சென்ற இடத்தில் அபராஜிதன் வேறு அங்கே கீழே விழுந்து வைத்திருக்க அங்கிருந்து விரைவிலேயே கிளம்பிவிட்டனர்.
வரும் வழியிலேயே தன்ஷிகா ஆரம்பித்துவிட்டாள். இன்னும் ஒருநாள் இங்கே இருக்கலாம் என கேட்டு அத்தனை நச்சரிப்பு.
“அடுத்த லீவ் வரும் போது பார்த்துக்கலாம் தன்ஷி. ஈவ்னிங் கிளம்பறோம். அவ்வளோ தான்…” என சொல்லிவிட்டான் ஆதித்தன்.
“ம்மா இது நம்ம வீடு தான? நாம இங்க இருந்துட்டு நாளைக்கு போவோம். மாமா வேணா கிளம்பட்டும்…” என்றவள்,
“அபி இன்னைக்கு மாதிரி நாளைக்கு ஜாலியா இருக்கலாம்டா…” என அபராஜிதனையும் தன் பேச்சில் இழுக்க,
“ம்ஹூம். அப்பா வேணா சொல்லிட்டாங்க…” என சொல்லிவிட்டான் அபி.
“நோ ம்மா. ப்ளீஸ்…” என்று தன்ஷி மீண்டும் கவியிடம் கேட்க,
“உனக்கு ஹோம் வொர்க் எல்லாம் குடுத்திருக்காங்க தன்ஷி. இன்னும் மூணு நாள் தான் இருக்கு. நாம கிளம்பனும்…” என பேசிக்கொண்டே அறைக்கு வந்து மகளுக்கு உடைகளை எடுத்து வைத்துவிட்டு தலை துவட்ட அழைத்தாள்.
“எனக்கு வேண்டாம் போங்க…” என அவளின் கையை தட்டிவிட்டு தன்ஷி கட்டிலில் அமர்ந்துகொள்ள,
“என்ன பன்ற தன்ஷி? போய் சாப்பிடனும். எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க…” என்று கவி மகளை அதட்ட,
“எனக்கு வேண்டாம். இங்க இருக்கேன்னு சொல்லுங்க…” என அதற்கு மேல் அவள் அதட்டினாள்.
“அபி கீழே விழுந்தா நான் என்ன செய்ய? எனக்கு இங்க இருக்கனும். அப்போ நான் வேண்டாமா? மாமா அபியை பார்த்துக்கட்டும். நீங்க வாங்க. நாம போவோம்…” என மீண்டும் தன்ஷி சொல்ல,
“அபி பாவமில்லையா? என்ன பேசற தன்ஷி?….” கவிக்கு மகளின் பேச்சு செல்லும் திசை அத்தனை கோபம் கொடுத்தது.
“அபி பாவம். அவன் இருக்கட்டும். எனக்கு அடி படலை. என்னை ஏன் கூட்டிட்டு வந்தீங்க? நாம இன்னும் கொஞ்ச நேரமாச்சும் இருந்துட்டு வந்திருக்கலாம்ல…” என மூக்கு விடைக்க பேச,
“ஏன் தன்ஷி புரிஞ்சுக்க மாட்டேன்ற? மாமா என்ன உடனேவா கூட்டிட்டு வந்தான். அபியை மடில வச்சுட்டு நிஷா எவ்வளோ நேரம் உனக்காக வெய்ட் பண்ணினா? அவன் கால்ல வீங்க ஆரம்பிக்கவும் தானே கிளம்பினோம்?…”
“அப்போ அவங்களை அனுப்பியிருக்கலாம்ல. எனக்கு நாளைக்கும் இங்க இருக்கனும். அபிக்கும் சரியாகிடும் நாளைக்குள்ள…” மீண்டும் சொல்லியதையே தான் பேசினாள் தன்ஷிகா.
“அதெல்லாம் சொல்ல முடியாது. ஹோம் வொர்க் அவ்வளோ இருக்கு. எப்போ முடிக்க? அபியோட விளையாடிட்டு இருந்தாலும் அதையும் நீ முடிச்சிருக்கனும்ல. எதுவும் பண்ணாம இப்படி சொல்ற?…”
“நான் முடிச்சுப்பேன். ஒரே நாள்ல கூட முடிச்சிருவேன். இங்க ஒருநாள் இருக்கனும் எனக்கு. எப்பவாச்சும் தானே வரோம்?…” என தன்ஷி பேச,
“எல்லாம் உன் இஷ்டமா? இங்க வேற யாருக்கும் வேலை இல்லையா? மாமாவுக்கு எவ்வளோ வேலை? நீ கேட்டதால தானே உடனே இங்க கூட்டிட்டு வந்தான்?…”
“கூட்டிட்டு வந்து ஃபுல்லா எங்க ஹேப்பியா இருந்தோம்? நேத்து நைட் வந்ததும் தூங்கியாச்சு. காலையில எழுந்ததும் லேட். சாப்பிட்டு கிளம்பி பால்ஸ்ல கொஞ்ச நேரம் கூட விளையாட விடலை. கூட்டிட்டு வந்துட்டாங்க….” என வரிசையாய் குற்றச்சாட்டுகளை அடுக்கினாள் அவள்.
“அதுக்கு நீ சீக்கிரம் எழுந்துக்கனும். நீ தான் தூக்கம் வருதுன்னு போய் படுத்த. நீ தான் காலையிலையும் லேட்…” என அவளை கவி சொல்ல,
“இன்னைக்கு இங்க இருக்கனும். மாமாட்ட சொல்லுவீங்களா மாட்டீங்களா? இல்லன்னா நான் பாட்டிட்ட சொல்லுவேன்….” என முறைக்க,
“அப்போ உன் அப்பாவையும், பாட்டியவும் கூட்டிட்டு இங்க வா. நான் சாப்பிட போறேன். எனக்கு பசிக்குது…” என சொல்லி செல்ல தன்ஷி அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
“என்னண்ணி எங்க தன்ஷியை?…” என நிஷா கேட்க,
“அவ வரலையாம். எவ்வளோ தான் சொல்ல? கேட்கவே மாட்டேன்றா…” சலிப்புடன் அமர்ந்துவிட்டாள் கவி.
“நீ போ நிஷா…” என ஆதித்தன் சொல்ல,
“ஹ்ம்ம்..” என்று நிஷா தன்ஷியை தேடி சென்றாள்.
இன்னும் உடை மாற்றாமல் தலையை உலர்த்தாமல் தன்ஷி அழுதுகொண்டே அமர்ந்திருக்க,
“என்ன தன்ஷி இன்னும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணாம இருக்க? லன்ச் வேண்டாமா?…” என நிஷா கேட்கவும் இன்னும் உதட்டை பிதுக்கினாள் தன்ஷிகா.
“இப்ப எதுக்கு இவ்வளோ அழற நீ?…” என கேட்டுக்கொண்டே அந்த டவலை எடுத்து அவளின் தலையை துவட்ட வர,
“எனக்கு வேண்டாம் த்தை…” என்றாள் அவள்.
“ஏன் வேண்டாம்? தலையை உலர்த்தலைன்னா சளி புடிச்சுக்கும். காய்ச்சல் கூட வரலாம். மழை பெய்ஞ்சுட்டே இருக்கு…”
“வரட்டும்…” குரலில் அத்தனை பிடிவாதம்.
“வந்தா உன் பாட்டி அடுத்து இங்க கூட்டிட்டே வரமாட்டாங்க. உனக்கு ஓகே வா?…” என கேட்டுக்கொண்டே தலையை லேசாய் துவட்டி விட்டவள்,
“இங்க வந்ததால தான் காய்ச்சல், சளி புடிச்சதுன்னு உன்னை அனுப்ப மாட்டாங்க…” என்றதும்,
“இல்ல இல்ல, பாட்டி ரொம்ப ஸ்வீட். நான் என்ன கேட்டாலும் செய்வாங்களே….” என்றாள் நம்ப மாட்டாமல்.
“ஆமா, உனக்கு ஒண்ணுன்னா உன் பாட்டி உங்கம்மாவை தானே சொல்றாங்க. அப்போ இதையும் சொல்லுவாங்க தானே?..”
“அம்மா பெரியவங்க. அவங்களுக்கு ஒன்னும் செய்யாது. அம்மா ஏன் வராம இருக்கனும்? அவங்களுக்கு அவங்கம்மாவை, தம்பியை பார்க்க தோணும் தானே? வருவாங்க…” என சொல்லிவிட்டு அவளின் உடையை எடுத்து பார்க்க,
“அப்போ என்னை மட்டும் விடமாட்டாங்களா?…”
“தெரியலை. உன் பாட்டிட்ட தான் கேட்கனும்…” என்றாள் நிஷா.
“ஓகே த்தை, நானே மாத்திக்கறேன்…” என அதை வாங்கினாள் தன்ஷி.
“நீ தான் மாத்தனும். நீ என்ன குழந்தையா? பெரிய பிள்ளையா வளர்ந்துட்ட தன்ஷி. இதை எல்லாம் அம்மா சொல்லாமலே நீ செய்யனும். உன்னால முடியும் தானே?…” என்றதும்,
“ஆமா நானே பண்ணிப்பேன்…” என விறைப்பாய் சொல்ல,
“குட். எங்க சேஞ்ச் பண்ணிட்டு வா. பார்ப்போம்…” என சொல்ல தன்ஷி அமைதியாய் நிற்கவும்,
“எனக்கு பசிக்குது. அபி வேற சாப்பிட ஆரம்பிச்சுட்டான். நீ மாத்திட்டு சீக்கிரம் வா. சாப்பிட்டு கிளம்புவோம்…” என்ற நிஷா,
“சொல்ல மறந்துட்டேன். உன்னோட அப்பா வராங்களாம்…” எனவும்,
“அப்பாவா? எப்ப வராங்க? என்கிட்ட சொல்லலை? இப்ப வரேன் த்தை…” என்றவள் கடகடவென உடை மாற்றிவிட்டு வேகமாய் அவளுடன் வெளியே வர கவி அமைதியாய் பார்த்தாள் இதனை.
“என்ன வேணும் தன்ஷி?…” என நிஷா கேட்க,
“நீ உக்காரு பாப்பா. அவளுக்கு நான் வைக்கறேன்…” என்று செந்தா பரிமாறவும் ஆதித்தனின் அருகில் வந்தமர்ந்தாள் நிஷா.
தன்ஷிக்கு இலை விரிக்கப்பட்டு அவள் கேட்டதை வைக்கவும் பசியில் அவள் உண்ட வேகத்தில் கவிக்கு சிரிப்பு வந்தது.
“இவ்வளோ பசியை வச்சுட்டு வீம்புக்கு இருந்ததை பாரேன்…” என கவி சொல்ல,
“அக்கா…” என தட்டினான் ஆதித்தன்.
சாப்பிட்டு முடித்ததும் தான் தன்ஷி நிமிர்ந்தாள். கோபம் ஒருபக்கம் இருந்தாலும் தந்தை வருகிறார் என்றதும் ஒரு பதட்டம்.
சிவநேயனின் கண்டிப்பு எத்தகையது என அவளுக்கு தெரியுமே. கொஞ்சமும் யோசிக்கமாட்டான். தவறு என்றால் அடித்துவிட கூடியவன்.
அதற்கே பெரும்பாலும் கவி அவன் வரை விஷயம் கொண்டுசெல்லமாட்டாள். எப்போதாவது சிவநேயன் கண்டித்தாலும் கமலா வந்து பார்த்துக்கொள்வார்.
இப்போது வேறு இங்கே இத்தனை அடம் பிடித்திருக்க யாரும் தகப்பனிடம் சொல்லிவிடுவார்களோ என நல்லபிள்ளையாய் உண்டுமுடித்து சென்று வெளியே நின்றுகொண்டாள்.
“என்ன தன்ஷி இங்க வந்துட்ட?…” என ஆதித்தன் கேட்க,
“அப்பா எப்ப வருவாங்க மாமா?…” எனவும்,
“இன்னைக்கு நைட் வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க. இல்லைன்னா நாளைக்கு வருவாங்க…”
“ஓஹ், சரி…” என சொல்லி உள்ளே சென்றுவிட்டாள்.
ஆதித்தன் நிஷா சொல்லி தான் அவள் கேட்கிறாள் என்று தெரிந்து உள்ளே வர அபியுடன் கதை பேசிக்கொண்டிருந்தாள் நிஷா.
“கால் வலிக்குதா அபி?…” என மகன் அருகே அமர்ந்த ஆதித்தன் அவனின் காலை பிடித்து பார்க்க,
“இல்லைப்பா, இப்ப ஓகே…” என்று சொல்ல லேசாய் அவன் கால்களை பிடித்துவிட்டான்.
நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருக்கையில் தவறி விழுந்து காலில் லேசாய் சிராய்த்திருந்தது அபராஜிதனுக்கு.
அந்த நேரமே அவனை தூக்கி கால்களை உதற செய்து பார்த்துவிட்டான் ஆதித்தன்.
பெரிய அடி இல்லை என்றாலும் சிறுவனுக்கு அதற்கும் வலிக்கும் தானே என தோன்றியது.
சில நொடிகளில் அபியும் களைப்பு, வலி, உண்ட மயக்கம் என மருந்தின் வீரியத்தில் நன்றாக உறங்கி இருந்தான்.
“நீங்க கொஞ்ச நேரம் படுங்களேன்…” ஆதித்தன் அமர்ந்திருப்பதை பார்த்து அவள் கேட்க,
“ப்ச், வேண்டாம்…” என சொல்லி சுவற்றில் சாய்ந்தமர்ந்தவன் கைகளை பின்னால் கட்டிக்கொள்ள நிஷா எழுந்து சென்று மகனுக்கு பூசிய மருந்தை எடுத்து வந்து ஆதித்தன் கை பிடித்து இழுத்து நிமிர்ந்தமர செய்தாள்.
“என்னடி?…” என கையை உருவி வேண்டுமென்றே மீண்டும் பின்னால் சாய,
“பார்த்த தெரியலையா? உங்களுக்கு மட்டும் நான் எல்லாம் புரிஞ்சுட்டு நடந்துக்கனும். அப்போ புருஷனா நீங்களும் அப்படி இருங்க…” என்று நிஷா வெடுவெடுக்க,
“திமிர்…” என்றவன் மெல்லிய புன்னகையுடன் அவளுக்கு கையை நீட்டினான்.
“உங்களுக்கு ஈக்வலா இருக்கனும்னு தான் வளர்த்துக்கிட்டேன்…” பதிலுக்கு பதில் அடித்தாள் அவனை.
“வளர்ந்துச்சாமா?…” என்ற விஷம பேச்சில் நிஷா முறைக்க,
“கையில பட்ட அடி உங்க வாய்ல பட்டிருக்கனும்…” என்றாள்.
அதற்கும் அவன் பதில் பேசும் முன் விரலில் எடுத்த மருந்தை அவன் வாயில் பூச வர பின்னால் சாய்ந்து புன்னகைத்தவன் கையை இழுத்து பிடித்து நிஷா அழுத்த அதற்குமே சிரித்தான்.
மகன் சாயவும் அவனை பிடிக்கிறேன் என ஆதித்தனும் தடுமாறி இருக்க கையில், காலில் காயங்கள்.
அவன் கையில் மருந்தை தேய்த்தவள் பாதத்திலும், பக்கவாட்டிலும் பூசிவிட்டு காலுக்கடியில் ஒரு தலையணையை எடுத்து வைத்தாள்.