு உள்ளே செல்ல அதற்குள் வடிவும், காந்திமதியும் எழுந்து வந்துவிட்டனர்.
ஜகாவும் உள்ளே நுழைந்து பைக்கை நிறுத்த மதுராவின் முகத்தில் தெரிந்த பதட்டத்தில்,
“என்னாச்சு மதினி? என்னத்துக்கு ஓடியாந்தீக?…” என்று கேட்க,
“என்னம்மா? மது…” என பெண்களும் கேட்க,
“இல்ல மருது என்னவோ பன்றான். ரொம்ப சத்தமா கத்தறான்…” என சொல்ல ஜகா வேகமாய் அங்கே சென்றான்.
“என்னடா?…” என கேட்டுக்கொண்டே அருகே செல்ல அவனிடமும் ‘ம்மா’ என கத்தி தலையை உலுக்கினான்.
“என்ன ஒனக்கு இப்ப கோவமாம்?…” மருதுவின் தோளில் தட்டி அதனை அணைத்து நிற்க சமாதானம் போல அவன் தோளில் முண்டியது.