“புரியுது பா. நீங்களே என்னை வந்து பாருங்க. நான் அங்க வர மாட்டேன். என்னால அவரை அழைச்சிட்டு அங்க வர முடியாது”, என்றாள் சுதா.
“புரியுது மா. மாப்பிள்ளையை நீ நல்ல பாத்துக்கோ. அது எங்களுக்கு போதும்”, என்று சொல்லி போனை வைத்தார்.
அன்று இரவு அறைக்குள் வந்ததும் ஒரு ஓரமாக படுத்தாள் சுதா. கேசவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த வரதன் அப்போது தான் உள்ளே வந்தான். அவன் வருவது தெரிந்தாலும் அவள் திரும்பிப் பார்க்க வில்லை. கதவை பூட்டி விளக்கை அணைத்து விட்டு அவள் அருகே படுத்தவன் அவள் இடையில் கையைப் போட்டான்.
அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க அவன் கண்களில் இருந்த மாறுதலில் சந்தோஷமாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவன் தன்னை ஏற்றுக் கொண்டதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. இருவரும் அன்றே தங்கள் வாழ்க்கையைத் துவங்கி விட்டார்கள்.
மணிமாறனுக்கு ட்ரைனிங் முடியும் போது பூங்கொடி இரண்டாவது செமஸ்டரில் அடி எடுத்து வைத்தாள். அவனுக்கு முதல் போஸ்ட்டிங்கே கான்பூரில் போட நொந்து தான் போனான்.
அவளுக்கு காலேஜ் இருப்பதால் அவளை அழைத்துச் செல்ல முடியாத நிலை. இருவருக்குமே கஷ்டமாக தான் இருந்தது.
சுதாவுக்கு இப்போது மூன்று மாதம். திருமணம் முடிந்து இத்தனை நாட்களில் அவள் பிறந்த வீட்டுக்குச் செல்ல வில்லை. மகேஸ்வரன் மற்றும் வள்ளி இருவரும் தான் வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள்.
சுதாவுக்கு ஒன்பதாம் மாதம் இருக்கும் போது பூங்கொடி கடைசி செமஸ்டரில் அடி எடுத்து வைத்தாள். சுதாவுக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக அவளுடைய வீட்டினருக்கு தெரியப் படுத்தினான் வரதன்.
சுதாவின் சந்தோசத்துக்காக தான் அவளை அவளுடைய பிறந்த வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்தான் வரதன். ஆனால் என்ன ஆனாலும் தன்னால் அங்கே வர முடியாது என்றும் தெளிவாக சொல்லி விட்டான்.
வளைகாப்பு ஏற்பாடு எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. மணிமாறனும் லீவ் போட்டுவிட்டு வந்திருந்தான்.
மணிமாறன், பூங்கொடி, தேவகி, கதிரவன் நான்கு பேரும் காரில் வந்து இறங்கினார்கள். அவர்களை மொத்த குடும்பமே வரவேற்றது.
அதன் பின் சுதா வீட்டினர் வந்து இறங்கினார்கள். கூட்டத்தோடு கூட்டமாக இளங்கோ, சுந்தரி மற்றும் மேகலா மூவரும் வந்திருந்தார்கள்.
அவர்கள் வருவது மகேஸ்வரன் மற்றும் வள்ளிக்கு பதட்டத்தை தான் கொடுத்தது. ஆனால் அவர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று சுதா சொல்லியிருந்ததால் அவர்களுக்கு மூவரையும் அழைத்து வருவதைத் தவிர வேறு வழி இருக்க வில்லை.
அவர்கள் மூவரையும் யாரும் வா என்று கூட கேட்க வில்லை. அவர்கள் வரும் வரைக்கும் சுதாவுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த பூங்கொடி சுதாவின் உறவினர்கள் வந்ததும் கணவன் அருகில் வந்து நின்று கொண்டாள்.
அவர்களை கண்டு பூங்கொடி முகமும் உடலும் இறுகியது. அவள் மன நிலை உணர்ந்த மணிமாறன் அவள் கையைப் பற்றி “இதெல்லாம் சகஜம் டா. விடு”, என்று மட்டும் சொன்னான்.
மற்றவர்களுக்கோ எதற்காக அவர்களை அழைத்து வந்தீர்கள் என்று மகேஸ்வரனிடம் கேட்க நாக்கு துடித்தது. ஆனாலும் என்ன செய்ய என்று தெரியாமல் அமைதியாக நின்றார்கள்.
ஆனால் வரதன் அவர்களைக் கண்டு கொதித்து போனான். “மாமா, இவங்களை எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்தீங்க?”, என்று கோபத்துடன் மகேஸ்வரனிடம் கேட்டான் வரதன்.
“அது வந்து மாப்பிள்ளை….”, என்று அவர் தயங்க “நான் தான் அவங்களை வரச் சொன்னேன்”, என்றாள் சுதா.
அவள் குரலில் அனைவரும் அவளைத் திரும்பிப் பார்க்க “என்னது நீ வரச் சொன்னியா?”, என்று கோபமாக கேட்டான் வரதன்.
அவ்வளவு பெரிய வயிற்றை தூக்கிக் கொண்டு அவள் நிற்க அவள் மீது கோபப் படுவதே அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
“ஆமா, நான் தான் அவங்களும் பங்சனுக்கு வரணும்னு அப்பா கிட்ட சொன்னேன். அதான் அப்பா கூட்டிட்டு வந்தாங்க?”
“எல்லாம் மறந்து போச்சா சுதா உனக்கு?”
“நான் எதையும் மறக்கலை. நான் உங்க கிட்ட இது வரைக்கும் எதுவும் கேட்கலை. உங்க பிள்ளையை பெத்து எடுக்கப் போற உரிமையிலே கேக்குறேன். இந்த ஒரு விஷயத்தை மட்டும் எனக்காக செய்ங்க. அவங்க இங்க இருக்கட்டும். எனக்காக நீங்க எதுவும் பேசக் கூடாது”
“என்ன டி பிளாக் மெயில் பண்ணுறியா? சரி உன் இஷ்டம். ஆனா இவங்க இருக்குற வீட்ல நான் இருக்க மாட்டேன். புருஷன் இல்லாமலே வளைகாப்பு கொண்டாடிக்கோ. நான் போறேன்”, என்று சொன்னவன் மற்றவர்கள் தடுக்க தடுக்க வெளியே சென்று விட்டான்.
எல்லாரும் அவன் போன திசையை பார்த்துக் கொண்டிருக்க “எல்லாரும் ஏன் அமைதியா இருக்கீங்க? வாங்க ஆரம்பிக்கலாம்”, என்று சொன்ன சுதா அவளுக்காக போடப் பட்டிருந்த சேரில் அமர்ந்தாள்.
பெண்கள் அனைவரும் அவளை வியப்பாக தான் பார்த்தார்கள். சுதாவைப் பார்த்து மற்றவர்களுக்கு எரிச்சல் கூட வந்தது. அதனால் வீட்டு ஆட்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டார்கள்.
“ஏங்க, எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. நாம போவோமா?”, என்று மணிமாறனின் காதைக் கடித்தாள் பூங்கொடி.
“கொஞ்ச நேரத்துல கிளம்பிறலாம். அமைதியா இரு மா”, என்று அவன் சொல்ல வேறு வழி இல்லாமல் அவனுடன் இருந்தாள். மணிமாறனுக்கும் அங்கே இருக்க பிடிக்க வில்லை தான். ஆனால் மச்சினன் மனைவியின் வளைகாப்புக்கு இருக்காமல் பாதியில் கிளம்பி விட்டால் அது தவறு என்று புரிந்தது.
சுதா சேரில் அமர்ந்ததும் மணியம்மை அருகில் வந்த வள்ளி “அண்ணி, நீங்க வந்து முதல்ல வளையலைப் போட்டு பிள்ளையை ஆசீர்வாதம் பண்ணுங்க”, என்று அழைத்தாள்.
சுதா மீது கோபத்தில் இருந்ததால் “இல்லை வள்ளி, நீங்க வேற யாரையாவது கூப்பிட்டு போடச் சொல்லுங்க. நான் போடலை”, என்று மறுத்து விட்டார் மணியம்மை.
அதன் பின் மங்களம், தாரணி, மைதிலியை வள்ளி அழைக்க மாமியாரே ஒதுங்கி நிற்கையில் தாங்கள் செல்லக் கூடாது என்பதால் அவர்களும் வரவில்லை.
எல்லாரும் மகளை ஒதுக்கி வைத்ததைப் பார்க்கும் போது வள்ளிக்கு ஏன் தான் அவர்களை அழைத்து வந்தோமோ என்று இருந்தது. மகள் அருகில் சென்ற வள்ளி “ஏன் டி அவங்களையும் கூட்டிட்டு வரச் சொன்ன? இப்ப பாரு, உன் குடும்பமே உன்னை விட்டு விலகி நிக்குது. மாப்பிள்ளை வேற கோச்சிக்கிட்டு போய்ட்டார். அவங்க யாரும் போடாம நாங்க வளையல் போட்டா அது நல்லா இருக்காது மா”, என்றாள்.
ஒரு நொடி யோசித்தவள் சுந்தரி இருக்கும் திசையைப் பார்த்து “அண்ணி, நீங்க வந்து முதல்ல போடுங்க”, என்றாள்.
வரதன் வீட்டினர் அனைவரும் அவளை திகைப்பும் கோபமுமாக பார்க்க சுதா யாரையுமே கண்டு கொள்ள வில்லை. சுந்தரி வந்து வளையல் போட வர “உங்களை யாரு கூப்பிட்டா? நான் என் அண்ணியை தானே கூப்பிட்டேன்”, என்று முகத்தில் அடிப்பது போல சொல்லி விட்டாள். அங்கே அமர்ந்திருந்த பூங்கொடிக்கு திகைப்பாக இருந்தது.
அத்தனை பேர் முன்னிலையில் சுதா அப்படிச் சொன்னது சுந்தரிக்கு அவமானமாக இருந்தது. அவள் கண்கள் கூட கலங்கி விட்டது.
“பூங்கொடி அண்ணி, நீங்க வந்து முதல்ல வளையல் போட்டு உங்க மருமகனை ஆசீர்வாதம் பண்ணுங்க”, என்று அழைத்தாள் சுதா.
“நானா?”, என்று பூங்கொடி திகைப்பாக கேட்க “நீங்களே தான் வாங்க”, என்றாள் சுதா.
“இல்லை அண்ணி, வேற பெரியவங்களை போடச் சொல்லுங்க”, என்று அப்போதும் பூங்கொடி மறுக்க தான் செய்தாள்.
“நானும் என் குழந்தையும் நல்லா இருக்கணும்னு உங்களை விட வேற யாரும் அதிகமா நினைச்சிற மாட்டாங்க. நீங்க வந்து போடுங்க. உங்க ஆசீர்வாதம் என் பிள்ளைக்கு வேணும். அதுவும் என் பிள்ளை என்னை மாதிரியோ அவர் மாதிரியோ கூட எனக்கு வேண்டாம். உங்களை மாதிரி அவன் இருக்கணும்”, என்று சுதா சொல்ல பூங்கொடி நெகிழ்ந்து போனாள்.