தனக்காக கூட மகள் வரவில்லையே என்று ஒருபக்கம் தோன்றினாலும் நீ இறங்கி சென்றாயா என்ற மனதை அடக்கி வைத்தார்.
அவரின் இளக்கம் மீண்டும் இறுக்கம் பெற்றது. தனக்கு மட்டும் என்ன என வீம்பை பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்.
‘என்னிக்குனாலும் எம்புருசென் வீட்டு வாசப்படிய நீயி மிதிப்ப’ என்ற வெண்மணியின் குரல் அவரின் காதில் ஒலித்தது.
அதற்கே மகள் தன்னை வளைக்க பார்க்கிறாள் என்று அவராக யூகம் செய்துகொண்டு இறங்க முடியாதென்பதை போல இருந்துகொண்டார்.
பாசத்தில் மனது தவித்தாலும் அள்ளிவிட்ட பேச்சுக்களின் வீரியமும், இப்போதும் தாயை பார்க்கவேண்டும் என தாயாகும் மகள் நினைக்காததினாலும் சீனியம்மாள் உடும்பாய் தன் வைராக்கியத்தை பிடித்துக்கொண்டார்.
“இப்பிடி ஒரு அம்மைய எங்கியாச்சும் கண்டிருப்பமா?…” என வைத்தியே அவரின் முன் பேச எதற்கும் அசைந்தார் இல்லை சீனியம்மாள்.
ஆனால் மகள் எப்படி இருக்கிறாள் என்பதெல்லாம் கேட்டு தெரிந்து கோல தவறுவதும் இல்லை.
செண்பகத்தின் வருகை வெகுவாகவே குறைந்துவிட்டது. மாணிக்கத்தின் வேலை என்பது உணர்ந்திருந்தார்.
வீட்டில் ஒதுக்கி வைத்ததை போல பேசாமல் இருக்க முன்பை போல கலங்கவில்லை. பழகி விட்டதை போல ஒரு அலட்சியம் அவருக்கு.
இருந்துகொள்ளுங்கள் என எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரின் வேலைகளை செய்ய தவறுவதும் இல்லை.
தேனரசன் மனைவியை தங்கமாய் தாங்கினான். முன்பே தன்னை கொண்டாடுபவளை கொண்டாடி தீர்ப்பான்.
இப்போது அவனுக்கும் ஒரு குடும்பம் என்ற அமைப்பை கொண்டுவர போகிறவள் மனைவி. சந்தோஷத்தில் பூரித்து புல்லாகிதமடைந்தான்.
பொன்னியும், குழலியும் வெண்மணியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள கயல்விழி அடிக்கடி வந்துவிடுவாள்.
எதுவாக இருந்தாலும் வெண்மணி வீட்டில் வந்து தான் அவளுக்கு பிடித்ததை சமைத்து கொடுத்து பார்த்துக்கொண்டனர்.
சீனியம்மாள் இரண்டுமுறை மகளுக்கு செய்து கொடுத்தனுப்ப வீட்டிற்குள்ளேயே அந்த பாத்திரம் வர கூடாதென்று சொல்லிவிட்டாள் வெண்மணி.
“பொன்னி ஒவ்வீட்டுல ஆக்கி போட்டா உண்கிப்பாள…”என சீனியம்மாள் அங்கே வர பொன்னியிடம் தான் சண்டைக்கு பாய்ந்தாள் வெண்மணி.
“ஒனக்கு செய்யனுமின்னா நீயி செய்யி பொன்னியாத்தா. இல்லாங்கட்டி ஒன்னுத்தயும் எனக்கு செய்ய வேணா…” என மறுக்க,
“அம்பிட்டுக்கா நா ஆகாதவளா போயிட்டன்…” என்ற சீனியம்மாவை கொஞ்சமும் சட்டை செய்யவே இல்லை.
அவரிடம் பேசவும் இல்லை. பொன்னியும் சமாதானம் செய்து பார்த்து, வைரமும் சொல்லி பார்க்க தேனரசன் அதற்கு மேல் பிடிவாதமாக நின்றுவிட்டான்.
“அந்தம்மாவுக்கு இந்த வீட்டுக்குள்ள வாரதுக்கு கசக்குது. ஆனா மவள பாக்கனுமின்னு துடிக்கிதுன்னா தான வரவேண்டி தான? அவக ரத்தந்தான. அப்படித்தன் இருப்பன்….” என்று சொல்லிவிட்டாள் வெண்மணி.
ஊரே பேசும்படி தான் சீனியம்மாவும் இருந்தார். அதிலும் வெண்மணி வளைகாப்பு என்று பேச்சு துவங்கவும் எப்படியும் மகனும், கணவனும் மகளை இங்கே தானே அழைத்து வருவார்கள் என நினைத்துக்கொண்டிருக்க அதையும் தகர்த்தான் தேனரசன்.
“எனக்கு கெட்டி வெக்கேலே நா பாத்துக்கிடுவன்னு தான இந்த புள்ளைய கெட்டி வெச்சிக. அவளுக்கு எல்லா நா செய்யனுமின்னுட்டு இருக்கு. நா பாத்துக்கிடுதன்…” என உறுதியாய் சொல்லிவிட்டான் வெண்மணியின் முழு சம்மதத்துடன்.
வளைகாப்பு அங்கிருந்த மண்டபத்தில் நடந்தேற மொத்த செலவும் தேனரசனுடையதாக இருந்தது.
திருவிழாவை போல ஏற்பாடு செய்துவிட்டான் தேனரசன். ஊரில் அத்தனைபேரும் வியக்கும் வண்ணம் இருந்தது அவனின் ஏற்பாடுகள்.
மண்டபத்திற்கு மட்டும் வந்தவர் மகளுக்கு வளையலை பூட்டி ஆசிர்வதித்து கிளம்பிவிட்டார் சீனியம்மாள்.
இப்படியும் ஒருவர் இருப்பாரா என்ற பேச்சுக்கள் அவரை அதிகமாகவே துரத்த ஆரம்பித்தாலும் அவரால் மாற முடியவில்லை.
மகள் தன் வீட்டிற்கு வருவாள் பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தவருக்கு பெருத்த அடியாகி இருந்தது தேனரசன் அனுப்ப முடியாது என்றது.
“எம்மவள அனுப்பமாட்டேன்னு இவேன் என்னத்துக்கு சொல்லுதியான்?…” என வீட்டில் அவர் பிரச்சனை செய்ய,
“வேணுமின்னா நீங்க போயி கேக்கத்தான?…” என்று சொல்லிவிட்டாள் கயல்விழி.
அதை செய்யத்தான் அவரால் முடியவில்லையே. வீட்டிற்கு சென்றால் வராதே என சொல்ல போவதில்லை.
ஆனால் அதற்கு தான் இடம் கொடுக்கவில்லையே புத்தியும், மனதும். மகளிடம் மல்லுக்கு நிற்கும் அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தேனரசனுடன் நிறைமாத வயிற்றுடன் இங்குமங்கும் செல்லும் மகளை காணவே அவருக்குக்கு அத்தனை ஆசையாக இருக்கும்.
இதற்கென்றே பொன்னியுடன் பேசுவதை போல வந்து அங்கிருந்தால் வெண்மணி வெளியே வரவே மாட்டாள் வேண்டுமென்றே.
“எங்கம்மை சமத்தா, இல்ல எஞ்சமத்தா பாத்துக்கிடுதேன்…” என அவளும் ஒருபக்கம் வீம்பு செய்ய,
“சரியான போட்டிடி சிமித்தர…” என தேனரசன் கை தட்டி குதூகலிப்பான்.
“எங்கம்மையோட நா எம்பிட்டும் சடவா இருப்பன். ஒனக்கென்னய்யா கொண்டாட்டமா கெடக்கு?…” என்று அவனையும் பிடித்து ஒருவழியாக்கிவிடுவாள்.
பிள்ளை உண்டானதில் இருந்து ஊஞ்சலில் ஆட கூடாதென மருத்துவ அறிவுரை இருக்க அதை தவிர வேறு ஒருகுறையும் இருந்ததில்லை.