நிகழ்ச்சி இன்னும் ஆரம்பமாகவில்லை. முக்கியமானவர்கள் வர காத்திருந்தனர்.
நிஷா, அபியுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் வந்தமர்ந்தான் ஆதித்தன்.
சுரேஷ், அனுராதா இருவரும் முதலிலேயே வந்திருந்தனர் அங்கே. அடுத்த பத்து நிமிடத்தில் குடும்பமாய் நிஷாவுடன் ஆதித்தன் வந்து சேர்ந்திருந்தான்.
சுரேஷ் வந்து அழைத்து அவர்களுக்கான இருக்கையை காண்பித்துவிட்டு தான் சென்றார்.
வந்தமர்ந்ததும் கை கடிகாரத்தை பார்த்தவன் நிஷாந்தினியையும் ஒரு பார்வை பார்த்தான்.
“அப்பாவுக்கு அவார்ட் குடுத்ததும் கிளம்பிருவோம்…” என அவன் கேளாமலே அதனை புரிந்து பதில் கூறியவளை கண்கள் சிரிக்க பார்த்தவன் இதழ்களில் அழுத்தம்.
“என் வாய் இருக்கே. இனிமே நீங்க கேட்டா கூட பதில் சொல்லமாட்டேன் நான். ஆணவம் அவ்வளோ ஆணவம் உங்களுக்கு…” என நிஷாவும் வாயெல்லாம் சிரிப்பாக கணவனை பரிகாசிக்க,
“கேமரா போக்கஸ் நம்ம மேல இருக்கு நிஷா…” என்றவன் இதழ்கள் மொழிந்ததும் அவன் மீது சாய்ந்திருந்தவள் நிமிர்ந்தமர்ந்து முறைக்க முடியாமல் பார்த்தாள்.
“திட்டனும்னா போன்ல அனுப்பு…” என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பும் முன் அவனுக்கு காண்பிக்க,
“என்ன தேவைக்கு?…” என்று அதனை வாங்கி அதிலேயே கீழே பதிலும் அனுப்பினாள்.
இப்படி மாற்றி மாற்றி இருவரும் போனில் சண்டையிட்டபடி இருந்தாலும் முகத்தில் அத்தனை சந்தோஷம். கால்மணி நேரம் கழிந்திருக்கும்.
“அபிக்கு ஏதாவது வேணுமா நிஷா?…” என மீண்டும் சுரேஷ் வந்து கேட்க,
“அதெல்லாம் வேண்டாம் ப்பா….” என்று மறுத்துவிட்டாள்.
“இன்னும் ரஞ்சியை காணுமே? எங்க வரா?…” என்று யோசனையுடன் பார்த்தவருக்கு விருது தர ஆரம்பித்துவிட்டால் தன்னால் நகர முடியாது என பார்க்க அவளிடமிருந்து போன் வந்துவிட்டது.
சுரேஷ் மருமகன் பரிசளித்த அந்த மோதிரத்தையும், கை சங்கிலியையும் தான் அணிந்திருந்தார்.
“நான் போய் பார்க்கறேன் நிஷா…” என சென்றவரின் பரபரப்பில் ஆதித்தனும் புன்னகைத்துக்கொண்டான்.
இது அவருக்கு எத்தனை பெரிய கனவு. இது தொழிலதிபர்களுக்கான அங்கீகாரம் அல்லவா?
அவனால் அவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. கிளம்பி இங்கே வரும் பொழுது கூட கேட்டு பார்த்தார் சுரேஷ்.
“நாளை மறுநாள் நம்ம கம்பெனில பெரிய பார்ட்டி ஒன்னு அரேஞ்ச் பண்ணியிருக்கோம் மாப்பிள்ளை. நீங்களும் நிஷா, அபியோட இருந்தா இன்னும் மனசுக்கு நிறைவா இருக்கும். ரெண்டுநாள் தானே?…” என்று எதிர்பார்ப்புடன் கேட்க,
“அதுக்கு தான் வரனும்ன்னு இருந்தா நாங்க அன்னைக்கு வந்திருப்போமே?…” என்ற ஆதித்தனின் பதில் கேள்வியில் சுரேஷ் சங்கடத்துடன் மௌனமாகி போனார்.
நிஷாந்தினி தான் அவரை பேசி சமாளித்திருந்தாள். இதுவே விடுமுறை என்றால் கூட அவளாவது பிள்ளையுடன் இருந்திருப்பாள்.
அதையும் சொல்லியே நிஷா சுரேஷை சமாளிக்க அனுராதாவிற்கு தான் அத்தனை வருத்தமாக இருந்தது.
இரு பெண்களும் குடும்பம் சகிதமாக சேர்ந்து இருந்தால் எத்தனை மகிழ்ச்சியாக பெருமையாக இருந்திருக்கும் என நினைத்தார்.
யார் என்ன நினைத்தால் என்ன? என் நிலைப்பாடு இதுதான் என ஆதித்தன் இருந்துகொண்டான். இப்போதும் அந்த நினைவில் அவன் இருக்க,
“ஹாய் ஆதித்யன்…” என்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தான்.
அவன் நிரஞ்சனியின் கணவன் சமர்ஜித்ரெட்டி. எப்போதும் முகத்தில் புன்னகையும், சாந்தமும் தான்.
ஆதித்தனை பார்த்ததுமே உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் அவன் கை நீட்டியிருக்க ஆதித்தனுமே எழுந்துகொண்டான் மரியாதை நிமித்தம்.
“ஆதித்தன்…” என சமரின் அழைப்பை திருத்தி சொல்ல,
“ஓஹ் ரைட், ஆதித்தன். ஆதித்தன்….” என்றவன்,
“எப்படி இருக்கீங்க ஆதித்தன்? உங்க பிஸ்னஸ் எப்படி போய்ட்டிருக்கு?…” என இன்முகமாக கேட்க,
“குட்…” என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டான்.
சமரும் சிறு தோள் குலுக்கலுடன் ஆதித்தனை தாண்டி சென்று நிஷாவிடமும் பேசிவிட்டு அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொள்ள,
“எக்ஸ்யூஸ்மீ…” என ஆதித்தனின் தொடையை தட்டினாள் சிறு பெண்.
நிரஞ்சனியின் மகள் சம்ருதா. முகலட்சணம் எல்லாம் நிரஞ்சனியை தாங்கியதாக இருந்தாலும் அந்த குழந்தையின் செயல்கள் எல்லாமே நிஷாவை தான் பிரதிபலிக்கும்.
அதனைகொண்டே ஆதித்தனை பார்க்கும் சமயங்களில் ஒரு வெட்டுதலான பார்வை தான் குழந்தையிடம்.
“எக்ஸ்க்யூஸ்மீ சித்தப்பா…” என்றாள் அவள் மீண்டும்.
“எஸ்…” என்றவன் அருகில் நிற்கும் நிரஞ்சனியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“இங்க பாருங்க…” என ஆதித்தன் நீட்டியிருந்த அவன் காலை கண்களால் சுட்டி காண்பிக்க,
“வேற வழி இல்லையா?…” என குழந்தையிடம் அடம் பிடித்துக்கொண்டிருந்தான் அவன்.
“என்ன பன்றீங்க? சின்ன பிள்ளைட்ட போய்…” என்ற நிஷா,
“நீ வாடா சம்ரு…” என்றவள் ஆதித்தனை பார்க்கவும் காலை நகர்த்திக்கொண்டான்.
மகளின் பின் நின்றிருந்த நிரஞ்சனி விட்டால் போதும் என்பதை போல வேகமாய் சென்றுவிட்டாள். அவளுடன் அனுராதாவும்.
இத்தனை வருடங்களில் குடும்பத்தின் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் ஆதித்தனின் இருப்பு என்பது சிலமணி நேரங்கள் மட்டுமே.
நிரஞ்சனி பெற்றோருடன் சேர்ந்த பின்னர் நிகழ்ந்த நிகழ்வில் சுரேஷின் உறவினர்கள் சமரின் உறவினர்களிடம் பேசியதெல்லாம் அணையாத நெருப்பாய் கனன்று கொண்டு தான் இருக்கிறது.
“இந்த பையன வேண்டாம்ன்னு தான் நிரஞ்சனி உங்க வீட்டு பிள்ளை தேடி ஓடி வந்துட்டா. கடைசி வேற வழியே இல்லாம தங்கச்சியை கட்டிக்குடுத்தோம்…” எனும் விதமான பேச்சுக்கள் ஒன்றா இரண்டா?
காதில் விழுந்த ஒவ்வொன்றும் ஒவ்வாதவையாகவே இருந்தது. இது காலத்திற்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
தங்கள் காது படவும், இல்லை படாமலும். அதை அடையாளப்படுத்திக்கொண்டே இருப்பவர்கள் மத்தியில் இருப்பதையே வெறுத்தவன் முடிந்தளவு இதனை தவிர்த்து விடுவான்.
ஆனால் எத்தனை முறை தவிர்த்தாலும் சமரின் புன்னகையும், அவன் கை நீட்டும் தோழமையையும் தட்டிவிட முடிந்ததில்லை.
ஒற்றை வார்த்தைகளில் தன் பேச்சை முறிப்பவன் சமரிடத்தில் முகத்திலடித்ததை போல பேச முடியவில்லை.
முதன்முதலில் பேச வந்தவனிடம் பாராமுகம் காட்டி எழுந்து சென்றவன் அதன் பின் தன்னிடம் வந்து பேச நினைக்கமாட்டான் என ஆதித்தன் நினைத்திருக்க அப்போதும் சமர் இன்முகம் காட்டினான் அவனிடம்.
“தப்பு என் பேர்ல தான் ப்ரோ. என்னால தான் நிரஞ்சனி இந்த முடிவுக்கு வரவேண்டியதா போயிடுச்சு. உங்களை கஷ்டப்படுத்தனும்னு எல்லாம் நினைக்கலை. சூழ்நிலை…” என தணிந்து பேசுபவனிடம் மனமுவந்தும் பேச முடியாமல், விலகவும் முடியாமல் மௌனமாகி போவான்.
சமரிடம் மாறாத ஒன்று, அவனின் பெயரை சொல்லி மீண்டும் ஆதித்தன் திருத்தி சரியாக சொல்ல வைப்பது.
“இதுக்குன்னே உங்க பேரை மாத்தி சொல்லலாம் போல ப்ரோ. அதுக்காகவாவது பேசுவீங்களே? ஆனா வேணும்னு எல்லாம் மாத்தி சொல்லி உங்களை டென்ஷன் பண்ணலை நான்…” என்று சிரிப்பவனிடம் லேசாய் முறைப்பதோடு சரி.
அதற்குமே பதில் கூறிவிடமாட்டான். எந்தளவிற்கு ஆதித்தன் அழுத்தமும் அமைதியுமோ, அதே அளவிற்கு சமர் இலகுவாகவும், புன்னகையும் இருப்பவன்.
இப்போதும் வந்ததும் வழக்கம் போல பேச முயல என எண்ணிக்கொண்டிருந்த ஆதித்தன் முகத்தில் சின்னதாய் புன்னகை.
நிகழ்ச்சி ஆரம்பித்துவிட அனைவரின் கவனமும் அதில் தான் இருந்தது. சம்ருதா எழுந்து வந்து ஆதித்தன் மறுபக்கமிருந்த அபராஜிதனிடம்,
“அண்ணய்யா ரா. அச்சோ, நோ. அண்ணா வா…” என சம்ருதா அழைக்க அபி ஆதித்தனை பார்த்தான்.
அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இதே வேலை தான் போல. மாத்தி சொல்லிட்டு அப்பறம் சரி பன்றது என சம்ருதாவை பார்த்தவன் மகனிடம்,
“என்னன்னு கேளு…” என என்றான்.
“அம்மா அண்ணாவ கூப்பிடறா…” என்று தான் சொல்லியிருந்தாள் குழந்தை.
“அம்மாப்பாவை வாங்க போங்கன்னு கூப்பிடனும்னு சொல்லி தர தெரியாதா யாருக்கும்? எப்பவும் அடுத்தவங்க சொல்ற மாதிரி தான் வச்சுப்பாங்களா?…” என நிஷாவிடம் பாய்ந்துவிட்டான் ஆதித்தன்.
“மேல விழ எதுடா சாக்குன்னு பார்ப்பீங்களா? அவ பிள்ளையை அவ வளர்த்துப்பா. உங்களை கூப்பிட்டாளா?…” என நிஷாந்தினியும் சொல்ல சம்ருதா ஆதித்தனை கண்களை உருட்டி பார்க்க,
“உன் மேல இப்ப நான் விழுந்தேனா? பிள்ளையை வச்சுட்டு என்ன பேசற?…” என்றவன்,
“பாரு அப்படியே உன்னை மாதிரி. வாய், பார்வை, பேச்சு எல்லாம்…” என்று அதற்கும் ஆதித்தன் பல்லை கடித்தான்.
“நம்மளை தான் பார்க்கறா அவ. சும்மா இருங்களேன்…” என கூறிய நிஷா,