“அழகா தான் இருக்கு சொக்கரே. விடுங்க, விடுங்க….” மதுரா அவனை கேலி பேச,
“நீயி வேற ஏம்ப்பா?….” என புன்னகைத்தவன்,
“காலேலேயே எங்கிட்ட சொல்லிருக்கலாமில்ல….” என கேட்டான் வரும் பொழுது கேட்ட அதே கேள்வியை.
“ஹப்பா, என்ன சொல்ல? இன்னைக்கும் பார்த்துட்டு சொல்லலாமேன்னு நினைச்சேன். அதோட இன்னைக்கு தான் செக் பண்ணேன்னு சொன்னேன்ல சொக்கரே….” என்று சொல்லியவள்,
“வீட்டுல எப்படி சொல்ல? பாட்டி ஒரே ஆட்டமா ஆடுவாங்க…” என சொல்லியவள் அதனை நினைக்கையில் அத்தனை சிரிப்பு.
பேசியபடியே வீடு செல்வதற்குள் அங்கே நாயகியில் இருந்து அழகர் வரை அனைவரும் வந்துவிட்டிருந்தனர்.
“போச்சு…” என்றபடி பாண்டியன் இறங்கினான் தன்னை நோக்கி ஓடிவரும் காந்திமதியை முறைத்துக்கொண்டு.
“ஏ ராசா, கையில காயம் பட்டுச்சாமே? எஞ்சாமி….” என அழுகையை தொடங்க,
“சங்க புடிக்கிதேம் பாரு ஒன்னிய….” என அதட்டினான் பாண்டியன்.
காந்திமதியின் அழுகை சட்டென நிற்க மற்றவர்களை நிமிர்ந்து பார்த்தவன் உள்ளே நுழைந்தான் மதுரவுடன்.
“நீயி கூட சொல்லலத்தா? ஆஸ்பத்திரிக்கா போனீய?….” என மதுராவிடம் காந்திமதி கிசுகிசுக்க அதற்குள் வந்திருந்தவர்களிடம் ஒன்றுமில்லை என சொல்லிக்கொண்டிருந்தான் பாண்டியன்.
“ஆத்தா எந்த ஆஸ்ப்பத்திரிக்கி போனான்னு தெரியலன்னு சொல்லுச்சுய்யா. அதேம் போட்ட வேலைய போட்டபடிக்கி வந்தேம்…” என அழகர் சொல்லவும்,
“ஒண்ணுமில்ல சின்னய்யா, கெளம்பு. போயி சோலிய பாரும். நமக்கென்ன இது புதுசா? இங்கினவே ரத்தம் பாத்துச்சேன்னு இத்தோட முடிஞ்சதுன்னு நெனப்பியா? போ போ….” என அவரை அனுப்பி வைத்தான்.
ஜகா இவற்றை பார்த்தபடி தள்ளி நிற்க பாண்டியன் முனியாண்டியை அருகில் அழைத்து சத்தம் போட்டான்.
“ஒன்னிய இங்க வண்டிய மட்டுந்தான விட சொன்னேம்? என்ன சோலிலே பாத்து வெச்சிருக்க?…” என அதட்ட அவன் பம்மிக்கொண்டு கிளம்பி சென்றான்.
வடிவு மகனின் இயல்பான முகத்தில் தைரியமாக நின்றாலும் இது என்ன என்று பயந்து வந்தது.
இன்று தான் ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி என மருதுவை அழைத்து சென்றிருந்தனர் களத்திற்கு.
அவ்வப்போது நடப்பது தான். இனி ஜல்லிக்கட்டு நெருங்கிவிட்டதனால் இன்னும் அதிகமாகவும், வேகமாகவும் பயிற்சிகள் கொடுக்கப்படும்.
அப்படி இருக்க முதல் நாளே அத்தனை வீரியம் மருதுவிடம் எனும் பொழுது பயத்தில் சாமிக்கு விளக்கேற்றி ஈரமஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்திருந்தார் வடிவு.
“ஒனக்கு என்னாத்தா? ஒம்பாட்டுக்கு நீயி அழுவலையா?….” என பாண்டியன் சிரித்தபடி கேட்க வடிவின் பார்வையில் பரிதவிப்பு.
அதன் பின்னர் சட்டையை கழற்றி காயத்தை காண்பிக்க ஓரளவு மனது சமன் பட்டது பார்த்தவர்களுக்கு.
“எதுக்கும் கொலதெய்வத்துக்கு ஒரு பூசைய போடுவோமா?….” என்றார் நாயகியும்.
மருத்துவர் என்ன சொன்னார் என்னும் விஷயம் எல்லாம் சொல்லியவன் மருந்துகளையும் காண்பித்தான்.
“இருந்தாலும் ஒத்த வார்த்த சொல்லிட்டு போவத்தான? கூட ஒத்தாசைக்கு வந்துருப்போமில்ல….” காந்திமதி மூக்கை உறிஞ்சியபடி கேட்க,
“அங்க வந்தும் சலம்பல கூட்டுததுக்கா?….” மீண்டும் பாண்டியன் சத்தம் போட கப்சிப் காந்திமதி.
“செரி விடு. ஒரு முக்கியமான விசயத்த சொல்லத்தேம்….” என பாண்டியன் ஆரம்பிக்கும் பொழுதே,
“அங்க தான் வரீங்கன்னா சொல்லியிருக்கலாமேண்ணே. நானும் அங்க வந்திருப்பேனில்ல? இந்த கையோட ஜீப்பை ஓட்டிட்டு வரனுமா?…” என கடிந்தான் ஜகா.
“விடுடா விடுடா…” என சொல்லியவன் மதுராவிடமிருந்த இனிப்பை தர சொல்லி கண்ணை காண்பித்தான்.
“எடுத்துகோங்க பாட்டி….” என்று அவள் நீட்டிய இனிப்பை பார்த்துவிட்டு,
“அடிபட்டதுக்காக்கும். வாய விட்டு அழ விட்டானா இந்த பய? எனக்கு வேணா….” என காந்திமதி முகத்தை திருப்பிக்கொண்டார்.
“சத்தமா சொல்லுங்களேன். உங்க பேரனுக்கு இன்னும் கேட்கலையாம்?….” மதுரா கிண்டலடிக்க,
“ம்க்கும்….” என்றவர்,
“அதேம் வேணாங்கேன்ல. போத்தா….” என்றார் இன்னும் முறுக்கியபடி.
“அமேசான்ல இருந்து ஆடர் எடுத்துக்கிட்டாங்களாம் பாட்டி. சீக்கிரமே டெலிவரி ஆகிடும்….” என மதுரா கண் சிமிட்டவும் நெஞ்சில் கை வைத்து நிஜமா என்பதை போல திகைத்து காந்திமதி பார்க்க,
“ஏ கெழவி எம்புள்ள வர போவுதுன்னு சந்தோசமா ஒங்கிட்ட மொதல்ல சொல்ல வந்தா சிலுத்துக்குற? வேணான்னா போ….” என்றவன்,
“நீயி ஆத்தாவுக்கு குடுப்பா…” என்றான் பாண்டியன் இலகுவான புன்னகையுடன் கேலியாய்.
“யாத்தே….” என்ற காந்திமதிக்கு மயக்கமே வந்ததை போல சந்தோஷத்தில் உடல் தள்ளாட,
“ஏலே சகா என்னிய புடிடா…” என்றபடி லேசாய் சாய,
“அதெல்லாம் ஆவாது கெழவி. நீயி கீழவே விழுந்து கெட….” என்ற ஜகா,
“சந்தோசங்க மதினி….” என மதுராவின் கை பிடித்து குலுக்கியவன் அண்ணனை கட்டிப்பிடித்து விடுவித்து முதலில் இனிப்பை எடுத்து காந்திமதியின் மொத்த வாயிலும் திணற திணற அடைத்தான்.