விழிமூடி ஒருகளித்து படுத்திருந்தவளின் கலைந்த கூந்தலை ஒதுக்கிய ஆதித்தன் மெல்ல அவள் தோள் தட்டினான்.
“நிஷா எழுந்துக்கோ…” என்றதும் இன்னும் விழிகளை நன்றாக இறுக்கமாய் மூடிக்கொண்டாள் நிஷாந்தினி.
அவள் முகம் தலையணையில் பதிய அதிலும் அவன் வாசம் அவளை மூச்சடைக்க செய்தது.
என்னவிதமான உணர்வில் அவள் தத்தளிக்கிறாள் என அவளுக்கும் பிடிபடவில்லை.
எல்லாம் முடிந்திருந்தது. முடித்துக்கொண்டான். தன் சம்மதமின்றி என்றும் சொல்ல முடியாதவண்ணம் இருவருக்குமான அந்த உறவு தொடங்கிவிட்டது.
இன்னும் அதன் அதிர்விலிருந்து வெளிவரமுடியாமல் தவித்தவள் அவன் முகம் பார்க்கவும் விரும்பவில்லை.
‘நீதான் வேணும்’ என அவள் கன்னம் பற்றியவன் அவளிடமிருந்து தன் கரத்தை நீக்கவுமில்லை. நீட்டித்துக்கொண்டான்.
சோர்விலும், அதிர்ச்சியிலும், அயர்விலும் படுக்கையின் விளிம்பில் அவள் இருக்க,
“நிஷா எழுந்து பார்ன்னு சொன்னேன் நான்…” அதட்டலாய் அவனின் அதிகாரம்.
அவன் குரலே அதுதான் போலும் என்று ஒருவாறு முடிவிற்கு வந்திருந்தாலும், முன்னிரவில் அவளிடம் அனுசரணையாய் இழைந்தவன் அணுகுமுறைக்கும் இந்த குரலுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையே.
“எனக்கு தூங்கனும்…” என்றாள் முணங்கலாய்.
“எனக்கும் தான் தூங்கனும். நீ எழுந்தா நானும் தூங்குவேன்…” என்றவன் பேச்சில்,
“திரும்பவுமா?…” என பல்லை கடித்துக்கொண்டு அவள் கேட்க அதுவரை இல்லாத ஒரு புன்னகை சத்தமாய் அவ்வறையில் விரிந்தது.
ஆதித்தனின் சிரிப்பில் மெல்ல முகத்தை திருப்பி அவனை பார்க்க நிஷாவின் தோளை பற்றி எழுப்பி அமர வைத்துவிட்டான் ஆதித்தன்.
“விடுங்க நீங்க. இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே?…” என்று தீயாய் பார்த்தவள் முறைப்பில்,
“ரொம்பவே. கல்யாணம் நடந்தா அடுத்து இது தானே? தப்பில்லையே…” என்று சொல்லி எழுந்தவன் பிளாஸ்க்கில் இருந்த பாலை கப்பில் ஊற்றிக்கொண்டு வந்தான்.
“டயர்டா இருக்க. குரலே சரியில்லை. குடிச்சிட்டு தூங்கு….” என நீட்டினான்.
அவனை எந்தவகையில் எடுத்துக்கொள்வதென தெரியாமல் நிஷாந்தினி தான் பேந்த பேந்த விழித்தாள்.
முழுதாய் அந்த ஒருநாளில் நடந்ததை தாங்கவும் வலுவில்லாததை போல லேசாய் கண்கள் கசிய பின்னால் சாய்ந்தவளை ஆதித்தன் தன் மீது சாய்த்துக்கொள்ள,
“தள்ளி போங்க ப்ளீஸ், எனக்கு கம்பர்டபிளா இல்ல…” என்று சொல்ல,
“இப்பவுமா? இதுக்கப்பறமுமா?…” என்றவன் வாயிலேயே நான்கடி வைத்தால் என்னவெனும் ஆத்திரம் தான் மிகுந்தது.
“பழகிடும். தள்ளி இருந்தா இன்னும் தயக்கம் தான் கூடிட்டே இருக்கும். குடி இதை…” என்று பாலை நீட்டினான் ஆதித்தன்.
விடமாட்டான் என்றவள் வாங்கி வேகமாய் குடிக்க பாலின் சூடு இதழ்களை சுட்டுவிட்டது.
ஏற்கனவே எரிந்த உதடுகள் சூட்டில் இன்னும் கன்றிவிட கண்ணீர் வந்துவிட்டது நிஷாவின் கண்களில்.
“ஹேய் மெல்ல குடிக்கமாட்டியா நீ?…” என்றவன் பாலை வாங்கி ஓரம் வைத்தவன் அவள் இதழ்களை நெருங்கும் முன் அவன் அதரங்களை கை கொண்டு தடுத்திருந்தாள்.
“முத்தம் குடுக்க வரலை….” விழிகள் லேசாய் சிரிக்க ஆதித்தன் சொல்ல அவனை புருவம் உயர்த்தி பார்த்தவள்,
“என்னால முடியலை. தூங்கறேன்…”
“ம்ஹூம், குடிச்சுட்டு தூங்குவியாம். கொஞ்சமும் ஸ்ட்ரெந்த் இல்லை…” என்று சொல்லியும் அவள் பிடிவாதமாய் இருக்க,
“எனக்கு பொறுமை ரொம்ப ரொம்ப கம்மி நிஷா. இதுவரை இவ்வளோ நான் கெஞ்சினதில்லை…” எச்சரிக்கை என காண்பிக்காதவண்ணம் இருந்தது அவனின் சொல்லாடல்.
“அதான் சொன்னேனே…”
“நிஷா…” என்றவன் தண்ணீர் பாட்டிலை திறந்தவன் அதன் மூடியில் கொஞ்சமாய் நீரை விட்டான்.
“கையை எடு…” என்று அவளின் கையை எடுத்துவிட்டவன் தன் விரலில் குளிர்ந்த நீரை தொட்டு நிஷாவின் இதழ்களில் பூசியவன்,
“பரவாயில்லையா?…” என்றான்.
குளிர்ந்த அறையில் ஜில்லென்ற நீர் காந்திக்கொண்டிருந்த அதரங்களில் பட்டதும் கொஞ்சம் எரிச்சல் மட்டுப்பட்டது.
“நானே…” என்றவள் அவனின் பார்வையில் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
‘இருக்குடா உனக்கு இருக்கு. இதுக்கெல்லாம் சேர்த்து இருக்கு’ என புலம்பத்தான் முடிந்தது அவளால்.
“மனசுக்குள்ள ரொம்ப திட்டிட்டிருக்க போல?…” என கேட்ட ஆதித்தன் அவன் வேலையை நிறுத்தவில்லை.
நிஷாந்தினி திடுக்கிட்டு கண்டுகொண்டானா என பதறி திருதிருக்க ஆதித்தனின் இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகை.
“அப்போ அதுதான். திட்டிருக்க. ஹ்ம்ம்…” என்று தலையசைக்க இல்லை என்று மறுக்காமல் அப்படியே இருந்தாள்.
“உனக்கு வாய் பேசறது மட்டுமில்லை, பிடிவாதமும், அழுத்தமும் கூட அதிகம் தான் போல?…” என்றவன்,
“தண்ணி கொஞ்சம் குடிக்கிறியா? கஷ்டமா இருக்கா? எதாச்சும் சொல்லனுமா?…” இப்படி மாற்றி மாற்றி கேட்க அதுவே அவள் கூச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
மெல்லிய விளக்கொளியில் இத்தனையும் நடந்துகொண்டிருக்க தண்ணீரை வாங்கி குடித்தவள்,
“இவ்வளோ அக்கறை இருக்கறவங்களுக்கு எல்லாம் ஆரம்பிக்கிற முன்னாடி யோசனையும் இருந்திருக்கனும்…” என சொல்லிவிட்டாள் பேச தெம்பு வந்ததை போல.
“ஓஹ், இஸ் இட்?…” என்றவன்,
“நீ சரின்ன தானே? அதுவும் உனக்கு என்னை புடிக்கும். நான் சரின்னு சொன்னா என்னை கல்யாணம் பண்ணிக்க கசக்குமான்னும் சொல்லியிருக்க…” என கேட்டு,
“மறந்திட்டா நீ சொன்னதை கேட்டு பார்க்கறியா?…” என்று போனை தேட கடுப்பாகி போனாள் நிஷா.
“ஆணியே…” என்று கோபத்தில் சொல்லிவிட்டவள் அவன் பட்டென்று திரும்பவும் அடுத்த வார்த்தை சொல்லமுடியாமல் ஆதித்தனின் பார்வையில் வாயடைத்து போனாள்.
சட்டென தொண்டைக்குழியில் இரண்டு உருண்டைகள் வந்து நின்றுவிட்டதை போல விழிகளும் நிலைகுத்திவிட்டது.
“வார்த்தையில கவனம் வேணும் நிஷா….” என்றான் ஆதித்தன்.
“நீங்க என்னை பயங்காட்டிட்டே இருக்கீங்க….”
“என்னை ஏன் அப்படி செய்ய வைக்கிற நீ?…” என்று சொல்லி பாலை எடுத்து நீட்டினான்.
“குடி…” என்றதும் சூடும் கொஞ்சம் குறைந்திருக்க பருக ஆரம்பித்தாள்.
அவளின் அசைவுகளையே கண்ணெடுக்காமல் ஆதித்தன் பார்த்திருக்க இவனின் முன்னால் இப்படியே இருந்தால் மீண்டும் தொடங்கிவிடுவானோ என்ற அச்சத்தில் மடமடவென பாதி குடித்தவள் கப்பை வைத்துவிட்டு படுக்க போக,
“இன்னும் பாதி பால் இருக்கே?…” என்றான் அதை பார்த்து ஆதித்தன்.
“ஓகே நான் குடிக்கறேன்…” என மிச்சமிருந்த பாலை அவன் அருந்திவிட்டு,
“உடனே படுக்க கூடாது. ஒரு ரெண்டுநிமிஷம் உட்கார்…” என அதற்கும் அவளை பார்வையிலேயே அமர வைத்தவன் எழுந்து கப்புடன் பாத்ரூம் சென்றான்.
வரும் பொழுது கப்பை கழுவி இருப்பான் போலும். கொண்டுவந்து ப்ளாஸ்க் அருகில் வைத்தவன்,
“கப்பை அப்படியே வச்சா காய்ஞ்சு போகும். இல்ல எறும்பு வரும்…” என்று சொல்ல ‘நான் கேட்டேனா?’ என்று பார்த்தவள்,
“ரெண்டு நிமிஷம் ஆகிடுச்சு…” என்றாள்.
“சரி படுத்துக்கோ…” என சொல்லி தானும் அருகே வந்து அவளை அணைத்துக்கொள்ள,
“கை எடுங்க. தூக்கம் வராது…” என்றாள் அடுத்ததாக.
“இதையும் பழகிக்கோ. தூக்கம் கொஞ்ச நேரத்துல வந்திரும்…” என்றவன் சிறிது நேரம் அவள் உறங்கவில்லை என்ற போதும் கையை எடுக்கவில்லை.
அரைமணி நேரம் அசையாமல் படுத்திருந்த நிஷாந்தினி அவனின் சீரான மூச்சுக்காற்று தன் கழுத்தில் மோத,
“ஹப்பா தூங்கிட்டான்…” என நிம்மதியானவள் மெல்ல தன் இடையை தழுவி இருந்த ஆதித்தனின் கையை தன் இரு நுனிவிரல் கொண்டு அவன் சுண்டுவிரல் பிடித்து லேசாய் தூக்க,
“என்ன வேணும்? தூக்கம் வரலையா?…” என கேட்டான் அவள் காதோரம் கிசுகிசுப்பாய்.
“ஆத்தீ…” என்று அரண்டுபோனாள் நிஷாந்தினி.
‘எவ்வளோ சாதாரணமா தூங்கற மாதிரியே படுத்திருக்கான். எனக்கு மேல இருக்கானே?’ என கடுப்பில் தன் காலையே உதைத்துக்கொள்ள,
“கால் வலிக்குதா?…” என கேட்டு அவள் கால் மேல் கால்லிட்டுவிட,
‘போச்சு இன்னைக்கு தூங்கின மாதிரி தான்’ என மானசீகமாக தன்னையே தலையில் ஆத்திரமாய் அடித்துக்கொண்டாள் நிஷா.
தன்னிடம் அவன் அணுகிய பொழுதே வாயை திறந்து முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும்.
‘அதை விட்டுவிட்டு இப்போது கை, கால் என்று புலம்பினால்? நிஷா நீ காலி’ என உள்ளுக்குள் பொருமி,
“இன்னும் என்ன காலி? அதான் ஏற்கனவே பண்ணிட்டானே? எதுவும் இருந்தா தானே?…” என ஆதங்கத்தில் வாய்விட்டே சொல்லியதை மறந்து பேசிக்கொண்டிருக்க,
“என்ன நிஷா? என்ன சொன்ன?…” என்றவன் கேள்வியில்,
“ஹாங் என்ன?…” என திரும்பினாள் நிஷா.
“இப்ப நீ பேசினியே?…” ஆதித்தன் கேள்வியிடம் மீண்டும் அவள் கன்னத்தை பற்ற,
“தூக்கத்துல உளறிருப்பேன். வேற ஒண்ணுமில்ல…” என்றவள் மீண்டும் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள்.
‘மைண்ட் வாய்ஸ் ஆஃப்’ என்று தலையில் நங்கென்று அடி அடி என அடித்து விரட்டி உறக்கத்தை வம்படியாக இழுத்து பிடித்து வரவழைக்க முயன்றாள்.
இதில் அவளின் மெல்லிய அசைவுகளில் எல்லாம் ஆதித்தனின் கரங்களும் அவளில் அசைய உடலை குறுக்கி சுருண்டாள் நிஷா.
போராடி போராடி விடியும் நேரம் அயர்ச்சியில் தானாகவே தூக்கம் அவளை தூக்கி செல்ல அடித்து போட்டதை போல உறங்கிக்கொண்டிருந்தாள் அவள்.
காலை அறையின் கதவு தட்டப்படும் சத்தத்தில் தலையை துவட்டிக்கொண்டிருந்த ஆதித்தன் நிஷாவை பார்க்க அவள் போர்வைக்குள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள்.
அந்த சத்தத்திலும் அவளிடம் எந்த அசைவும் இல்லை. பெருமூச்சுடன் சட்டையை எடுத்து அணிந்துகொண்டவன் வந்து கதவை திறந்தான்.
அனுராதா தான் நின்றிருந்தார் அங்கே காபியுடன். ஆதித்தனை சுத்தமாக அவர் எதிர்பார்க்கவில்லை.
இத்தனை நேரம் உறங்குபவள் இல்லையே மகள் என தானாகவே காபியுடன் எழுப்ப வந்துவிட்டார்.
“சொல்லுங்க…” என்ற ஆதித்தனின் வரவில் திடுக்கிட்டவர்,
“காபி மாப்பிள்ளை….” என்று சொல்லி,
“நீங்க போய் உட்காருங்க. நிஷாவை கூப்பிடுங்க. குடுத்தனுப்பறேன்…” என்றதும்,
“எனக்கு கையிருக்கே. நான் வாங்கமாட்டேனா? தாங்க…” என்றவன் ஒரு கப்பை மட்டும் எடுத்துக்கொண்டான்.