நம்ம கையால கொல்லலனாலும், வாய்ப்பு கிடைக்கும் போது யார் மூலமாவது அவனை பழிவாங்கியே தீரனும்னு நினைச்சிட்டிருந்தேன். என்னைக்கு உன் பேத்தி என்னை கட்டிக்க சம்மதிச்சாளோ அன்னைக்கே முழுசா பழிவாங்கும் எண்ணத்தை விட்டுட்டேன் தாத்தா.
அவனை கொன்னாலும், என் அப்பாம்மா வரப்போறதில்ல.. ஆனா என் அம்மா மாதிரி பிரச்சனையை சந்திக்கிறவங்களுக்கு உதவி செய்தா என் அம்மா ஆத்மா சாந்தியடையும், என் அப்பா என்னை ஆசிர்வதிப்பார்னு தெளிவானேன் தாத்தா.
என்மேலான உன் பேத்தியோட விருப்பம்தான் என்னை மனுசனாக்கினது. இப்பவும் அப்படியான உதவிக்கு போகவேணாம்னு சொல்லாம, ஜாக்கிரதையா செய்யிங்கனு சொன்னா. அதுல இன்னும் மயங்கி போயிட்டேன். இப்படி பொண்டாட்டியை விட வேற என்னவேணும்?” என்றான் இதமான மனநிலையோடு.
“ஹா..ஹா.. என் பேத்திதான் உன்னை மனுசனாக்குச்சா? சந்தோசம்யா சந்தோசம்..” என நிறைந்த மனதோடு சொல்லி, “சரி எதாவது சாப்பிடு, புள்ளைங்க படிக்க வந்துட்டா சாப்பிட பத்து மணியாக்கிடுவ.” என்று வெளியேறினார்.
“என்னடி அப்படி பார்க்குற?” என்றான் கண்ணிமைத்து.
“என் பாட்டி பேச்சு கேட்டுட்டு உங்கள்ட்ட பேசாம இருந்ததை தவிர வேற எதுவுமே உங்களுகாக நான் செய்யல, ஆனாலும் என்னாலதான் மனுசனானேன்றிங்க?” என்றாள் மனம் நிறைந்த பெருமையோடு.
“என் மனசெல்லாம் நீதான்னாலும், உன் பாட்டி பேசினதுக்காகவும், ஒன்பது வருசமா நீ என்னை அவாய்ட் பண்ணினதுக்காகவும், எத்தனை வருசமானாலும் என் விருப்பத்தை உன்கிட்ட கண்டிப்பா சொல்லியிருக்கமாட்டேன்..
ஆனா.. நீ யாரையாவது கல்யாணம் செய்துட்டு போயிருந்தா என் நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருந்திருக்கும். கல்யாணம்ன்ற ஒன்னு என் வாழ்க்கையில கண்டிப்பா நடந்திருக்காது.” என்று மதியழகன் உள்ளார்ந்து சொல்ல.. “மாமா..” என அணைத்துக்கொண்டாள் ஆதரவாக.
“ஏய் தாமர.. தாத்தா வரப்போறாரு.” என மதி தயங்கி விலக நினைக்க, மதியை விட மறுத்து அணைப்பை கூட்டி.. “அதெல்லாம் உங்கத்தை மாமாவும், தாத்தாவும் உங்களை அப்படியே விடமாட்டாங்க. என்னை விட சூப்பர் பொண்ணு கிடைச்சிருப்பா உங்களுக்கு..” என்றாள்.
“அப்படியா? அவங்களால்லாம் என்னை மாத்த முடியும்னு உனக்கு தோணுதா? எனக்கு விபரமறிஞ்ச வயசுலயிருந்த பார்த்திட்டிருக்க இந்த முகத்தை மறந்துட்டு இன்னொருத்தியை நினைப்பேனு நம்புறியா?” என்று அவளின் முகம் நிமிர்த்தினான்.
“மாமா..” என மயங்கினாள் தாமரை. உணர்வும் உள்ளமும் இயக்கத்திலிருக்கும்போதே தோன்றிய இம்மயக்கம் மனதிற்கு அத்தனை அலாதியாக இருந்தது தாமரைக்கு.
“ஏய்.. டியூசன்க்கு பசங்க வந்திடுவாங்க, கதவு வேற திறந்திருக்கு.” என்ற மதியின் பேச்சு தாமரை காதிற்கு எட்டவில்லை போலும், அணைப்பிலிருந்து விடுபடாமல் நின்றிருந்தாள்.
தாமரையை வற்புறுத்தலாய் விடுவித்து, “இன்னைக்கு நைட் படிக்க விடமாட்டேன், ஒழுங்கா டியூசன் பசங்க படிக்கும்போதே நீயும் ஒன் ஒர்க்கை முடிச்சிடனும்.” என கட்டளையிட்டான் கண்ணிமைத்து.
வெட்கம் தாளாமல்.. “மாமா..” என ஓடினாள் தனதறைக்கு. திருமணம் முடிந்த மூன்றாம் நாள் ஆன காயம் தற்போது நான்கு நாட்களுக்கு முன் ஆறியிருந்தாலும், படிப்பவளை தொல்லை பண்ண வேணாம் என விலகியிருந்த மதிக்கு, தாமரையின் புது மயக்கம் தடைகளை தகர்க்கச் செய்ய, தன் விருப்பம் தெரிவித்து, தற்போதையை கடமையாற்ற மாணவர்களோடு ஐக்கியமானான்.
இனி படிப்பு முடியும் வரை தன்னை நெருங்கமாட்டான் என்றிருந்தவளுக்கு மதியின் பேச்சு தடுமாற்றத்தை கொடுத்தாலும்.. பிடிக்கச் செய்ய, மதி சொன்னதற்காக புத்தகத்தை எடுத்தவள் கண்களில் மதியே மின்னினான்.
பத்து மணிபோல் மதி அறைக்குள் வர.. தன் விருப்பமும் அப்பட்டமாய் தெரிந்திடுமோ என மதி முகம் பார்ப்பதை தவிர்த்து, படிப்பதாய் பாவனை செய்துகெண்டிருந்தாள் தாமரை.
கதவை தாழிட்டு தாமரையருகே நெருங்கியவன்.. “பார்டா.. ரொம்ப சின்சியரா படிக்கிற போல.” என மெச்சியவாறு புத்தகத்தை பிடிங்கியவன்.. “ம்.. என்ன லெசன் படிச்சிட்டிருந்த.?” என்றான் பிரித்து வைத்திருந்த பக்கத்தை பார்த்தபடி.
“அது..” என தாமரை தடுமாற.. புத்தகத்தை மூடி டேபிள்மேல் வைத்தவன்.. “சரி என்ன சப்ஜக்ட்னாவது சொல்வியா?” என்றான் வசீகர சிரிப்போடு.
“மாமா..” என அருகிலிருந்த தலையணையை அவன் மேல் போட்டு திரும்பிப்படுக்க.. தாமரையை நெருங்கி தன் புறம் திருப்ப கண்மூடியிருந்தாள்.
இரண்டு நாள் சுகித்த இன்பம்.. பதினைந்து நாட்கள் கிடைக்காமல் போக, இருவருக்குமான தாபமும் காதலும் ஒன்றிணைந்து, இணையின் எதிர்பார்ப்பை மிச்சமின்றி நிறைவேற்றியது.
இதோ ஒரு வருடம் முடிந்துவிட்டது.. முன்பு போல் படிக்க முரண்டுவதில்லை, தான் படிப்பதுதான் மதியின் நிம்மதி என்பதால் பிடிப்பில் தன் பழைய திறனை நிரூபித்தாள் தாமரை.
தன் அன்னை வீட்டிலிருந்த போது படித்தது போலவே காலையிலும் மாலையிலும் படிப்பவள்.. இரவு மதிக்கான சந்தோசத்திலும் குறை வைக்கமாட்டாள்.
பரிட்சை நேரங்களில் மதி விலகினாலும்.. எலி பிராண்டுவது போல பிராண்டுவது, இப்படி நாளுக்கொரு யுக்தியை கண்டுபிடித்து இம்சை படுத்தி.. “பல தடைகளை தாண்டி என் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுங்களே.” என குறும்பாய் பேசி தனக்குள் இழுத்திடுவாள் தாமரை.
“எக்ஸாம் முடிஞ்சாச்சு, பி.ஜி முடிச்சாச்சு, இனி படிப்பு பத்தி பேசக்கூடாது.” என்றாள் அதட்டலாக.
“ஆமாம் பேசக்கூடாது.” என பழனியப்பனும் அதட்ட.. “ஓஹோ.. கூட்டனி போட்டு மிரட்டுறிங்களா?” என்றான் பொய் முறைப்பாக.
தாமரை.. “பி.ஜி முடிச்சாச்சு.. இனி அடுத்த கோர்ஸ்..” எனும்போது மதியழகன் ஆச்சர்யமாய் பார்க்க.. “கொஞ்சம் கஷ்டமான கோர்ஸ்தான்.. ஆனா நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை? எல்லாம் சொல்லித் தருவிங்கதான?” என்றாள் பீடிகையாக.
“உனக்கு சொல்லி கொடுக்கிறதை விட வேற என்ன வேலை எனக்கு?” என ஆசையாய் சொல்லி.. “பி.ஹெச்.டி பண்ண என்ட்ரன்ஸ் எழுதப்போறியா?” என்றான் ஆவலாக.
“அய்ய… அதில்ல மாமா.. இது அதைவிட கஷ்டமான கோர்ஸ்.. வீட்டு வேலை, சமையல்லாம் கத்துக்கப் போறேன்.” என்றாள் இலகுவாக.
“அம்மாடி.. அப்போ நீ பாசாகுறது ரொம்ப சிரமம்.” என பழனியப்பன் சிரிக்க.. “மக்கு பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வரதுதான் நல்ல வாத்தியாருக்கு அழகு. நான் கத்துக்கலன்னா அது என் தப்பில்ல தாத்தா.. வாத்தி சரியில்லனு அர்த்தம். ஆக மொத்தம் இந்த கோர்ஸ்ல டாஸ்க் எனக்கில்ல, உங்க பேரனுக்குத்தான்..” என்றாள் சிரிப்போடு.
சற்று நேரத்திற்கு பிறகு பழனியப்பன் வெளியே போக.. “பயப்படாதிங்க மாமா.. எல்லா வேலையும் சீக்கிரம் கத்துக்குவேன்.” என்றாள்.
இது எதோ விசயம் அடங்கியிருக்கே என்பதாய் மதி பார்க்க.. “ஒரு வருசம் கழிச்சி நம்ம குழந்தைக்கு சமைக்கனும்ல? அதுக்குத்தான்.” என மதியழகனைப் போல கண்ணிமைத்து அணைத்துக்கொள்ள.. “ஏய்..” என தானும் தழுவிக்கொண்டு, “நிஜமாவா தாமரை.?” என்றான் இதமான மனநிலையோடு.
“ம்… மாச மாசம் எதாவது விசேசமானு அம்மா கேட்டு கேட்டு, இப்போ எனக்கும் ஆசை வந்துடுச்சி.” என தலைகவிழ்ந்தாள் வெக்கத்தோடு.
தாமரை சொன்ன பின்னே மதிக்கும் ஆசை வர.. குழந்தை நோக்கிய எதிர்பார்ப்போடு இதோ இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனால் தாமரை உண்டாகவில்லை.
இரண்டு மாதம்தானே ஆகிறது என மதியழகன் பெரிதாய் கவலைப்படமாட்டான். ஆனால், வீட்டிற்கு வெளியேறியதும் தாமரைதான் ஏமாற்றமாய் உணர்வாள்.
குழந்தை வேண்டாம் என தள்ளிப்போட்டதால்.. தற்போது அதுவே பிரச்சனை ஆகியிருக்குமா என பயம் வரவே, அடுத்த வாரம் அன்னையோடு மருத்துவமணை செல்லலாமா என யோசித்திருந்தாள்.
அடுத்த நாள் காலை தாமரைக்கு எழ முடியாமல் போக, பரிச்சை முடிந்த பின்னே உதவி செய்கிறேன் என்ற பெயரில் ஒரு வேளையும் செய்யாமல் கிச்சனை வண்ணமயமாக்கும் மனைவி, இன்று சமையல் முடித்தும் எழாமலிருக்கவும் நேற்றிரவு நியாபகத்தில் புன்முறுவல் பூத்தவன்..
“தாத்தா.. இன்னைக்கென்னவோ தாமரை இன்னும் தூங்கறா. தொட்டு பார்த்தேன், காய்ச்சல்லாம் இல்ல, நைட் ரொம்ப நேரம் மொபைல் பார்த்திருப்பா போல, பத்து மணிக்கு மேல எழுந்துக்கலன்னா எழுப்பி சாப்பிட சொல்லு..
அவ எழும்வரை நீ சாப்பிடாம இருக்காத, மாத்திரை போடவாவது கண்டிப்பா சாப்பிடனும்.” என அறிவுருத்தி கல்லூரிக்கு கிளம்பினான்.
பத்து மணியாகியும் தாமரை எழாமல் போகவே, அறைக்குள் சென்ற பழனியப்பன்.. “தாமரை… என்னடா பண்ணுது.? எப்போ முழிச்ச? ஏன் வெளில வரல..” என்றார் பதட்டமாக.
“எழுந்தா கீழ விழற மாதிரியேயிருக்கு தாத்தா, ரொம்ப டையர்டாயிருக்கு.” என்றாள் அதீத சோர்வோடு.
“இருடா மதிக்கு போன் பண்ணி வரசொல்றேன், ஆஸ்பத்திரிக்கு போவிங்க.” என மொபைல் எடுக்க போக, “வேணாம் தாத்தா. இப்போ அவர் பிஸியா இருப்பார். அம்மாக்கு போன் செய்துருக்கேன், வரன்னாங்க.” என்றாள்.
“சரிடா மெல்ல எழுந்து உக்காரு, டீ கொண்டு வரேன்.” என்று டீ கொண்டு வர, தாமரை குடிக்க மறுக்கவும், இந்த காமாட்சி இன்னும் என்ன பண்ணுது? என மகளின் மேல் கோபம் கொண்டார் பழனியப்பன்.
பனிரண்டாம் வகுப்பு பரிச்சை முடித்து ரிசல்ட்டிற்காக காத்திருக்கும் மஞ்சரிக்கு, தந்தையோடான அன்னையின் ஆர்ப்பரிப்பிலேயே விசயம் புரியவும், “நானும் வருகிறேன்.” என கிளம்பினாள்.
மருத்துவரோடு காமாட்சி குடும்பம் வர.. “என்னம்மா இம்புட்டு நேரம் பண்ணிட்ட?” என கடிந்தவாறு தானும் பின்னோடு செல்ல, “நீ இங்கையே இருப்பா.” என தான் மட்டும் மருத்துவரோடு அறைக்குள் சென்றார் காமாட்சி.
பரிசோதித்த பின்னே, நினைத்து வந்த விசயம் உண்மையாக, பழனியப்பனிடம் விசயத்தை சொல்ல, வம்சம் தழைத்த சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
மதிக்கு அழைக்க மதி அழைப்பை ஏற்கவில்லை. ஒரு மணிநேரம் கழித்து தாமரைக்கு அழைத்தவன்.. “வெளில இருக்கேன் தாமரை. எதாவது முக்கியமான விசயமா?” என்றான்.
“காலேஜ்க்கு போகலையா?” என்க.. மதி விசயத்தை சொல்ல.. “நல்லபடியா முடிச்சிட்டு, வெற்றியோட சீக்கிரம் வாங்க.” என்று வாழ்த்தி இணைப்பை துண்டித்தாள்.
இரவு ஏழு மணிபோல் மதியழகன் வர.. அனைவரும் இருக்கவும்.. இதென்ன மாமா வெக்கப்படறது போலயிருக்கு என நினைத்தபடி.. “ஹாய் மஞ்சுக்குட்டி. புதுப்படம் எல்லாம் பார்த்தாச்சா?” என்றான்.
“ரொம்ப டையர்டா இருப்பிங்க போல மாமா, ஃப்ரஸ்ஸாகிட்டு வாங்க. புது ரிலீஸ் பத்தி சொல்றேன்.” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
கதிரேசன், காமாட்சியின் முகங்கள் ப்ரகாசமாய் இருக்க, தாமரை உடலுக்கு பிரச்சனையில்லை என்ற நிம்மதியோடு உள்ளே போக, தாமரையும் மதியோடு சென்றாள்.
“நான் வர லேட்டாகும்னு இங்கையே இருக்காங்களா?” என்க.. ஆமாம் என தலையசைத்தவள்.. “போன விசயம் என்னாச்சு?” என்றாள்.
“அது கடத்தல் இல்ல தாமரை, புதுசா குடிவந்திருக்காங்களாம். மார்க்கெட்கு வந்த பொண்ணுக்கு வீட்டுக்கு போக வழி தெரியல, அதை தெரிஞ்சிக்கிட்ட நாலு நாதாரிங்க அந்த பொண்ணை யூஸ் பண்ண பார்த்து தப்பான வழியை சொல்லியிருக்காங்க.
சரியான ரூட் தெரியலன்னாலும் நாம போற ரூட் தப்புனு அந்த பொண்ணுக்கு புரிஞ்சிருக்கு.. நான் நூறடி தூரத்துல வந்துட்டிருக்கும்போது லிஃப்ட் கேட்டு கை நீட்டுச்சி,
ஆனா பக்கத்துல போனதும் வண்டியில ஏற பயப்பட்டுச்சி, அது பயத்தை போக்கி விசாரிக்கவும் விசயத்தை சொன்னுச்சி, பட்ட பகல்ல எதுக்கும்மா இப்படி பயப்படறனு திட்டிட்டு நம்ம மித்ரன் சார்க்கு கால் பண்ணி விசயத்தை சொன்னதும் உடனே வந்துட்டார், போலீசை பார்த்த பின்னதான் அந்த பொண்ணுக்கு நிம்மதியாச்சு.
அந்த பொண்ணு வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு, அந்த பசங்களை அடையாளம் காட்ட சொல்லி அவனுங்களை கண்டுபிடிச்சி உள்ள தள்ள இவ்வளோ நேரம் ஆகிடுச்சி.” என்றான்.
தாமரை பெருமையாய் பார்த்திருக்க.. “அது சரி.. நீ எதுக்கு கால் பண்ணின?” என்றான்.
“உங்க குழந்தைக்கு அவங்கப்பாவை இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கத்தான் கூப்பிட்டேன், சூப்பர் ஹுரோவா இன்ட்ரடியூஸ் ஆகிட்டிங்க. இப்போ போய் குளிங்க.” என்றாள் தன்னிரு புருவம் உயர்த்தி.
“ஏய்.. எக்ஸாம் முடிஞ்சதும் கூப்பிட்டேன்தான? நீதான் வரலன்னுட்ட.” என குறைப்பட்டு, “ஆனாலும் உன் ஆசையை நிறைவேத்தி என்னையும் பெருமை படுத்திட்ட..” என்றான் பெருமையாக.
“ம்.. என்னை கண்ணுக்குள்ள வச்சி தாங்குற என் புருசனுக்கு என்னால கொடுக்க முடிஞ்ச சின்ன கிஃப்ட்.”
“எது..? என் குழந்த உனக்கு சின்ன கிஃப்ட்டா?” என முறைக்க, “ஆமா.. நீங்கதான் என்னோட பெரிய கிஃப்ட், அப்போ நம்ம குழந்தை எனக்கு சின்ன கிஃப்ட்தான?” என்றாள் காதலாக.
மனைவியின் காதலில் மயங்கியவன்.. “நான் வேண்ணா உனக்கு பெரிய கிஃப்ட்டா இருக்கலாம். ஆனா எனக்கு நம்ம குழந்தைதான் பெரிய கிஃப்ட்.. அதுக்கப்புறம்தான் நீ.” என வம்பிளுக்க..
“சரி.. நான் சின்ன கிஃப்ட்டாவே இருந்துட்டு போறேன், சின்ன கிஃப்ட்டோ? பெரிய கிஃப்ட்டோ? எனக்கு உங்க பக்கத்துல இருந்தாலே போதும்.” என்று தாமரை ஒப்புகொடுக்க..
தன் விருப்பம் அனைத்திற்கும் இன்முகத்தோடு சம்மதிக்கும் மனைவியின் அன்பில் மேலும் மேலும் மயங்கினான் மதியழகன்.