“தடுப்பணைக்கு தானே?…” என கேட்டவன் கேள்வியில் ஒரு நிமிடம் ஜெர்க்காகினாள் மதுரா.
“இன்னைக்கா? இப்பவா? சொக்கா….” இருக்கும் இடம் அறிந்து சட்டென அவனின் மீசையை நோக்கி சென்ற தன் கையை மடக்கி கோர்த்துக்கொண்டாள்.
“வீட்டுக்கு போவோம், லேட்டாச்சுன்னா தேடுவாங்க…” என சொல்ல பாண்டியன் தலையசைப்புடன் தனது போனை எடுத்து நாயகிக்கு அழைத்தான்.
“ஆத்தா நான்தேம்…”
“சொல்லு ராசா….” நாயகி கேட்கவும்,
“ரவைக்கு வர நேரமாவும். எம்மாமனார்ட்ட சொல்லிரு….”
“அதுக்கென்ன சந்தோசமா மெல்ல வாங்க…” என்று வைத்துவிட்டார் நாயகி.
கன்னத்தில் கை வைத்தபடி அவனை மெல்லிய முறைப்புடன் பார்த்திருந்த மதுராவிடம் புருவம் உயர்த்தினான் பாண்டியன்.
“நினைச்சா செஞ்சிரனும். ஆணவம் ஆணவம்….” என வழக்கம் போல அவனை திட்டிக்கொண்டே பாண்டியனின் கையோடு கை கோர்த்துக்கொண்டாள்.
“மதுரா?….” என கேட்டவன் சுற்றிலும் பார்வையை ஓட்ட,
“யாரும் பார்க்கலை. பார்த்தாலும் இங்க ஒன்னும் ஒட்டி உராசலை. சும்மா…” என்றவள் அவனின் கையை கிள்ளி வைத்து,
“கை கோர்த்ததுக்கெல்லாம் இந்த பாடா?…” என விலக பார்க்க இப்போது பிடித்துக்கொண்டான் பாண்டியன்.
“கோவில், மத்தவங்க பார்வை நம்ம மேல வெசனமா படிய கூடாதுப்பா….”
“அப்பப்பா, போதும். வாங்க….” என எழுந்துகொண்டவளை அழைத்துக்கொண்டு மதுரை முழுவதும் சுற்றினான்.
ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்து சென்று காண்பித்து, அங்கிருந்ததை வாங்கி சுவைத்து, மகிழ்ந்து என பொழுது நள்ளிரவை தாண்டியது ஊர் வந்து சேர.
வீடு வந்தவர்கள் உறங்கி எழ அதற்காகவே காத்திருந்ததை போல எழில்மணி மகளையும் மருமகனையும் கவனித்துக்கொண்டே தான் இருந்தார்.
காலை உணவு முடிந்து மதியம் உணவு வரை இந்த சுற்றுதல் நடக்க பாண்டியனுக்கு ஒரே சிரிப்பு.
“என்னத்துக்குப்பா என்னியவே சுத்தி வாராரு ஒங்கப்பா…” என மதுராவிடம் அவன் கிசுகிசுக்க,
“நீங்க எப்ப கைய புடிச்சு இழுப்பீங்கன்னு தான்….” என கண்ணடித்தாள் மதுரா.
“அடிங்…” என்றவன்,
“ஒன்னிய இழுக்குதது பத்தாதாமா?…” என சிரித்தாலும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.
முன்னும், பின்னுமாக நடந்தார், நகர்ந்தாரே தவிர அமர்ந்து கலகலப்பாக அவர்களுடன் பேசிவிடவில்லை.
அது எழில்மணிக்கு வரவும் இல்லை. ஆனாலும் அவர்கள் பார்வை வட்டத்திற்குள் அவரும், அவரின் கண்ணுக்கு முன் அவர்களும் என்று தான் நடமாடினார்.
“உங்கப்பாவை பேசாம பேஷன்ஷோக்கு கொண்டுபோய் விட்டுடலாம். எப்படி நடந்து காமிச்சிட்டு இருக்கார் பார்…” என மகேஷ்வரி சொல்லி சிரிக்க,
“இம்புட்டு வருசத்துல இன்னிக்குத்தேம் எம்மவேன் இந்த வீடு தேய தேய நடக்குதியான்…” என நாயகி ஒருபக்கம் அங்கலாய்த்தார்.
கடுகடுவென்று வந்தாலும் பாண்டியனை வைத்துக்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை எழில்மணி.
“இங்க பார் மகேஷ், நான் என் வேலையை போட்டுட்டு அவங்களோட இருப்பேன். அவங்களும் இங்க தான் இருக்கனும். பார்ப்போம் யார் ஜெயிக்கான்னு…” என சவாலே விட்டிருந்தார் அவர்.
“இது என்ன ஜெயிக்கிற போட்டியா? கடவுளே?…” என்று தலையில் அடித்துக்கொண்டார் மகேஷ்.
“எப்படிம்மா இத்தனை வருஷம்?…” என்று மகேஷ்வரியை தான் கிண்டல் பேசினாள் மதுரா.
பாண்டியனின் எதிர்க்கவோ, அருகிலோ, இல்லை இங்குமங்கும் நடக்கவோ செய்தால் ஒவ்வொன்றிற்கும் அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“என்னவாம்?…” என்று வேறு கேட்டால்,
“ஒண்ணுமில்லையே…” என நகர்ந்துவிடுவார்.
இப்படியாக மதிய உணவு நேரம் வரை நடமாடாமல் நடனமாடியவரால் அதற்கு மேல் முடியவில்லை.
“சாப்பிட்டா கொஞ்ச நேரம் எல்லாரும் தூங்கலாம்ல?…” என்றார் பொதுவாக.
“மதியம் தூங்கற பழக்கம் இல்லைப்பா. இப்படியே உக்கார்ந்திருப்போம்….” மதுராவும் கிண்டலாக சொல்ல பாண்டியனுக்கே பாவமானது.
“நா உள்ள இருக்கேம்ப்பா…” என அவனாக எழுந்து செல்லும் வரை எழில்மணி நகரவில்லை.
அதன் பின்னரே மூச்சுவிட்டவர் மகளும் மனைவியும் வெளியே செல்லவும் வேகமாக லேப்டாப்பை தூக்கியவர் வேலையை பார்க்க,
“மதுரா…” என வெளியே மனைவியை தேடி வந்தவன் இதனை பார்க்கவும் எழில்மணியும் திகைத்து பார்த்தார்.
“மதுரா எங்க காணும் மாமோவ்…” என்ற கேள்வியில் அந்த ‘மாமோவ்’ அழைப்பில் சுள்ளேன்று ஏறியது.
‘வேணும்னே பேசறார். இவரை’ என பல்லை கடித்த எழில்மணி வெளிப்பக்கம் கையை நீட்டி,
“இப்பதான் வெளில போனாங்க. கூப்பிடறேன்….” என்றார்.
“வேணா, இருக்கட்டும். நீங்க சோலிய பாருங்க…” என்று உள்ளே சென்றுவிட கிர்ரென்று ஏறியது.
“எஞ்சோலிய பாக்க எனக்கு தெரியாதாக்கும்? பெருசா வந்துட்டாரு. மாமோவாம் மாமோவ். மாமான்னு கூப்பிட்டா ஆகாதா? சும்மா கடுப்ப கிளப்பிக்கிட்டு….” என சொல்லிக்கொண்டே லேப்டாப்பை போட்டு தட்ட மீண்டும் அருகில் நிழல்.
திரும்பி பார்க்க பாண்டியன் தான் நின்றிருந்தான். பக்கென்றானது எழில்மணிக்கு.
வந்தவன் அங்கிருந்த பேப்பரை எடுத்துக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட அது இன்னும் திக்கென்று இருந்தது.
‘இதுக்கு சண்டை கூட போட்டிருக்கலாம். மதுக்கிட்ட சொன்னா அவ்வளோ தான்’ என கவலையானவர் மனைவியும், மகளும் வந்ததை கவனிக்கவில்லை.
“இப்ப யார் ஜெயிச்சா? யார் தோத்தா?…” மகேஷ்வரி கேட்க இருந்த கோபத்தில் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
“பேச்சு மட்டும் எவ்வளோ பேச்சு. மருமகன் கூட போட்டி போடறோமேன்னு தோண வேண்டாமா? சின்ன பிள்ளையா இவர்?…” என சொல்லி சிரிக்க இங்கே எழில்மணிக்கு எரிந்தது.
பெரிதாய் மருமகனை அவரும் பெருமையாக தான் நினைக்கிறார். ஆனாலும் ஆரம்பத்திலிருந்த பிடித்தமின்மை, வெறுப்பும், இன்னும் சிறிதளவு தேங்கி இருக்க கூடுதலாக அவனிடம் வாங்கியிருக்கும் கடன்.
இது தான் அவரை பெரியளவில் குடைந்துகொண்டிருந்தது. முன்பு யாரோ, எவனோ. ஆனால் இப்போது மகளை கொடுத்திருக்கும் இடம். மருமகன்.
அந்த எண்ணமே தலையிறக்கத்தை அடிமனதில் விதைத்திருக்க இப்போது இந்த சின்ன சின்ன நிகழ்வுகளையும் எதிர்மறையாக பார்க்க ஆரம்பித்தார்.
எப்போதுமே அவரிடத்தில் பாண்டியன் மௌனம் தான். ஆனால் இப்போதும் அவன் அப்படியே இருக்க இறுமாப்பாய் இருப்பதை போலொரு தோற்றம் அவரறியாமலேயே எழுந்தது.