பிற்பகல் வரை அங்கே இருந்தவர்கள் நான்குமணிவாக்கில் தான் கிளம்பினார்கள் ஹோட்டலை விட்டு.
“இதுக்கு எப்படி விஷ் பண்ணனும்ன்னு தெரியலையே மோளே. இப்ப யார்க்கிட்ட கேட்பேன் நான்?…” என சுபஷ்வினி அத்தனை கிண்டல் பேச,
“அஷ் எனக்கு வெட்கமெல்லாம் வருது. சும்மா இரேன்…” என அவளின் வாயை மூடினாள்.
“இருந்தாலும் உன் ஹஸ்பன்ட் என்ன நேக்கா என்னை வான்ற மாதிரி வர சொல்லி நானே வரலைன்னு சொல்ல வச்சிட்டார்…” என்று சொல்ல,
“வாயேன். யார் கேட்பா உன்னை…” என ஸ்ருதி அவளின் கையை பிடிக்க,
“ஆளை விடும்மா. நாளைக்கு கால் பன்றேன். இப்ப நீ கிளம்பு. நானும் அம்மா அப்பாவை அனுப்பனும்…” என சொல்லி அனுப்பினாள்.
மற்ற அனைவருமே அன்று அங்கிருந்து கிளம்புவதாக இருந்தது. அதற்கு முன்பே கொச்சினில் உள்ள ஒரு தீவிற்கு ஸ்ருதி பார்த்திவ்வுடன் கிளம்பவேண்டும்.
ஒவ்வொருவரும் அவளை ஆசிர்வதித்து வாழ்த்தி அனுப்ப பார்த்திவ் பார்த்துக்கொண்டு நின்றான்.
எல்லாம் நல்லவிதமாக முடிந்து காரின் அருகே கிளம்பிய நேரம் பார்த்திவ் ஜெயரூபனிடம் வந்தான்.
“இது நீங்க இந்த வெடிங் ஈவன்ட்டை நல்லவிதமா முடிச்சு குடுத்ததுக்கான என்னோட கிப்ட். டிப்ஸ்ன்னு நினைச்சிடாதீங்க…” என்றவன் ஜெயரூபன் கையில் பணத்தை திணிக்க செத்துவிட்டார் அவமானத்தில்.
ஸ்ருதியே இதை எதிர்பார்க்கவில்லை. சட்டென்ற ஒரு திகைப்பு தோன்றிவிட்ட போதும் மௌனமாக நின்றாள்.
அங்கிருந்து அந்த தீவின் அருகில் வரை காரில் சென்றவர்கள் அங்கிருந்து படகிற்கு மாற இருள் கவிழ ஆரம்பித்திருந்தது.
இன்னும் திருமண உடையில் தான் இருந்தனர் இருவருமே. அங்கே செல்லும் வரை அவ்வப்போது பார்த்திவ்வின் பேச்சுக்களில் இணைந்துகொண்டவள் மனதெல்லாம் ஒருவித அமைதி நிலவியது.
முகத்தில் புன்னகை உறைந்தே இருக்க வெளியை வேடிக்கை பார்த்தபடி வந்தாள் ஸ்ருதி.
“இங்க வந்து எத்தனை வருஷம் இருக்கும் ஸ்ருதி?…” என பார்த்திவ் படகிற்கு மாறவும் கேட்க,
“ஞாபகமில்லை…” என்ற பதிலில் சற்று ஆடித்தான் போனான்.
“வாட்?…”
“நிஜமாவே ஞாபகமில்லை. எப்பவோ அழுதுட்டே இருந்தப்போ இங்க இருந்து எங்கையோ கொண்டு போய் விட்டாங்க. அதுக்கப்பறம் வந்தது எல்லாம் இல்லை. பெருசா வரவும் விரும்பினதில்லை….” என்று சொல்ல இதை கேட்டிருக்க கூடாதோ என நினைத்தான் பார்த்திவ்.
“அங்க பாருங்க. அங்க தான் போறோமா?…” என கேட்டாள் ஸ்ருதி சட்டென்ற உற்சாகத்துடன்.
பார்த்திவ்வும் நிமிர்ந்து பார்க்க தூரத்தில் அந்த தீவின் வெளிச்சம் அவர்களை இழுத்தது.
அருகே நெருங்க நெருங்க ஸ்ருதியின் முகத்தில் அத்தனை ஆர்வம். மணல்பரப்பு வரவும் அவளின் கையை பிடித்து இறக்கிவிட்டவனை வரவேற்க அத்தனை பேர் நின்றிருந்தனர்.
அனைவரின் வாழ்த்துக்களையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவன் அந்த ரெசார்ட் ஹவுஸ் நோக்கி நடக்க நடக்க இன்னும் உள்ளே பெரிதாய் விரிந்தது.
ஆங்காங்கே வெளிநாட்டவர்கள் ஒருசிலர் தென்பட்டனர். மற்றபடி கசகசவென்ற கூட்டம் எதுவும் இல்லை.
ஸ்ருதியால் வேடிக்கை கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு பேரின் பார்வையும் தன்னையும், தன் மணக்கோலத்தையும் பார்ப்பதாய் இருக்க சிறு வெட்கம் பரவியது.
“எல்லாரும் பார்க்கறாங்க பார்த்திவ்…” என அவளாக பார்த்திவ்வின் கைகளை பற்றிக்கொள்ள,
ஒரு பேட்டரி கார் ஒன்று வந்து நிற்க அதில் ஏறி ஸ்ருதியுடன் அமர்ந்தவன் மற்றவர்களிடம் தலையசைத்துவிட்டு சென்றான்.
“இந்த தீவு ரொம்ப அழகா இருக்குல…” என்றாள் ஸ்ருதி.
“ஹ்ம்ம் ஆமா…” என பார்த்திவ் சொல்ல ஒவ்வொன்றாய் பார்த்து பேச அவர்கள் தங்கும் இடமும் வந்தது.
ஃப்லோட்டிங் ஹவுஸ். தண்ணீரில் மிதக்கும் மரத்தாலான வீடு அது. ஸ்ருதி கால் வைக்கையில் லேசாய் அமிழ்ந்து மேலெழும்ப பாதம் கூசி பின் நகர்ந்தாள்.
“இது சேஃபா?…” என கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் வந்தவர்கள் செல்லும் வரை நின்றிருந்தவன் ஆட்கள் அரவமற்றதும் அவளை கையில் ஏந்திக்கொண்டான்.
“சேஃப் இல்லாமையா இதை கட்டியிருப்பாங்க?…” என்றபடி உள்ளே செல்ல இப்போது ஓரளவு சமன் பட்டது ஸ்ருதியின் உள்ளம்.
“ஹ்ம்ம், நல்லா இருக்கு. ரசனைக்காரர் தான் இந்த ரெசார்ட்காரர். பைவ் ஸ்டார் ரேட்டிங் குடுக்கனும்…” என சொல்ல சத்தமாய் சிரித்துவிட்டான் பார்த்திவ்.
“என்ன ஜோக் சொல்லிட்டேனா?…” என ஸ்ருதி முறைக்க,
“ரேட்டிங் தானே? குடுக்கலாம் குடுக்கலாம். என் ஐடில இருந்து குடுத்திடாத. அப்பறம் செல்ப் டப்பான்னு சொல்லிருவாங்க…” என்றவன் உடை மாற்ற பெட்டியை பிரித்தான்.
“ஏன்? எதுக்கு சொல்லனும்?…” என ஸ்ருதியும் தனது ட்ராலியை நகர்த்தி எடுக்க,
“பின்ன தீவோட ஓனர் அந்த தீவுக்கும், அவர் ரெசார்ட்க்கும் ரேட்டிங் குடுத்தா சொல்லமாட்டாங்களா?…” என்றவனின் பேச்சில் ஸ்ருதி வியந்து பார்க்க,
“நான் லைட்டா வாஷ் எடுத்துட்டு வரேன். ரெஸ்ட் எடு ஸ்ருதி. டின்னர் வந்து சொல்லிக்கலாம்…” என பார்த்திவ் குளிக்க செல்ல ஸ்ருதிக்கு அதுவரை இல்லாத சோர்வு கண்களை தீண்டியது.
அந்த வில்லாவை சுற்றி வந்தவள் மீண்டும் படுக்கையில் வந்து அமர்ந்து அப்படியே சாய்ந்துவிட்டாள்.
கண்கள் எல்லாம் எரிந்தது அதிகாலை விழித்ததில் இருந்து இப்போது வரை ஓய்வின்றி இருந்ததில்.
சிலபல நிமிடங்களில் தன்னருகே என்னவோ ஒரு அசைவு. மெல்ல திரும்பி பார்க்க பார்த்திவ் வந்து படுத்திருந்தான்.
பார்த்ததும் ஒருநிமிடம் புஸ்சென்று ஆனது ஸ்ருதிக்கு. ‘என்ன படுத்துவிட்டான்?’ என்று தான் முதலில் தோன்ற அவன் புறம் திரும்பியவள் அதே வேகத்தில் எழுப்பியும் விட்டாள்.
“என்ன அதுக்குள்ளே படுத்துட்டீங்க?…” என்ற அவசர கேள்வியில் பார்த்திவ் உடல் குலுங்க ஒரு சிரிப்பு.
தன் கை கொண்டு தன் மேல் ஸ்ருதியை சாய்த்துக்கொண்டதும் தான் ஸ்ருதிக்கு மேலாடை இன்றியவன் மேல் தான் பதிந்திருப்பதையே உணர முடிந்தது.
சட்டென கூச்சம் கூட அவனை விட்டு விலகவும் முடியாமல் நெளிய ஆரம்பித்தவள் மேல் பார்த்திவ் விரல்கள் இன்னும் அழுத்தத்தை கூட்டியது.
“அதுக்குள்ளன்னா? என்னமோ சொல்ல வந்தியே ஸ்ருதி?…” என்றவன் கேள்வியில் அப்பட்டமான விஷமம்.
“இல்ல, டின்னர் சொல்லனும்ன்னு சொன்னீங்க. அதான் கேட்டேன். வேறோன்னுமில்லையே…” என்று சொல்லியவளை மீண்டும் தன் முகத்திற்கு நேராக கொண்டுவந்தவன்,