தவராசனால் மறுக்கவும் முடியவில்லை. அதன்பின் அங்கே இருக்க சிறிது நேரத்தில் நடந்த எல்லாமே பொன்னி, கயல், குழலி மூலமாக தெரியப்படுத்தப்பட கேட்டவர்களுக்கு சீனியம்மாள் மீது மட்டுமல்ல செண்பகத்தின் மீதும் அத்தனை கோபம்.
தவராசனின் முகமே கசங்கி இருக்க பார்க்கவே பொறுக்கவில்லை வைத்திக்கும், வெண்மணிக்கும்.
“எப்போவ்…” என்று வெண்மணி அவரின் கையை பிடிக்க,
“ஒங்கம்மைய கெட்டினதுக்கும், ஒங்கக்கால பெத்ததுக்கும் இன்னுமேட்டு மருவாதய எழக்கனுமின்னு இருக்குதாமாட்டு அம்புடுதுத்தா. எங்கெரகம்…” என தலையில் அடித்துக்கொண்டார் தவராசன்.
“அவக என்னமோ பேசி போட்டாக. மன்னிச்சிக்கிடுப்பா…” என்றாள் வெண்மணி சஞ்சலத்துடன்.
“அவரும் என்னத்த தாயி செய்யிவாரு? எம்பிட்டு கம்மின்னு போறாரு. ஒத்த வார்த்த எம்மருமவேன் இப்பிடி செய்யிதாருனு நா கொறவா நெனச்சா அந்த சாமி கூட மன்னிக்காதுத்தா. எந்தப்புத்தன். எம்பொண்டாட்டிய அடக்க துப்பில்ல…” என புலம்பினார் தவராசன்.
“நா எம்பிட்டத்தன் சொல்ல? சண்டை கட்டி பாத்துட்டேன். ஏசி பாத்துட்டன். பேசாம இருந்து கூட பாத்துட்டன். இதுக்கு மேல என்னத்த செய்யன்னு எனக்கே அம்புடல தாயி? துப்புக்கெட்டமேனிக்கி இப்பிடித்தன் பேச்சு வாங்கனுமின்னிருக்கு….” என்றார் தவராசன்.
“ப்போவ்…” என்றவளுக்கு மனதே ஆறவில்லை.
சிறிது நேரம் இருந்தவர் கிளம்பி செல்ல வைத்தியை அவருடனே இருக்கும்படி அனுப்பி வைத்தாள் வெண்மணி.
மனதெல்லாம் சஞ்சலம் மட்டுமே. தன் தவறின் வீரியம் இப்போது தான் புரிந்தது வெண்மணிக்கு.
மாலை வைத்திக்கு அழைத்து கேட்க அவனும் இப்போது பரவாயில்லை என்றான் அவளிடம்.
“மன்னிச்சிக்கிடுண்ணே. என்னியாலதன் இம்பிட்டும்…” என்று வெண்மணி கேட்க,
தேனரசன் வரும் வரையில் வெண்மணியின் மனது அதில் தான் சுழன்றுகொண்டு இருந்தது.
மதியம் வரவில்லை, வேலை இருக்கிறது என சொல்லிவிட அவளும் உண்ணவில்லை.
வைரம் வந்து தேனரசனுக்கு உணவை வாங்கி சென்றார். அங்கே ஒரு வேலை, போகும் பொழுது கொடுத்துவிடுவதாக கூறி.
“பொன்னியாத்தா ஒம்மவேன்கிட்ட சொல்லி வெய்யி. உண்கறதுக்கு வீட்டுக்கு வராம என்ன சோலி வேண்டி கெடக்கு?…” என தேனரசனுக்கு பொன்னியின் போனில் அழைத்து பொன்னியை வைத்துக்கொண்டு பேச அந்த பக்கம் சத்தமில்லா புன்னகை தேனரசன் முகத்தில்.
“அவேங்கிட்டவே சொல்லத்தானத்தா. நா ஊடால எங்க வந்தன்…” என பொன்னி பேச,
“ராத்திரிக்கி ஐயோ சின்னம்மோவ்ன்னு என்னமாச்சும் அலறுத சத்தங்கேட்டுச்சுன்னு வந்து கதவுல கைய வெய்யி. பேசிக்கிடுதன் ஒன்னிய…” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் வெண்மணி.
கேட்டுக்கொண்டிருந்த தேனரசனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தாலும் இருக்கும் இடம் உணர்ந்து உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
“சிமித்தர எம்பிட்டு பேச்சுடி பேசுத?…” என நினைத்தாலும் அவளின் கோபமும் புரியத்தான் செய்தது.
ஆனால் தானும் அமைதியாகிவிட்டால் எப்படி தன் மேல் ஏறி நிற்பார்கள் என்பதை இதோ கண்டுகொண்டானே?
தேளுக்கு தேளாக தான் இருக்கவேண்டும். தேனீக்கு தேனீயாகத்தான் இருக்கவேண்டும்.
இந்த ஊரில் உள்ள மனிதர்களுக்கு அவர்களுக்கு சரியான மனிதனாக தான் இருந்தாகவேண்டும் என கண்டுகொண்டான்.
பாவம் என்று பார்த்தால் பாதாளத்தில் தான் பிடித்து தள்ளுவார்கள். வேலை இடத்தில் அதன் கடமையை ஆற்றினால் போதும் என முடிவுடன் தான் இருந்தான் தேனரசன்.
முதல்நாள் பேச்சுக்கள் தான் அவனை அசைவற்று போக செய்தது. எந்த வார்த்தை வந்துவிட கூடாது என பார்த்து பார்த்து தன் இடத்தை உயர்த்திக்கொண்டானோ இதோ அந்த பேச்சு உண்மை இல்லை என்றாலும் பேச்சுக்கும் பேசிவிட்டனரே.
என்றோ வைரம் பேசிய பேச்சில் அவரை அடிக்க கை ஓங்கியவனுக்கு அத்தனைபேரின் பேச்சிலும் மனைவி அரைபடுவதில் ஆற்றாற்று போனான்.
இவர்கள் எப்படி பேசலாம் என்றொரு பக்கம், அவர்களை கேள்வி கேட்க முடியாதபடி சீனியம்மாள் தன் மேலேயே கை வைக்கும் அளவிற்கு வந்துவிட்டது ஒருபக்கம்.
ஆம், விட்டிருந்தால் மருமகன் என்றும் பாராமல் அடித்திருப்பார் அவர். அத்தனை வேகத்தில் தான் இருந்தார். சட்டையை பிடிக்கும் அளவிற்கு வந்துவிட பின்னால் சென்றான் தேனரசன்.
எங்கே எழுந்து சென்றாலோ, தானும் கோபப்பட்டுவிட்டாலோ கைகலப்பாகிவிடும் அபாயம்.
அப்படித்தான் வந்திருந்தார் சீனியம்மாள். அப்படி ஒன்று நிகழ்ந்துவிட்டால் காலத்திற்கும் மறையாத அவமானம்.
தன் கோபமும் அந்த நொடி எல்லை மீறி இருந்தால் இன்னும் நிலைமை மோசம். என்றுமே சரி செய்யமுடியாத தவறாகி போகும்.
அதனை தவிர்க்க சென்று அமர்ந்தவன் தான். நிச்சயம் வருவாள் என்றொரு நம்பிக்கை. ஆனால் என்னவாகிற்றோ என்ற தவிப்பு.
இப்படி பலவும் அவனை செயலற்று போக செய்துவிட அசையாமல் இருந்துவிட்டான்.
வந்ததும் வீட்டினுள் சார்ஜில் போட்ட போனை கூட எடுத்து வந்து பார்க்க முடியாத நிலமையில் தான் இருந்தான் தேனரசன்.
எல்லாம் காதில் விழுந்தது. ஆனாலும் எதற்கும் அவன் எதிரொலி எழுப்பவில்லை.
வரட்டும், பின் பார்த்துக்கொள்ளலாம் என்றொரு எண்ணம் அவனை இழுத்து பிடிக்க வைத்தாலும் அந்த பேச்சுக்கள் இன்னும் காயத்தை கிளறி விட்டது.
பெற்றவர்கள் செய்த புண்ணியம் மட்டுமல்ல, பாவத்தின் சம்பளமும் பிள்ளைகள் தலையில்.
அது தலைமுறையையே அசைத்துவிடும் என்பதை கண்கூடாக கண்டுகொண்டிருந்தான்.
அதே ஊரில், அவர்கள் கண்முன் வளர்ந்த ஒரு பெண்ணை எப்படி இப்படி பேச முடிகிறது என நினைத்தவனுக்கு மீண்டும் அந்த மனிதர்கள் மேல் தீரா கோபம்.
ஒரு பெருமூச்சுடன் தலையசைத்துக்கொண்டவன் மாலை வேலை முடிந்து கிளம்புகையில் வெண்மணிக்கு ஒரு போனையும் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
வீட்டு வாசலுக்கு வரும் முன்னரே வெளியே வந்துவிடும் வெண்மணி இன்னும் வராதிருக்க எங்கே என தேடினான் அவன்.
வீட்டினுள் இல்லை. கோவத்தில் தன்னை தேட வைக்கிறாளோ என்று சுற்றி வந்தவன் மீண்டும் வாசலுக்கு வந்து பொன்னியின் வீட்டு கதவை தட்டினான்.
உள்ளிருந்து குழலி வெளியே வரும்முன் அக்கம்பக்கத்தினர் அவனை குறுகுறுவென பார்க்க திரும்பி நின்று நன்றாக முறைப்புடன் பார்த்தான் தேனரசன்.
“என்ன அரசா ஒம்பொண்டாட்டிய தேடுதியா?…” என்றார் அவன் பார்த்த ஒருவர் ஈஈஈ என்று இளிப்புடன்.
“எம்பொண்டாட்டிய நா தேடுதன். நா என்ன தேடுதன்னு ஒமக்கு இங்கன என்ன சோலிங்கேன். வாப்பெட்டிய சாத்திட்டு பொறப்படுதியா?…” என்ற சத்தத்தில் அரண்டு போனார் அவர்.
“இல்ல காணுமின்னு பாத்தியே…” என சமாளிக்க,
“காணுமின்னா என்ன செய்ய போற?…” என்ற எதிர்கேள்வியில் அவர் வாயடைத்து பார்க்க,
“நேத்திக்கி மாரி எம்மாமியாருக்கு தான தாக்கல் சொல்ல பாக்க? போயி சொல்லு. போ…” என சொல்லவும் இவனுக்கு எப்படி தெரிந்தது என எழுந்து உள்ளே ஓடிவிட்டார் அவர்.
“யாத்தே அருவாதன் இல்ல ஒம்ம கையில…” என்று குழலி சிரித்துவிட ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் குழலியிடம் வெண்மணி எங்கே என்று கேட்டான்.
“எல்லா நல்ல சேதியாதன் இருக்குமாட்டிருக்கு. ஆஸ்பத்திரிக்கி போயிருக்காவ அத்தேயும், மணியும்…” என்றாள் சிரிப்புடன்.
தேனரசன் முகமெல்லாம் பூவாய் மலர்ந்து போக சற்று முன்னிருந்த சிடுசிடுப்பு எல்லாம் பனித்துளியாய் கரைந்திருந்தது.
“செரியா உண்காம திங்காம கடுகடுன்னுட்டே இருந்தா. அதேன் அத்தே நாக்கணக்க பாத்துப்பிட்டு கூட்டி போயிருக்காவ. செத்தமின்னதேன் அத்தே போன போட்டு சொன்னாவ…” என சொல்லவும் தலையசைத்தவன் புல்லட்டை எடுக்க,