பந்தல் போட்டாகிற்று, நாளை காலை திருமணம் என்ற நிலையில்.. நலங்கு வேணாம் என மதியழகன் மறுக்க, “அக்கம் பக்கம், சொந்த பந்தம்லாம் கோவிப்பாங்க மதி. நாலு பணங்காசை பார்த்ததும் கௌரவமாகிடுச்சுனு தப்பா பேசுவாங்க, ஒரே நாள்ல முடிச்சிக்கலாம்.” என ஒரு மணிநேரமாய் போராடினார் பழனியப்பன்.
கதிரசனிற்கும் மதி நலங்கு வேணாம் என்றது பெரும் வருத்தம். ஆனால் தாய் தந்தை நினைப்பில் வேதனையில் உழல்பவனை வற்புறுத்தவும் சங்கடமாக இருந்தது.
இங்கே தாமரைக்கு நலங்கு வைத்ததும்.. “அழகு மாமாக்கும் வைப்பாங்கதானே? நான் மாமாக்கு இது மாதிரி சுத்தனும்.” என மஞ்சு பிடிவாதம் செய்ய, “உன் மாமாதான் வேணாம்னான், நீ போன் செய்து கேளு. நாம எல்லாரும் போய் நலங்கு வச்சிட்டு வரலாம்.” என்றார் கதிரேசன்.
“ஏங்க.. மதியை கேட்டா வேணாம்னுதான் சொல்வான், நமக்கு எவ்வளோ உரிமையா துணி வாங்கி கொடுத்தான். நாமும் உரிமையா போய் நிற்போம், சம்மந்தி மஞ்சு ஆசைப்பட்டானு சொன்னா மறுக்க மாட்டான்.” என்றார் காமாட்சி.
தாமரை தவிர்த்து மூவரும் கிளம்பினர். “அழகுமாமா..” என்ற உற்சாகக்குரலோடு உள்ளே நுழைந்தாள் மஞ்சரி.
“ஹே.. மஞ்சுக்குட்டி.. வா வா.” என வரவேற்றபடி தனதறையிலிருந்து வெளியே வந்தான் மதியழகன். “வாங்க மாமா..” என வரவேற்றவன், காமாட்சி கையிலுள்ள பழப்பைகளைப் பார்த்து.. “என்னத்தை?” என்றான்.
“காலைல தாமரைக்கு நலங்கு வச்சோம், என் அழகுமாமாக்கும் நான் சுத்தனும்னு மஞ்சு பிடிவாதம் செய்யவும் வந்தோம்.” என்றார் காமாட்சி.
“ப்ச்.” என மஞ்சுவை மதியழகன் முறைக்க.. “ப்ளீஸ் ப்ளீஸ்.. மாமா.. இதெல்லாம் மெமரீஸ்.. நான் உங்களுக்கு சுத்தியே ஆகனும்.” என்றாள் கொஞ்சலாக.
“அவதான் எதோ சொல்றான்னா, நீங்க எதுக்கத்தை?” என மதி கடுகடுக்க.. “என் அண்ணன் மகனுக்கு நலங்கு வைக்க எனக்கு ஆசையிருக்காதா? அதோட சம்மந்தி மாமி நலங்கும் வைச்சமாதிரி ஆகிடும்.” என்றார் கெஞ்சலாக.
கெஞ்சலாய் கேட்பவரை மறுக்கும் வழியறியாமல் மதி சில நொடி அமைதிகாக்க.. அதை சாதகமாக்கிய பழனியப்பன்.. “நீ போய் அக்கம் பக்கம் சொல்லிட்டு வாம்மா. மதி நலங்கு வச்சிப்பான்.” என்றார்.
“பிடிக்கலனு சொன்னா விடனும் தாத்தா..” என்றவன் முகம் இறுகவே.. “உன் மனபாரம் எனக்கு புரியுதுய்யா.. உனக்கு மட்டும்தான் வேதனையிருக்கா? எனக்கிருக்காதா? என்மருமக சாவுக்கு காரணமானவன் மேல எனக்கு கோபமிருக்காதா?
எனக்கும் ஆத்த முடியாத வேதனை இருக்குய்யா, ஆனா என்ன பண்றது?” என கண்ணீர் வடித்து.. “நீ சந்தோசமா வாழுறதை பார்க்கத்தான் இந்த உசிரை கையில பிடிச்சிட்டிருக்கேன், என் பேத்தி வயித்துல என் மகன் பிறக்கும் நாளுக்காக தவமிருக்கேன்ய்யா..
அந்த ஈனப்பிறவிக்காக உன் முகத்துல அசிங்கத்தை அப்பிக்கப் போறியோனு நான் பயப்படாத நாளில்ல, பேத்தியோட உன் கல்யாணம் முடிவான பின்னதான் உசிரே வந்தமாதிரி இருக்கு. இனி உன் முகத்துல சந்தோசத்தை மட்டும்தான் பார்க்கனும்.
புது மாப்பிள்ளை மிடுக்கோட சந்தோசமா இருய்யா, அப்போதான் உன் அத்தை மாமா மனசு நிறையும்..” என்று மன்றாடியவரின் கண்கள் நிரம்பி வழிந்தது.
“அச்சோ..” என தலைமீது கைவைத்து அமர்ந்த கதிரேசன்.. “யார் மதி அவன்? இன்னும் உயிரோட இருக்கானா?” என்றார் ஆக்ரோசமாக.
“வேண்டாம் மாப்பிள்ளை, மதியை சமாளிச்சி இழுத்து பிடிக்கவே என்னால முடியல, இதுல நீங்களும் கிளம்பாதிங்க.. என் மக வாழ்வு சீரழிஞ்சிடும்.
உங்க சந்தோசமான வாழ்க்கையை நினைச்சித்தான் என் மகன் மருமக போன வேதனையை மறக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன், இத்தனை வயசுக்கு மேல கோர்ட்டு கேசுன்னு என்னால எதையும் தாங்க முடியாது.
குரோதத்தை பாராட்டி யாரும் வாழ்க்கையை தொலைக்க வேணாம், அவங்கவங்களுக்குனு கடமையிருக்கு, என் மருமக சாவுக்கு காரணமானவனை கடவுள் பார்த்துப்பார். இது பத்தி காமாட்சிகிட்ட சொல்லாதிங்க. அதால தாங்க முடியாது.” என்றார் மன்றாடலாக.
கதிரேசன்.. “இதனாலதான் சிரிப்பை தொலைச்சதா இந்த முகம்.? எனக்கு என்ன பிரச்சனைன்னாலும் உன்கிட்டதான சொல்றேன் மதி.? இவ்வளோ பெரிய விசயம் நடந்திருக்கு.. என்கிட்ட சொல்லத் தோணலையா? மாமா மாமானு கூப்பிடறதெல்லாம் வெறும் வார்த்தைக்குதானா?” என்றார் வேதனையோடு.
மதி.. “ப்ச்.. அப்படியில்ல மாமா, சொல்லி என்னாகப்போகுதுனுதான்..” என்றான் சமாதானமாக.
“நீங்களாவது சொல்லியிருக்கலாமில்ல மாமா?”
“மாப்பிள்ள.. இத்தோட இந்த பேச்சை நிறுத்திட்டு கண்ணைத் துடைங்க, காமாட்சி வந்திடும். நாளைக்கு கல்யாணத்தை வச்சிட்டு கண்ணை கசக்கிட்டு இருந்தா நலங்கு வைக்க வரவங்க தப்பா நினைப்பாங்க.” என்றார்.
மாமா நினைப்பது உண்மைதான், ஆச்சிக்கு தெரிஞ்சா தாங்கவே மாட்டா என தன்னை சமன் செய்தார் கதிரேசன்.
அடுத்த அரைமணி நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து மதியை அமரவைக்க அழைக்க, போட்டிருந்த உடையோடு மதி அமர முற்பட.. “இதென்னய்யா இந்த துணியோட உக்கார போற? சித்த இரு வரேன்..” என திருமணத்தில் தான் உடுத்துவதற்காக எடுத்த வேஷ்டி எடுத்து வந்தார்.
“தாத்தா இது நீ நாளைக்கு போட்டுக்கனும்.” என மதி மறுக்க.. “இப்ப சித்த நேரம் நீ போட்டுட்டு உக்காருய்யா. துணி ஒன்னும் குறைஞ்சிடாது.”
“வேஷ்டிதான கட்டனும்? உன்கிட்ட இருக்க வேற எடுத்துட்டு வா தாத்தா.”
“நீ இருக்கியே..” என முறைத்தவாறு வாங்கியவன், ஐந்து நிமிடத்தில் உடுத்தி வர.. பட்டு வேஷ்டியில் பேரனை பார்த்த பழனியப்பன் முகம் பிரசாகமானது.
தாத்தாவின் முகத்தில் குடிகொண்ட பூரிப்பிலும், ஆனந்த பெருக்கிலும், நலங்கின் போது விதவிதமாய் போட்டோ எடுக்கும் மஞ்சுவின் ஆர்பாட்டத்திலும் மனம் நிறைந்தான் மதியழகன்.
துரோகத்தை மறக்க இயலாமல், தனக்காகவே வாழும் தாத்தாவின் சந்தோசத்தை கெடுக்குறோமா? என யோசித்து, திருமணத்தில் சந்தோசமாய் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
ஆனால் படிப்பு விசயத்தில் யார் எப்பொழுது உதவி கேட்டாலும், பாடத்தில் சந்தேகமானாலும், அடுத்து என்ன படிக்கலாம் என்று கேட்டாலும், அவரவர் திறமைக்கு ஏற்றார்போல் இன்முகமாக பதிலளிக்கும் பாங்கிற்கும், முக்கியமாக ஏழைப் பிள்ளைகள் சிலருக்கு இலவசமாய் பாடம் கற்பிப்பவனின் நல்ல மனதிற்கும் அனைவரும் வந்தனர்.
வாடகைக்காரில் மதி இறங்க, லாரியிலிருந்து இறங்கிய ஜனங்களைப் பார்த்து பெரு மகிழ்ச்சியடைந்தனர் கதிரேசனும் காமாட்சியும்.
“அப்பா எங்க மதி?” என காமாட்சி கேட்க, “மண்டபத்துல வரவங்களை பார்க்கனும்னு அங்க போய்ட்டார்த்தை.” என்றவன், “தாமரைக்கு இன்னொரு சாரி வாங்கியிருந்தேன்ல? அதை கட்டி அழைச்சிட்டு வாங்க.” என்றான் இன்முகத்தோடு.
“ம்.. ம்..” என சிரித்தவர், அனைவரையும் உபசரிக்கும் பணியில் ஈடுபட.. மஞ்சுவை அழைத்தவன், “உங்கக்காக்கூட யாரெல்லாம் இருக்காங்க?” என்றான்.
“காலேஜ் ஃப்ரண்ட் பவித்ராக்காவும், நம்ம சொந்தக்காரங்க சிலரும் இருக்காங்க மாமா, எதாவது சாக்கு சொல்லி என்னை வெளிய துரத்தி விட்டுட்டு, அதுங்க மட்டும் எதேதோ பேசி சிரிக்கிறாங்க.” என முகம் சுருக்கினாள் பாவமாக.
சந்தோசத்தோடு மகளறைக்கு சென்றவர்.. “தாமரையை தயார் செய்து அழைத்து வந்தார்.
ஏற்கனவே தோழிகள் செய்த கிண்டலில் தவித்து போனவளுக்கு, தற்போது திட்டமிடாத சடங்காக மதி நலங்கு வைப்பது அத்தனை சங்கோஜத்தை கொடுத்தது தாமரைக்கு.
“டைம் ஆகிடும் மதி, நீதான் முதல் நலங்கு வைக்கனும்.. வா.” என கதிரேசன் அழைக்க, வந்தவன்.. சில நொடி ஆழ்ந்து பார்த்து, ரசித்து, அவளின் தாடை தொட்டு முகம் நிமிர்த்தி.. “இப்படியே இரு, அப்போதான் போட்டோவுல முகம் தெரியும்.” என்று நலங்கு சுற்றி, நெற்றிக்கு இட்டுவிட, சிலிர்த்தாள் தாமரை.
மதி விலகியதும், மேலும் நால்வர் நலங்கிட, அதனை ரசனையோடு பார்த்திருந்தான் மதியழகன்.
“ம்.” என மஞ்சு சந்தோசிக்க, தாமரையை பார்த்தான். மிதமான ஒப்பனையோடு பேரழகியாய் மதியின் கண்களுக்கு விருந்தளித்தவள், வழக்கம்போல் பின்னலை சுருட்டிக்கொண்டிருந்தாள்.
“ஹம்.. உங்கக்காக்கு ஷாம்பு வாங்கவே நிறைய சம்பாதிக்கனும் போலயே..” என்றான் ரசனையாக.
“ஆமாம் மாமா, அதுவும் தாமரை யூஸ் பண்ற ஷாம்ப் காஸ்ட்லி.” என்றாள் சிரிப்போடு.
இருவரும் எத்தனை சிரித்து பேசியும் மண்டபத்திற்குள் நுழையும் வரை தாமரை நிமிரவில்லை.
பிடித்தம் சொல்லும்போதும், திருமணத்திற்கு சம்மதிக்கும்போதும் தோன்றாத பதட்டம், சற்றுமுன் நலங்கிடும்போது மதி தாடை தொட்டு முகம் நிமிர்த்தி கண்பார்த்து பேசியதில் வந்திருக்க, தற்போது மஞ்சரியோடு அமர்ந்ததில் மனதில் அத்தனை ஆசுவாசம்.
எத்தனை நிறமாய், கம்பீரமாய், வசீகரமாய் இருக்கிறான். தான் கேட்டதும் தாமதியாமல் எப்படி சம்மதித்தான் என மனதில் ஆயிரம் கேள்விகள் வலம்வர, எதற்கும் விடையறியாமலே பெரியவர்கள் முன்னிலையில் மணமேடையில் மதியருகே அமரவைக்கப்பட்டாள் தாமரை.
என்னதான் சொந்தமாக இருந்தாலும் முறைப்படி நிச்சயம் செய்யாமல் தாலி கட்டுவது நம்மள்ல பழக்கமில்ல, இன்னைக்கு நைட் மண்டபத்துல வச்சி நிச்சயம் செய்திடலாமென மதியிடம் மதியமே பேசிவிட்டார் பழனியப்பன்.
கூடவே முன்பு நிச்சயத்தில் தாமரையின் செயல்கள் குறித்து காமாட்சி சொன்னது தவறு நினைவு வர, பேத்தியின் கூச்ச சுபாவம் உணர்ந்தவராய் இந்த காலம்போல் நகை அணிவிக்காமல், அந்த கால சடங்குபோல் தாம்பூலம் மாற்றி, மாலையிட்டு நிச்சயிக்கலாம் என்றுவிட்டார் கதிரேசனிடம்.
“நிஜமா என்னை பிடிச்சிருக்கா?” என முனுமுனுத்த மதியை அதிர்வோடு பார்த்தாள். “சொல்லு.” என்றான் விடாமல்.
ஆமாம் என்பதாய் தாமரை தலையசைக்க, “அப்புறம் ஏன் உம்முன்னு இருக்க? கொஞ்சம் சிரியேன்.” என்றான் கெஞ்சலாக.
தாமரை சிரிப்பை வரவைக்க முயல, இதற்கு இவ சிரிக்காமலே இருக்கலாம் என நினைத்தபடி.. மாலையை அணிவித்தான் தாமரை கழுத்தில்.
பிறகு தாமரை கையினில் மாலை கொடுக்கப்பட, “சார்.. எழுந்து போட சொல்லுங்க சார்.. எங்களுக்கு தெரியல..” என்ற மாணவர்களின் சத்தத்தில் சிரிப்போடு எழுந்தவன், தாமரை எழ கை கொடுத்தான்.
பட்டுப்புடவை கட்டியிருக்க, ஒரு கையில் மாலையிருக்க, அவனின் உதவியில்லாமல் எழுந்து தடுமாறிவிட்டால் அசிங்கமாகிடுமென மதியின் கைப்பற்றினாள் தாமரை.