சொக்கநாதபாண்டியன் பேச்சுக்கள் எதுவும் மதுராவின் காதில் விழவில்லை. அவள் மகனையும், தாய் தந்தையையும் தேடி வந்திருந்தாள்.
“வா மறுக்கா மண்டபத்துக்கு போயி பாப்போம்….” என பாண்டியன் மனைவியுடன் செல்ல இப்போது சத்தம் குறைந்திருந்தது.
“அங்க இல்லை. நான் இப்ப அங்க இருந்து தான் வரேன்….” என்றாள் மதுரா அவனிடம்.
“நீயி அங்க என்ன பண்ணிட்டிருந்த? புள்ளைக எங்க?….”
“உங்க மகன் அம்மாப்பாவோட போயிருக்கான். அப்பா அவனுக்கு எதாச்சும் வாங்கி குடுத்தே தீருவேன்னு கூட்டிட்டு போயிருக்கார். எங்க வரமாட்டானோன்னு கூட அம்மாவையும் கூட்டிட்டு போயிருக்காங்க…” என்றாள் சிரிப்புடன்.
“மீனாட்சி எங்க?….” என மகளை கேட்க,
“ஜகா, வைதேகி கூட அபிராமியை தூக்கிட்டு குளத்து பக்கம் போனாங்க. அபிராமி இருக்கமாட்டேன்றா. இறங்கி தவந்து ஓடிட்டே இருக்கா. அதான் விளையாட்டு காமிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க….”
“அப்படியே ஜகாவை மாதிரி….” பாண்டியன் சொல்ல,
“வைதேகி மாதிரின்னு பாட்டி சொல்றாங்க. புள்ளய கூட அவள மாதிரியே பெத்துருக்கான்னு. முன்னாடி ஜகா பாட்டி தான் செம காம்போ. இப்ப வைதேகியும் பாட்டியும் தான். இந்த ஜகா ரெண்டுபக்கமும் சிண்டுமுடிஞ்சு விடறாங்க. என்னைக்கு பேக்ஃபயர் ஆக போகுதோ?…” மதுரா சொல்லி சிரிக்க,
“என்னை பத்தி பெருமையா பேசினதுக்கு நன்றிகள் மதினி….” என்றான் ஜகா அங்கே வந்ததும்.
“ஒட்டு கேட்டுட்டு இது வேறையா? பொண்ணோ, பையனோ எங்கப்பா பேரை வைக்கேன்னு ப்ராமிஸ் குடுத்துட்டு டீல்ல விட்டுட்டீங்களே?….” என மதுரா வம்பிழுக்க,
“எல்லாம் குடும்பநலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுதேம்…” என்ற ஜகாவின் மகள் அபிராமி பாண்டியனிடம் தன்னை தூக்கும்படி கை நீட்டினாள்.
“அபிக்குட்டி எங்க போனீய?….” என கொஞ்சியபடியே தன் மகளை பார்த்தான்.
பாண்டியனின் மகள் மீனாட்சி அப்படியே மதுராவின் வார்ப்பு. அந்த வயதிலேயே பொறுமையிலும், புரிந்துகொள்வதிலும், தன்மையிலும் மதுராவின் குணஇயல்புகள் அப்படியே இருந்தது.
தன்னை விட்டுவிட்டு தந்தை இன்னொரு குழந்தையை தூக்கி வைப்பதை கண்டு புன்னகை மாறாமல் நின்றாள்.
“பாப்பாவை நல்லா புடிங்கப்பா….” என்று கட்டளை வேறு.
“எங்க கெழவிய? ஒரு எடத்துல இருக்காதே?….” என பாண்டியன் கேட்க,
“சாமிக்கிட்டதேம் இருக்காவண்ணே. ஆத்தா தான் வர சொல்லி போன போட்டுச்சு…” ஜகா சொல்லவும்,
“மதுரா ஒங்கப்பாவுக்கு போன போட்டு வர சொல்லு. சாமிய கும்பிட்டு கெளம்புவோம்….” என்றவன்,
“காலேலையே கெறக்கமா போயிருச்சு புள்ளையளுக்கு. இப்ப என்னப்பா அழகரு ஆத்துல எறங்குத அன்னிக்கு எல்லாரும் மறுக்கா வரத்தான போறோம். இப்ப நீயி வா…” என அழைத்து சென்றான்.
வெகு தொலைவிலேயே ஜீப்பை தெரிந்த கடையில் நிறுத்திவிட்டு மனைவியுடன் கோவிலை சுற்றி நடக்க ஆரம்பித்தான் பேசியபடி.
இருவருக்குமான இப்படியான சின்ன சின்ன தனிமைகள் அவர்கள் வாழ்க்கையை இன்னும் அழகாக்கிக்கொண்டு இருந்தது.
எல்லாம் சுற்றி பார்த்து இரவு விளக்குகள் ஜொலிக்க ஆரம்பித்ததும் தெப்பக்குளத்தின் பக்கம் வந்து சேர்ந்தனர்.
“லவ்லி…” என்றாள் மதுரா.
வண்ணவண்ண விளக்குகளின் பிம்பம் தண்ணீரில் மிதக்க அவற்றை பார்த்து ரசித்தாள் மதுரா.
கூட்டம் அலைமோதினாலும் நகர்ந்துகொண்டே தான் இருந்தனர். ஒரு அமைதியான இடம் நோக்கி நகர்ந்தவர்கள் அங்கே அமர்ந்துகொண்டனர்.
காலையில் அணிந்திருந்த அவளின் திருமண பட்டுப்புடவையை இன்னும் மாற்றவில்லை மதுரா. அதற்குள் அழைத்து வந்திருந்தானே?
புடவை தலைப்பை மடியில் போட்டு படியில் அமர்ந்தவள் முகத்தில் சொல்லொண்ணா சந்தோஷம்.
“பார்த்துட்டே இருக்கலாம் போல. என்னவோ இதுல அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. இதை பார்த்துட்டா உள்ளுக்குள்ள ஒரு குதூகலம். அதை சொல்ல தெரியலை சொக்கரே…” கணவனின் கை பிடித்து மதுரா சொல்ல,
“அதான நீங்க யாரு?…” என கேட்டதும் அவளின் புடவை தலைப்பில் தெரிந்த தன் முகத்தை பார்த்து,
“மதுராநாயகன்…” என கூறினான் சொக்கநாதபாண்டியன் கண்சிமிட்டி.
“தப்பா சொல்றீங்க….”
“என்ன தப்பு?…”
“மருதநாயகன். இப்ப மதுரநாயகன்…” என மதுரமாய் மனைவி மதுரா அதனை திருத்த,
“அப்பவும் இந்த மருதைக்கும், மதுராவுக்கும் நான் தான் நாயகனாமா?…” என்றான் நொடிபொழுதில் அவள் நெற்றியுடன் முட்டி.
“சொக்கா….” என்றவள் அவனை லேசாய் தள்ளி,
“ஆமா, சொக்கநாதபாண்டியன் மதுரயாழினியின் நாயகன் தான். சரியா தான் சொல்லியிருக்கீங்க மதுரை வீரரான சொக்கரே….” என சில்லாகித்து நெஞ்சமெல்லாம் பொங்கும் காதலுடன் அவள் முடிக்க அவன் விழிகளால் அவளின் நேசத்தை வார்த்தைகளின்றி மனதிற்குள் சிற்பமாய் வடித்தான்.
ஊர் கூடி ஒரு திருவிழா போல உறவுகள் சூழ்ந்த அவர்கள் உலகத்தில் நித்தமும் திருவிழா கொண்டாட்டம் தான்.
தேனாய் தித்திக்கும் சுவைப்பில் மொட்டுவிட்ட நேசத்தின் கோலம் இங்கே உறவெனும் பல வண்ணங்கள் கொண்டு ரங்கோலியாய் விரிந்தது.
உன்னத உறவுக்குள் இடை புள்ளிகள் கூட வளைவுகளை அமைத்து கொடியாய் படர்ந்து கோலங்களை நிறைவு செய்வதை போல வர்ணஜாலங்களின் தேன் மொட்டு கோலங்கள் நிறைவில் மனதை நெகிழ்த்தும் வாசம் பன்னீர் பூவாசம்.