இளம்பரிதி தனது அறைக்குள் அஜிதாவின் புகைப்படத்துடன் அமர்ந்திருந்தான்.
அவனின் தவிப்புகள் அவளை அடைந்ததாக தெரிந்ததோ இல்லையோ. நிழலுக்கு கொடுத்துக்கொண்டிருந்த முத்தங்கள் எண்ணிக்கையை கடந்தது.
அவனின் கண்ணீர் தடம் அஜிதாவின் புகைப்படத்தை முழுவதுமாக நிரப்பிவிட்டது.
தொண்டையிலிருந்து பெருங்குரல் வெளிவர போராட முயன்று உதட்டை கடித்துக்கொண்டான் பரிதி.
வெளியே சுந்தரவல்லி அமர்ந்திருக்கிறார். ஏற்கனவே அன்று பரிதியின் விடுமுறை ஏன் என கேட்டிருக்க சரியாக பதில் சொல்லமுடியவில்லை அவனால்.
“அஜிதா படத்துக்கு விளக்கை ஏத்து பரிதி. எப்பவும் நீ தானே சாய்ந்தரமும் ஏத்தி வைப்ப? இப்ப வந்ததும் உள்ள போறியே?…” என்றார் வரும்பொழுதே.
“வரேன்ம்மா. இப்ப வந்திடறேன்….” என்று சொல்லி உள்ளே வந்தவனுக்கு தாயின் முகம் பார்த்து எதையும் சொல்லும் தைரியம் சுத்தமாகவே இல்லை.
அந்த குடும்பத்தில் அத்தனைபேரையும் கொன்று குவிக்கும் ஆத்திரமும் ஆவேசமும் ஆர்ப்பரிக்க தன் குடும்பம் முன்னின்று அதனை அமைதிப்படுத்தியது.
“உங்க பொண்ணுக்கும், அத்தைக்கும் நீங்க வேணும் பரிதி? நான் உங்களுக்குள்ள தான் இருக்கேன்…” என அஜிதா அவனிடம் சொல்லுவதை போலவே ஒரு தோற்றம்.
மீண்டும் பரிதியின் கண்ணில் நீர் இறங்க மனைவியின் நிழலுக்கு முகத்தை கொடுத்து தன் உணர்வுகளை செயலிழக்க செய்ய முயன்றான்.
“அன்னைக்கு உனக்கு ரொம்ப வலிச்சதா அஜி? என்ன நினைச்ச நீ?…” என கேட்டவன் நிழற்படத்தில் குறும்பாய் புன்னகைத்து தன்னை அவளருகிழுக்கும் அந்த பார்வையில் சிதறி போனான் பரிதி.
“நீ தாங்கியிருப்படி. என்ன வலினாலும் உனக்கு பொருட்டா? என்னால முடியலையே? அப்படியே விட்டிருக்கனுமோ?…” பரிதியின் குரலில்லா அசைவுகள்.
அவன் உதடுகள் மொழிந்ததை செவிகளும் உணரவில்லை. அரூபமான அஜிதா உணர்ந்துதானே ஆகவேண்டும்.
அவனுள் இருப்பவள் அவன் தவிப்பை, இந்த துடிப்பை காண சகிக்காமல் கண்ணீர் விடுவாளோ என அப்போதும் மனைவியின் எண்ணம் தான் பரிதிக்கு.
“நான் பேசறது நினைக்கிறது உனக்கு தெரியுதா அஜிம்மா? இப்படி என்னை நிறுத்திட்டு போய்ட்டியே? யார்க்கிட்ட சொல்லி அழ முடியும்? உன் மடி வேணும் போல தோணுதுடி. அஜி, அஜி ப்ளீஸ்…”
அவனின் இந்த அரற்றல்கள் அந்த புகைப்படத்திற்குள்ளே மட்டுமே சென்றடைந்தது.
நெடுஞ்செழியன் வருவதாக சொல்லவுமே வழக்கு விஷயம் என்று தெரிந்தாலும் இதனை எதிர்பார்க்கவே இல்லை.
முதலில் நெடுஞ்செழியன் காரணம் கூறவும் அத்தனை உணர்ச்சி வசப்பட்டுவிட்டான் இளம்பரிதி.
“நாம பண்ண போறது சட்டத்துக்கு புறம்பான ஒன்னு தான் பரிதி. அவங்க உத்தரவு இல்லாம நாமளா பண்ணக்கூடாது. ஆனாலும் இப்ப வேற வழி இல்லை…” என்றிருந்தான் நெடுஞ்செழியன்.
உடன் கார்த்திகேயனும், பரிதியின் வீடிருக்கும் அந்த பகுதி ஆய்வாளர் என மூவரும் சேர்ந்து அவனிடம் விளக்கப்படுத்த ஒப்புக்கொண்டான்.
அஜிதாவின் எலும்புகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை வரும்வரை மனது சமநிலையை அடையவே இல்லை.
“நான் நினைச்சது சரி தான். இது ஒன்னு போதும்…” என்று அறிக்கையை பார்த்த நெடுஞ்செழியன் கோபத்துடன் சொல்ல,
“எனக்கு புரியும்படி சொல்லுங்க ஸார். என்ன வந்திருக்கு ரிப்போர்ட்ல?….” என்று பரிதி கேட்டதும் கார்த்திகேயன் வேண்டாம் என தலையசைத்தார்.
“இதை நீங்க நீதிமன்றத்தில் தெரிஞ்சுக்கலாம் பரிதி. இப்ப இதை நாம கொண்டுவந்த மாதிரியே அங்க பத்திரப்படுத்திடனும்…” என்று சொல்லி பரிதியுடன் மயானத்திற்கு செல்ல,
“எனக்கு தெரிஞ்சாகனும். ஏன் என்னால தாங்கிக்க முடியாதுன்னு நினைக்கறீங்களா?….” என்றான் பிடிவாதத்துடன்.
கார்த்திகேயனை நெடுஞ்செழியன் ஒரு இயலாமையுடன் பார்க்க பரிதி இறங்கவே இல்லை.
“என் மனைவி என்னோட இல்லைன்றதையே ஜீரணிச்சு இத்தனை நாள் இருந்துட்டேன். இனியும் இருக்க போறேன். இதை தெரிஞ்சு என் நெஞ்சு வெடிச்சிடாது. சொல்லுங்க ஸார்…” கெஞ்சலுடன் நெடுஞ்செழியனின் கையை பிடித்தான் பரிதி.
“பரிதி நான் சொல்றதை கேளுங்க…” கார்த்திகேயனும் சொல்ல,
“கோர்ட்ல தெரிய போறது இங்க தெரிஞ்ச என்ன? இன்னும் ஒருசில நாட்கள். எனக்கு இப்ப தெரிஞ்சா அன்னைக்கு இன்னும் தாங்கி நிற்பேன்…” என்றான் பரிதி.
“மனசை திடப்படுதிக்கோங்க பரிதி. நான் இதுமாதிரி எத்தனையோ வழக்கு பார்த்திருந்தாலும் இது என்னவோ என்னை இன்னும் பாதிக்குது. அதான் நீங்க இப்ப தெரிஞ்சுக்க வேண்டாமேன்னு நினைச்சேன்…” நெடுஞ்செழியன் சொல்லி பார்த்தான் இறுதியாக.
“சொல்லுங்க ஸார்…” பரிதியிடம் மாற்றமில்லை. கேட்டாகவேண்டும் என்று இருந்தான்.
“சொன்ன பின்னாடி நீங்க அமைதியா இருக்கனும்…” என்றவன் வந்திருந்த அறிக்கையை பற்றி சொல்லவும் உடைந்துபோனான் பரிதி.
பரிதியின் நெஞ்சம் வெடிக்கவில்லையே தவிர அந்த நொடி உயிரை துறக்கவிருந்தது.
மனைவியிடம் தானும் சென்று சேர்ந்துவிடமாட்டோமா, அவளை ஆறுதலாக அணைத்துக்கொள்ளமாட்டோமா என்று பரிதவித்து போனான்.
சில நிமிடங்கள் பேச்சில்லை அவனிடம். மயானம் வரை மௌனமாகவே வந்தான்.
மீண்டும் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு மற்றவர்கள் கிளம்ப பார்க்க, பரிதி அஜிதாவின் எலும்புகள் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டான்.
“பரிதி….” நெடுஞ்செழியன் அழைக்க,
“அந்த நேரம் என்னையும், என் பொண்ணையும் நிறையவே தேடி இருப்பா ஸார். நான் தான் விட்டுட்டேன்…” தொண்டை அடைக்க சொல்லியவனுக்கு ஓவென்ற ஓங்கார குரல் மேலெழும்பி அவனை வளைக்க பார்த்தது.
“பரிதி கிளம்புவோம்…” என்றார் கார்த்திகேயனும்.
இந்த நேரம் இப்படி மூவரும் இங்கிருக்க யாரும் கவனித்தால் கூட வழக்கில் பிரச்சனை உண்டாகலாம் என அவருக்கு அச்சம் துளிர்த்தது.
அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அது இந்த வழக்கின் அடிநாதத்தையே அசைத்து பார்த்துவிடுமே என எண்ணி நெடுஞ்செழியயை உதவும்படி பார்த்தார்.
“இப்படியே நீங்க நொறுங்கி உட்கார போறீங்களா பரிதி? இதை நினைச்சு அழுதா சரியா? இன்னும் நமக்கு வேலைகள் நிறைய இருக்கு பரிதி. எழுந்திருங்க…” என அவனின் கை பற்றி எழுப்பி நிற்க வைத்தான்.
“கஷ்டங்கள் இல்லாத மனித வாழ்க்கையே இல்லை பரிதி. என் கண்முன்னாடி தான் என்னோட அப்பா மரணம். தனியா தான் எங்கம்மா என்னை வளர்த்தாங்க. இப்ப நாங்க ஒடிஞ்சு உக்கார்ந்துட்டோமா? அப்படின்னா அந்த இடத்துல மட்டும் தான் நிற்போம்…”
நெடுஞ்செழியன் பேச்சில் பரிதி விழித்துக்கொண்டாலும் மனைவி என்று வரும் பொழுது நிஜத்தில் மனது கோழையாய் தன்னை உணர்ந்தது.
“என் தைரியமே அவ தான் ஸார்….” என்றவன் குரலே அவனின் தளர்வை காட்ட பரிதியை அணைத்துக்கொண்டான் நெடுஞ்செழியன்.
“அந்த தைரியம் இப்பவும் உங்ககிட்ட தான் இருக்கு பரிதி. அப்படி நம்புங்க…” என்ற நெடுஞ்செழியன் பேச்சில்,
“மரணம் எல்லாம் உடலுக்கு தான். உணர்வுக்கு இல்லை. ஆனா இங்க என்னோட உணர்வுகளும் இப்ப செல்லரிக்க ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு…” என்று சொல்லியவனை சிறிது நேரம் அப்படியே விட்டான் நெடுஞ்செழியன்.
அவர்கள் மீண்டும் வாகனத்தில் வந்து அமர்ந்துகொண்டதும் பரிதியின் பார்வை பாதையை வெறித்தது.
“என் பொண்ணுக்கு லேசா அடி பட்டா கூட துடிச்சு போயிருவேன். அஞ்சலி என் பொண்ணு. அதனாலன்னு வச்சுக்கலாம். ஆனா மனிதாபிமானத்தோட யாருக்கு அடிபட்டாலும் பார்த்தா நமக்கும் கஷ்டமா இருக்குமே ஸார்…” என கேட்டான் பரிதி.
“பரிதி இதுக்காக தான் சொல்லவேண்டாமேன்னு நினைச்சேன்…” நெடுஞ்செழியன் ஆற்றாமையுடன் பார்த்தான்.
“அந்த மனுஷங்களுக்கு இரக்கமே இல்லையா? அஜியை அடிக்கும் போது அவ துடிச்சிருப்பாளே? கோபத்தில ஒருதடவை அடிச்சிட்டாங்க. அதோட விட்டிருக்கலாமே? ஏன் ஸார் இப்படி செஞ்சாங்க?….”
இப்படி வரும் வழிகள் எல்லாம் பரிதியின் கேள்விகள் நெடுஞ்செழியனை பெரிதாய் தாக்கியது.
அவன் சொல்வதில் எந்தவித தவறும் இல்லை என்றே நினைத்தான் நெடுஞ்செழியன்.
பெற்றவர்கள் விரும்பாத திருமணம் செய்துவிட்டு போனதோடு அப்படியே உறவில்லை என்றிருக்கலாமே?
வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரை பிடுங்கிவிட்டு அவர்களுடனான உணர்வுகளை இங்கே காலில் போட்டு வலிக்க மிதித்துவிட்டனரே என நினைத்தான்.
இன்னும் இரு நாட்களில் குமரகுருவின் வழக்கு மதுரையில். கோபிநாத் தான் சொல்லியதை செய்துவிட்டான்.
அங்கே சென்று இருக்கிறது என்றிருந்தவன் கோபம் இப்போது இன்னும் பலமடங்காகி இருந்தது பரிதியின் பேச்சுக்களில்.
“பரிதி இதை அம்மாக்கிட்ட சொல்லவேண்டாம்…” நெடுஞ்செழியன் கூறவும் சிறுகோடாய் வலியுடனான அந்த புன்னகை அவன் சிதைந்திருந்ததை பிரதிபலித்தது.
“சொல்லவா? என் பொண்ணுக்கு கூட புரியுமோ என்னவோ? எங்கம்மா உயிரை விட்டுடுவாங்க ஸார். என்னைவிட அஜிதா தான் அவங்களுக்கு உயிர். என் மகனோட உயிரே நீ தான். அப்போ நீ எனக்கு இன்னும் முக்கியம்ன்னு சொல்லிட்டே இருப்பாங்க….”
சொல்லியவன் கதறல் அந்த வாகனத்திற்குள்ளேயே சுற்றி வந்து ஒவ்வொருவரையும் உலுக்கி எடுத்தது.
“பரிதி….” கார்த்திகேயன் அவனை அமைதிப்படுத்த முயல பரிதி கையமர்த்தி தன் முகத்தை துடைத்துக்கொண்டான்.
“நான் பார்த்துக்கறேன். பார்த்துக்கறேன் ஸார்…” என்றான் இருவருக்கும் பொதுவாக.
“நான் அம்மாக்கிட்ட அஞ்சலிட்ட எதுவும் சொல்ல போறதில்லை. நீங்களும் சொல்லவேண்டாம். ஹியரிங்ல தெரிஞ்சுக்கட்டும். இல்லைன்னா அதுவரைக்கும் இதை நினைச்சே கஷ்டப்படுவாங்க….” என்றான் தன்னிரு கண்களையும் துடைத்துவிட்டு.
இப்போதும் வீடு வந்ததும் சுந்தரவல்லி என்னவென்று பார்க்க அவரிடம் முகம் கொடுத்து பதில் சொல்ல முடியவில்லை.
அஞ்சலியை பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும். நேரத்தை பார்த்தவன் எழுந்து சென்று நீருக்கடியில் நின்றான் சில நிமிடங்கள்.
உடை மாற்றி கிளம்பியவன் அஜிதாவின் நிழற்படத்தை எடுத்தான். கண்ணீர் தடங்களை துடைத்தவன் அதற்கு மீண்டும் முத்தம் பதித்து,
“நாம இங்க வந்திருக்கவே கூடாதோ? இதை நினைக்காம இருக்க முடியலை அஜி…” என அவளின் உருவம் தொட்டு கேட்டான்.
அந்த புன்னகை அவனை இன்னுமே வேதனைக்குள்ளாக்கியது. எப்போதும் மனைவியை கண்டதும் புன்னகை மலரும் கண்களும் பொலிவிழந்து இருக்க,
“உனக்காக…” என்று முறுவலித்தான்.
இனி வாழ்க்கை இப்படித்தானோ? நிழலாய், நிழலுடன், நினைவுகளுடன். இருளாய் மனதில் ஒரு வலி சூழ்ந்துகொள்ள பெருமூச்சுடன் கிளம்பி வெளியே வந்தான்.
சுந்தரவல்லியின் பார்வை மகனை துளைத்தது. பரிதி உணர்ந்துகொண்டாலும் முகத்தில் காண்பிக்காமல் இருக்க பிரயத்தனப்பட்டான்.
“நானும் வரேன் பரிதி….” சுந்தரவல்லி உடனே மகனுடன் கிளம்பிவிட்டார்.
அவரால் அங்கிருக்க முடியவில்லை. மகனை இப்படி பார்த்துவிட்டு தனியே அனுப்பிவிட்டு வீட்டில் நிம்மதியாய் இருக்க முடியும் என தோன்றவில்லை.
அவனால் மறைக்கப்படும் இந்த அலைப்புறுதல்கள் தாயின் மனதை சுக்குநூறாக்கி கொண்டிருந்தது.