“சரி வாங்க….” என்றவர் பாண்டியனும் எதற்கு வருகிறான் என தெரியாமல் சென்றார்.
அங்கே நாராயணனும் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் ஏமாற்றுக்காரனுடன் நிற்க அப்போது தான் புரிந்தது அனைத்திற்கும் சூத்திரதாரி நாராயணன் என்று.
“தம்பி வாங்க. நீங்க சொன்னமாதிரியே கொண்டுவந்து ஒப்படைச்சிட்டேன். இதுல என் சம்பந்தியும் இருப்பார்ன்னு நான் நினைக்கவே இல்லை தம்பி….” என்று அகிலனின் மாமனார் சொல்லவும் தான் பாண்டியனின் முயற்சி என்பதே புரிந்தது எழில்மணிக்கு.
“இவங்க, இதெல்லாம்…” என்றவருக்கு பேசவே முடியவில்லை.
“மன்னிச்சிடுடா மணி, நான் தப்பு பண்ணிட்டேன். சின்ன சின்னதா பணம் எடுக்கும் போது என்னோட ஆசை பெருசானதே நீ இடம் வாங்கனும்னு பணம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன்னு சொன்னதால தான். அதான் புத்திகெட்டு இப்படி பண்ணிட்டேன்…” என்றவர்,
“உனக்கு யாரும் உதவமாட்டாங்க, நானும் மாட்டமாட்டேன்னு நினைச்சு இப்படி பண்ணிட்டேன். இன்னைக்கு என் பையனே எனக்கில்லை. இங்கருந்து போன் பண்ணி பேசினா என்னோட எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டான். எல்லா பணத்தையும் உனக்கே குடுத்திடறேன். என்னை வெளில விட சொல்லுடா….” என கெஞ்சினார்.
எழில்மணி எதுவும் பேசும் நிலையிலில்லை. எந்த நிலையில் தானிருந்திருக்கிறோம் என நினைத்தவருக்கு நடுங்கியது.
அந்த நேரத்தில் உதவ மருமகனின் குடும்பத்தார் மட்டும் இல்லை என்றால் தன்னிலை? நினைத்து மருகி அமர்ந்துவிட்டார்.
பணத்தில் முக்கால்வாசி நாராயணனிடம் இருக்க மீட்கப்பட்டு எழில்மணிக்கு வழங்கப்பட்டது.
தந்தையின் குற்றத்திற்கு தண்டனை கிடைத்துவிட வசுந்தராவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டான் அகிலன்.
உடன் வைத்திருந்தால் தன் வாழ்க்கையையும் பாழடித்துவிடுவார் என்று சொல்ல நிர்கதியாகினர் பேராசை பிடித்தவர்கள்.
எல்லாம் ஜகா இருந்து முடித்து தர, பணத்தை பெற்றதுமே அப்படியே பாண்டியனிடம் கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டார் எழில்மணி.
“சமயத்துல நீங்க செஞ்ச உதவியை காலத்துக்கும் மறக்கமாட்டேன். இப்பதான் நிம்மதியா இருக்கு…” என்றவருக்கு பேச்சு மட்டும் குறையவில்லை.
ஒருவருடம் சிறப்பாக சென்றோடி காலவோட்டம் மனிதர்கள் மனதை இன்னும் இதமாகவே வைத்திருந்தது.
அன்று ஞாயிறு விடுமுறை தினம். உள்ளே மதுராவும் வடிவும் துர்காவுடன் சமையலில் இருக்க, வெளியே ஈசி சேரில் அமர்ந்து ஒரு வழக்கை பற்றி குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்தான் ஜகா.
இரும்பு கேட் திறக்கும் சத்தத்தில் காதில் சொருகப்பட்ட பேனாவுடன் ஜகா திரும்பி பார்க்க அழகர் வந்துகொண்டிருந்தார்.
அவருடன் பின்னால் வந்திருந்தவள் வைதேகி. பார்த்ததுமே கண்டுகொண்டவன் இதழ்களில் இளநகை.
இறைவன் செயலோ என்னவோ இந்த இடைப்பட்ட நாட்களில் எதேர்ச்சையாக அனேகமுறை ஆங்காங்கே வைதேகியை பார்த்திருந்தான் ஜகா.
மதுராவின் பிரசவத்திற்கு பின்னர் முன்பை போல முறைப்பெல்லாம் இல்லை வைதேகியிடம்.
அவ்வப்போது பார்க்கும் நேரம் அறிமுகமானவரை பார்த்ததும் தோன்றும் புன்னகையை புரிந்து நகர்ந்துவிடுவாளே தவிர பேசியதில்லை.
இப்போது அழகருடன், அதுவும் முகத்தில் இறுக்கமும், சோகமுமாய் வந்தவளை பார்த்தவனுக்கு என்னவோ என தோன்றியது.
“என்ன சின்னைய்யா, மவள கரையேத்தினாலும் ஆச்சு இங்கிட்டு தல அம்புடமாட்டிக்கே?….” என்ற ஜகா,
“டாக்டர்ன்னு எனக்கும் தெரியுமய்யா. நீரு என்ன விசயமா கூட்டியாந்தீரு? அத்த சொல்லும்…” என்றான்.
“சொல்லுதேம். ஒரு கேஸு. கூட பொறந்தவனே சலம்பல கூட்டுதியான். மொதவே பிரிச்சு எழுதிக்குடுத்த சொத்துல இப்ப கொடச்சல குடுக்கியான். என்ன செய்யன்னு தெரியாம புள்ள மருவுது…” என்றார்.
“நீதேம் வக்கீலாச்சே, என்னன்னு பாத்து குடுய்யா, புண்ணியமா போவும்….” என்று சொல்லியவர்,
“எத்தா என்னன்னு தம்பிக்கிட்ட சொல்லு. நா டவுனு வரைக்கு போயி என்னன்னு பார்த்துட்டு அஞ்சு நிமிசத்துல வாரேம்…” என வெளியே சென்றார் அழகர்.
“இப்பவாச்சும் டாக்டர் உக்காரத்தான?….” என ஜகா சொல்ல,
“தேங்க்ஸ்….” என்று அமர்ந்தவள் சுருக்கமாக விஷயத்தை சொல்லிவிட்டு,
“இந்த டாக்குமென்ட்ஸ்ல எல்லாம் எழுதிருக்கேன்…” என நீட்டினாள்.
“ஓகே…” என வாங்கியவன் அதனை படித்துக்கொண்டே,
“கெழவி குடிக்க மோரு…” என அமர்ந்த இடத்திலிருந்தே பெரிதாய் கத்தினான்.
“கொண்டா கெழவி. ஓயாம பாப்பியா என்னிய?…” என்று கிண்டல் வேறு செய்ய,
“பச்ச புள்ளைக்கி ஒழுங்கா ஒரு சட்டிய மாட்ட ஆவல, உள்ள போடுதது வெளில பல்ல காட்டுது. இவேனுக்கு கலியாணம் ஒண்ணுதேன் கொறவு. இன்னொருக்க கேளு. கொமட்டுல இடிக்குதேம்…” என மோருடன் வந்த காந்திமதி வெளியே வரும் முன் அவர் குரல் வெளியே கேட்டது.
அதுவரை இறுக்கமாக, என்னவோ கவலையுடன் அமர்ந்திருந்த வைதேகி பக்கென்று சிரித்துவிட,
“பங்கம் பண்ணிடுச்சே கெழவி….” என முகத்தில் கை வைத்துவிட்டான் ஜகா.
“இந்தா…” என வெளியே வரவும் தான் வைதேகி அமர்ந்திருப்பதையே காந்திமதி பார்க்க,
“அட டாக்டரு புள்ள தான….” என்றார் ஞாபகமாக.
“ஆமா பாட்டி, எப்படி இருக்கீங்க?…” என கேட்டவள் எழுந்து அவரின் இன்னொரு கையில் இருந்த குழந்தையை வாங்க முயல அவன் ஜகாவிடம் தூக்கும்படி கையை நீட்டினான்.
“இவேன் வேற அவங்கூடவே ஒட்டிக்கிட்டு திரியுதியான்? ஒரு சகாவுக்கே வீடு நாலாவுது. இதுல இன்னொருத்தேனும். நீயி ஒக்காருத்தா. சோலியா வந்தியாக்கும்….” என்று கேட்க,
“ஆமா, ஒரு கேஸ். அதான் வக்கீலை பார்க்க…” என வைதேகி சொல்லவும் காந்திமதி சிரித்துவிட ஜகா முறைத்தான்.
“செரி நீயி பாரு. நா உள்ள போரேம்….” என செல்லவும் வைதேகி முகத்தில் அந்த மலர்ந்த புன்னகை இன்னும் மிச்சமிருந்தது.
“இது சின்ன விசயந்தேம் டாக்டர். இதுக்காக முகத்தை தூக்கி வச்சுக்கறதா? பார்த்துக்கலாம்….” என்றவன் முகத்தில் இலகுத்தன்மையை தாண்டிய ஒரு ரசனையை கண்டவள் முகம் மீண்டும் கடினமானது.
“கேஸ் பத்தி பேசலாமா?…” என்றாள் பட்டென்று.
“ஹ்ம்ம்…” என்றவன் மடியில் விக்கிரமபாண்டியனை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் அவள் தந்ததையும் படித்துக்கொண்டிருந்தான்.
“உச்சந்தல வகிடு வழி, ஒத்தமனம் அலையுதடி. உதட்டு வரி பள்ளத்துல, உசிர் விழுந்து துடிக்குதடி…” என அவன் முணுமுணுக்க முதலில் கவனியாதவள் பின் தன் காதில் விழுந்த வார்த்தைகளில் தீயாய் அவனை முறைத்தாள்.
“நான் பத்திரத்தை படிக்க குடுத்தேன்….” வைதேகி அழுத்தமாக சொல்ல,
“படிச்சிட்டு தான் இருக்கேன். ஏன்?….” என்றவன் விரல்கள் பத்திரத்தை வைத்துவிட்டு இப்போது பேனாவை சுழற்றியபடி அவளின் முறைப்பை அலட்சியப்படுத்தியது.
வைதேகி கிளம்பவும் முடியாமல் அங்கே அமரவும் முடியாமல் சுற்றிலும் பார்வையை சுழலவிட்டாள்.
அவளின் அவஸ்தையில் தன் மனதை கண்டுகொண்ட அந்த நொடி ஜகாவின் இதழோரம் குறுஞ்சிரிப்பு கொள்ளையாய்.