மூன்றாம் மாதம் வரை தான் நாயகியின் வீட்டில் இருந்தாள் மதுரா. நான்கு ஆரம்பிக்கும் முன்பே அவளை புகுந்த வீடு அழைத்து செல்வதை பற்றிய பேச்சை காந்திமதியை வைத்து எடுத்துவிட்டான் சொக்கநாதபாண்டியன்.
“ஐஞ்சு மாசமாகட்டும் பாட்டி? இங்க உள்ளூர் தானே?….” என மதுரா காந்திமதியிடம் கேட்க,
அடுத்ததாக அழைக்கும் பொழுது என்னன்ன செய்யவேண்டும் என்ற பேச்சில் மூழ்கிவிட்டனர்.
“இந்தா மது, பிள்ளைக்கு பசியாத்து….” என நேரத்திற்கு பேரனை மகளிடம் தந்துவிட்டார்.
பிள்ளையுடன் தனி அறைக்கு வந்தவள் மகனை கையில் வைத்து கொஞ்சியபடி மடியில் போட்டு லேசாய் ஆட்ட பொக்கை வாய் திறந்து கெக்கலித்து சிரித்தான் குழந்தை விக்கிரமபாண்டியன்.
“செல்லக்குட்டி நீங்க விக்ரமா, பாண்டியரா? சொல்லுங்க சொல்லுங்க…” என கன்னக்குழியில் விரலை வைத்து பிள்ளைக்கு குறுகுறுப்பு மூட்ட பிள்ளை இன்னும் கூசி நெளிந்து சிரித்தது.
அதற்கு பசி கண்டுவிட முகத்தில் கையை கொண்டு அழுத்தமாய் தேய்த்து மதுராவின் நெஞ்சோடு முண்டியடிக்க,
“அச்சோ, பசிக்குதாமா பட்டுக்குட்டிக்கு….” என தோளில் போட்டு தட்டிக்கொடுத்து பசியாற்ற அமைதியானான் விக்கிரமபாண்டியன்.
பிள்ளையின் தலையை வருடியபடி மதுரா அவனையே தான் பார்த்துக்கொண்டும், பிள்ளையின் விரல்களை பிடித்து வருடிக்கொண்டும் இருந்தாள்.
நினைவு இந்த அழைப்பில் தகப்பன் என்ன செய்வாரோ என்பதில் சென்று நின்றது.
குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்த நாளில் இருந்தே எழில்மணி ஆரம்பித்துவிட்டார் வழக்கம் போல.
“வெறும் விக்ரம்ன்னு மட்டும் வச்சா ஆகாதா? எதுக்கு இவ்வளோ நீளமா? உன் புருஷன் வீட்டுல எல்லாருக்குமே சின்னதா பேர் வைக்கவே மாட்டாங்களா?…” என குதித்தார்.
“ப்பா, இந்த பேர் செலெக்ட் பண்ணினது நான். எனக்கும் பிடிச்சிருக்கு. ஏன் என் புருஷன் வீட்டாளுங்க பேர்ல என்ன குறையாம் உங்களுக்கு? கெத்தா இப்படி ஒரு பேர் அமையுமா? என் பிள்ளைக்கும் அப்படித்தான் இருக்கனும்னு என்னோட ஆசை…”
மதுரா எழில்மணி வாயை அடைத்துவிட்டாள் அப்போதைக்கு. ஆனால் பெயர் சூட்டும் அன்றும் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“பேருதான் பெருசா உங்க இஷ்டத்துக்கு வச்சுட்டீங்க. ஆனா கூப்பிடறது வெறும் விக்ரம்ன்னு கூப்பிட சொல்லு மதுரா. நீயே பாண்டியரேன்னு சொல்ற. எல்லாரும் அப்படித்தான் கூப்பிடறாங்க. எந்த காலத்துல இருக்க நீ….” என கோவிலில் வைத்து ஒருவேகத்தில் நக்கலாக சொல்ல,
“எந்த காலத்துல இருந்தாலும் அப்பா அப்பா தான். அம்மா அம்மா தான். வெறும் பேர்ல மட்டும் எல்லாம் அமைஞ்சிடாது ப்பா. புரிஞ்சுக்கோங்க….” என்று சொல்லிவிட்டாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.
அப்படி அத்தனைபேர் மத்தியிலும் முகம் காண்பித்தே எழில்மணி பேசிவிட்டதில் மதுராவிற்கு கோபம் கட்டுப்படுத்த முடியவில்லை.
வார்த்தைகளை எண்ணி நிதானமாக அவருக்கு மட்டும் கேட்கும்படி முகம் மாறாமல் சுருக்கென்று பேசிவிட்டவள் எழில்மணி ஊருக்கு கிளம்பும் வரை முகம் குடுத்து பேசவில்லை.
“என்ன மது?….” என மகேஷ்வரியே கேட்டுவிட்டார்.
“எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுக்குள்ள நமக்குள்ள பேசிக்கறது வேற ம்மா. எப்படி அத்தனை சொந்தக்காரங்க கூடி இருக்கும் போது இவங்க பேசலாம்? அப்போ என்னையும் என் புருஷன், பிள்ளையயும் இவங்களே விட்டுக்குடுத்து பேசலாமா?….” என்று மதுரா கேட்டுவிட,
“நான் எங்க விட்டுக்குடுத்தேன்? கொஞ்சம் மார்டனா இருந்தா நல்லா இருக்குமேன்னு தான் சொன்னேன். அதுல என்ன தப்பு?…”
“ஏன் விக்கிரமபாண்டியன்னு வைக்காம வெறும் பாண்டியன்னு மட்டும் வச்சிருந்தா அப்போ உங்க பேரன் இல்லைன்னு சொல்லிருவீங்களா?….” என்று கேட்டுவிட,
“மதுரா….” என சத்தமாய் அழைத்தான் பாண்டியன்.
சட்டென அவனின் வருகையில் அனைவரும் மௌனமாகிவிட எழில்மணி கவனிக்காததை போல முகத்தை திருப்பிக்கொண்டார்.
“என்னத்துக்கு சலம்பல் பண்ணுத?….” என அவன் மனைவியை அதட்ட,
“இங்காருப்பா, இவக இன்னதான் பேசனும், செய்யனுமின்னு நாம நெனைக்க கூடாது. சிலரை மாத்த முடியாது. அம்புட்டுத்தேன். அவகவக போக்குல போவவேண்டியதேம். அவக வயசுக்கு என்ன பேசனுமின்னு நாம சொல்லி தர முடியாது. அவகவகளுக்கா தெரியனும். விடு…” என்று சொல்ல அதன் பின்னர் அவன் கிளம்பும் வரை மதுரா எதுவும் பேசவில்லை.
எழில்மணி ஊருக்கு கிளம்பும் பொழுது மகளிடம் சொல்லிவிட்டு பேரனை கிளம்பும் வரை வைத்திருந்து கொஞ்சிவிட்டு தான் கிளம்பினார்.
“யாரும் எப்படியும் கூப்பிடுங்க, நான் விக்ரம்ன்னு தான் கூப்பிடுவேன்….” என கிளம்பும் பொழுது சொல்லிவிட்டே செல்ல தலையில் கை வைத்துவிட்டாள் மதுரா.
“இவரை என்னதான் செய்யன்னு தெரியலைத்தை…” என மகேஷ்வரி நாயகியிடம் புலம்ப,
“ஆனாலும் பேரன்னா போதும் ஒம்புருசனுக்கு, உருவி உருவி கொஞ்சுதியான்….” என்று வேற சொல்லி சிரித்துக்கொண்டார்.
இப்படி எழில்மணி எப்போதும் ஏட்டிக்கு போட்டியாக வீம்புக்கென்றே செய்துகொண்டு தான் இருந்தார்.
அவரை மாற்றவும் முடியவில்லை. புரிய வைத்தால் எனக்கு தெரியாதா என பதிலுக்கு இன்னும் அதிகமாகவே செய்ய ஆரம்பிக்க அனைவருமே விட்டுவிட்டனர் எப்படியும் இருக்கட்டும் என்று.
இதோ மூன்றாம் மாதம் அழைப்பு விஷயத்தை நாயகி போனில் மகனுக்கு சொல்ல உடனே மகேஷ்வரியிடம் கொந்தளிக்க ஆரம்பித்தார் எழில்மணி.
“என்கிட்ட கேட்காதீங்க. உங்கம்மா தான் முடிவு பண்ணினாங்க. அஞ்சாம் மாசத்துல நல்லநாள் அவ்வளவா இல்லைன்னு. அங்க பேசிக்கோங்க…” என்றவர்,
“எனக்கும் என்னோட கம்பெனியை பார்க்க வேண்டாமா? இங்க நான் வந்து எத்தனை மாசமாச்சு?….” என சொல்லிவிட்டார்.
“அப்போ மதுவை இங்க கூட்டிட்டு வா. இங்க வச்சு பார்ப்போம்….” என ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்க,
“நீங்க உங்க மருமகன் கிட்ட பேசிக்கோங்க….” என முடித்துவிட்டார் மகேஷ்வரி.
“என்னால இவர்கிட்ட பேச முடியாது….” என பெரிய கும்பிடு தான்.
மதுரா அதனை கண்டு மகேஷ்வரியை கிண்டல் செய்து சிரித்துக்கொண்டிருந்தாள் தகப்பனின் அழிச்சாட்டியங்களை கேட்டு.
சற்று நேரத்தில் பாண்டியனும் நாயகியின் வீடு வந்திருக்க அவன் சத்தம் கேட்டவள் மடியில் உறங்கும் மகனை தூக்கி தொட்டிலில் போட முயன்றாள்.
“வாரேம்த்தா இரேம்….” என வந்தவன் பிள்ளையை வாங்கி தொட்டிலில் படுக்க வைத்து லேசாய் ஆட்டி விடவும் மதுரா புன்னகைத்தாள்.
“இதுக்கெல்லாம் எதுவும் தனியா ட்ரெய்னிங் எடுத்தீங்களா நீங்க? அழகா தொட்டில்ல போடறீங்க? எனக்கு தான் இத்தனை மாசமாச்சு. போடனும்ன்னா கை நடுங்குது பயத்துல….” என்றாள்.