காலை எழுந்ததும் முதலில் தனது கைபேசியை எடுத்து பார்த்தவன் முகத்தில் அத்தனை ஏமாற்றம்.
எப்போதும் வந்துவிட்டேன், இப்போது வருகிறேன், தாமதமாகும், இங்கே இருக்கிறேன் ஏதாவது ஒரு செய்தியை அனுப்பிவிடுவாள் ஸ்ருதி.
ஸ்ருதியிடமிருந்து எந்தவித தகவலோ குறுஞ்செய்தியோ இல்லை. முதல்நாள் இரவு கோபமாக கிளம்பி சென்றதோடு சரி.
அதன் பின் எதுவும் வரவில்லை. பத்துமணி வரை பார்த்த பார்த்திவ் அதற்கு மேல் யோசிக்காமல் அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
சென்றுகொண்டே இருந்ததே தவிர அழைப்பு ஏற்கப்படவில்லை. மீண்டும் இருமுறை அழைத்துவிட்டு கீழே வர சுதந்திரம் அமர்ந்திருந்தார்.
“இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு பார்த்திவ். ப்ரடியூசர் அவர் வீட்டுல வச்சே நடத்த முடிவு பண்ணியிருக்கார். லன்ச்க்கும் அரேன்ச் பண்ணியிருக்கார்…” என அன்றைய நாளேட்டை அவனுக்கு சொல்லிக்கொண்டிருக்க அவர் பேசி முடிக்கட்டும் என மஞ்சுளாவும் அமர்ந்திருந்தார்.
இன்னும் பார்த்திவ் காலை உணவிற்கு வரவில்லை. தாமதமாக எழுந்து வந்திருந்தான் அன்று.
சுதந்திரம் வேறு பேசிக்கொண்டிருக்க இடையிடாமல் பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுளா அவர் சொல்லி முடித்ததும்,
“பார்த்திவ் சாப்பிடலாம்…” என்றார்.
“வரேன் ம்மா. எடுத்து வைங்க…” என சொல்லவும் மஞ்சுளா எழுந்து சென்றார்.
“ஸ்ருதி எப்போ க்ளாஸ்க்கு வராளாம்? உங்களுக்கு மெசேஜ் பண்ணியிருக்காளா?…” என பார்த்திவ் கேட்க,
“ஸ்டூடியோல இருந்து மேனேஜரை கால் பண்ண சொல்லுங்க ஸ்ருதிக்கு. அப்படியே மெசேஜ் அனுப்புங்க மதியம் கிளாஸ் இருக்குன்னு…” என சொல்லியவன் சொல்லிவிட்டது போதும் என மீண்டும் சயன நிலைக்கு செல்ல,
“பெத்த ஸார். தண்ணி…” என பாட்டிலை நீட்ட,
“என்னடா?…” என கடுகடுவென பல்லை கடித்தார்.
“அங்க லப்புடப்புங்கறது எனக்கு இங்க கேட்குது. குடிச்சு அதோட ஆத்மாவ சாந்தி படுத்துங்க….”
“உனக்கு இருக்குடா ஒருநாள்…” என சொல்லியபடியே பாட்டிலை வாங்கிக்கொண்டவர் நீரை பருகி முடித்து தானும் ஸ்ருதிக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மேனேஜருக்கு அழைத்து அவரையும் ஸ்ருதிக்கு அழைக்க சொல்லி வைத்துவிட்டார்.