தவராசன் என்னவென பார்க்க செல்ல சீனிய்யமாவும் ஓட்டமும் நடையுமாக வந்தவர் வாசலிலேயே நின்றுவிட்டார்.
பேரன் ஒருபக்கம் அழ, மகள் ஒருபுறம் அழுதுகொண்டே சமாதானம் செய்ய என பிஞ்சு குழந்தையை வைத்து அங்கு ஒரு உணர்வு போராட்டம்.
யாரும் பிள்ளையை வெளியே தூக்கி வரமாட்டார்களா என சீனியம்மாள் தவித்துக்கொண்டிருக்க வயதான பாட்டி ஒருவர் வேகமாக உள்ளே சென்றார் என்னவென பார்க்க.
உள்ளே ஆட்கள் வேறு அதிகமிருக்க என்னவென்றே தெரியவில்லை. இத்தனை கூட்டம் வேறு.
“இம்பிட்டுபேரு இருந்தா எம்பேரனுக்கு மூச்சு முட்டாதா? கூவைக அம்புட்டும்…” என்று சொல்லிக்கொண்டே நின்றவருக்கு பேரனின் சத்தம் இன்னும் கூடுதலாக.
ஒவ்வொருவராக வெளியே வர அந்த பாட்டியை பிடித்துக்கொண்டார் சீனியம்மாள்.
“பெரியாத்தா, என்னத்துக்கு இம்பிட்டு எரையுதியான் புள்ள?…” என கேட்க,
“சில்லு சில்லுன்னு கரையிதியான். வவுறு நோவு ஒண்ணுமில்ல. தொக்கங்கிக்கம் விழுந்தாமாட்டுக்க எனக்கு அம்புடல. என்னன்னு வெளங்கலையே சீனி…” என்று அவர் சொல்லி செல்ல நெஞ்சமெல்லாம் அடித்துக்கொண்டது.
பிஞ்சு குழந்தை, எதுவும் எசகுபிசகாக படுக்க வைத்திருப்பாளோ மகள் என்று நினைத்தவருக்கு வெண்மணியின் சத்தமும் குழந்தையின் சத்தமும், தேனரசனின் அதட்டலும் அதற்கு மேல் நிற்க விடவில்லை.
எல்லாம் உடைந்தது அந்த நிமிடம். அவரின் வைராக்கியம், வீம்பு, பிடிவாதம், பிடித்தமின்மை எல்லாம் அந்த வாசலில் உடைந்து சிதற உள்ளே நுழைந்துவிட்டார் சீனியம்மாள்.
“இந்தா நவருதீயலா. இம்புட்டு கூட்டம் போட்டா புள்ளைக்கு காத்து எங்கிட்டுருந்து வருமாம்? போங்க அங்கிட்டு…” என்று கத்தியவரை அனைவருமே திகைத்து பார்க்க சீனியம்மாள் பேரனை தேடினார்.
அவன் தேனரசன் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருக்க பால் வண்ண உடல் அழுகையில் சிவந்து போயிருந்தது.
“கொண்டாய்யா வாய கேளு ஊருப்பட்ட வாயி. பச்ச மண்ணுக்கு சொல்ல தெரியுமாக்கும்?…” என்று சொல்லியவர் வாசலுக்கு நேராக காற்றோட்டமாய் வந்து அமர்ந்துகொண்டவர் பேரனை மடியில் போட்டு ஆட்டியபடி உடலை எல்லாம் நீவிவிட்டார்.
வெண்மணி இன்னும் அழுகையில் அழுது கரைய தன் கண்ணில் வழிந்த நீரையும் துடைத்துவிட்டு,
“இந்தாடி போயி எண்ணெய பொறுக்க காச்சி கொண்டா…” என மகளை அதட்டியவர்,
“பொன்னி அந்த விசிறிய எடுத்தாத்தா. இங்கிட்டு விசிறு…” என்று அவரையும் விரட்டி,
“பொன்னி போயி புடித்தா…” என்றதும் அவரும் தேனரசனும் வேஷ்டியை பிடிக்க பிள்ளையை தூக்கி தூக்கி மேலே போட்டு பிடித்த சீனியம்மாள்,
“தொட்டில புள்ள எசகுபெசகா கெடந்துருக்கும். இல்ல ஆராச்சும் தூக்கறப்ப பெசகிருக்கும். இப்ப செரியா போவும் பாரு…” என பேரனை அந்த துணியில் போட்டு தேனரசனிடம் இருந்த முனையை தான் வாங்கிக்கொண்டார்.
“தாய்மாமன் வேட்டில இப்பிடி போட்டு உலுக்கிவிட்டா எல்லா செரியா போவும். என்னத்துக்கு தாய்மாமென சொல்லுதாவளோ? ஆனா நீயி பொறந்தப்பெல இருந்து இதேன்…” என்றார்.
பேசியபடி பொன்னி ஒருபக்கம் பிள்ளையை துணியில் உருட்டி ஆட்ட, சீனியம்மாள் ஒருபக்கம் உருட்டிவிட என நான்கைந்து முறை செய்ய அழுகை நன்றாகவே குறைந்து சிணுங்கலாய் மாறியது.
“அம்பிட்டுதன். புள்ளைய தூக்கு…” என்று சொல்லியவர் வெண்மணி தூக்கவும் தான் வாங்கிக்கொண்டார்.
“செத்த நேரம் எம்மடில கெடக்கட்டும். நீயி போயி சோலிய பாரு…” என சொல்லி மீண்டும் அமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்துகொள்ள தேனரசன் மகனை பார்த்தான்.
“இப்பத்தேன் நிம்மதியாருக்கு மயினி…” என பொன்னி சொல்ல,
“நா எம்பேரனுக்காவ வந்தன். வேற ஒருத்தவியளுக்காவவும் இல்ல…” என வீம்புடன் அவர் சொல்ல,
“அதேன் பேரனுக்கு செரியா போச்சுல்ல. ஏட்டி வெண்மணி, ஒங்கம்மைய பொறப்பட சொல்லைத்தான…” என்று சொல்லிக்கொண்டே மெல்லிய சிரிப்புடன் ஊஞ்சலில் சென்று அமர்ந்தான் தேனரசன்.
பழைய உற்சாகம், துள்ளல் எல்லாம் மீண்டிருந்தது அவனின் பேச்சில், உடல்மொழியில்.
காலை ஆட்டியபடி அவன் நக்கலாக சீனியம்மாவை பேச தவராசனும், வைரமும் மீண்டும் எங்கே ஒரு சண்டையாகி போகுமோ என பயந்து பார்த்தனர்.
“இது எம்மவ வீடு. எம்பேரன் வீடு. நா என்னத்துக்கு போவ? வேணுமின்னா சோலி இருக்க மனுசென் பொறப்பட தான பொன்னி?…” என பதிலுக்கு பேசினார் சீனியம்மாள்.
“சீனி…” என தவராசன் அதட்ட அவரை முறைத்தவர்,
“ஏட்டி இவளே, இதேன் நீயி வந்தவகள கவனிக்கித லச்சணமா? ஒருவா தண்ணி குடுத்தியாடி?…” என சீனியம்மாள் மகளை அதட்ட ஆரம்பிக்க உள்ளே வெண்மணி அப்படி ஒரு அழுகையில் இருந்தாள்.
தாயாய் அவள் தவித்த தவிப்பு. தான் தன் தாயை ஒதுக்கிய பொழுதும் அவரும் இப்படித்தானே தவித்திருப்பார் என்று எண்ணியவள் தேம்பியபடி இருக்க,
“இந்தா கொழுந்து, போயி பொண்டாட்டிய கவனியும். இவகள நா பாத்துக்கிடுதன்…” என குழலி அவனை உள்ளே போகும்படி சொல்ல தேனரசனும் சென்றான்.
“வெண்மணி, யே என்னடி?…” என்று கேட்டவனின் தோளில் சாய்ந்தவள் இன்னும் சத்தமிட்டு அழ அனைவருமே அடுக்களை வாசலுக்கு வந்து நின்றுவிட்டனர்.
கிட்டத்தட்ட தேனரசன் வெண்மணியை அணைத்ததை போல நின்றிருக்க உள்ளே செல்ல சங்கடப்பட்டு நின்றனர்.
வெண்மணியின் கண்ணீர் தீருமட்டும் அழுது, பேசி தன் மனதின் ஆதங்கங்களை சொல்லி என்று கொட்ட சீனியம்மாவுக்கும் கண்ணீர் தான்.
ஒன்றும் சொல்லாமல் சென்று அமர்ந்துகொண்டவருக்கு தன் மீதே அத்தனை ஆத்திரம்.
எதை கொண்டு செல்ல இவ்வளவு வீம்பும், பிடிவாதமும்? தன் மகளையும், அவள் குடும்பத்தையும் கவனிக்காமல் என நினைத்து மருகியவர் மடியில் உறங்கும் பேரனை பார்த்துக்கொண்டிருந்தார்.
வெண்மணி அழுகை குறைந்து முகத்தை துடைத்துவிட்டு வெளியே வர சீனியம்மாள் எதுவும் பேசவில்லை.
தொண்டையை செருமிக்கொண்ட வெண்மணி வழக்கம் போல தன் குரலை கணைத்தவள்,
“யே மாமோவ், ஒம்மாமியாருக்கு என்ன வேணுமின்னு கேளு. போயி அடுப்ப பத்த வெக்கிதேன்…” என வேணுமென்றே அவரை சீண்ட,
“ம்க்கும், வக்கத்த மருமவேன் என்னத்த கறிக்கஞ்சியா காச்சி ஊத்த போறன்? இல்லாதப்பட்ட வீட்டுல பழைய கஞ்சிதேன். வவுசம்மாவுக்கு அது போதுமாட்டிருக்கான்னு நீயி கேளுடி. என்னிய யே புடிச்சு இழுக்குத?….” என தேனரசனும் இடக்காக பேச,
“ஆரும் ஒன்னுத்தயும் செய்ய வேணா. கம்மின்னிருக்கத்தான…” என பொன்னியே இந்த விளையாட்டை முடித்து வைத்துவிட்டார்.
அதற்குள் மாணிக்கத்திற்கு விஷயம் தெரியவும் செண்பாவுடன் அங்கே வந்து சேர்ந்துவிட்டான்.